இலங்கைவாழ் தமிழர்களின் தற்போதைய மனநிலை

உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக குறிப்பாக இலங்கை தமிழர் ஜாமக்காரன் வாசகர்களுக்காகவே இந்த கட்டுரை தொகுப்பை 3 பத்திரிக்கைகளிலிருந்து தொகுத்து எடுத்து எழுதினேன். அதில் ஒன்று இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிக்கையிலிருந்து முக்கிய தகவல்களை மட்டும் தொகுத்து இலங்கை தமிழ் வாசகர்கள் நன்மைக்காக எழுதுகிறேன். இவற்றோடு நானே சமீபத்தில் நேரில் சென்று ஒருவாரம் தங்கி சேகரித்த விவரங்களையும் சேர்த்து எழுதியுள்ளேன்.

இதை வாசிக்கும் முன் நீங்கள் அறியவேண்டியது நான் விடுதலைபுலிகளின் அல்லது இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஆகியவர்களின் யுத்தத்துக்குமுன், யுத்தத்துக்குபின் நடந்த குரூரமான கொலைகள் குறித்து அல்லது அந்த இருவரின் செயல்களைக்குறித்து நியாயப்படுத்தியோ, குற்றப்படுத்தியோ, ஆதாரித்தோ-எதிர்த்தோ எழுதும் நோக்கத்தில் இதை எழுதவில்லை. மேலும் அவைகளை குறித்து விமர்ச்சிக்கவும் நான் விரும்பவில்லை என்பதை அறியவேண்டும்.

நான் ஒரு கிறிஸ்தவ ஆவிக்குரிய பத்திரிக்கை ஆசிரியன். என் வாசகர்களுக்கு நல்லதை அறிவிக்க வேண்டியது என் கடமைகளில் ஒன்றாகும். இலங்கை தேச அரசியல்வாதிகளின் அல்லது விடுதலைப்புலிகள் என்ற விடுதலை இயக்கங்களின் கொள்கைகளில் தலையிட எனக்கு உரிமையில்லை. அது என் ஊழியமும் அல்ல. ஆனால் இவர்களின் செயல்பாடுகளையும் இப்போது யுத்தத்துக்குபின் மக்களின் மனநிலை, எதிர்ப்பார்ப்பு இவைகளைப்பற்றிமட்டும் இலங்கை தமிழ்மக்களின் நன்மைக்காக விமர்சிக்க எனக்கு உரிமை உண்டு.

அந்த வகையில் 2012 டிசம்பர் மாதம் இலங்கையில் தெற்கு முதல் வடக்கு மாநிலம்வரை நான் ஊழிய பயணம் போய்வந்தபோது நான் கண்டது, அறிந்தது, பார்த்தது, கேட்டது யாவையும் சுருக்கமாக 2012 டிசம்பர் மாத ஜாமக்காரனில் புகைப்படங்களோடு அன்றைய நிலையை வாசகர்களுக்கு அறிவித்தேன். அதில் அறிவித்தது ஆவிக்குரிய விஷயங்களைப்பற்றி அதிகமாகவும், தேச நிலைமைக்குறித்து மிக குறைவாகவும் எழுதினேன். இலங்கை தமிழ் மக்களின் தற்போதைய மனநிலையை அவர்கள் இந்திய மக்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன? என்பதைக்குறித்தெல்லாம் எழுதவில்லை.

ஆனால் 2013 மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள தமிழ் மாணவ சமுதாயம் எந்த அரசியல்வாதிகளின் தொடர்போ, தூண்டுதலோ இன்றி இலங்கை தமிழர்களின் ஈழநாட்டு சுதந்திரம், ராஜபக்ஷே தண்டிக்கப்பட வேண்டும், அவரை போர்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள், மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகள், தொழிற்கல்வி மாணவ-மாணவிகள் அனைவரும் ஊர்வலம், உண்ணாவிரதம் என்று இந்திய தமிழ்நாட்டை இலங்கை தமிழருக்காக கலக்கிவிட்டனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை காணாத செயலாக வடஇந்திய மாணவர்களும் ஊர்வலம், உண்ணாவிரதம் என்று தமிழ் மாணவர்களுடன் இணைந்தது இந்திய நாட்டின் அரசியல்வாதிகளையும், தலைவர்களையும், ஆட்சியாளர்களையும் மிகவும் யோசிக்க வைத்தது.

ஆனால் இத்தனை அருமையான மாணவ ஒற்றுமை, எழுச்சியாவதும் அர்த்தமற்றதாகவும், பிசுபிசுத்தும்போனது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது.

இந்த மாணவ எழுச்சி இலங்கை அரசாங்கத்தை இம்மியளவும் அசைக்கவில்லை. அதுமட்டுமல்ல, இலங்கையில் வாழும் எந்த தமிழ் மக்களும் இந்த எழுச்சிக்கு நன்றி கூறவோ, வரவேற்கவோ இல்லை என்பது இந்திய தமிழ் மாணவ சமுதாயத்துக்கு பெரும் தோல்வியையும், மனவேதனைகளையும் அளித்தது. காரணம் இந்த மாணவர்களின் நோக்கம், லட்சியம் எதுவும் இல்லாமல் போராட ஒன்றுசேர்ந்ததுதான் காரணம் ஆகும். கிறிஸ்தவ வேதத்தில் ஒரு இடத்தில் "எதற்கு கூடியிருக்கிறோம் என்றே அறியாமல் கூடினார்கள். சிலர் இப்படியும் சிலர் அப்படியும் பேசினார்கள்" என்று எழுதியிருப்பதுபோல இந்த மாணவர்களில் பலர் ஏன் போராடுகிறோம், எதற்காக ஊர்வலம், எதற்காக உண்ணாவிரதம் இதனால் இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை வரும் என்பதைக்குறித்து யாரும் யோசிக்க முயலவில்லை.

