நான் டாக்டர் தொழிலை நிறுத்தி 5வது மாதம் பெங்களுரிலிருந்து கன்வென்ஷனில் பிரசங்கிக்க நான் அழைக்கப்பட்டேன். அழைத்த ஊழியர் பெரிய சபையை நடத்துகிறார். 3 இடங்களில்
அனாதை இல்லம் நடத்துகிறார். வெளிநாட்டு பணம் அவருக்கு வருகிறது. (Swiss
& Sweden) ஆகிய வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பண உதவிகளை அவர் பெறுகிறார். ஆனாலும் அவர் வெளிநாட்டு பணம் பெரும் மற்ற ஊழியர்களைப்போல் அல்லாமல் ஒரு பழைய கார் வைத்துக்கொண்டு ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தார். மேலும் வெளிநாட்டிலிருந்து அவருக்கு வரும் பணத்தை அரசாங்கத்துக்கும், கர்த்தருக்கும் சரியாக கணக்கு காட்டுபவர் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான்கு நாட்கள் கன்வென்ஷனுக்காக பெங்களுர் சென்றேன். இரண்டாவது நாள் கன்வென்ஷன் முடிந்து இரவு உணவு சாப்பிட்டு
ஓய்வாக நாங்கள் அமர்ந்து வேதவசனம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும்போது
அவர் தன் மனைவியை பார்த்து அறையிலிருந்து அந்த டிரேஐ (Tray) எடுத்து கொண்டு வா என்றார். அவர் மனைவி எழுந்து
ரூபாய் நோட்டு கட்டுகள் நிறைந்த டிரேஐ என் முன்னே உள்ள சிறிய மேசையில் வைத்தார்.
அந்த பாஸ்டர் கூறினார்: டாக்டர் இந்த பணம் எல்லாம் உங்களுக்குத்தான். எனக்கு வெளிநாட்டு பணம் வரும் விஷயம் உங்களுக்கு தெரியும். எனக்கு வளமையாக பணம் உதவி செய்யும் ஸ்தாபனத்தின் தலைவர் 5 மாதத்துக்குமுன் ஒரு தொகையை எனக்கு அனுப்பி இந்தியாவில்
உங்களைப்போல் உண்மையாக ஊழியம் செய்பவரை கண்டுபிடித்து இந்த பணத்தை அவரிடம் கொடுத்து
இந்திய கிராம ஊழியத்தை விரிவுப்படுத்துங்கள். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நாங்கள் பணம் அனுப்புவதைப்போல் அவருக்கும் பணம் மாதந்தோறும் அனுப்புவேன் என்று அந்த வெளிநாட்டு நபர் எனக்கு எழுதி கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையான ஊழியரை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கடந்த காலத்தில் என்னிடம் பண உதவி பெற்ற ஊழியர்கள் எல்லாம் நன்றி கெட்டவர்களாகி போனார்கள். நான் கொடுத்த பணத்துக்கு அவர்கள் தங்கள் பெயரிலேயே நிலம் வாங்கி வீட்டையும் சபையையும் கட்டி நன்றாக வளர்ந்துவிட்டார்கள். கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டதால் இப்போது அவர்கள் என்னோடு தொடர்பு கொள்வதில்லை. ஆகவே இந்த பணத்தை யாரிடமும் ஒப்படைக்க மனமில்லை. அப்போதுதான்
டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் டாக்டர் தொழிலை முழுவதுமாகவிட்டு முழுநேர ஊழியத்தில் இறங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அப்போது என் மனைவியிடம் நாம் டாக்டரை அழைத்து ஒரு கன்வென்ஷன் நடத்தி இந்த பணத்தை அவரிடம் ஒப்படைப்போம் என்று நாங்கள் தீர்மானித்து உங்களை வரவழைத்தோம். ஆகவே இந்த பணம் 5 மாதத்திற்கான உதவி தொகையாகும். இனி மாதாமாதம் பணம் உங்கள் வீட்டுக்கு நேரிடையாக அவர்களே அனுப்பும்படி ஏற்பாடு செய்வேன் என்றார். கட்டுக்கட்டாக பணகுவியலை நான் கண்டபோது என் வயிறு கலக்க ஆரம்பித்தது. நான் கூறினேன். பாஸ்டர் எனக்கு ஒருமாதம் டைம் கொடுங்கள். நான் என் மனைவியுடன் பேசி இந்த பணத்தைக்குறித்து நாங்கள் இருவரும் ஜெபித்தபின், எங்கள் முடிவை உங்களுக்கு எழுதி அறிவிக்கிறோம் என்றேன். உடனே அந்த பாஸ்டர் ஒரு மாதம் கழித்து பதில் கூறுங்கள். ஆனால் இப்போது இந்த பணத்தை இங்கிருந்து எடுத்து செல்லுங்கள். இவ்வளவு பெரிய தொகையை கடந்த 5 மாதங்களாக நாங்கள் வைத்திருப்பது எங்களுக்கு பெரிய சோதனையாக இருந்தது என்றார். இந்த காலத்தில் பணம் தனக்கு சோதனை என்று யார் கூறுவார்? அந்த பாஸ்டர் பண விஷயத்தில் மிகவும் உண்மையுள்ளவரானதால்தான் பணம் தனக்கு சோதனையாக இருப்பதாக கூறினார். என்றாலும் நான் அந்தபணத்தை கண்டிப்பாக இப்போது எடுத்துக்கொண்டுபோக விரும்பவில்லை என்று அவரிடம் கூறியதால் அதற்குமேல் அவர் என்னை கட்டாயப்படுத்தவில்லை. கூட்டம் முடிந்தது. என் வீட்டுக்கு
(சேலம்) திரும்பினேன். |