கழுதை பேசியது:

இப்படிப்பட்ட ஊழியர்களுக்கு பாஸ்டர்மார்களுக்கு, அற்புத ஊழியர்களுக்கு ஜெபத்தில் பெயர் அழைப்பவர்களுக்கு மைக் மூலமாக அந்நியபாஷை பேசுபவர்களுக்கு நல்ல உதாரணம் வேதத்தில் உண்டு. அது பிலோயாமின் கழுதை பேசிய சம்பவம். கர்த்தர் கழுதையை பேசவைத்தார். பிலேயாமை உணர்த்த ஆண்டவர் செய்த ஏற்பாடு அது ஆகும். கழுதைக்கு ஒரு மிருக பாஷை உண்டு. நாய்கள் ஒரு மாதிரி சத்தத்தில் ஊளையிட்டால் பெண் நாயை தேடி 10 ஆண் நாய்கள் தானாக ஓடிவரும். அந்த இரகசிய பாஷை நாய்களுக்குமட்டும்தான் தெரியும். அந்நியபாஷையின் வியாக்கியான வரம் பெற்ற பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்குக்கூட அந்த நாய் சத்தத்துக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல கழுதையோடு மற்றொரு கழுதை பேசிக்கொள்ளும், மிருகத்துடன் மிருகம் பேசிக்கொள்ளும் ஆனால் கர்த்தர் ஒரு கழுதையை மனித பாஷையில் பேசவைத்து ஒரு தீர்க்கதரிசியை உணர்த்தினார். பணத்துக்காக தீர்க்கதரிசனம் சொல்லும் ஒரு தீர்க்கதரிசியுடன் பேச அன்று கழுதை பாஷையில் பேசும்படி கர்த்தர் அந்த கழுதைக்கு கட்டளையிடவில்லையே!. தூதர் பாஷையையும் அந்த இடத்தில் உபயோகிக்கவில்லையே!. அங்கு பரலோக பாஷையையும் உபயோகிக்கவில்லையே!. அந்த தீர்க்கதரிசி வழமையாக பேசும் அந்த பிலேயாமின் தாய் பாஷையிலே கழுதையை பேசவைத்தது. அவன் தவறை கர்த்தர் உணர வைத்தார். இதேபோல் இன்னொரு முறை கழுதையை கொண்டு இன்றைய பெந்தேகோஸ்தே பாஸ்டர், ஏஞ்சல் டிவி மூவரணி போன்ற ஊழியர்களிடம் கர்த்தர் பேசி எச்சரித்தால்தான் இவர்கள் பாஷை என்ற பெயரில் உளறுவதை நிறுத்துவார்களோ? கர்த்தர்தான் இவர்களை சந்திக்கவேண்டும்!. சாதாரண கழுதைக்கு இருக்கும் உணர்வு, ஞானம்கூட நம் அற்புத ஊழியர்களுக்கு ஏஞ்சல் டிவி மூவரணிக்கு இல்லையே? கழுதை மனிதர்களிடம் பேசும்போது மனுஷ பாஷையில்தான் பேசவேண்டும் என்றும் கழுதை பாஷையில் பேசக்கூடாது என்றும் கழுதைக்கு தெரியும். அப்படியிருக்க பால் தினகரனோ! மனிதருக்கு கர்த்தர் தெய்வீக பாஷையை கர்த்தர் கற்றுத்தருவார், அப்போதுதான் தூதர்கள் உங்களிடம் பேசும்போது அவர்கள் சொல்வதை நீங்கள் புரிந்துக்கொள்ளமுடியும் என்கிறார். இது சின்னபிள்ளைத்தனமாக இல்லை!.

BYM R.ஸ்டான்லி அவர்கள் நல்ல வேத பண்டிதர். அவரைக்குறித்து சிலர் எனக்கு எழுதும்போது அவர் அந்நியபாஷை பேசுவதாக எனக்கு சுட்டிக்காட்டினார்கள். அந்த ஒரு விஷயத்தில் எனக்கும் சகோ.ஸ்டான்லி அவர்களுக்கும் அபிப்ராய வித்தியாசம் உண்டு. மரித்துப்போன மதுரை ஊழியர் ஒருவரும் சகோ.ஸ்டான்லி அவர்கள் கூறியதைபோலவே தன் சாட்சியில் தான் படிக்கும் காலத்தில் பரீட்சை நேரத்தில் கேள்விதாள் கையில் வந்தவுடன் அதை படித்து பார்த்தபோது ஒன்றும் விளங்கவில்லை. எப்படி பரீட்சை எழுதுவேன் என்று பிரம்மித்தேன். கொஞ்சநேரம் கண்களை மூடி அந்நியபாஷையில் பேசினேன். உடனே ஒரு புத்துணர்வு வந்தது. உடனே பரீட்சை நன்றாக எழுதினேன் என்றார்!. இன்னொருவர் தன் புத்தகத்தில் தன்னைப்பற்றி சாட்சி எழுதும்போது தான் பள்ளியில் படிக்கும்போது புத்தகமே படிக்க நேரம் இல்லாமல் வாலிபர்களுக்கிடையே ஊழியம் செய்ய அலைந்தேன். பரீட்சை நேரத்தில் கேள்வித்தாள் என் கையில் வந்தபோது ஒன்றும் தெரியாமல் விழித்தேன். உடனே ஜெபித்தேன். 10 நிமிடம் அந்நியபாஷையில் பேசினேன். உடனே அந்த பரீட்சை அறையில் ஆவியானவரே புத்தகத்தை என்முன் கொண்டுவந்து அதில் பக்கங்களையும் பிரித்து காட்டி அன்றைய பரீட்சையின் கேள்விகளுக்கான பதிலை அந்த புத்தகம் மூலமாக காட்டினார். அப்படியே காப்பியடித்து பதில் எழுதி நல்ல மார்க்கோடு பாஸ் செய்துவிட்டேன் Praise the Lord என்று சாட்சி கூறி பெருமைப்பட்டுக்கொண்டார்.

நம் தேவன் திருட்டு தெய்வமா? பரீட்சையில் பிட் அடித்தாலோ, திருட்டுதனமாக புத்தகத்தை பார்த்து எழுதினாலோ உடனே பரீட்சை கண்காணிப்பாளர் பிடித்து 3 வருடம் பரீட்சை எழுதாதபடி டிபார் செய்து அந்த மாணவனுக்கு தண்டனை அளிப்பார். இதுதான் அன்றும் இன்றும் கல்விதுறையின் சட்டம். இவர்களின் அந்நியபாஷையை பேசவைத்த ஆவியானவரே கள்ளத்தனமாக காப்பிடியத்து இவர்களை பரீட்சை எழுத சொல்வாரானால் என்ன நியாயம்?


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM