1960ம் வருடங்களில் தனது 21-வது வயதில் திருமணம் வேண்டாம் என்றும் இயேசுவே என் மணவாளன் என்றும் கூறி கர்த்தருக்கு ஒப்பு கொடுத்து ஊழியம் தொடங்கியவர். அன்றைய காலங்களில் இவருடைய பாடல்களை பாடாத சபைகளே கிடையாது எனலாம்.
என்னை மறவா இயேசுநாதா, எந்தன் துன்பம் இன்பமாக மாறும் இயேசுவை நான் காணும்போது என்ற பாடல்களும் காலையும், மாலையும் எவ்வேளையும் கர்த்தரை கருத்தோடு பாடிடுவேன், இப்படி பல ஹிட் பாடல்களை இயற்றியவராவார். ஏறக்குறைய 400 பாடல்களையும் 8 பாடல்களை ஆங்கிலத்திலேயே இயற்றி ராகம் அமைத்து பாடினார்.
இங்கிலாந்து தேசத்தில் அப்பாடல்களை நான் அன்றைய கேஸட்களில் பதிய வைத்ததை கேட்டேன். அற்புதமான குரல்.
ஆரம்பத்தில் அரசாங்க மின்சார துறையில்
Electricity டிபார்ட்மென்ட்டில் கிளர்க்காக பணியாற்றினார். அன்றைய வாலிப வயதில் பல தொல்லைகள். ஆகவே அந்த வேலையை விட்டு முழுநேர ஊழியத்தில் இறங்கினார். அந்த காலத்தில் ஊழியம் செய்த பெந்தேகோஸ்தே ஊழியர்கள் பலர் இவரை திருமணம் செய்ய பலர்மூலமாக முயன்றதை நான் அறிவேன். அதற்காகவே அவர் ஆண்களுடன் பேசுவதை தவிர்த்தார். எந்த கூட்டத்திலும் தன்னை புகைப்படம் எடுக்காதிருக்க அவர் கடும் முன் எச்சரிக்கையுடன் இருந்து தான் பேசும் எந்த கூட்டத்திலும் கூட்ட விளம்பரத்திலும் தன் புகைப்படம் வாராமல் கண்டிப்புடன் இருந்தார்.
கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்த நாள் முதல் தன் மரணம்வரை இவரைப்பற்றியோ, அவரின் தனிப்பட்ட வாழ்கையையோ யாரும் குறைகள் சொன்னதில்லை. மரணம்வரை எந்த பாவத்திலும் விழாமல் தன்னை பாதுகாத்துக்கொண்ட
ஒரே பெண் ஊழியக்காரி என்றால் அது மிகையாகாது. அவரை யாரும் தனிப்பட்டமுறையில் காணவோ, பேசவோ அவர் அனுமதிப்பதில்லை. எந்த சோதனைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டார். தன் சொந்த சபை ஆராதனையில் ஒரு திரைமறைவு இருக்கும் பிரசங்க நேரத்தில்மட்டும் வெளியில் வருவார். அவர் வீட்டிலிருந்து வெளியே ஆராதனைக்காக வெளிவருவதைகூட யாரும் பார்க்கமுடியாது.
அடிக்கடி 40 நாட்கள் உபவாசம் எடுப்பதாக கூறுவார்கள். அவர்கள் வீட்டின்மேல் அறையில் உபவாசம் செய்து ஜெபிக்கும்போது அவரின் கூடபிறந்த ஒரு அக்காவை தவிர வேறு யாரும் அவர் அறைக்குள் நுழைய அனுமதியில்லை. தன் அக்காகூட உபவாச நாட்களில் தன்னோடு பேச அனுமதியில்லை. உபவாச நாட்கள் கூடும்போது மயக்கம் ஏதும் உண்டாகிவிடுமோ என்ற பயத்தில் அக்காமட்டும் அறையை திறந்து எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடுவார். அப்படி உறவினரோடோ, உடன்பிறப்புகளுடனோ நெருக்கம் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து தன் ஊழியத்தை நிறைவேற்றினார்.
ஒரு குறிப்பிட்ட உபவாச நாட்களில்மட்டும் அவர் ஆவியில் நிறைந்தபோது அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள்
பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும், குழப்பத்தையும் உண்டாக்கியது. அந்த உபவாச நாட்களில் உண்டான வித்தியாசமான ஆத்மீக உயர்ச்சியிலிருந்து இறங்கி சமநிலையடைந்தார். ஆனால் அதை மனநிலை பாதிப்பு என்றுகூட வதந்திகள் பரப்பினார்கள்.
2014 ஜூலை மாதம் 22ம் தேதி தனது 75 வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
HMV என்ற பாடல் பதிவு செய்யும் பெரிய ஸ்தாபனம் இவர் பாடல்களை தாங்கள்மட்டும் வெளியிட ஒப்பந்தம் பெற்று பாடல்களை வெளியிட்டனர். அதை அவர்களே விற்று அதன் ராயில்டியை சகோதரிக்கு கொடுத்தார்கள். அவர் சென்னை கீழ்பாக்கத்தில்
சியோன் சுவிசேஷ ஜெப ஐக்கியம் என்ற பெயரில் சபை நடத்தினார். அன்றைய நாட்களில்
ஒரு பெண் எப்படி பெந்தேகோஸ்தே உபதேசத்தோடுகூடிய சபையை தொடங்கலாம் என்று பல பெந்தேகோஸ்தே சபையினர் எதிர்த்தனர். சகோதரி.சாராள் நவரோஜி அவர்களின் ஆரம்பால நல்ல ஊழியங்களுக்காக, நடனபாட்டுபோல் அவர்களின் பாடல் இல்லாததால் நான் தேவனை துதிக்கிறேன். கர்த்தர் இவரைப்போன்ற வைராக்கியமான பெண் ஊழியர்களை எழுப்புவாராக.
|