பதில்: இது எபிஸ்கோப்பல் சபையில் (Mainline Church) மட்டும்தான் இந்த 40 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது கத்தோலிக்க, CSI, லூத்தரன், மார்தோமா, யாக்கோபையா சபையினர் மட்டும்தான் இதை அனுஷ்டிக்கிறார்கள். இது வேதத்தில் குறிப்பிடாத உபதேசமாகும். ஆரம்பகால புதிய ஏற்பாட்டு சபைகளில் கடைப்பிடிக்காத ஒரு பழக்கம் ஆகும். இந்த நாற்பது நாட்களில் ஒருவேளை ஆகாரம் சாப்பிடாது இருப்பது இந்த சடங்குகளில் ஒன்றாகும். அதை ஒருசந்தி என்று அழைப்பார்கள். இவைகளைக்குறித்து என் கூட்டங்களில் பல இடத்தில் பிரசங்கித்து இருக்கிறேன்.
சாம்பல் என்ற வார்த்தை வேதத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப்பட்டதாகும். சாம்பல் பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்து பாளையத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவிட்டபின் அவர்கள் மனந்திருந்தி மறுபடியும் பாளைத்துக்குள் அல்லது சபைக்குள் சேர்க்க சாம்பலை தண்ணீரில் கரைத்து அவர்கள்மேல் தெளிக்கும் சடங்காக உபயோகித்தார்கள். எண் 19:17ல் மனந்திருந்தியவனை தீட்டை நீக்க அவனை சுத்திகரிக்க பலபீடத்தின் அருகே அவனை நிற்க வைத்து பலிபீடத்திலிருந்து சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து அதை அவன்மேல் தெளித்து பாவம் சுத்திகரிக்கப்பட்டது என்று கூறி தீட்டு நீங்கியவனாக மறுபடியும் பாளைத்தில் அவனை சேர்த்துக்கொள்வார்கள்.
இதே கருத்தை, நிகழ்ச்சியை ஒப்பிட்டு எபிரேய நிரூபத்தை எழுதியவர் எபி 9:13ம் வசனத்தில் சாம்பல் சுத்திகரிக்க உபயோகப்படுத்தப்பட்டதைப்போல் என்று குறிப்பிட்டு எழுதுகிறார். இதை கான்ஸ்டன்டைன் ராஜா காலத்துக்குபின் சபைகளில் 40 நாட்களை ஒடுக்க நாட்களாக அறிமுகப்படுத்தபட்டு அதன் ஆரம்ப நாளான புதன்கிழமையை சுத்திகரிக்கும் ஆரம்ப நாளாக குறிப்பிட சாம்பல் புதன்கிழமை என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாட்களில் சபை மக்கள் தங்களை ஆராய்ந்து தங்களை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும் என்று அன்றைய சபையின் சடங்காக கத்தோலிக்க சபையிலும் தொடரப்பட்டு இப்போது பிராட்டஸ்டண்ட் சபைகளிலும் தொடருகிறது. இதை மற்ற ஆவிக்குரிய சபைகளில் பின்பற்றுவதில்லை. பெயர் கிறிஸ்தவனாக இருப்பவர்கள் இந்த 40 நாட்களில் தங்களை பரிசோதித்து தவறை சரிப்படுத்தி வாழ பிராட்டஸ்டண்ட் சபை மக்கள் 40 நாட்களை ஒடுக்க நாட்களாக அனுஷ்டிப்பதில் பிழையேதுமில்லை.
சரியான உண்மை கிறிஸ்தவன் எந்த சபையை சேர்ந்தவனாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் தன்னை பரிசோதித்து ஆராய்ந்து பார்த்து சுத்திகரித்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம். சாம்பல் புதன்கிழமைக்காகவோ, 40 நாட்கள் தபசு கால நாட்களுக்காகவோ காத்திருக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் அதாவது தன் மரணம்நாள் வரை தற்பரிசோதனைசெய்து தன்னை சுத்திகரித்துக் கொள்வது மிக அவசியம். ஆவிக்குரிய சபைகளுக்கு இந்த சாம்பல் - 40 நாள் தபசு காலம் என்பது கிடையாது. இதுதான் சாம்பல் புதனின் விளக்கம்.
|