இந்திய மாணவர்கள் போராட்டத்தாலும் இலங்கை புத்த துறவிகள் தஞ்சையில் தாக்கப்பட்டதாலும், இலங்கையிலிருந்து இந்தியா வந்த உல்லாச பயணிகளும் தாக்கப்பட்டதாலும் இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் கோபப்பட்டு பதிலுக்குபதில் செய்யநினைத்திருந்தால் இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பார்களே?. மறுபடியும் ஒரு இனக்கலவரம் சிங்களர்-தமிழர் என்று தெற்கு இலங்கையில் ஏற்பட்டிருக்குமே?. கடவுளின் பெரும் கிருபை அப்படி ஒரு பிரச்சனை எழும்பாதபடி இலங்கை சிங்கள மக்கள் தங்கள் பொறுமையை காத்துக்கொண்டார்கள். அதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். அப்படியே இந்த மாணவர் எழுச்சியை இலங்கை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு இலங்கை தமிழர்களை தாக்க முயற்சிக்காமல் சிங்கள மக்களை போராட்டத்துக்கு தூண்டாமல் அமைதி காத்த இலங்கை அரசியல்வாதிகளையும் வாழ்த்துகிறோம்.


இலங்கையில் வாழும் தமிழர்களின் தற்போதைய மனநிலை என்ன?

இவற்றை அறிய இதற்கென்றே இலங்கைக்கு சென்று நேரடி பேட்டி கண்டு அறிவித்த பத்திரிக்கைகளிலிருந்து சிலவற்றை தொகுத்து எழுதுகிறேன்.

அந்த குறிப்பிட்ட பத்திரிக்கை குழுவினருக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் ஜாமக்காரன் நன்றியை அறிவிக்கிறது. இலங்கையிலிருந்து வெளிவந்த பத்திரிக்கைக்கும் ஜாமக்காரன் நன்றியை கூறுகிறது.

அதேபோல் தேசிய முரசு என்ற பத்திரிக்கைக்கும் நன்றி கூறுகிறது.

இன்டர்நெட் வழியாக தகவல்கள் அனுப்பியவர்களுக்கும் ஜாமக்காரன் நன்றி கூறுகிறது.

இலங்கை வாழ் மக்களின் மனோநிலையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான அபிப்ராயங்கள் நிச்சயமாக இருக்கும். இதை வாசிக்கும் நீங்கள் சமாதானத்துக்கேதுவானவற்றை மட்டும் ஜாமக்காரன் வாசர்களாகிய இலங்கை தமிழர்கள் கைக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய தமிழ்நாட்டு மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்த போராட்டத்தைக்குறித்து இலங்கையில் அச்சிட்டு வெளியாகும் தினக்குரல் என்ற தினசரி பத்திரிக்கையின் ஆசிரியரும், யாழ்பாணத்தை சேர்ந்த தமிழருமான திரு.வி.தனபால்சிங்கம் கூறியது:

இந்திய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்களை ஆதாரித்து உணர்வு பூர்வமாக போராடியதை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களின் இப்போதைய தேவை என்ன? என்பதை அறிந்து போராடியிருக்கவேண்டும்.

இவ்வளவு பெரிய தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட்டுவிட்டோம். இப்போது ஏற்பட்ட யுத்த இழப்புகளுக்கு பிறகும் நாங்கள் தமிழ் ஈழம் கோரிக்கையை கையில் எடுத்தால் இப்போது எஞ்சியுள்ள தமிழர்களின் எதிர்காலத்தையே பாழடித்துவிடும். இன்றைய நிலையில் தமிழ் ஈழம் சாத்தியமில்லாதது ஆகும்.


இலங்கை தமிழர் விடுதலை கூட்டணி: செயலர் திரு.வி.ஆனந்தசங்கரி:

இலங்கையில் தனி தமிழ்நாடு கோரிக்கையை இலங்கை தமிழர் தொடங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்பே (அறிஞர்.அண்ணாதுரை காலத்திலேயே) இந்தியாவில் வாழும் தமிழர்கள் தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடினார்கள். ஆனால் கடைசியில் அவர்களே இந்தியாவில் அந்த கொள்கையை கைவிட்டுவிட்டார்கள்.

அதிகாரம் பொருந்திய தமிழ் மாநில அரசு என்ற நிலைக்கு இந்திய தமிழர்கள் பழகிவிட்டார்கள். இப்போது அதில் திருப்தியடைந்து அதில் நிம்மதியாக வாழ்கிறார்கள். இப்போது இலங்கையில் வாழும் தமிழர்களும் அதையேதான் விரும்புகிறோம். தமிழ் ஈழம் என்பதை மறந்துவிட்டோம். சிங்கள அரசியல் தலைவர்கள் அரசியலுக்காக பல தவறுகளை செய்யலாம். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள். அப்டிப்பட்ட சிங்களர்களை இந்திய தமிழ்நாட்டில் தாக்குவது காந்தி பிறந்த மண்ணில் நடக்கக்கூடாது. அது எங்களைத்தான் பாதிக்கும்.


