மதுரை St.George Churchல் கன்வென்ஷனில் பிரசங்கம் செய்துவிட்டு மறுபடியும் பெரியமலை சென்றேன். அதன்பின் கன்வென்ஷனில் பிரசங்கிக்க எனக்கு வந்த எந்த அழைப்பையும் நான் ஏற்கவில்லை. சகோ.எமில் எனக்கு கொடுத்த ஆலோசனை மிகச்சரியானது. ஆகவே எனக்கு சகோ.எமில் மேல் கோபம் வரவில்லை. அதன்பின் என் முழு கவனமும் மிஷனரி பணியில் செலுத்தி மிஷனரி ஊழியத்தில் தீவிரமாக இறங்கினேன்.
அதன்பிறகு பல மாதங்கள் நாங்கள் யாரும் மலையைவிட்டு இறங்காமல் தொடர்ந்து ஊழியம் செய்தோம். அதன்பிறகு நடந்த விஷயங்களை ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் ஜாமக்காரனில் எழுதிவிட்டேன். அதில் என் தகப்பனார் அன்று எனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே ஸ்கேன் செய்து ஜாமக்காரனில்
வெளியிட்டதை வாசித்திருப்பீர்கள். அவைகளை மறுபடியும் இங்கு குறிப்பிடுவது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
FMPB தலைமையிலிருந்து சில மாதங்கள் தொடர்ந்து எங்களுக்கு பணம் வராததாலும் மலையில் எங்கள் மிஷனரி வீட்டில் சேமித்து வைத்த அரிசி தீர்ந்துபோனதாலும் 3 நாட்கள் நாங்கள் சாப்பிடாமல் பட்டினி கிடக்க நேர்ந்தது. அதன் முழுவிவரத்தையும் ஏற்கனவே எழுதிவிட்டேன். அதன்பிறகு
நானும் - ஹாரிஸ் ஹில்டன் அவர்களும் FMPB எங்களுக்கு பணம் அனுப்பாததின் காரணத்தை அறிய மிஷனரி பணிதளத்திலிருந்து மலையைவிட்டு இறங்கி
FMPB அலுவலகத்துக்கு திரும்ப மலையில் காட்டு வழியே நடந்துவந்துக்கொண்டிருந்தோம்.
FMPB ஜெபவீரர்கள் விசுவாசிகள் FMPB ஊழியத்துக்கு தொடர்ந்து காணிக்கை அனுப்பாததால் மிஷனரிகள் பட்டினி கிடக்க நேர்ந்தது. அதனால்
FMPB பொறுப்பாளர்கள் தற்காலிகமாக மிஷனரி பணி நிறுத்தி வைப்போம் என்று தீர்மானித்தனர். ஒரு மிஷனரிக்கு ஒரு வருடத்துக்குரிய காணிக்கை பணம் சேர்ந்தபின் மிஷனரி ஊழியத்தை தொடருவோம் என்று பொறுப்பாளர்கள் தீர்மானம் எடுத்ததால் எங்களை பெரிய மலையிலிருந்து அழைத்துவர டேனிஷ்பேட்டையிலிருந்து இருவர் மலைமேல் ஏறி வந்தனர். நடுமலையில் நாங்கள் அவர்களை சந்தித்து அனைவரும் டேனிஷ்பேட்டை திரும்பினோம். |