தமிழ் நாட்டில் பெரிய நகரத்தில் அமைந்துள்ள
CSI ஆலயத்தில் 3 நாட்கள் கன்வென்ஷனில் பிரசங்கிக்கப்போயிருந்தேன். மேலே நான் எழுதியபடி வழமையாக சனிக்கிழமை ஆலோசனை நேரம் ஆகும். ஆயிரக்கணக்கில் மக்கள் ஆலயத்தில் அமர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, மக்கள் உட்கார்ந்துள்ள வரிசையின்படி, ஒவ்வொருவராகவும், குடும்பமாகவும் என் அறைக்கு ஆலோசனைக்காக உள்ளே வந்து ஆலோசனை பெற்று ஜெபித்து சென்றார்கள். அந்த வரிசையில் ஒரு சகோதரி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பதவி வகித்து ஓய்வு பெற்று வீட்டில் வெறுமனே இருக்கிறார். இந்த சகோதரியின் கணவர் இறந்துபோனார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் அவர் இன்ஜினியராக உயர்பதவியில் இருக்கிறார். அவர் மனைவி ஒரு அரசாங்க வங்கி(பேங்க்)யில் நல்ல பதவியில் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் (மகன், மகள்). இதில் பிரச்சனை என்னவென்றால், இந்த சகோதரிக்கும் - மருமகளுக்கும் ஒத்துப்போகாத நிலை இருப்பதாக அந்த சகோதரி என்னிடம் கூறினாள். வீட்டில் தன் பேரப்பிள்ளைகளை கண்டிப்பதும், பிள்ளைகள் சேட்டை செய்தால், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டால் தான் சென்று அவர்களை விலக்கி இருவரையும் பிரம்பால் அடித்து கண்டிப்பேன். ஆனால் நான் அப்படி பேரப்பிள்ளைகளை கண்டிப்பதும், அடிப்பதும் மருமகளுக்கு இஷ்டம் இல்லை. நான் பெற்ற என் மகனை சிறுவயதில் சேட்டை செய்யும்போது தவறு செய்யும்போது அடித்துதான் திருத்துவேன். இப்போது என் பேரப்பிள்ளைகளையும், நான் அப்படியே அடித்து திருத்த முயலுகிறேன். ஆனால் என் மருமகளுக்கு நான் அப்படி பிள்ளைகளை கண்டிப்பது பிடிக்கவில்லை. மகனும், மருமகளும் வேலைக்கு சென்றுவிட்டால் விடுமுறை நாட்களில் இந்த பேரப்பிள்ளைகளின் குறும்பும், சேட்டையும் மிக அதிகம். இதனால் நான் மிகவும் பலவீனப்படுகிறேன். வயது முதிர்ந்த என் நிலையில் எனக்கு கோபம் வருகிறது. பிள்ளைகளின் குறும்பு அதிகமாகும்போது அவர்களை அடித்து அடக்குகிறேன். இது என் மகனும், மருமகளும் விளங்கிக்கொள்வதில்லை.
என் பேரப்பிள்ளைகளை நான் கண்டிக்க பாட்டியாகிய எனக்கு உரிமையில்லையா? மருமகள் என் முன்னாலேயே நாகரீகமற்ற வார்த்தைகளில் பேரப்பிள்ளைகளை காரணமில்லாமல் ஏசுவாள் அது என்னை திட்டுவதுபோல் உணருகிறேன். என் மேலுள்ள கோபத்தையும், வெறுப்பையும் தன் பிள்ளைகள் மேல் அவள் காட்டுகிறாள். அந்த பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுமே? நான் உயிரோடு இருக்கும்வரை பேரப்பிள்ளைகள் தவறு செய்தால் கண்டிப்பாக நான் கண்டித்துதான் வளர்த்துவேன். இந்த பிரச்சனைகளை என் மகனிடம் கூறியபோது உங்கள் இரண்டுபேர் விஷயத்தில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிடுகிறான். அவன் மனைவி என் மேல் எவ்வளவு கோபப்பட்டாலும் அவளை என் மகன் கண்டிக்கபோவதில்லை என்பதை உணர்ந்தேன்.
ஆகவே எனக்குள் வெறுப்பு நாளுக்குநாள் அதிமாகிக்கொண்டே போனது. நான் என் மருமகளை என் மகளைப்போல் நேசிக்க விரும்புகிறேன். ஆனால் அவளோ என்னை விளங்கிக்கொள்வதில்லை. ஆகவே வயது முதிர்ந்தோர் இல்லங்களின் விலாசங்களை நானே விசாரித்து வைத்துள்ளேன். இந்த வீட்டில் எனக்கு மரியாதை, மதிப்பு இல்லாதபோது நான் ஏன் இந்த வீட்டில் இருக்கவேண்டும்? என்றார்!.
அந்த சகோதரி பேசி முடித்தவுடன் நான் கேட்டேன். உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களை நேசிக்கிறார்களா? என்றேன். அந்த இரண்டு பிள்ளைகளும் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். எப்போதும் என் அறையிலேயே என்னோடு படுத்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். அது எனக்கு மிகவும்
சந்தோஷத்தையும் ஆறுதலையும் கொடுக்கிறது. |