இலங்கை வடக்கு யாழ்பாண (Jaffna) மேயர்: யோகேஸ்வரி பற்குணராசா:

இந்தியாவில் சுமார் எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டை இந்திய தமிழர்களாலேயே தனி தமிழ்நாடாக்க முடியவில்லை. இலங்கையின் மொத்த ஜனத்தொகையில் இரண்டு கோடி கொண்ட(முஸ்லீம் தமிழரை தவிர்த்து) மலையாள தமிழர்கள் (நுவரேலியா) தவிர்த்து மேலும் இந்திய வம்சாவளித் தமிழர்களையும் தவிர்த்து வெறும் வடக்கு-கிழக்குப்பகுதியில் வாழும் தமிழர்கள் வெறும் சில லட்சம் தமிழர்களுக்கு மட்டும் ஒரு தனி நாடு கேட்பது எந்த விதத்தில் சாத்தியம். விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான ஆதரவாளர்களைத்தவிர இலங்கையில் உள்ள மற்ற எல்லா தமிழர்களுமே தனி தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை கைவிட்டு நீண்ட காலமாகிறது. இந்தியாவில் உள்ள தமிழர்கள் மறுபடியும் தமிழ் ஈழம் என்பதை போராட்டத்துக்கு காரணமாக்கினால் மீதியிருக்கிற எங்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த மீதி இருக்கும் கொஞ்ச கனவுகளையும் திசைமாற்ற பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது.

இந்தியாவில் இலங்கை தமிழர்களைக்குறித்து பேசப்படும் வதந்திகளை நம்பாதீர்கள். இங்கு வாழ்வது நாங்கள். இங்கு வந்து நேரில் பாருங்கள். உங்கள் போராட்டம் எங்களுக்கு கொஞ்சமேனும் உதவாது. ஆனால் பெரும்பாதிப்பைத்தான் உண்டாக்கும். தயவுசெய்து இந்தியாவில் வாழும் தமிழர்கள் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.


யாழ்பாணம் (Jaffna) திரு.கங்கா (பஸ் ஆப்பரேட்டர்):

யாழ்ப்பாணத்தில் இறுதிப்போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகப்போகிறது. இதே நாட்டில் யுத்தத்தில் பிழைத்து இப்போதும் உயிரோடு இருக்கும் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு (வேண்டும்) என்று நாங்கள் நினைத்திருந்தால் இந்த நான்கு ஆண்டுகளில் இந்த யாழ்பாணத்தில் அல்லது வவுனியாவில் உள்ள எங்களில் யாராவது ஒருவராவது உண்ணாவிரதமாவது இருந்திருக்கமாட்டோமா? அல்லது ஒருவராவது தீக்குளித்திருக்கமாட்டோமா? அப்படி எந்த செய்தியாவது இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு வந்தடைந்ததா? பின் ஏன் இந்திய தமிழ் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து இறக்கவேண்டும்? இது எங்களுக்கு விளங்கவில்லை. இலங்கையின் மொத்த அளவுள்ள இந்திய தமிழகத்தை தனி நாடாக்கவேண்டும் என்று கேட்டால் டெல்லியில் மத்திய அரசாங்கம் விட்டு கொடுத்திருக்குமா? பிறகு அந்த அளவைவிட மிகச் சிறிதான பகுதியான யாழ்பாண தமிழ் (வடக்கு-கிழக்கு) நாட்டை தனிநாடாக இங்கு எப்படி பெறமுடியும். கடந்த 30 ஆண்டுகளாக போர் என்ற பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள் இப்போதுதான் நிம்மதியாக வாழத்துவங்கியுள்ளோம். இந்திய தமிழர்களிடம் நாங்கள் வேண்டுவது என்னவென்றால், எங்கள் தமிழர்கள் சுதந்திரமாக பயமற்று வாழ அரசியல் தீர்வுக்கு உதவுங்கள். அதற்கு இந்தியாவில் மத்திய அரசாங்கத்தை தயார்படுத்துங்கள். அது நீங்கள் எங்களுக்கு செய்யும் நிஜ உதவியாக இருக்கும்.


பெயர் சொல்ல விரும்பாத இலங்கை தமிழ் பத்திரிக்கையாளர்:
(இந்திய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அறிவுரை):

இந்தியாவில் இருக்கும் தமிழ் மாணவர்களுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள். இதுதான் உங்கள் இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அன்றைய நாட்களிலேயே தனி தமிழ்நாடு இந்தியாவில் எடுபடாது என்பதை அறிந்த உங்கள் அரசியல்வாதிகள் அந்த கொள்கையை மாணவர்களாகிய உங்கள்மீதும் இலங்கை தமிழர்களாகிய எங்கள் மீதும் திணிக்கப்பார்க்கிறார்கள்.

இலங்கையிலிருந்து வெளியேறி புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் நல்ல வசதியுடன் வாழும் தமிழர்களிடம் பலவித சலுகைகளை அனுபவிக்கும் உங்கள் அரசியல்வாதிகளின் தூண்டுதலுக்கு ஆளாகி உங்கள் கல்வியை பாழடித்துக்கொள்ளாதீர்கள். உங்கள் சாட்டில் சில சின்ன சின்னதலைவர்கள் தங்கள் அரசியல் ஸ்திர தன்மைக்காக உங்கள் வாழ்க்கையை மாணவர்களாகிய உங்கள் வாழ்க்கையை பாழடிக்கிறார்கள். பலியாக்குகிறார்கள். எங்க இலங்கை நாட்டு தமிழ் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்ததுபோதும். அங்கு (இந்தியாவில்) வாழும் தமிழ் இளைஞர்களான நீங்கள் உங்கள் வாழ்க்கையை இப்படிப்பட்ட போராட்டத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.

