என் மனைவியிடம் விவரங்களை பகிர்ந்துகொண்டேன். நாங்கள் ஜெபிக்க தொடங்கினோம். ஆனால் 3 வாரங்கள் வரை கர்த்தரிடமிருந்து எந்த பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. பெங்களுர் பாஸ்டருக்கு பதில் அனுப்ப வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. நான் என் மனைவியிடம் நான் தனியாக
சென்று ஜெபம் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறி அருகேயுள்ள
ஏற்காடு மலைக்கு சென்றேன். ஒருநாள் முழுவதும் ஜெபத்தில் இருந்தேன். எந்த பதிலும் கர்த்தரிடமிருந்து கிடைக்கவில்லை. வசனம் மூலமாகவும் பதில் அறியமுடியவில்லை. இரண்டுநாள் என் தனி ஜெப நேரமும் முடிந்தது. கடைசியாக என் ஆண்டவரிடம் கூறினேன். கர்த்தாவே நீரும் இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறீர். பதில் ஏதும் தரவில்லை. ஆகவே என் தீர்மானத்தை உமக்கு நான் அறிவிக்கிறேன். கிடைக்கபோகும் பெரும் தொகை பணமும், மேலும் நிரந்தரமாக மாதாமாதம் கிடைக்கபோகும்
பெரும் தொகையும் இவை ஒன்றும் எனக்கு வேண்டாம். காரணம் உம்மிடமிருந்து பதில் இல்லாததால் இந்த பணம் நான் வாங்கினால் ஒருவேளை நான் உம்மைவிட்டு விலகிவிடுவேனோ? இதில் ஏதோ வில்லங்கம் இருப்பதைப்போல் தெரிகிறது. அதனால்தான் நீர் மௌனமாக இருக்கிறீரோ? நான் அறியேன்? ஆகவே நானே தீர்மானித்துவிட்டேன் எனக்கு அந்த பணம் வேண்டாம். அந்த பாஸ்டருக்கு பணம் வேண்டாம் என்று எழுதிவிட போகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்பும் என்று கூறி ஜெபத்தை முடித்துக்கொண்டேன். கர்த்தரும் என்னை ஆசீர்வதித்தார். என் மனதில் ஒரு பெரும் தெளிவு ஏற்பட்டது. சந்தோஷமும் ஏற்பட்டது. இரண்டுநாள் ஜெபம் முடித்து வீடுவந்து சேர்ந்தபின் என் மனைவியிடமும் எனக்காக ஜெபிக்கும் ஒரு குடும்பம் உண்டு. அந்த ஆவிக்குரிய குடும்பத்தினரிடமும் கர்த்தரின் மௌத்தைப்பற்றி கூறினேன். அதில் ஒருவர் கூறினார். டாக்டர்! மௌனம் சம்மதத்துக்கு அடையாளம் என்று உலக மக்கள் கூறுவார்களே!, என்றார்கள். அதற்கு நான் அந்த மௌனம் கல்யாணத்துக்குதான் பொருந்தும். இப்படிப்பட்ட காரியத்துக்கு அல்ல. இந்த பணம் நான் வாங்கினால் என் பெலவீனத்தில் ஆண்டவரை மறந்துவிடும் நிலை எனக்கு ஏற்படுமோ! தேவன் அதை அறிந்திருப்பாரோ! அதனால்தான் பதில் ஏதும் கூறவில்லையோ! எப்படியோ நான் எடுத்த தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன். பெங்களுர் பாஸ்டருக்கும் கடிதம் எழுதிவிட்டேன்.
சுமார் 7 மாதங்கள் கடந்தபின் சென்னை அம்பத்தூரில் என் கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில்
பெங்களுர் பாஸ்டரும், சகோ.தினகரன் அவர்களும் என்னை சந்தித்தனர். நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்திருந்தனர். பெங்களுர் பாஸ்டர் என்னை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர்விட்டு கூறினார். இன்றைக்கு வெளிநாட்டு பண உதவிக்காக பேயாய் அலையும் ஊழியர்கள் எத்தனையோ பேர்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் 5 மாதத்தின் பெரும்தொகையை கையில் கொடுத்தும் அதை வேண்டாம் என்று சொன்ன
ஒரே ஊழியர் நீங்கள்தான். டாக்டர்!. நீங்கள் இதே விசுவாசத்தில் இருங்கள்!. நிச்சயமாக நீங்கள் கர்த்தரால் கைவிடப்படுவதில்லை. கர்த்தர் உங்களோடு இருப்பதை உணருகிறேன். பிரைஸ் த லார்ட் என்றார். நான் சொன்னேன். பாஸ்டர் கர்த்தர் என்னை மனம்திரும்ப வைத்த நாளிலிருந்து இதுவரை எனக்கு போதுமானவராக இருக்கிறார். இப்போது எனக்கு தொழில் இல்லை, வருமானமும் இல்லை. ஜாமக்காரன் பத்திரிக்கைக்கு மாதந்தோறும் பல லட்சங்கள் செலவாகிறது. ஆனால் இதுவரை நான் யாரிடமும்
பணத்துக்காக கை ஏந்தியதில்லை. பணத்தேவைகளை என் ஜாமக்காரனில் மறைமுகமாகவோ! வெளிப்படையாகவோ! இதுவரை எழுதியதில்லை.
162 வெளிநாடுகளுக்கு சென்றேன். ஒரு கூட்டத்திலும் காணிக்கை வேண்டும் என்று நான் கேட்டதில்லை.
பெஹரின் நாட்டுக்கு முதல்முறையாக சென்றபோது தமிழ் ஐக்கிய சபையில் பிரசங்கத்தின் நடுவில் காணிக்கை எடுத்தபோது சபை பொறுப்பாளர்களிடம் கூறினேன். ஏற்கனவே கடிதத்தில் காணிக்கை எனக்கு கொடுக்கவேண்டாம். எனக்கு ஸ்தாபனம் ஏதுவும் இல்லை!. சொந்தமாக சபை ஏதும் இல்லை!. (அன்று) என் அலுவலகத்தில் சம்பளம் பெறும் பணியாளர் யாரும் இல்லை. ஆகவே வெளிநாடுகளுக்கு போவது
பணம் சேகரிக்க அல்ல என்று எழுதினேனே! என்றேன்.
|