வீடுகளில் ஜெபக்கூடுகைகள் நடத்தலாமா?
  நன்றி: தேவனுடைய வார்த்தை, அக் 2012

"இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்: ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாக்கிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" (ஆமோஸ் 8:11) என்று கிமு 750ம் ஆண்டிலேயே தீர்க்கதரிசனமாக உரைத்த வாக்கு நிறைவேறும் காலகட்டத்திலே நாம் வந்திருக்கிறோம். ஆனாலும் "நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரே 31:33) என்ற வாக்குததத்தை உரிமை பாராட்டி ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளை என் இருதயத்தில் எழுதிவையும் என்று கேட்டு அதைப் பெற்றுக்கொள்ளவேண்டிய காலகட்டாயத்திற்குள் வந்திருக்கிறோம்.

மத சார்ப்பற்ற (Secular) நாட்டில் வாழ்ந்தாலும் கிறிஸ்தவ கூடுகைகள் நடத்துவதற்கு அரசியல் கட்சியினர், மத இயக்கங்கள் ஏதேனும் காரணங்களைச் சொல்லி தடைகளை கொண்டுவருகின்றனர். அரசு அதிகாரிகளும் அவர்கள் கூறும் காரணம் நியாயமானதுதான் என்று ஆமோதிக்கின்றனர். அற்ப காரணங்களுக்காக (Trivial Reasons) சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தினரைப் பாதிப்புக்குள்ளாக்குவது நியாயம்தானா என்பதை சிந்திக்காமல் பெரும்பான்மை மதத்தினர் ஆட்சேபணை தெரிவிக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக (Constitutional Rights)-ஐ மறுப்பதற்கு துணிச்சலடைகின்றனர்.

இது தொடர்பான வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற விசாரணைக்கு நீதிபதி மதிப்பிற்குரிய மணிக்குமார் அவர்கள் முன்பாக வந்தது. அவர் அளித்த தீர்ப்பை கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

திருமதி.பால்தங்கம் அவர்களின் புகாரின் சுருக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் என்ற கிராமத்தில் திருமதி.பால்தங்கம் தங்களுக்குச் சொந்தமான வீட்டில் அக்கம் பக்கத்திலுள்ளோரையும் சேர்த்து அவ்வப்போது ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார். அது ஒரு ஆலயம்போல செயல்படாமல் அவ்வப்போது ஜெபக்கூட்டமாக நடத்தப்படுவதால் ஆலயம் போவதத்திற்கு முன் அனுமதி வாங்குவதுபோல மாவட்ட ஆட்சியாளரிடம் முன் அனுமதி வாங்கத் தேவையில்லை, எனினும் காவல்துறை அதிகாரிகளுக்கு தங்கள் வீட்டில் கூடும் கூட்டுப் பிராத்தனைக்கு சிலர் தடை செய்துவருகின்றனர் என்று புகார் கொடுத்துள்ளோம். ஆகவே இக்கூட்டம் நடத்தும் எங்களைத் தடைசெய்யாதபடி அவர்களுக்கு ஆணையிடும்படி உயர்நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்.

அரசு சார்பின் வாதச் சுருக்கம்: அரசு தரப்பு வழக்கறிஞர் அவரது வாதத்தில் கூறும்போது: இது அவ்வப்போது நடக்கும் வீட்டுக்கூட்டம் என்றாலும் அது ஒரு பிராத்தனைத் தலமாக மாறிவிடுவதால் கூட்டம் நடத்துவதற்கு அவர் அரசின் முன் அனுமதி வாங்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் அவர்கள் ஒலிபெருக்கி வைத்து எழுப்பும் சத்தம் அக்கம்பக்கத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள், நோயாளிகள், சிறுகுழந்தைகள், மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அது பொதுமக்களுக்குத் தொல்லையாக மாறுகிறது என்று தன் வாதத்தை வைத்தார்.