இலங்கையில் தனி தமிழ்நாடு சத்தியமே இல்லை. இந்திய தமிழ் மக்கள் எங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இலங்கை தமிழருக்கு சிங்கள மக்களைபோல சம உரிமை வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடுங்கள். அதுபோதும். அது எங்களுக்கு நன்மையை பயக்கும். எங்கள்மீது அன்பு செலுத்தும் நீங்கள் இலங்கையை எதிரி நாடு என்று அறிவிக்க செய்வதில் என்ன லாபம். அதன்மூலம் இலங்கை மீது பொருளாதார தடை விதித்தால் எங்கே போவோம்? இந்தியா அல்லாத வேறு நாடுகளிலிருந்து பொருள்களை வாங்குவார்கள். எங்களுக்கு அது விலை மிக அதிகமாகுமே? வழியில் யார் யாரோ கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். இதையா இந்திய தமிழர்கள் விரும்புகிறீர்கள்?.


கிளிநொச்சி வி.சகாதேவன்
(போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க தலைவர்):

இந்தியாவில் போராடும் மாணவர்கள் ஒருமுறை எங்கள் நாட்டுக்கு நேரில் வந்து பார்க்கவேண்டும். 90 ஆயிரம் விதவைகள் இங்கு இருக்கிறார்கள். எங்கள் இயக்கத்தில்மட்டும் சொத்துக்களை வீடுகளை இழந்த மக்கள் 2244 குடும்பங்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஈழம் என்பது கனவிலும் சாத்தியமில்லாத விஷயம்.

எங்களுக்கு ஈழு தமிழ்நாட்டுக்கு பதிலாக எங்கள் விதவைகள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுக்க மறுவாழ்வுத்திட்டம், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளும், வீடுகள் நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் அதே நிலத்தை அவர்களுக்கு பெற்றுதந்தாலே போதும். தொழிலை இழந்தவர்களுக்கு அதற்கான இழப்பீடுகள் ஆகியவைகள் தான் எங்களின் அவசர தேவைகள் ஆகும்.

தொலைந்த இடத்தில் தேடினால்தான்
     இழந்த பொருள் கிடைக்கும்.

ராஜபக்ஷே அரசின் செயல்களுக்கு அந்த அரசிடம்தான் இழப்பீடு பெறமுடியும். அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்து சிறையில் அடைப்பது முக்கியமல்ல. எங்கள் வாழ்வு எங்களுக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்பதுதான், எங்களுக்கு முக்கியம். ராஜபக்ஷேவிடம் போராடினால்தான் ஓரளவாவது இழப்பீடு பெறமுடியும். 18 கட்சிகள் கொண்ட கூட்டணி இலங்கை ஆட்சி இது. இலங்கையிலேயே பல கட்சிகள் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுக்கமுடியும். இந்த கூட்டணியில் பல தமிழர் கட்சிகளும் உண்டு. அவர்களும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும்.


பெயர் வெளியிட விரும்பாத சிங்களர் (தமிழிலேயே பேசினார்):

பாகிஸ்தானில் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து போராட்டம் நடத்தினால் நீங்கள் காஷ்மீரை தனி நாடாக அறிவித்துவிடமுடியுமா? அதுதான் இங்குள்ள நிலை.

யாழ்பாணத்தை தமிழருக்கு தனிநாடாக பிரித்துக்கொடுத்துவிட்டால் அதில் இந்திய வம்சாவளி தமிழர்கள், மலையாளத் தமிழர்களையும் அவர்கள் நிச்சயம் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அப்படியானால் மற்றவர்களுக்கும் தனி நாடு கொடுக்கமுடியுமா?. அதையடுத்து சுமார் 14 சதவீதம் தமிழ்பேசும் முஸ்லீம்கள் இங்கேயே பிறந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு தனி நாடு கொடுக்கமுடியுமா?

சிங்களவர்களில் கிறிஸ்தவர்கள் கணிசமாக (பெருமளவு) இருக்கிறார்கள். அவர்களுக்கு தனி நாடு கொடுக்கமுடியுமா? இப்படி கேள்விகள் கேட்கிறார்கள்.

இலங்கையில் பொதுபல சேனா (BBS) என்ற அமைப்பு சமீப காலமாக மதவெறியை தூண்டி கொண்டிருக்கிறது. சகல கட்சிகளும் ராஜபக்ஷேவும் இவர்கள் செயலை கண்டிக்கிறார்கள்.

கொழும்புவில் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் பலவித வியாபாரத்தில் நிம்மதியாக வாழ்கிறார்கள். அவர்களிடம் பேசியபோது 90 சதவீதம் தமிழர்களின் கடைகள்தான் இங்குள்ளது. போர் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் நாங்கள் எல்லாரும் நிம்மதியாக வாழ தொடங்கியுள்ளோம். இந்தியாவில் தமிழீழம் என்று போராட்டம் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தி இப்போது இருக்கும் நிம்மதியை கெடுத்துவிடவேண்டாம் என்கிறார்கள்.

இப்படி பலரிடம் நேரிடையாக பேட்டி கண்டு அவர்களின் அபிப்ராயங்கள் பதிவுசெய்யப்பட்டது.


இலங்கை தமிழர்கள் என்றால் யார்?

