கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்

அப்போஸ்தலர்கள்

கேள்வி:இப்போது அப்போஸ்தலர் என்று தன் பெயருக்கு முன் சில ஊழியர்கள் குறிப்பிடுகிறார்களே இது சரியா?

பதில்:அது தவறு. அப்போஸ்தலர் என்றால் அனுப்பப்பட்டவர் என்று அர்த்தம். யாரால் அனுப்பப்பட்டவர்? இயேசுகிறிஸ்துவால் நேரிடையாக தெரிந்தெடுக்கப்பட்டு ஊழியத்துக்கு அனுப்பப்பட்டவர்கள்தான் 12 அப்போஸ்தலர்கள். இதில் இயேசுகிறிஸ்துவால் தனிப்பட்ட முறையில் கடைசியாக தெரிந்தெடுக்கப்பட்டவர் பவுல் அப்போஸ்தலனாவார். இவர்களுக்கு பின் சபை சரித்திரத்தில் யாரும் தங்களை அப்போஸ்தலர் என்று அழைத்துக்கொண்டதில்லை. ஆனால் இப்போது நவீன பெந்தேகோஸ்தே சபையினரில் பலர் தங்களுக்கு தங்களே தீர்க்கதரிசிகள் என்று பெயர் வைத்துக்கொள்வதைப்போல் டாக்டர் என்றும், சிலர் REV என்றும் ஒரே ஒரு சபைக்கு பாஸ்டராக இருப்பவர்கூட தன்னை பிஷப் என்றும் தங்கள் பெயருக்குமுன் எழுதிக்கொள்கிறார்கள். அதுபோல இப்போது புதுமையாக பலர் தங்களை அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட ஆசைப்படுகிறார்கள்.

யோவான் கண்ட பரலோக தரிசனத்தில் இறங்கிவந்த பரிசுத்த நகரத்தின் வாசல்களில் 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் மட்டும்தான் எழுதப்பட்டதாக காண்கிறோம். (வெளி 21:14ல்). இயேசுகிறிஸ்துவின் ஏராளமான சீஷர்கள் உண்டே, அவர்களெல்லாம் அப்போஸ்தலர்களாக கர்த்தரால் அங்கிகரீக்கப்பட்டிருந்தால் பனிரெண்டு என்ற எண்ணிக்கை லட்சகணக்கான அப்போஸ்தலர்கள் என்று எழுதப்பட்டிருக்க வேண்டுமே!, இப்போது அப்போஸ்தலர் என்று கூறப்படும் பெரும் கூட்டம் உண்மையான அப்போஸ்தலர்களானால் அந்த பரிசுத்த நகரத்தின் வாசல்படியில் இவர்கள் பெயர் எழுதப்பட இடமே இருந்திருக்காதே! அப்போஸ்தலர் என்று இப்போது எழுதுபவர்களின் சுயபெருமையைதான் இது காட்டுகிறது. தற்பெருமையுள்ளவர்களுக்கு நம் தேவன் எதிர்த்து நிற்கிறார் என்று வேதம் கூறுகிறது.

வேதத்தின்படி மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட அனைவரும் ஆசாரியர்கள் என்று 1 பேது 2:5,9 அழைக்கப்படுகிறார்கள். அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் இராஜரீக ஆசாரிய கூட்டமாக நாம் இருக்கிறோம் என்று எழுதியிருக்கிறது. ஆனால் அப்போஸ்தலர் என்ற பெயர் இப்போதுள்ள யாருக்கும் பொருந்தாது, என்னையும் சேர்த்தே கூறுகிறேன். ஆகவே தங்களை அப்போஸ்தலர் என்று அழைக்க விருப்பப்படுவது தவறு.


ஆசீர்வாத சபை

கேள்வி:சென்னையில் சகோ.ஆலன்பால் ஆசீர்வாத சபை ஆரம்பித்து விட்டாரே?

