பதில்: ஒரு பொருள் அழகுப்படுத்துவது என்பது ஒரு வியாபார யுக்தியாகும். மற்ற புத்தகத்தைவிட அட்டையின் முகப்பு அழகாக காணப்பட்டால் கவர்ச்சி அதிகமாகும். மற்ற புத்தகங்களைவிட கவர்ச்சியுள்ள புத்தகம் மிக அதிகம் விற்பனையாகும்.
நான் ஜாமக்காரன் வெளியிடுவது பொது மக்கள் விலைக்கு வாங்குவதற்காக அல்ல. புத்தக சந்தையில் அதிகம் விற்பனையாகவேண்டும் என்ற நோக்கத்தில் அல்லவே!. ஜாமக்காரனில் வெளியிடும் விஷயம் எப்படியாவது வாசகர்களுக்கு போய்சேர வேண்டும் என்பது மட்டுமே என் பாரம். ஜாமக்காரன் விற்பனைக்காக வைக்கப்படும் வியாபார பொருள் அல்ல. மற்ற பத்திரிக்கைகளுடன் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையில் வெளியிடவேண்டும் என்பதும் என் நோக்கம் அல்ல. ஜாமக்காரன் என் சொந்த பணத்தை செலவழித்து வெளியிடும் பத்திரிக்கையும் அல்ல. என் அன்பு வாசகர்கள் அனைவரும் தங்கள் சொந்த பணத்தை மாதமாதம் எனகக்கு அனுப்பி பணம் செலவழித்து பத்திரிக்கை வெளியிடும் செலவை பொறுப்பேற்று இத்தனை வருடங்களாக கடன் இல்லாமல் நடத்தி வருகிறார்கள். ஜாமக்காரனை லட்சக்கணக்கான மக்கள் வாசிக்கிறார்கள். கம்பியூட்டர் வழியாக இன்டர்நெட், வெப்சைட் வழியாக பல லட்சம் மக்கள் ஜாமக்காரனை வாசிக்கிறதாக வெப் சென்டர் நடத்துபவர்கள் கூறக் கேட்டு தேவனைத் துதித்தேன்.
அதே சமயம் பத்திரிக்கை நடத்து மற்ற ஊழியர்கள் விலை உயர்ந்த பேப்பரில் அவர்கள் பத்திரிக்கையை வெளியிடும் நோக்கத்தையும் நான் குறை சொல்ல முடியாது.
மறைந்த சகோ.DGS.தினகரன் அவர்கள் மேட்டூர் SBI பேங்க் கிளை மேனேஜராக பணியாற்றும்போதுதான் இயேசு அழைக்கிறார் வானொலி நிகழ்ச்சியை ஆரம்பிக்க நான் காரணமானேன். அவருக்கு முன்பதாகவே நான் வானொலியில் பிரசங்கித்துக்கொண்டிருந்த காலம் அது. சகோ.தினகரன் அவர்களும் வானொலியில் பேச ஆசைப்பட்டார் பெங்களுர் FEBA வானொலி நிலைய பொறுப்பாளர்களிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தேன்.
அப்போது சகோ.வீரராஜ் அவர்கள் (இப்போது அமெரிக்காவில் சபை ஆயராக இருக்கிறார்) ரெக்கார்டிங் பதிவாளராக இருந்தார். இப்போது திருச்சியில் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டராக இருக்கும் பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் அவர்கள் அக்காலத்தில் FEBA வானொலி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். சகோ.தினகரனும், நானும் அங்குள்ள சிறு விருந்தினர் அறையில் தங்கி சகோ.தினகரன் பேசும் 6 மாதத்திற்கான செய்திகளை ஒரே நாளில் FEBAவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சகோ.தினகரனின் வானொலி நிகழ்ச்சிக்கு பெயரிடப்படாமல் இருந்தது. ஸ்தாபனம் ஆரம்பிப்பதோ - சபை ஆரம்பிப்பதோ சகோ.தினகரன் அவர்கள் விருப்பப்படாத நல்ல ஆரம்ப காலம் அது.
அந்த காலங்களில் சகோ.தினகரனுக்கு சொந்தமாக பத்திரிக்கை இல்லை. பெங்களுர் கண்டோன்மென்டில் சபை நடத்திவந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்.கே.ஆர்.பால் அவர்கள்தான் சகோ.தினகரன் அவர்களை தன் பொது கூட்ட நிகழ்ச்சிகளில் பேசவைத்து பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்திய காலம் அது. பாஸ்டர்.கே.ஆர்.பால் அவர்கள் சொந்தமாக அன்று நடத்தி வந்த லிவ்விங் ஸ்டார் என்ற பெயருள்ள பத்திரிக்கையில் சகோ.தினகரன் அவர்கள் ஒவ்வொரு மாதமும் பிரசங்க செய்திகளை சில பக்கங்கள் எழுதி வந்தார். அது ஜனங்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது.
ஆனால் சில உபதேச பிரச்சனைகளால் சகோ.தினகரன் அவர்களால் சுதந்திரமாக தன் கருத்தை அந்த பத்திரிக்கையில் வெளியிடமுடியாமல் சில மனஸ்தாபங்கள் பாஸ்டருக்கும், அவருக்கும் ஏற்பட்டது. அப்போதுதான் ஏன் நாமே சொந்தமாக ஒரு பத்திரிக்கை தொடங்கக்கூடாது என்ற தன் ஆசையை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார்.
|