இதை இந்தியா வாசகர்கள் விளங்கிக்கொண்டாலே ஓரளவு நிலைமை விளங்கிக்கொள்ளமுடியும்.

ஈழத்தமிழர்கள் யார்? யாழ்பாணம் (ஜாப்னா) தலைமையிடமாகக்கொண்ட இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் வாழ்பவர்கள்தான் ஈழத்தமிழர்கள் என்பார்கள்.

இவர்கள் அல்லாது இலங்கையிலே பல நூற்றாண்டுகளாக இங்கேயே பிறந்து வளர்ந்து வாழும் மற்ற தமிழர்கள் ஏராளம் உண்டு. இவர்கள் எல்லாரும் இலங்கை குடிமக்கள்தான். ஆனாலும் அரசாங்கம் தரும் சான்றிதழில் இவர்களுக்கு இந்திய தமிழர் (India - Tamil) என்றே எழுதி கொடுக்கிறார்கள். ஆனால் அதே சமயம் இலங்கையின் மேலே குறிப்பிட்ட வடக்கு-கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களை இலங்கை தமிழர் (Lanka - Tamil) என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.


தமிழ் ஈழ பகுதி என்பது எது?

வடக்கு-கிழக்கு பகுதியில் உள்ளவ்களைத்தான் யாழ்பாண தமிழர்கள் என்பார்கள்.

யாழ்பாணம் (Jaffna), மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை (District) சேர்ந்தவர்களைத்தான் வடக்கு-கிழக்கு யாழ்பாண தமிழர்கள் என்பார்கள்.


இலங்கையின் மக்கள் தொகை 2012ம் வருட கணக்குப்படி:

இலங்கை தமிழர்கள்           - 2270924 (11.27 சதவீதம்)
இந்திய தமிழர்கள்               - 842323 (4.6 சதவீதம்)
தமிழ் பேசும் முஸ்லீம்கள் - 1869820 (9.23 சதவீதம்) இவர்கள் இலங்கையில் பிறந்து
                                                                                        இலங்கையில் வளர்ந்தவர்கள்
சிங்களவர்கள்                   - 15173820 (74.88 சதவீதம்)
இலங்கையின் மொத்த மக்கள் தொகை 20263723 ஆகும்.

மேலே குறிப்பிட்டப்படி மொத்த இலங்கை மக்களில் 3 வகை தமிழர்கள் இருக்கிறார்கள். 1). யாழ்பாண தமிழர்கள், 2). இலங்கையிலே பிறந்து வளர்ந்து வாழும் முஸ்லீம் தமிழர்கள், 3). மலையில் தேயிலை தொழிலாளி தமிழர்கள். பல நூறு வருடங்களுக்குமுன்பே இந்தியாவிலிருந்து குடியேறிய தமிழர்கள்.

யாழ்பாண தமிழர்கள் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களை தவிர மற்ற இரண்டுவித தமிழர்களை தங்களோடு சேர்க்க பிரியப்படுவதில்லை. மற்ற தமிழர்களுக்கும் அவர்களோடு இணைந்து போராட விருப்பமில்லை. யாழ்பாண தமிழர்கள் மற்ற தமிழர்களை சேர்த்து இணைந்து போராடியிருந்தால் நிச்சயம் ஓரளவு தனி தமிழ்நாடு அன்றைக்கே கிடைத்திருக்கலாம் என்று யூகிக்கமுடிகிறது.

ஆனால் அந்த காலத்திலேயே யாழ்பாண தமிழர்கள் குறிப்பாக விடுதலைப்புலிகள் தங்களோடு மற்ற தமிழர்களை சேர்க்க விரும்பவில்லை. அதனால்தான் கிழக்கு பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான முஸ்லீம் தமிழர்களை புலிகள் இயக்கத்தினரை ஒதுக்கியே வைத்திருந்தனர். முஸ்லீம் தமிழர்கள் புலிகளை சிங்கள ராணுவத்துக்கு காட்டிக்கொடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி, அந்த காரணத்தை பெரிதுப்படுத்தி கிழக்கு பகுதியிலிருந்தே புலிகள் இயக்கம் முழு முஸ்லீம் தமிழர்களையும் 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து வெளியேற கட்டளையிட்டது. வேறு வழியில்லாமல் சுமார் 8 ஆயிரம் முஸ்லீம் தமிழ் குடும்பங்கள் இரவோடு இரவாக தங்கள் உடைகளையும், உடைமைகளையும் பாலீதின் பைகளில் துறுத்திபோட்டுகொண்டு குழந்தைகளை, பெண்களை இழுத்துக்கொண்டு இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிய துயரத்தை இன்றைக்கும் அவர்கள் மறக்கவில்லை, இலங்கை மக்களும் மறக்கவில்லை. 1990ம் ஆண்டு மட்டக்களப்பு அருகில் காத்தாங்குடி மற்றும் ஏறாவூர் நகரங்களில் மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த முஸ்லீம்களை இரண்டு ஊர் மசூதிகளிலும் ஒரே நேரத்தில் விடுதலைப்புலிகள் புகுந்து சரமாறியாக சுட்டதில் அதே இடத்தில் தொழுகைக்கு முட்டிபோட்டநிலையில் 103 பேர் இறந்தனர். ஏராளமானவர்கள் படுகாயமுற்றனர். அந்த தூப்பாக்கி குண்டு இன்றும் அந்த மசூதியின் சுவர்களில் அடையாளமாக வைத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கூட்டத்திலிருந்து தப்பித்த வாலிபன் ஒருவன் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் இயக்கத்தில் சேர யாரையும் புலிகள் வலுகட்டாயமாக அழைக்கவில்லை. பொதுவான அழைப்பு கொடுத்தபோது ஈழநாடு என்ற உற்சாகத்தில் பலர் தாங்களாகவே சேர்ந்தார்கள். அடுத்த கட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் இயக்கத்தில் சேரவேண்டும் என்று கட்டளை கொடுக்கப்பட்டது. 3ம் கட்டத்தில் புலிகளே வீடுகளில் சென்று வாலிபர்களையும், சிறுவர்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்கள்.