பதில்:ஆம். கேள்விப்பட்டேன். சென்னையில் ஒரு கிறிஸ்தவ சபையும் இல்லை என்பது அவர் எண்ணமாக இருக்கும். ஆகவே அவருடைய அருள்நாதர் கணவன்-மனைவி ஆகிய அவர்கள் இருவருக்கும் இரகசியமாக தரிசனமாகி சென்னையில் முதல் சபை தொடங்க அறிவித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். அந்த திடீர் சபைக்கு ஆட்கள் வேண்டுமே!. ஏராளமான பஸ்களை அவர்கள் ஏற்பாடு செய்து பல சபைகளில் உள்ள ஆட்களை ஆசைகாட்டி அழைத்துவந்து ஓசியில் பஸ் பிரயாணம் செய்துவைத்து, ஓசியில் சாப்பாடும் போடுகிறேன் என்று அறிவித்தால், அப்படிப்பட்ட ஓசி சாப்பாட்டு ஆரானைக்கு செல்ல சென்னையில் ஆட்களுக்கா பஞ்சம். நிச்சயம் அந்த ஆராதனைக்கு ஆட்கள் கூடும். தலைக்கு ஒரு பிரியாணி பொட்டலமும், 100 ரூபாயும் கொடுக்கிறோம் என்று அறிவித்து அரசியல் கட்சிக்காரர்கள் தங்கள் தலைவர் பேசும் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பார்களே அதே முறையில் இப்போது சபைக்கு ஆள்சேர்க்கும் தந்திரமான வேலையைதான் இப்போது ஆலன்பால் செய்கிறார். கஷ்டப்பட்டு தெருத்துதெருவாக அலைந்து சுவிசேஷம் அறிவித்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் நபர்களை ஒன்று சேர்த்து சபை ஆரம்பித்த காலம்போய் ஆட்களை இலவச வாகனத்தில் கூட்டிவந்து சோறுபோட்டு நரகத்தை காண்பிக்கும் சபையாகத்தான் உபதேசத்தை கூறும் இவர் சபை மாறும்.

இவர் இப்படி செய்கிறதால் மற்ற பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களின் கோபம் ஆலன்பால் மீது பாய்ந்துள்ளது. தங்கள் சபை மக்களை இவர் களவாடிபோகிறார் என்ற குற்றச்சாட்டு இப்போது சென்னையில் எழும்பியுள்ளது. இப்படிப்பட்ட ஊழியர்களுக்கு காணிக்கை பணம் நிறைந்ததால் அந்த பணத்தை வைத்துகொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் தங்களின் நிரந்தர வருமானத்துக்காகவே ஒரு சொந்த சபையை ஆரம்பித்துவிடுகிறார்கள். 5 அப்பம் 20000 ஆயிர ரூபாயாக மாறும் என்ற ஆசீர்வாத வார்த்தை கூறும் இப்படிப்பட்ட கவர்ச்சி ஊழியமும் நம் தமிழ்நாட்டைவிட வேறு எங்கும் காணமுடியாது. இப்படிப்பட்ட ஊழியர்களிடமிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றும் என்று நாம் ஜெபிப்பதைத்தவிர வேறு என்ன செய்ய?.


பாட்டின் வார்த்தை

கேள்வி:டாக்டர் ஐயா, தீர்க்கதரிசி எசேக்கியா பிரான்சிஸ் அவர்களின் பாட்டின் வார்த்தை என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது.
பாட்டின் வரிகள்:
விண்ணக காற்றே என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப்போல் என்மேல் அமர்ந்திரும்,
இதில் கூறப்படும் வெண்புறா என்பதில்தான் எனக்கு சந்தேகம்?

பதில்:உங்கள் சந்தேகம் நியாயமானதே! அடே பரவாயில்லையே!. நீங்களும் நன்றாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். என் வாசகர் இப்படி எழுதுவதை பார்க்கும்போது எத்தனை சந்தோஷம்.

முதலில் சகோ.எசேக்கியா பிரான்சிஸ் தீர்க்கதரிசிதானா? அவரே வைத்துக்கொண்ட பெயர் அது. சகோ.ஜான்சாலமோன் தன்னை அப்போஸ்தலன் என்றும் தீர்க்கதரிசி என்றும் புகழ்ந்து பேசுவது எழுதுவதும் அப்படிப்பட்ட பெயரை தன்பெயருக்குமுன் அடைமொழிகளாக வைத்து நோட்டீஸ் அடிப்பதுபோல் இவரும் தன்னை தீர்க்கதரிசி என்று கூறி இப்படிப்பட்ட பாடலையும் எழுதுகிறார். இவர்கள் யாவரும் இப்படி மக்களால் தீர்க்கதரிசி என்று தாங்களை அழைக்கப்பட விரும்புகிறதைப்போல் இன்று பல ஊழியர்கள் தங்களை அப்போஸ்தலர் என்றும் தீர்க்கதரிசிகள் என்றும் அழைக்கப்பட விரும்புகிறார்கள். கடைசி காலம். இப்படி நடந்துதான் தீரும்.

