Dr.Lillyan Stanley
டாக்டர்.லில்லியன் ஸ்டான்லி அவர்கள் சகோ.R.ஸ்டான்லி (ஆசீர்வாத இளைஞர் இயக்கம்) அவர்களின் மனைவி ஆவார். இவர் எழுத்து கொஞ்சம் சூடாக இருக்கும். இதை வாசிக்கும் வாசகர்கள் இதில் நல்ல ஆலோசனை எது?- ஏற்றுக்கொள்ளமுடியாத ஆலோசனை எது? என்பதை நிதானித்து பார்த்து பயன்படுத்திக்கொள்ளவும்.
1. நான் ஆணுக்குக் குறைந்தவளா?:
இல்லை. நீ குறைந்தவளல்ல. கணவன் தலையானால் மனைவி கழுத்து, இரண்டுமே முக்கியம்தான். காரில் எது முக்கியம்? ஸ்டீரிங் வீலா, எஞ்சினா, கீயரா? குடும்பம் ஓர் அமைப்பு, ஆண் எத்தனை முக்கிமோ பெண்ணும் அத்தனை முக்கியமே.
இரண்டே விதமான மக்கள்தான் உள்ளனர் - வேதத்தைச் சார்ந்தவர். வேதத்திற்குப் புறம்பானவர். பாக்கியவான்கள் யார்? ஆண்களா, பெண்களா? இயேசு போதித்தது. "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்... சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்...." "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்... நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்". ஆணோ பெண்ணோ அல்ல, "நீங்கள்" என்பதையே இயேசு பன்மையில் இருபாலருக்கும் சேர்த்து வலியுறுத்தினார். யார் பெரியவர்? ஆணா, பெண்ணா? இந்த பிள்ளையைப்போலத் தன்னை தாழ்த்துகிறவனெவனோ அவனே இறையரசில் பெரியவனாயிருப்பான்" (மத் 18:4). "இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, இறையரசில் பெரியவன் என்னப்படுவான்" (மத் 5:19). ஆணா, பெண்ணா என்று போட்டியிடுவதை விட்டுவிட்டு நம்முடைய ஆன்மீக வாழ்வில் குடும்பமாக முன்னேறுவதில் கவனம் செலுத்துவோம்.
நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே... ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே, யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. ஆணென்றும், பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் என்று வேதம் கூறுகிறது கலா 3:26-27. கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து ஒருவர் வரும்போது, உள்ளிருப்பவர் ஆணா-பெண்ணா என்று அறியமுடியுமா? கிறிஸ்துவை அணிந்துக்கொள்வதும் அப்படித்தான். நம் யாவரையும் ஒன்றாக்குகிறார். ஆணுக்குப்பெண் குறைவு இல்லாதவள் என்ற எண்ணம் உள்ளத்தில் ஒளிந்துகொண்டிருக்குமானால் ஆணுக்கு நிகராகக் காரியங்களைச் செய்யமுற்படுவாய். சாத்தான் முதலாவது தவறான எண்ணத்தை ஊட்டிவிட்டு, பின் உங்களை ஒரு ஆணைப்போலாகத்தள்ளி விடுவதினால், நீ தேவன் உனக்களித்த அழைப்பை அசட்டை செய்ய உங்களை தூண்டுவான். வீட்டிற்கு வெளியே பெண்கள் வேலை செய்வதற்கு வேதம் மறுப்புத் தெரிக்கவில்லை. பெண்கள் வெளி வேலையே செய்யாத யுகத்திற்கு திரும்பவேண்டுமென்று நானும் கூறவிரும்பவில்லை. ஆணுக்குக்கட்டளை இதுதான். பாடுபட்டு வியர்வை சிந்தி சம்பாதிப்பது ஆணுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. ஆனால் பெண்ணாகிய வேதனையோடு பிள்ளை பெறுவதோடுகூட நீ கூடுதலாக உன்னை ஏன் தண்டித்துக் கொள்ளவேண்டும்?. |