4ம் கட்டத்தில்தான் ஒரு பேட்டியில் பெண் புலி ஒருவர் கூறியதைப்போல் சிறுபிள்ளைகளையெல்லாம் கதறகதற தாயிடமிருந்து விடுதலைப்புலிகள் பிரித்து இழுத்து கொண்டுபோனார்கள். அப்போதுதான் அநேக யாழ்பாண தமிழ்பெண்கள் மண்ணை தூவி சபித்து கதறி அழுது விடுதலைப்புலிகள்மேல் தங்கள் வெறுப்பை காட்டினார்கள். அதன்பின்தான் யாழ்பாணம் மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு போன்ற இடங்களிலிருந்து ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை 8 வயது, 10 வயது, 12 வயது பிள்ளைகளை கள்ளதோனியில் ஏற்றி புலிகள் கையில் அகப்படாமலும் இங்கு குண்டடிப்பட்டு சாகாமலும் இருக்க இலங்கையைவிட்டு ஓடிபோய் பிழைக்க அவர்களே கள்ளதோனியில் வைத்து அனுப்பிவைத்தார்கள். அந்த பெண்களின் வெறுப்பு இப்போதும் உண்டு. யுத்தம் முடிந்தபின் ராணுவ ரிசீவிங் பாய்ன்ட் என்ற பெயரில் ராணுவ பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் சரணடைய இலங்கை ராணுவத்தினர் ஏற்பாடு செய்தனர். இனி ஈழநாடு கிடைக்காது, கிடைத்தாலும் நாட்டில் வாழ மனிதர்கள் இல்லாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த விடுதலைப்புலிகள், மற்ற மக்களோடு மக்களாக ரிசீவிங் பாய்ன்ட்டுக்கு ஒன்றாக மக்களோடு அடையாளம் தெரியாமல் கலந்து வந்தார்கள். புலிகள் யார் பொதுமக்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இயலாது. விடுதலைப்புலிகளுக்கு தனி ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி புலிகளின் போராட்ட குணம்மாற்ற, மருத்துவம் மனோதத்துவ ரீதியாக ஏற்பாடு செய்து வைத்தியம் செய்யவும் பயிற்சியளிக்கவும் அழைப்புவிடுத்தனர். அப்போது புதிதாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் பலர் எழுந்து கூட்டமாக நின்றனர். பழைய புலிகள் யாரும் எழுந்திருக்கவில்லை. ஆனால் மக்களே புலிகளைக் காட்டிக்கொடுத்தனர். இவன்தான் என் பிள்ளைளை கதறகதற இயக்கத்துக்கு இழுத்து சென்றவன். அதோ அவர்களும் புலிகள்தான் என்று சுமார் 300 புலிகளை அன்றைக்கு பொதுமக்களே பிடித்து கொடுத்தார்கள் என்றால் யாழ்பாண மக்களின் உள்ளத்தில் புலிகளைப்பற்றிய வெறுப்பு எவ்வளவாக இருந்தது என்பதை அந்த சம்பவம் பிரதிபலிக்கிறது என்று பேட்டி கண்டவர்கள் கூறினார்கள்.

மற்றொரு வேதனையான செய்தி என்னவென்றால், அவர்கள் கூறியதிலிருந்து அந்த முக்கிய விவரம் அறியமுடிந்தது.

இன படுகொலை என்றால் தமிழர்களை கொல்வது ஆகும்.

ஆனால் எங்கள் கண்முன்னால் நடந்தது யுத்தத்தில் சுமார் 12 ஆயிரம் புலிகளை ராணுவம் கொன்றது. யுத்தம் சிங்கள ராணுவத்துக்கும் - புலிகளுக்கும்தான். மக்களோடு அல்ல, ஆகவே அது இன படுகொலை என்று கூறமுடியாது. ஆனால் யுத்தத்தில் புலிகள் தங்களை பாதுகாத்துகொள்ள மக்களாகிய எங்களைத்தான் அரணாக முன் நிறுத்தினார்கள். காரணம் இலங்கை ராணுவத்தினரைப்போல அவர்களுக்கு பாதுகாப்பு கவசம் அல்லது புல்லட் புரூப் எதுவும் இல்லை. ராணுவம் பொது மக்களை சுடமாட்டார்கள் என்பதற்காக புலிகள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு பொதுமக்கள் கூடியுள்ள இடத்தில் ஒளிந்துக்கொள்வார்கள். புலிகள் பெண்களை வரிசையாக நிறுத்திவைப்பார்கள். ராணுவத்துக்கு தெரியும் இவர்களுக்கு பின் புலிகள் பதுங்கியுள்ளார்கள் என்று. பலமுறை எங்களை சுட்டுவிட்டு முன்னேற ராணுவம் முயலவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் எங்கள் கூட்டத்தை சுட்டுத்தான் புலிகளை சுடமுடியும் என்ற நிலை ஏற்பட்டபோது படபடவென்று பொதுமக்களை சுட்டுதள்ளி புலிகளையும் கொன்றார்கள். அப்படி செத்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பிணமாக குவிந்தனர்.