எசேக்கியா அவர்களின் பிழையான உபதேசம் அந்நியபாஷையில் ஆரம்பிக்கப் பட்டது. அதன்பின் படிப்படியாக அவர் வாழ்க்கையில் சறுக்குதல், வீழ்ச்சி ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. அதன்பிறகு படிப்படியாக அவரின் வறுமைநிலை மாறி இவர் நிலைமையும் ஊழியமும் உயர்ந்தது, செழுமை உபதேசமும் வந்தது, தரித்திரம் நீங்கியது. திருமணம் செய்ய ஆண்டவர் எனக்கு உத்தரவிடவில்லை என்றவர், இப்போது திருமணமும் செய்துகொண்டார். ஆனால் இவர் ஆத்துமாவோ கேள்விக்குறியானது!.

வெண்புறா அமர்வது என்பது யோவான் ஸ்நானகனுக்கு மேசியா யார் என்பதை அடையாளம் காண்பிக்க கர்த்தரால் செய்யப்பட்ட ஏற்பாடு ஆகும். ஆவியானவர் ஆவியாய் இருக்கிறார். அவரை கண்களால் காணமுடியாது. ஆகவே புறாவைப்போல ஆவியானவர் யார்மேல் இறங்குகிறாரோ அவர்தான் மேசியா - இந்த புறாவின் அடையாளம் இயேசுகிறிஸ்துவுக்குதான் பொருந்துமே தவிர, பரிசுத்தாவியானவரை அடையாளம் காண எல்லாருக்கும் கொடுக்கப்பட்ட அடையாளம் அல்ல. இன்று பலர் புறாவைப்போல் செதுக்கிய டாலர் கழுத்தில் அணிகிறார்கள்., சட்டையில் புறா சின்னத்தைப்போல் பேட்ஜ் அணிகிறார்கள். இவைகள் யாவும் அர்த்தமில்லாதது. ஆகவே உங்கள் சந்தேகம் நியாயமானதே!.

அவரைப்பற்றிய மற்றொரு சம்பவம்:

2000 வருடம் மே மாதம் 5 முதல் 12ம் தேதிவரை நடந்த இவருடைய பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டவர்கள் சார்பில் எசேக்கியா பிரான்சிஸ் அவர்களை புகழ்ந்து எழுதிய வாழ்த்துரையில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை வாசித்துப்பாருங்கள்.

ஜலத்தின்மேல் அசைவாடும் பரிசுத்த ஆவியே!
கடைசிகால எலியாவே!
எங்கள் அண்ணன் எசேக்கியா அவர்களே...
அழைப்பின் மகத்துவத்தை அனுஅனுவாய் விளக்கினீரே
எங்கள் ஆவியானவரே எங்கள் அண்ணன் எசேக்கியாவே! நன்றி.

இந்த வாழ்த்துகளில் பரிசுத்த ஆவி, எலியா என்ற வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆவியானவர் என்ற வார்த்தை எசேக்கியா அவர்களைக் குறிக்கிறதாக தெரிகிறது. ஏற்கனவே எலியா என்பது சகோ.தினகரன் என்றும், எலிசா என்பது சகோ.மோகன் சி.லாசரஸ் என்பதாக U-TUBE என்ற இன்டர்நெட்டில் சகோ.மோகன் சி.லாசரஸின் சீஷர்கள் அறிவித்திருக்கிறார்கள். அப்படியிருக்க எத்தனை எலியாக்கள் உலகத்துக்கு மறுபடியும் வருவார்கள். இன்னும் வேறு யாரும் தங்களை எலியா என்று கூறிக்கொண்டு வரப்போகிறார்களோ? தெரியாது. இப்போதுள்ள ஊழியர்களுக்குள்ளே எலியாக்கள், எலிசாக்கள், அப்போஸ்தலர்கள் என்று ஏராளமானவர்கள் பெருகிவிட்டார்கள். கிறிஸ்தவ உலகம் எங்குபோய்கொண்டிருக்கிறது பாருங்கள். தேவனுக்கு கொடுக்கப்படும் மகிமையை இவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

கிறிஸ்தவ ஊழியர்களின் சுபாவங்கள் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். இவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம் அல்லவா!.


மூவரணி

கேள்வி:நாலுமாவடி மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்வகுமார், ஏஞ்சல் டிவி சாதுசுந்தர் செல்வராஜ் இவர்கள் நடத்தும் 12 மணிநேர உபவாச ஜெபத்தில் FMPB முன்னாள் பொதுசெயலர் சகோ.பேட்ரிக் ஜாஷ்வா அவர்களும் கலந்துக் கொண்டாரே மூவரணியைப்பற்றி அவருக்கு தெரியாதா?.

பதில்:சகோ.பேட்ரிக் ஜாஷ்வா அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து சபைகளிலும் ஜெபிப்பவர்களை எழுப்பவேண்டும் என்ற நல்ல திட்டத்தில் அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளையும் சந்தித்து வருகிறார். நோக்கம் நல்ல நோக்கம் ஆகும் . ஆனால் இந்த மூவரணி 12 மணி நேர ஜெபத்தில் கலந்துக்கொண்டபின் சகோதரன் அவர்கள் ஓரளவு அவர்களின் நிலைமையை விளங்கிககொண்டிருப்பார். அதன்பின் ஏண்டா? வந்தோம் என்றும் நினைத்திருப்பார். 12 மணி நேர ஜெபத்தில் கலந்துக்கொண்டவர்கள் அனைவரும் அரவரவர் தங்கள் பிரச்சனைகளுக்காகத்தான் ஜெபித்திருப்பார்கள். அதற்காகத்தான் அவர்கள் கண்களில் கண்ணீர்விடுவதை டிவியில் கண்டிருக்கிறேன். தேசத்துக்காக அழும் அழுகை 12 மணி நேர ஜெப கூட்டத்தில் காணப்படாது. தவறான இடத்தில் முத்தைப்போட்டு விட்டோமே என்று நிச்சயம் சகோதரன் அவர்கள் வருந்திருப்பார். இது அவருக்கு புது அனுபவம். மனம்திரும்பி இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து ஜெபித்தால் அந்த ஜெபம்தான் கேட்கப்படும். அப்படிப்பட்டவர்களின் கூடுகை 12 மணி ஜெப கூட்டத்தில் இல்லை.


சகோதரி.நளினி வில்சன்

கேள்வி:சகோதரி நளினி வில்சன் அவர்கள்கூட ஜெபத்தில் கைவைத்து கீழே விழ தள்ளுகிறாரே?. அவரை நாங்கள் நல்ல வசன அடிப்படையில் உள்ள ஊழியக்காரி என்றுதான் நாங்கள் நினைத்து அவரை எங்கள் சபைக்கும் அழைத்தோம்.

