அவள் என்மீது காட்டிய கரிசனையை அறியாது போனேனே!
அவள் என்மீது எவ்வளவு பொறுமையாய் இருந்திருக்கவேண்டும்
அவள் என்னைவிட்டுச் செல்லும்வரை உணராது போனேனே!
அவள் நாள் தவறாமல் எனக்குச் செய்த உதவி எத்தனை எத்தனை
அத்தனை செய்த அவளை சற்றே சிந்தித்திட அறியாது போனேனே!
ஆ...... இன்று அவள் மரித்துவிட்டாள்! இனி சிந்தித்துப் பயனேது!
அவள் சுமந்த சிலுவை ஏராளம்!, ஆகிலும் புன்சிரித்தாள!,
அவள் துக்கங்களை தன் இதய நாணில் வைத்தே மீட்டுவிட்டாள்
ஆ..... இதயமில்லா பாவி நான், இதை அன்றே அறியாது போனேனே!
அவளிடம் கண்டதோ பூத்த புன்னகை!, சுடர்வீசும் மகிழ்ச்சியே!
அதுகண்டு "அவளுக்கென்ன குறை"! என்றல்லவோ இருந்துவிட்டேன்
"அன்று" உதவிக்கரம் நீட்டிட அந்தோ அறியாது போனேனே!
இவள் ஏன் அலட்டிக்கொள்கிறாள் என அன்று எண்ணினேன்!
இன்றோ அவளை பல துக்கங்கள் சூழ்ந்திருந்ததைக் காண்கிறேன!!
இன்னலில் உழன்ற அவள் துக்கத்தை அன்றே நான் அறிந்திருந்தால்
இனிதே நன்மைகள் பல நான் செய்திருக்கக்கூடுமே!, ஆனால்....
இனித்த புன்னகையால் இன்னல் எனக்கு மறைத்துவிட்டாளே!
இனி நான் என்ன செய்வேன் கனிமரமாய் தவிக்கிறேன!!!
இனிய அவள் என் வாழ்விற்கு சுமை தாங்கியாய் நின்றதை
இளைத்தே என்னைவிட்டு மறையும்வரை அறியாது போனேனே!
இங்கிதம், பொறுமை, முகமலர்ச்சி... அடடா எத்தனை எத்தனை!
இத்தனை நற்குணங்களால் என் வாழ்வை செழித்திட வைத்தாளே!
இக்கானக பயணத்தைத் தன் சிறுசிறு செயல்களால்... எனக்கு
கனிவாக்கித் தந்தாளே பாதகன் நான்... அறியாது போனேனே!
2003 ஆகஸ்ட் மாத ஜாமக்காரனில் மனைவியை இழந்த கணவர் ஒருவர் புலம்பலாய் கவிதை எழுதியிருந்தார். அதைத்தான் நீங்கள் மேலே வாசித்தீர்கள்.
பலர் தன் மனைவி உயிரோடு இருக்கும்போது அவளை அலட்சியப்படுத்தி மனதில் ரண வேதனை உண்டாக்கி, மற்றவர்முன் உறவினரின்முன் மனைவியை அவமானப்படுத்தி மனைவியை ஒரு வேலைக்காரியைப்போல் நடத்திய கணவன்மார்கள் நிறைய பேர் உண்டு. |