ஆஸ்பத்திரியில் புலிகள் பதுங்கினார்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நிறைந்த இடத்தில் பதுங்கினார்கள். பலமுறை ராணுவம் எச்சரித்தும் ஆஸ்பத்திரி நோயாளிகளை அவர்கள் வெளியே அனுப்பவில்லை. மாணவர்களை சிறுமிகளைக்குறித்து புலிகள் இரக்கம்காட்டாமல் ராணுவம் எச்சரிக்கை கொடுத்தும் அந்த பிள்ளைகளை வெளியே அனுப்பவில்லை. ராணுவம் பலமுறை பொறுமை காத்தது முடிவில் ஆஸ்பத்திரியில் குண்டு போட்டார்கள், பள்ளிக்கூடத்தில் குண்டு போட்டார்கள், நோயாளிகள், செவிலியர், சில டாக்டர்கள் உள்பட மரித்தார்கள், காயப்பட்டார்கள், பள்ளிக்கூட சிறுமியரும் கொல்லப்பட்டனர். இந்துகோவிலில் புலிகள் அடைக்கலம் புகுந்தனர். கோயில்கள் பிரங்கியால் சுடப்பட்டது. இப்படிதான் தமிழ்மக்களை தன் தமிழ் இனத்தை சாக கொடுத்தாவது தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவு விடுதலைப்புலி இயக்கத்தினர் ஈவு இரக்கமின்றி எங்கள் உறவினர்களை எங்கள் இனத்தை லட்சகணக்கில் பலி கொடுத்தார்கள்.

ராணுவம் கடைசி முயற்சியாக முள்ளிவாய்க்காலில் புலிகள் யார், சிவிலியன் யார்? பொதுமக்கள் யார் என்று பார்க்க முயற்சிக்காமல் பிரபாகரனை வளைத்துவிட்டோம் என்ற வெறியில் அதை கடைசி வெற்றியாக கருதி துவம்சம்செய்து ஒரேடியாக அத்தனை லட்சம் பொதுமக்களையும் ஒரே இடத்தில் இலங்கை ராணுவம் கொன்றது. சரித்திரத்தில் அது மாறாத ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. அதுதான் இலங்கை ராணுவம் செய்த மிகப்பெரிய படுகொலைகள் ஆகும். அதை உலகம் சாட்டிலைட்மூலம் கண்டது.

இப்போது புலிகள் ஆதிக்கம் இல்லை என்ற தைரியத்தில் இலங்கை மக்கள் அன்று பேட்டியில் கூறிய விஷயங்கள் ஆகும். இப்போது விடுதலைப்புலிகளை மறுவாழ்வு மையத்தில் வைத்து தொழில் கற்றுக்கொடுப்பதாக செய்திகள் கூறுகிறது.

மற்ற பத்திரிக்கை கூறுவதுபோல எந்த நாட்டு பத்திரிக்கையாளர்களும் இலங்கையை பார்க்க சுதந்திரம் உண்டு என்பது பொய். இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக எழுதுபவர்கள் என்று அறிந்தால் அவர்களை மட்டும் குறிப்பிட்ட சில இடங்களை பார்க்க அனுமதிக்கிறார்கள். இதை நானே நேரில் கண்டு அறிந்த விஷயமாகும். வெளிஊர்களிலிருந்து அல்லது கொளும்புவிலிருந்து யார் வந்தாலும் இரகசியமாக கவனிக்கப்படுகிறார்கள். நான் நேரில்போனபோது எங்கு பார்த்தாலும் ராணுவ உடையில் ராணுவத்தினர் ராணுவ வாகனங்களும்தான் பார்க்க முடிந்தது. இதில் ராணுவ உடையில்லாமல் எத்தனை ஆயிரம்பேர் அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும், பள்ளிக்கூடம் அருகிலும், ஓட்டல்களிலும் பஸ் ஸ்டான்ட்களிலும் காணப்பட்டார்களே!. அதனால்தான் கொளும்பு நகரில் உண்மையான ஆத்துமபாரம் உள்ள ஊழியர்கள் ஊழியம் செய்ய யாழ்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களுக்கு சென்றுவர பயப்படுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் யாழ்பாண மக்கள்கூட உறவினர்களை பார்க்க சாவுக்கோ, திருமணத்துக்கு வந்துபோக தயங்குகிறார்கள். யாழ்பாணத்தில் சுதந்திரம் இல்லை.

ஆகவே ஜாமக்காரனாகிய நான் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழருக்கு ஆலோசனையாக கூறுவதாவது: இலங்கைவாழ் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் வடக்கு-கிழக்கு இலங்கையை தனி (மாநிலமாக்கி) மாகாணமாக்கி இந்தியாவில் உள்ளதைப்போல் தனி மாநில சுயாட்சியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். யாழ்பாணம் தனி மாநிலமாக இலங்கையை மத்திய அரசாங்கமாக ஏற்றுக்கொண்டு மாறினால் வெகுவிரைவில் கொளும்புவைவிட மிகப்பெரிய உயர்ந்த நிலைக்கு யாழ்பாணம் மாறி பொருளாதார முன்னேற்றம் கண்டு, தொழிற்சாலைகள் யாவும் நிரம்பிய அற்புதமான நாடாக திகழும். நான் ஒரு தமிழன் என்பதைவிட நான் ஒரு இலங்கை தமிழன் என்று கூறும் தேசிய நீரோட்டத்தில் வர திட்டமிடுங்கள். இதில்தான் உங்கள் சந்ததி சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த வழி உண்டாகும். நீங்களும் சுதந்திரமாக போய்வரலாம், தொழில் தொடங்கலாம், குடும்பத்தோடு சொந்த நாட்டில் வாழலாம்.

விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உள்ளவர்களோ, இலங்கை அரசாங்கமோ என் கட்டுரையை தவறாக புரிந்துக்கொள்ளவேண்டாம். தமிழ் மக்களை பிரிக்கும் எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை: நான் ஆராதிக்கும் தெய்வம் இயேசுகிறிஸ்து யாரையும் பிரிக்கும் தெய்வம் அல்ல, சத்துருவை நேசிக்கும் உபதேசத்தை கூறியவர். நான் இந்திய தமிழன் என்று கூறி பெருமையடைவதைப்போல் இலங்கை தமிழர்கள் என்று கூறி நீங்கள் உங்கள் தாய்நாட்டில் சுதந்திர காற்றை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் யாழ்பாணம், வவுனியா போன்ற இடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான விதவை சகோதரிகளுக்கு வாழ வழி உண்டாக்க முடியும். கால் இழந்தவர், கண் இழந்தவர், கை இழந்தவர் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து மனநோயில் பாதிக்கப்பட்டவர் நான் எழுதிய இந்த ஆலோசனை நிறைவேறினால் ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது சாப்பிட்டு பசியாற வழி உண்டாக்க முடியும்.

இவர்களுக்கு உதவி செய்ய நிறையபேர் கையில் பணத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டும் போய் சேரவேண்டுமே!. பணம் பொருள் சுதந்திரமாக எடுத்து சென்று கொடுக்க இப்போதும் இயலவில்லை!. ராணுவம் யாழ்பாணத்தைவிட்டு நீங்கவேண்டும். மாநில சுதந்திரம் ஏற்படவேண்டும். ராஜபக்ஷே காலத்திலேயே அது நடக்க இந்திய அரசியல் தலைவர்கள், இந்தியாவை ஆள்பவர்கள் முயன்றால் அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட்டால், வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களாகிய நீங்கள் தனி ஈழம் என்ற பழைய சித்தாந்த்ததை மாற்றி - தனி சுதந்திர மாநிலம் என்ற எண்ணத்தின் கீழ் யாவரும் ஒன்றுபட்டால் நிச்சயம் கடவுளின் கிருபையோடு நிச்சயம் ஒருநாள் வட-கிழக்கு தமிழ் மாநிலம் உருவாகும்.

இனி இலங்கை அரசாங்கம் துரிதகதியில் இலங்கையில் புனரமைப்பு திட்டத்தை துரிதமாக தொடங்கி போர் நடந்த பகுதியில் உள்ள யாழ்பாண-வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பகுதி கிராமங்களில் காழ்புணர்ச்சி இல்லாமல் கவனம் செலுத்தி உதவிட வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் அன்பை அரசாங்கம் பெறமுடியும்.

யுத்தத்துக்கு முன்பும்-பின்பும் அரசாங்கத்திடமும், புலிகள் இயக்கத்திடமும் ஏராளமான தவறுகள் நடந்துமுடிந்துவிட்டது. பழைய விஷயங்களை நினைக்காமல் தமிழ் மக்களை வாழ செய்ய, இழப்புகளுக்கு ஈடு செலுத்தி மறுவாழ்வுக்கு வழி உண்டாக்கிடவேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ் ஜாமக்காரன் வாசகர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள். அவரவர்கள் தங்கள் சொந்தங்களுக்கு தனிப்பட்டமுறையில் உதவி செய்வதுபோல், வெளிநாடுகளில் உறவினர்களே இல்லாத தமிழர்கள் வடக்கு-கிழக்கு தமிழ் பகுதிகளில் ஏராளமானவர்கள் வாடி நிற்கிறார்கள். அவர்களுக்கு உதவுபவர்கள் யாரும் இல்லை.

நான் நேரில் சென்றபோது பல பெண்கள் கண்ணீரோடு ஐயா, மற்றவர்களுக்கு சொந்தங்கள் உதவியிருக்கிறது. ஆனால் எங்களுக்கு யாரும் வெளிநாட்டில் இல்லை. அரசாங்கம் உதவியும் ஒழுங்காக கிடைப்பதில்லை. எங்களுக்கு உதவிகரம் தேவை என்றார்கள்.

இந்த ஜாமக்காரனில் இப்போதுள்ள இலங்கை தமிழர்களின் ஒரு சிறு பகுதியினரின் உள்ளத்தின் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் பேட்டிமூலம் வாசித்தீர்கள். நான் பேசிய விவரம், வாசித்த முழுவிவரம் முழுவதையும் எழுதாமல் சிறுசிறு பகுதிகளாக தொகுத்து வாசகர்களுக்காக எழுதியுள்ளேன். இதனால் எனக்கு ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி நான் யோசிப்பதில்லை.

உங்கள் யாவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறேன். நான் எழுதியதில் பிழை உண்டானால் என் கருத்து ஏற்புடையதல்ல என்று உங்களில் யாராவது கருதினால் எனக்கு தயங்காமல் எழுதுங்கள்.

இவைகளை தொகுத்து எழுத உதவியாக இருந்த இலங்கை-இந்தியாவை சேர்ந்த 3 பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் மறுபடியும் நன்றி கூறுகிறேன்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM