ஊஹூம். நீங்கள் நலிந்துபோய்விடவில்லை. எந்தவொரு வெளிப்புறச் சக்தியும் உங்களை நசுக்கிவிடமுடியாது. நீங்கள் பலவீனராயிருந்தால் பலவானாவீர்கள் என்பதுபோன்ற வேடிக்கையான தத்துவங்களை வேதத்தில் காணலாம். தோற்றத்தில் நோஞ்சானாயிருந்த பவுல் மலைக்கவைக்கும் அப்போஸ்தலனானார். அநாதை எஸ்தர் சரித்திரத்தின் ஏடுகளையே தலைகீழாய் திருப்பினாள். நசுக்கப்பட்ட எபிரெயர் நட்சத்திரக் கூட்டாயினர். அடிப்பணிந்தால் அலாக்காகத் தூக்கப்படுவீர்கள். நாம் நம்புவதற்கு முரணானவை இவை. கணவனோ, மாமனார், மாமியாரோ, பெற்றோரோ, உடன்பிறப்புகளோ, பெண்களான, தலைவரோ மற்றெவரோ நம்மைத் தலையில் குட்டிக்கொண்டே இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆக்ரோஷமடைவதோ ஆசீர்வதிப்பதோ அது நமது தெரிந்தெடுப்பை சார்ந்தது. இறையரசின் எதிர்மறைகளை மலைப்பிரசங்கம் கோடுபோட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஆவியில் எளிமையுள்ளவர்களானால் இறையரசின் சொந்தக்காரராவீர்கள் - யுத்தம் செய்து கைப்பற்றுவதினாலல்ல. அழுகிறீர்களானால் ஆறுதல்படுத்தப்படுவீர்கள் - துக்கத்தின் காரணத்தைக் துடைத்தெறிவதினாலல்ல. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்திரித்துக்கொள்வார்கள் - பிறர் தலையில் மிளகாய் அரைப்பவர்களல்ல (மத் 5:3-5). என்னுடைய யுத்தங்களை நானே நடத்தாவிடில் கடவுளே எனக்காக யுத்தம் செய்வாரென்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
நீங்கள் கீழே தள்ளிவிடப்படலாம். அலட்சியப்படுத்தப்படலாம். தூசியென துடைத்தெறியப்படலாம். கலங்காதீர்கள். லேயாள் காயப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட கர்த்தர் அவளை தாய்மையடையச் செய்து, இயேசுவின் முன்மாதாவாக்கி அவளைத் தூக்கி நிறுத்தினார். அவர் அழுகையை மாத்திரமல்ல, பெருமூச்சையும் கேட்கிற தேவன் (ஆதி 21:17, யாத் 2:24). கராத்தேயை நிறுத்தி, கரங்களை உயர்த்தி, உங்களைக் கடிப்பவரை ஆசீர்வதியுங்கள். அதன்பின் அசத்தும் விளைவுகளைக் காண்பீர்கள். விரோதமும் குரோதமும் உங்களுக்குள் கொதித்துக் கொண்டிருக்க இடமளிப்பீர்களானால் உங்கள் குடல்கள் வெந்துபோகும். "தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைப்படாது" (யோபு 42:2). தேவன் உங்களுக்காய் தீட்டியுள்ள திட்டத்தை தீண்ட யாராலும் முடியாது. தேவனோடு பேசுங்கள், உங்களோடும் பேசுங்கள். வசனங்களோடு பேசுங்கள். சாத்தானும் கொஞ்சம் பேசிப் பார்க்க வருவான். விரட்டியடியுங்கள்.
ஊழியத் துவக்க நாட்களில் தலைவர்கள் சிலருக்கு காலைச் சிற்றுண்டி செய்ய ஒரு குழு ஆயத்தமானது. பொறுப்பாயிருந்த சகோதரி என்மேல்கொண்ட பொறாமையினால் என்னை ஒதுக்கிவிடுவார்கள். எனக்கு ஏதாவது வேலை கொடுக்கும்படி நான் கெஞ்சியபோது, "சரி போ, இட்லிக்கு மாவாட்டு" என்றார்கள். அது முந்தினநாள் வேலை என்பது யாரும் அறிந்ததே. அந்நாட்களில் மின் இயந்திரம் இல்லாததால் கல்லில் ஆட்டினேன். மறுநாள் தலைவர்கள் வந்தபோது அந்த சகோதரி தலைவர்களிடம் நற்சான்று வாங்குவதற்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தபோது நான் சிலையென நின்று எனக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டிருந்தேன். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர், "இட்லி எப்படி இவ்வளவு பஞ்சுபஞ்சாக சென்றிருக்கிறது?" என்றார். மற்றொருவர் "இட்லியின் இரகசியமே மாவட்டுவதில்தான் இருக்கிறது. யார் மாவாட்டியது?" என வினவினார். என் கணவர் பெருமையாக, "என் மனைவிதான்" என்றார். தலைவர்கள் யாவரும் என் பக்கமாய்த் திரும்பி நான் பீட்ருட்டாய் சிவக்கும்வரை மெச்சினர். யாவரும் சென்றபின் நடந்த கலாட்டாவைச் சொல்லவும் வேண்டுமா? தேவன் அநீதியுள்ளவரல்ல. இது ஓர் அற்ப எடுத்துக்காட்டு. பிறர் என்னைத் துச்சமாய் நடத்தியபோதெல்லாம் தேவன் என் கரங்களைப் பிடித்து வெறுப்பை வெறுப்பால் தாக்குவது மடமை எனக் கற்பித்திருக்கிறார். இருப்பினும், நீங்கள் சுயபரிதாபத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறீர்களா, எழுந்துப் பிரகாசிக்க முழு முயற்சி எடுத்தீர்களா, சுய உரிமையை நிலைநாட்டாமல் விட்டுவிட்டீர்களா என்று எந்தச் சூழ்நிலையையும் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும். |