பதில்:அவர்களைப்பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் சமீப காலமாக டிவி நிகழ்ச்சியில் அவர் நிகழ்ச்சியில் நான் கண்டது அவர் மேடையில் நின்ற இடத்திலிருந்து தன் விரல்களை காட்டுகிறார் அவர் கையிலிருந்து மின்சார அலைகள்போல் ஒரு ஒளி எதிரே இருக்கும் மனிதனை தாக்குகிறது. அந்த நபர் மின்சாரம் தாக்கப்பட்டவனைபோல் துள்ளிவிழுவதை நானே காணநேர்ந்தது. நன்றாக படித்த சகோதரியா இப்படி செய்வது?. இந்துமத கதையான சினிமாவில் கிருஷ்ணன் கை காண்பிக்க மின்சார அலை பாய்ந்து அரக்கர்களை சுட்டு எரிகிறதே! அதுபோலவே இருந்தது. இவர்கள் ஏன் இப்படி தன்னை சக்தியுள்ளவராகவும், கடவுளின் அவதாரம் போலவும் கம்பியூட்டர் கிராபிக் செய்து டிவியில் காண்பிக்கிறார்கள். இது வியாபார யுக்தியல்லவா! இது எத்தனை ஆபத்து என்று இவர்களுக்கு விளங்கவில்லையே!. இதுவும் பரிசுத்த ஆவியின் கிரியை என்று சில பாஸ்டர்கள் நம்புகிறார்களே. தேவனின் மகிமையை இவர்கள் தங்களுக்கு எடுத்துக்கொள்கிறார்களே. ஏசா 42:8. "நான் கர்த்தர் இது என் நாமம் என் மகிமையை வேறெருவனுக்கும், என் துதியை விக்கிரங்களுக்கும் கொடேன்" இது கர்த்தர் கூறியது. விரல்நீட்டி ஜெபிக்க வந்த நபர்களை விழவைக்கும் விளையாட்டை ஊழியர்கள் இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது. பரிசுத்தாவியானவரையே அவமானப்படுத்தும் பாஷை: டிவியில் 28 ஆகஸ்ட் 2009 காலை 8.30 மணிக்கு 24.1.2013 அன்று காலையும் சகோதரி.நளினி வில்சன் அவர்கள் பிரசங்கம் முடித்து ஜெபிக்கும் வேளையில் ஒரு அந்நியபாஷை பேசினார்கள் பாருங்கள். அதை கர்த்தர் கேட்டால் குழம்பி போய்விடுவார். ரிபா ஷபா ரக்லபா ஷகிலா இதற்கு நான் உனக்கு முன்போகிறேன் என்று அர்த்தமாம். இவர் அந்நியபாஷையில் உபயோகிக்கும் இதே வார்த்தைகளை இவரின் பல பிரசங்கத்திலும் இதையே திரும்பதிரும்ப கேட்கலாம். இது எந்த நாட்டின் பாஷை? பரலோக பாஷையா? தூதர்கள் பாஷையா? இதை வாசிக்கும் நீங்களே நிதானியுங்கள். இப்படி பேசினால்தான் பரிசுத்தாவியின் வல்லமை உண்டு என்று முட்டாள் ஜனங்கள் நம்புவதால் இப்படிப்பட்ட பாஷைகளை பெரும்பாலான ஊழியர்கள் உளறி ஆவியானவரை அவமானப்படுத்துகிறார்கள். பட்டதாரியான இந்த ஊழியக்கார சகோதரியுமா? இப்படி வசனத்தைவிட்டு விலகுவது!. ஆச்சரியமாக இருக்கிறது!.


இலங்கை ஊழியம்:

கேள்வி:இலங்கை யாழ்பாண ஊழியத்தின் விவரம் கடந்த ஜாமக்காரனில் வாசித்து நாங்கள் யாவரும் கலங்கிப்போனோம். அங்குள்ளவர்களுக்கு உதவ இலங்கை மெயின்லைன் சபைகள் முன்வரவில்லையா?

பதில்:அதை நான் குறிப்பிடாமல் போனது என் கவனக்குறைவாகும். இலங்கை மெத்தடிஸ்ட் சபையும், ஆங்கிலிக்கன் சபையும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய உதவி செய்ததை நானே நேரில் கண்டேன். அதுபோல் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட யாழ்பாண தமிழர்களுக்கு அந்த அளவு முழு அளவில் உதவி செய்ய அவர்களை இலங்கை அரசு அனுமதித்திருக்காது என்று யூகிக்கிறேன். ஓரளவு உதவிகள் ஆங்காங்கு இந்த குறிப்பிட்ட சபைகள் முதல் ஒரு வருடம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து அந்த உதவிகள் அவர்களால் செய்யப்படுகிறதா என்பதை நான் அறியவில்லை.


பெயர் அழைக்கும் ஊழியம்:

கேள்வி:சகோ.ஸ்டீபன் பழைய கார்களை வாங்கி விற்பவர் இப்போது ஜெபத்தில் பெயர் அழைக்கும் ஊழியத்தையும் சபையையும் ஆரம்பித்துவிட்டாரே?