நீதிமன்றத்தின் ஆணை: புகார் கொடுத்திருக்கும் மனுதாரர் திருமதி.பால்தங்கம் சார்பிலும் எதிர் மனுதார்களான தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் (அரசுக்காக) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சில வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் சார்பிலும் அவரவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் அளித்த வாதங்களைக் கருத்தில்கொண்டு இது தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருக்கும் சில தீர்ப்புகளின் அடிப்படையில் கீழ்கண்ட தீர்ப்பை வழங்கினார். இந்திய அரசியல் சாசனம், 25, 26வது பிரிவுகளின்படி மக்கள் தங்கள் மனச்சாட்சியின்படி விரும்பும் எந்த மதத்தையும் சார்ந்திருக்கும் மத சுதந்திரம் உண்டு. அவரவர்கள் மதத்தை வெளிப்படையாகவே உரிமை பாராட்டலாம். வெளிப்படையாக கடவுளை வழிபட்டு செயல்படுத்தலாம் தங்கள் மதத்தைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்கூறி பரப்பலாம். ஆனாலும் அவைகள் சில நிபந்தனைகளுக்கும், ஒழுங்கிற்கும் கட்டுப்பட்டவைகளே!, பொது ஒழுங்கிற்கு பொது அமைதிக்கு பொது சுகாதாரத்திற்கு மாறாகச் செல்லக்கூடாது. அது தொடர்பான நடப்பிலிருக்கும் சட்டத் திட்டங்களுக்கு மீறுதலாகவும் செயல்படக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால் உரிமைகளும், கடமைகளும் பொறுப்புகளும் இசைவாக செயல்படவேண்டும். ஆகவே ஒரு பிரச்சனையில் மதசுதந்திரம் மறுக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழும்போது சொல்லப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டடிருக்கிறதா என்பதைக் கருத்தில் கொள்வது அவசியமாயிருந்தது. சென்னையிலுள்ள இந்திய தேவசபைமீது ஒலிபெருக்கி வைத்து ஒலி மாசு உண்டாக்கி தொல்லை கொடுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் இப்பிரச்சனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளரிடமிருந்து அறிக்கை கேட்கப்பட்டது. அவர் கொடுத்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட இந்திய தேவ சபைக்கு அருகாமையிலுள்ள மாதவரம் நெடுஞ்சாலையிலுள்ள வாகனங்கள் எழுப்பும் சத்தத்தையும் சபையிலிருந்து சத்தத்தையும் அளந்து நெடுஞ்சாலை எழுப்பும் சத்தமே மிகுதியாக உள்ளதென்றும் சபையினர் எழுப்பும் ஒலி அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்திய தேவ சபை மீது கொடுக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. நெடுஞ்சாலையில் தொடர்ந்துகேட்கும் வாகன சத்தத்தைச் சகித்துக்கொள்ளும் அவ்வட்டார மக்களுக்கு சிறிதுநேரம் அனுமதிக்கப்பட்ட சத்த அளவுக்கும் கீழேயுள்ள சத்தத்தைச் சகித்துக்கொள்ளமுடியவில்லை என்றால் அதன் உள்நோக்கம் நியாயமானதல்ல என்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சில முன் தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டித் தீர்ப்பளிக்கையில் இவ்வழக்கில் மனுதாரர் பால்தங்கம் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் அவ்வப்போது சிலரைக்கூட்டி ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு எந்த முன் அனுமதியும் தேவையில்லை. அதே சமயத்தில் அமுலிருக்கும் சட்டமீறுதல்கள், பொது அமைதி தொடர்பான நியாயமான காரணங்கள் இருக்குமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுவார்கள். அப்படி நடவடிக்கை எடுக்கும்போது வலுவான ஆதாரத்தின் அடிப்படையிலும் மற்றவர்களுடைய உரிமைகள் மீறுதல்கள், பொது அமைதி தொடர்பான நியாயமான காரணங்கள் இருக்குமானால் மட்டுமே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்கநடவடிக்கை மேற்கொள்ளுவார்கள். அப்படி நடவடிக்கை எடுக்கும்போதும் வலுவான ஆதாரத்தின் அடிப்படையிலும் மற்றவர்களுடைய உரிமை மீறல்கள் மீறப்பட்டிருக்கிறது என்ற மனப்பூர்வமான திருப்தியும் இருக்கவேண்டும். அற்பமான குற்றச்சாட்டுகள் காரணமாக சிறுபான்மை மதத்தினரின் உரிமைகள் பறிக்கப்படாமல் காக்கப்படுவதும் அவசியமான காரியமாகும்.

