கேள்வி: இலங்கையின் புதிய அதிபரைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?.
பதில்: தெரியாது!. ராஜபக்ஷே ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார் என்பதை அறிவேன். அதைத்தவிர மேல் விவரங்கள் நான் அறியேன். ஆனால் அவரின் பெயர் மறக்க முடியாத மிக நீளமான பெயர் ஆகும். உலகிலேயே மிக நீளமான பெயர் புரூனே சுல்தானுடையது என்று அறிவேன். ஏறக்குறைய இலங்கை அதிபரின் பெயரும் அந்த நீளத்துக்கு வரும் அதிபரின் முழுபெயர் பல்லேத்தை கமரலா லாகே மைத்ரீபால யாப்பா சிறிசேனா என்பதாகும். ஆகவே அதை சுருக்கி சிறிசேனா என்று குறிப்பிடுகிறார்கள். இவர் ஆட்சி பொறுப்பேற்றதும் மிக ராஜதந்திரமாக இலங்கைக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ஒரு தமிழ் நபரை நியமித்தது யாழ்பாண தமிழர்களை திருப்திப்படுத்தி தமிழ் மக்களை தன் பக்கம் இழுக்க செய்யப்பட்ட நல்ல ராஜதந்திரமாகும். இனி போகபோகத்தான் அதிபரின் அணுகுமுறை தமிழர்களின் விஷயத்தில் எப்படியிருக்கும் என்பதை கூற முடியும்.
உலக கணக்கெடுப்பில் மிக அதிகமான பெண்கள் விதவைகளாக இருப்பது யாழ்பாணம் தமிழர் பகுதியில்தான் என்பது மிககொடூரமான செய்தியாகும். உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கைகள், கால்கள், கண்கள் ஆகிய உடல் உறுப்புகளை இழந்து இப்போதும் சாகாத பிணங்களைப் போல் வாழ்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் காட்டப்படுகிறது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கண் முன்னால் யாழ்பாண மக்களின் சொந்த காணி உண்டு. உழுது பயிரிட அனுமதியில்லை. சொந்த வீடு உண்டு, அதில் போய் குடியிருக்க அனுமதியில்லை. இப்படிப்பட்ட கொடூரமான சூழ்நிலையை மாற்ற யாழ் மக்கள் அவரவர் நிலத்தை அவரவர் பயிரிட்டு உயிர்வாழ போர் கால நடவடிக்கையாக புதிய அதிபர் ஏதாவது நடவடிக்கை எடுத்து உதவினால் யாழ் மக்களுக்கு சிறிய அளவாவது ஆறுதல் கிடைக்குமே!. செய்வாரா? ஜெபிப்போம். இலங்கையில் ஆட்சி மாறியது - ஆனால் காட்சிகள் மாறுமா?
|