பதில்:ஆம். ஆரம்பத்தில் இவர் நல்ல மனந்திரும்புதலின் அனுபவத்தோடு, மிஷனரிகளை தாங்கும் ஆசையோடு FMPB மிஷனரி ஸ்தாபனத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டவராக அறிந்தேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பொய்யான அப்படிப்பட்ட பெயர் அழைக்கும் ஊழியத்தில் ஒரு கவர்ச்சி உண்டு. மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்ற நுணுக்கத்தை பெயர் அழைக்கும் மற்ற சில ஊழியர்கள் மூலமாக இவர் அறிந்துக்கொண்டு, அவர்கள் செய்த தவறை இவரும் இப்போது செய்கிறார். இப்போது அவர்களைவிட ஒருபடி மேலாக தூதர்கள் பெயர்களையெல்லாம் அறிந்து வைத்திருப்பதாக இவர் அறிவிக்கிறார். ஒரு சகோதரி இவரிடம் ஜெபிக்க கேட்டபோது உடனே இவர் அவளை சுற்றி எத்தனை தூதர்கள் நிற்கிறார்கள் என்றும் அந்த தூதர்களின் பெயர்கள் என்ன என்றும் இவர் கூறியபோது அந்த சகோதரி ஆச்சரியப்பட்டாள் என்று டிவியில் இவரே சாட்சி கூறுகிறார். இன்னும் கர்த்தர் இவருக்கு என்னென்ன காண்பித்தார் என்பதை இவர் தன் செய்தியில் கூறுவதை நான் கேட்டபோது தலை சுற்றுகிறது.

இன்று இப்படிப்பட்ட ஊழியத்தைத்தான் சபைகள் விரும்புகிறது. கிறிஸ்தவ மக்களும் விரும்புகிறார்கள். சகோ.ஸ்டீபனுக்கு கார் வியாபாரமும் நன்றாக நடக்கிறது. ஊழிய வியாபாரமும் நன்றாக நடக்கிறது. ஆனால் அவர் ஆத்துமா கர்த்தரின் வசனத்தில் பதிக்கப்படவில்லை.


யெகோவா சாட்சிகள்:

கேள்வி:பூரண சற்குணராகுங்கள் என்ற பத்திரிக்கையிலிருந்து ஒரு செய்தியை வெளியிட்டு அறிமுகப்படுத்தினீர்களே அதன் ஆசிரியர் யெகோவா சாட்சிகள் சபையை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியாதா?

பதில்:நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அந்த குறிப்பிட்ட செய்தி பலருக்கு பிரயோனமாக இருந்ததே!. நல்ல ஆவிக்குரிய செய்திகள், வாசகர்களின் ஜீவியத்துக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நான் அறிந்தால் அல்லது யாராவது அப்படிப்பட்ட செய்திகளை எனக்கு அனுப்பினால் அதை வெளியிட நான் தயங்குவதில்லை. நலமானதை மட்டும் பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் என்ற வசனத்தின்படி வாசகர்களின் நன்மைக்காக அப்படி வெளியிடுகிறேன்.


பதவி சண்டைகள்:

கேள்வி:CSI & லூத்தரன் சபைகளில் பதவி சண்டைகள் எப்போதுதான் தீரும்? சபை கமிட்டியிலிருந்து?, பிஷப் தெரிந்தெடுப்புவரை பணத்தைவைத்துக்கொண்டு ஓட்டு சேகரிக்கிறார்களே! இது மாறாதா?.

பதில்:முதலாவது மனந்திரும்புதலின் அனுபவம் இந்த குறிப்பிட்ட சபையில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இல்லை. பெரும்பாலான ஆயர்களுக்கும், பிஷப்மார்களுக்கும் மனம்திரும்புதலின் அனுபவம் இல்லாததால் இந்த பதவி சண்டை என்றும் இந்த சபைகளில் மாறவே மாறாது.

ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பெந்தேகோஸ்தே சபைகளிலும் அதே நிலைதான். AOG சபைகளின் எலக்ஷனில் போட்டியும், பிரச்சனையும் ஏற்பட்டதே, IPC சபைகளிலும் அதே லட்சணம்தான்.