வியாதிப்பட்டு சிகிச்சைக்குச் செல்லும்போது நமக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் அல்லது சிகிச்சைக்கு உதவி அளிக்கும் தாதி (Nurse) எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று நாம் சிந்திப்பதில்லை. ஜாதி, மத அடிப்படையில் அவர்களை நாம் நிராகரிப்பதில்லை. நம்முடைய சரீரத்தில் இரத்தம் ஏற்றப்படும் போது கொடுக்கப்படும் இரத்தம் எந்த ஜாதியினருடைய இரத்தம் என்றோ அல்லது எந்த மதத்தினரின் இரத்தம் என்றோ நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்மில் ஏதேனும் உள் அவயங்கள் பொருத்தப்படும் சூழ்நிலைகளில் (இருதயம், சிறுநீரகம், ஈரல் மாற்றம்) கொடுக்கப்படும் அவயவம் எந்த மதத்தினருடையது என்று நாம் சிந்திப்பதில்லை. ஜீவனா, மரணமா என்ற கேள்வி வரும்போது, நாம் பிழைப்பதையே முதன்மைப்படுத்தி மேலே குறிப்பட்டவற்றையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. இரத்தத்திற்கும் மாற்று அவயங்களுக்கும் மதம் இல்லையே. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு இந்து முஸ்லீமுக்கு உதவலாமே. ஒரு கிறிஸ்தவனுக்கோ, இந்துவுக்கோ, முஸ்லிமுக்கோ உதவலாமே. ஒரு முஸ்லீம் மற்றவர்களுக்கு உதவலாமே. இப்படியிருக்க ஏன் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளமுடியவில்லை? மதங்களின் வழிபாட்டுமுறைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் எல்லா மதங்களும் ஒரே இலக்கை நோக்கித்தான் செல்கின்றன. நமது அரசியல் சாசனம் சமத்துவம் சகோதரத்துவம், மதசார்பின்மை இவற்றையே வலியுறுத்துகிறது. பிரிவினைகளில் ஒற்றுமை, அதுவே நமது பலம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியில் கனம் நீதிபதி அவர்களே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "நம்முடைய பாரம்பரியம் நமக்கு சகிப்புத் தன்மையையே கற்றுத்தருகிறது. நம்முடைய தத்துவம் சகிப்புத்தன்மையே போதிக்கிறது. நம்முடைய அரசியல் சாசனம் சகிப்புத்தன்மையே செயல்படுத்துகிறது. அதை நாம் நீர்த்துவிடவேண்டாம்".("Our tradition teaches tolerance: our philosophy preaches tolerance: our constitution practices tolerance: Let us not dilute it") என்ற அவர் தீர்ப்பின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன உரிமைகளும் தீர்ப்புகளும் கேட்பதற்கு நன்றாகவே உள்ளன. நம்முடைய செயல்பாடுகள் இதுபோன்ற தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு ஒருவரையொருவர் சகோதரத்துவ உணர்வோடு சகிப்புத் தன்மையை செயல்படுத்துவோம். (12 பக்கங்கள் அடங்கிய இந்த தீர்ப்பின் நகல் தேவைப்படுவோர் எங்களோடு தொடர்புகொள்ளவும் - தொலைபேசி எண்கள்: 4345580 / 9842143523. இமெயில்: [email protected]).


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM