உங்கள் மனைவி என்னும் ஸ்திரீயை நீங்கள் தானாகவே கண்டுபிடித்து உங்கள் துணையாக ஏற்படுத்தியிருந்தாலும், அல்லது உங்கள் பெற்றோரும், உறவினர்களும் உங்களுக்காக அவளை சம்பந்தம் பண்ணி வைத்திருந்தாலும் சரி, திருமணம் என்ற திட்டத்தின்கீழ் நீங்களும் கணவனும், மனைவியுமாக வந்திருந்தால், அவருக்காக நீங்களும், உங்களுக்காக அவரும் ஜெபிக்கவேண்டும். அதுவே உங்களைக் குறித்தும், உங்கள் திருமணத்தை குறித்தும், குடும்பத்தைக் குறித்தும் தேவனுக்குள்ள முதல் எதிர்ப்பார்ப்பு.
ஒரு குடும்பம் சீர்குலைந்துபோனால், அதன் காரணத்தை தேவன் மனிதனிடமே (அதாவது ஆணிடமே) முதலில் விசாரிப்பார் என்று நாம் நினைக்க வேதத்தில் காரணமுண்டு. ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருந்த விருட்சத்தின் கனியை மனிதனும், அவன் மனைவியும் புசித்ததை அறிந்த தேவன் ஆதாமைத் தேடினார் என்று வாசிக்கிறோம். ஆதி 3:9.
"அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய் என்றார்". இந்த வசனத்தை வாசிக்கும்போது 2 கேள்விகள் நம் மனதில் எழலாம்.
முதல் கேள்வி: ஆதாமையும், ஏதேன் தோட்டத்தையும் படைத்த தேவனுக்கு ஆதாம் எங்கே இருக்கிறான் என்று தெரியாதா? தெரியும். ஆனால் அவர் கேள்வியின் சாரம் இதுவே
"ஆதாமே நீ என்னோடு கொண்ட உறவில் இப்பொழுது எங்கே இருக்கிறாய்? நீ புசிக்கவும், தொடவும் கூடாது என்று சொன்ன கனியை புசித்து பாவஞ்செய்ததனால் என்னைவிட்டு, என் கட்டளையை மீறி என் பிரசன்னத்தை விட்டு தூரம் சென்ற ஆதாமே, இப்பொழுதும் நீ எங்கே இருக்கின்றாய் என்பது உனக்கு தெரியுமா?"
2வது கேள்வி: தேவன்
ஏன் பாவம் செய்த ஸ்திரீயிடம் விளக்கம் கேட்கவில்லை? இதற்கு காரணம் என்ன என்று வேதம் தெளிவாகச் சொல்லவில்லையென்றாலும், வேத வல்லுநர்கள் சொல்லும் கூற்று இதுவே. ஆண்டவர் தம் கட்டளையை மனுஷனுக்குத்தான் கொடுத்தார். அவனிடமிருந்துதான் ஏவாள் அந்த கட்டளையை அறிந்திருக்கவேண்டும். அப்படியிருக்க தாம் யாரிடம் பொறுப்பைக் கொடுத்தாரோ, அவனிடமே அதைக்குறித்து விசாரிப்பதுதான் நீதிபரரான தேவனுடைய சுபாவம்.
இதை வாசிக்கும் எனக்கு அருமையான சகோதரரே, குடும்பம் என்ற பொறுப்பையும் தேவன் உங்களிடம் உங்களை நம்பியே தந்துள்ளார் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் உங்கள் மனைவியை கரம்பிடித்து ஆறு மாதங்களோ, ஆறு வருடங்களோ, அறுபது வருடங்களோ எவ்வளவு காலம் ஆகியிருந்தாலும் குடும்பத்தலைவர் என்ற அந்தஸ்து அரசாங்கம் தரும் ரேஷன் கார்டில் மட்டுமல்ல, ஆண்டவர் பார்வையிலும் உங்களுக்குத்தான்.
உங்கள் மனைவிக்காக தினமும் சிறிது நேரம் எடுத்து கீழ்கண்டவாறு ஜெபிப்பீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
என் ஆண்டவரே,
நீர் நினைக்கும் வண்ணம் நல்ல
கணவனாக என்னை மாற்றுமையா, நீர் எனக்கு தந்த அந்த பெரிய பொறுப்பை அலட்சியப்படுத்தவோ, கவனக்குறைவாக கையாளவோ என்னை அனுமதிக்காதீர்.
என்
மனைவியின் தேவைகள் என்ன என்று புரிந்துக்கொள்ளவும், அவள் ஆசைகள், எதிர்ப்பார்ப்புகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளவும் அவள் சொல்வதைக் கவனமாக கேட்கவும், வேண்டிய கிருபையைத்தாருமையா.
அவள் எனக்கு தரும்
ஆலோசனைகளை உம்முடைய சித்தத்தின்படி உள்ளனவா என்பதை விளங்கிக்கொள்ள வசனத்தின் வெளிச்சத்தை தாரும். தேவனே, என் சுய விருப்பு - வெறுப்புகளைவிட என் எலும்பிலும் எலும்பும் என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கும் என் மனைவியின் விருப்பு - வெறுப்புகளை மேலாகக் கருத வேண்டிய கிருபையைத்தாரும்.
என் பேச்சிலும், சுபாவத்திலும் அவளை பாதிக்கும் காரியங்கள் என்ன என்பதை அறிந்து அவற்றை அப்புறப்படுத்த உதவும்.
கிறிஸ்து தமது
சரீரமான சபையை நேசிப்பதைப்போல என் மனைவியை நேசிக்க, தன்னலமற்ற, தியாக பூர்வமான அன்பை அவளிடம் செலுத்த எனக்குள் உம்முடைய அன்பை ஊற்றும். |