சமீபத்தில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஆவிக்குரிய சபை என்று பெயர் பெற்ற ACA (Apostalic Christian Assembly) அப்போஸ்தல கிறிஸ்தவ சபையின் ஸ்தாபகரும், நல்ல தேவ மனுஷனுமான பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய அந்த சபையில் பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் மரித்தவுடன் பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் மிகப்பெரிய அந்த சபையின் பாஸ்டராக பொறுப்பெடுத்தார். இப்போது பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் வியாதிப்படுக்கையில் இனி முன்புபோல் செயல்படமுடியாத நிலையில் இருக்கிறார். இப்போதுதான் அடுத்த தலைமை பாஸ்டர் யார்? என்பதற்கு உறவினர்களுக்குள் போட்டி உண்டானது. ACA சபைக்கு ஏராளமான கிளை சபைகள் உண்டு. சென்னை தலைமை சபையில் மட்டும் பல ஆயிரக்கணக்கில் அங்கத்தினர்களும் உண்டு. லட்சக்கணக்கான ரூபாய்கள் தசம பாகம், காணிக்கை என்ற பெயரில் வரும் பணவரவுகளின் மூலம் கிடைக்கிறது. ஆகவே ACA சபைகளின் தலைமை பாஸ்டர் பதவிக்கு பெரும் போட்டியும் பிரச்சனையும் ஏற்பட்டது. 3 பேர்கள் இந்த போட்டியில் பிரதானப்பட்டவர்கள். ஒருவர் போட்டியிலிருந்து விலகினார். கடைசியாக இரண்டுபேர் மட்டும் அந்த பதவி போட்டியில் பிடிவாதமாக நின்றார்கள். போட்டியிட்ட இரண்டுபேரும் மரித்த பாஸ்டரும் - உயிரோடு இருக்கும் பாஸ்டருக்கும் இரத்த உறவுகாரர்கள்.

இந்த சூழ்நிலையை சரி செய்ய என்னைக்கூட தலையிடும்படி தூத்துக்குடியிலிருந்தும், சென்னையிலிருந்தும் என்னோடு பலமுறை சிலர் தொடர்புகொண்டார்கள். பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, போட்டியில் நிற்கும் இரண்டு பாஸ்டரும்விட்டு கொடுக்காததால் சிலர் இந்த ACA சபை சண்டையை நக்கீரன் பத்திரிக்கைக்கு கொண்டுபோகத் துணிந்தார்கள். அப்படி செய்யக்கூடாது என்று கண்டிப்பாக நான் அவர்களை வேண்டிக்கேட்டுகொண்டேன். மேலும் என்னை பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்களுக்கும் அந்த சபையிலுள்ள சிலருக்கும் பிடிக்காது. ஏற்கனவே பாஸ்டர்.சாம்சுந்தரம் குமுதம் பத்திரிக்கை நடத்தும் புறமதஸ்தர்களின் கூட்டு பிராத்தனையில் ஜெபிக்க தலைமை தாங்குவதாக தன் புகைப்படத்தையும் கொடுத்து குமுதத்தில் விளம்பரம் செய்து அந்த ஜெபத்தை நடத்தியது தவறு என்றும் குமுதத்தில் வந்த பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்களின் புகைப்படத்தோடுகூடிய அந்த விளம்பரத்தையும் ஜாமக்காரனில் நான் வெளியிட்டு என் கண்டனத்தை தெரிவித்தேன். அது பாஸ்டர் சாம்சுந்தரம் அவர்களுக்கு என்மேல் மேலும் வெறுப்படைய செய்தது. பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உயிரோடு இருந்தபோது சகோ.தினகரனின் மகள் மரணத்தைப்பற்றி என்னோடு பேசி பகிர்ந்துக்கொண்டது சாம்சுந்தரம் அவர்களுக்கு பிடிக்கவில்லை.

மேலும் அந்நியபாஷையைப்பற்றி தாக்கி நான் பலமுறை ஜாமக்காரனில் தொடர்ந்து எழுதியதால் அந்த சபையில் பலருக்கு என்னை பிடிக்காது. இந்த நிலையில் என்னை எப்படி மத்தியஸ்தம் செய்ய அவர்கள் விரும்புவார்கள். என்றாலும் அந்த சபையின் அங்கத்தினர் சிலரில் வக்கீல்கள் உண்டு. அவர்களோடு விசுவாசிகளில் சிலர் ACA சபையின் நன்மை கருதி இந்த சமரச முயற்சியில் இறங்கினார்கள். எப்படியோ ஒருவழியாக சமரசம் யாராலோ ஏற்பட்டு முடிந்தது.

மரித்துப்போன ACA சபையின் ஸ்தாபகரான பாஸ்டர்.G.சுந்தரம் அவர்களின் பேரனும், பாஸ்டருமான சிறுவயதுள்ள பாஸ்டர்.காலேப் யோசுவா அவர்கள் கடந்த 2012 நவம்பர் மாதம் 2ம் தேதி ACA சபைக்கு உதவி தலைமை பாஸ்டராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்பின் அவர் பிரதிஷ்டையும் செய்யப்பட்டார். ஒரு வழியாக ACA தலைமை பாஸ்டருக்கான போட்டி முடிவுக்கு வந்தது. என்றாலும் இன்னும் உள்ளே புகைச்சல் நீங்கவில்லை. ஜெபிப்போம்.

வயது கூடின அனுபவமுள்ள பல ACA பாஸ்டர்களுக்கு இதில் திருப்தியில்லை. காரணம் பாஸ்டர்.காலேப்யோசுவா மிகவும் சிறுவயதுள்ளவர். இன்னும் அனுபவம் போதாது என்று பலர் கூறுகிறார்கள். என்றாலும் தலைமை பொறுப்புக்கு ஒருவர் வந்துவிட்டால் அவர் சிறுவயதானாலும் கர்த்தர் அவருக்கு ஆளுமை ஞானத்தை நிச்சயம் அருளுவார். வேதத்திலும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை காண்கிறோமே!. சபை கர்த்தருடைய சரீரம்.

சபையில் உள்ள மூத்த பாஸ்டர்கள் பாஸ்டர்.காலேப் யோசுவா வாலிபன் என்று அலட்சியப்படுத்தாது அவரின் கையை பெலப்படுத்தும் வகையில், கசப்புகளை மறந்து தேவ நாம மகிமைக்காகவும் இயேசுகிறிஸ்துவின் வருகைக்காகவும் விசுவாசிகளை ஆயத்தப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அந்த சபைக்காக நான் ஜெபிக்கிறேன்.

புதிய தலைமை பாஸ்டர்.காலேப் யோசுவா அவர்களுக்கு சபையில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறேன். அப்படியே போட்டியிலிருந்து விலகிவிட்டு கொடுத்த பாஸ்டருக்கு நன்றியும் கூறிக்கொள்கிறேன்.


அக்கினி அபிஷேகம்:

கேள்வி:இன்னும் அக்கினி அபிஷேகம் இறங்குகிறது - அக்கினி நதி ஊற்றுகிறது என்று பேசி கொண்டிருக்கிறார்களே!, இதைக்குறித்து நீங்கள் இவ்வளவு எழுதியும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையே?

பதில்:அப்படி சொல்லமுடியாது. விசுவாசிகளில் பலர் ஓரளவு விளங்கிக்கொண்டார்கள் என்பதை உணருகிறேன். இது ஒருவிதமான அலை - அலை என்று கூட சொல்லாமல் இதை வைரஸ் கிருமி என்று கூறலாம். சில வைரஸ் கிருமிகள் மருந்து கண்டுபிடிக்கும்முன் தானே நீங்கிவிடுவதுபோல் இதுவும் மாறலாம்.

1901ம் ஆண்டு பெந்தேகோஸ்தே சபையும் அந்நியபாஷையும் புதிதாக ஆரம்பித்த அந்த ஆரம்ப நாட்களில் இந்த அக்கினி என்று வார்த்தை உச்சரிக்கப்படவில்லையே!. இதெல்லாம் திடீர் என்று சிலரால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுவதாகும். அதுவும் இவைகள் யாவும் அமெரிக்கா இறக்குமதி சரக்கு ஆகும். வேறு ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்படும்போது இந்த அக்கினி அபிஷேகம் தானே மறைந்துபோகும்.

இப்படித்தான் ஆராதனை - ஆராதனை என்று வார்த்தை கடந்த சில வருடங்களாக திடீர் என்று பாடல்களில் புகுத்தினார்கள். பாடலின் எல்லா வரிகளும் ஆராதனை ஆராதனை என்றே எழுதப்பட்டது. இது ஒரு அலை. இப்போதே பாருங்கள்.

முன்புபோல் இந்த ஆராதனை என்ற வார்த்தை இப்போதெல்லாம் புதிய பாடல்களில் இடம் பெறுவதில்லை என்பதை கவனியுங்கள். இதுதான் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பெந்தேகோஸ்தே சபைகளின் நாடக சீன்கள். முதல் சீன், இரண்டாம் சீன் என்பதுபோல புதிது புதிதாக பலதும் வரும் - போகும். நீங்கள் யாரும் இதில் பாதிக்கப்படாமல் இருந்தால் நல்லது.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN