(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
- 1 கொரி 2:15


முன்னுரை

கர்த்தருக்குள் அன்பான ஜாமக்காரன் குடும்பங்களே!

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் யாவருக்கும் புத்தாண்டு (2013) வாழ்த்துகள் கூறுகிறேன்.

கடந்த வருடத்தில் கடந்த காலத்தில் நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதை எப்படியிருந்தது? இதை வாசிக்கும்போது இன்று உங்கள் வாழ்க்கையின் நிலை எப்படியிருக்கிறது? என்பதை யோசிக்க உங்களுக்கு நேரம் கிடைத்ததா? தனித்திருந்து இப்படி யோசிப்பது உங்கள் ஆத்துமாவை மரணத்தையும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் சந்தோஷத்தோடு எதிர்க்கொள்ள வைக்கும். இப்படிப்பட்ட ஆயத்தமில்லாதவர்களை மதிகேடனே! முட்டாள்! என்று இயேசுகிறிஸ்து அழைக்கிறார். லூக்கா 12:20.

2012 டிசம்பர் 21ம் தேதியைக்குறித்தும், உலகமுடிவைக்குறித்தும், மாயன் காலண்டரைக்குறித்தும் கேள்விப்பட்டு பயந்த கிறிஸ்தவர்கள் எத்தனைப்பேர்!. இப்போதுள்ள கள்ளத்தீர்க்கதரிசிகள் தாங்களே தங்களை தீர்க்கதரிசிகள் என்றும், அப்போஸ்தலர்கள் என்றும் பெயர் வைத்துக்கொண்டு பேசிய பிரசங்கங்களை கேட்டு நம்பி பயந்தவர்கள் எத்தனைப்பேர். டிசம்பர் 21ம் தேதி உலக முடிவு என்று நம்பி வேலையை விட்டவர்கள், தொழிலை நிறுத்தியவர்கள், தன்னுடைய வங்கி சேமிப்பை எடுத்து மரிப்பதற்குமுன் இஷ்டம்போல் செலவழித்தவர்களின் செய்திகள், 2012 டிசம்பர் மாதத்துக்கு பிறகு உலகம் இருக்காது என்று நம்பி தென் அமெரிக்காவில் அந்த பழங்கால ஆதிவாசிகளின் இனமான மாயன் இனத்தவர் ஆராதித்த மலையின் உச்சியில் உள்ள மாயன் கோவிலில் சென்று தற்கொலை செய்ய சென்ற கூட்டத்தை, குடும்பங்களை தென் அமெரிக்கா அரசாங்கம் தடுத்து நிறுத்தியது என்று செய்திகளை கேட்கும்போது மனிதர்கள் இப்படி படித்த முட்டாள்களாக என்ன செய்கிறோம் என்று அறியாதிருக்கிறார்களே!. பிசாசு அவர்கள் கண்களை குருடாக்கிவிட்டான்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் உலக முடிவைக்குறித்து எப்படியெல்லாம் பொய் தீர்க்கதரிசனங்களை TV மூலமாக பத்திரிக்கை வாயிலாக கூறினார்கள் என்பதை சகோ.மோகன் சி.லாசரஸ், சாதுசுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார், சகோ.ஆலன்பால் ஆகியவர்களின் சம்பாஷணைகளை கேட்டவர்கள் மற்றும் ஏஞ்சல் TV - ஆசீர்வாதம் TV பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அறிவீர்கள். கழுகு வந்துவிட்டது, சிங்கம் நிற்பதை காண்கிறேன், செத்துப்போன பரிசுத்தவான்கள் ஆவியானவருக்கு பதிலாக வேதவசனத்துக்கு பதிலாக இப்போது இவர்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்துவதை அறிந்தீர்கள். இவர்கள் கூற்றை நம்பவைக்க வசதியாக அவர்களுக்கு TV வசதியாக அமைந்துவிட்டது. மஞ்சள் குதிரை ஓடுவதை TVயில் காட்டுவதை கண்டிருப்பீர்கள். மஞ்சள் குதிரை உலகமுடிவுக்கு அடையாளமாக இவர்கள் கூறுகிறார்கள். வேதத்தின்படி முதல் மூன்றுவிதமான குதிரைகள் அந்திகிறிஸ்துவின் காலத்தில் வராமல் எப்படி! மஞ்சள் குதிரை மட்டும் தனியாக உலாவுகிறது? இதற்கு வேதத்தை ஒப்பிடவேண்டும் என்பது அவசியமில்லை என்பார்கள்.! உலகமுடிவுக்கு எந்த மாயன் காலண்டரைக்குறித்தும், நட்சத்திரங்களைக்குறித்தும் மஞ்சள் குதிரையைவைத்தும் நிதானிக்ககூடாது. வேறு எதைக் கொண்டும் அறுதியிட்டு சொல்லக்கூடாது.

இயேசுகிறிஸ்து தெளிவாக கூறினார். நினையாத நாழிகையில் வருவார், அதாவது யாரும் கணக்கிடமுடியாதபடி எதிர்பாராத நேரத்தில் அது சம்பவிக்கும். இப்போது நாம் காணும் பூமி அதிர்ச்சி, சுனாமி மற்றும் காணப்படும் பேரழிவுகள், கொள்ளை நோய்கள் இவைகள் எல்லாம் உலக முடிவுக்குமுன் சம்பவிக்கும் அடையாளங்கள் என்று வேதம் எச்சரித்தாலும் இவைகள் யாவும் மனித இனத்தின் வேதனையின் ஆரம்பம் ஆகும்.

இப்போதுள்ள இந்த காலத்தில் தேவன் ஆசையோடு படைத்த இந்த உலகத்தை மனிதனை அழித்துக்கொண்டிருக்கிறான். தீவிரவாதம், பெற்றோர் பிள்ளைகளை கொல்வது, மனைவி புருஷனை கொல்வது, பிள்ளைகள் பெற்றோரை கொல்வது, பணத்துக்காக யாரை வேண்டுமானாலும் ஈவு இரக்கமின்றி கொல்வது, கற்பழிப்பு, தற்கொலை,விவாகரத்து, பிரிந்து வாழ்வது, அன்பு இல்லாத வாழ்க்கை, இப்படியாக இந்த உலகமனிதன் தன்னைதான் உருவ குத்திக்கொள்கிறான்.

நம் நாட்டை ஆள்கிறவர்களையும் நம்பமுடியவில்லை, நீதிபதிகளையும் நம்பமுடியவில்லை, பரிசுத்தத்தை போதிக்கும் ஊழியர்களையும் நம்பமுடியவில்லை. சபைகள் உபதேச குழப்பத்தால் நிலைகுலைந்து போய்கொண்டிருக்கிறது. சபை பாஸ்டர்கள், ஆயர்கள், பெரும்பாலானவர்கள் மனம்திரும்பாதவர்கள். சபை தலைவர்கள், சில ஸ்தாபன தலைவர்கள், பிஷப்மார்கள் தேவபயமற்று, பரிசுத்தமற்று தங்கள் மனைவிமார்களின் சம்மதத்துடன் பல பெண்களுடன் நிரந்தர தொடர்புள்ளவர்களாக சபைகளையும் திருமண்டலத்தையும் பரிசுத்த குலைச்சலாக்கி, பணக்கொள்ளையர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். பிசாசு என்னமாய் இவர்களை தன் ஆளுகையின் கீழ்வைத்து ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறான். கிறிஸ்தவ உலகம் படுபாதளத்தை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக முடிவைப்பற்றி விசுவாசிகள், சினிமா விமர்சனம்போல பயமில்லாமல் கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். வேதம் என்ன சொல்கிறது என்பதை கவனிக்க மறந்தார்கள்.

உலக முடிவக்கு அடையாளங்கள்:

1).முதலாவது கிறிஸ்துவின் சுவிசேஷம் சகல இன மக்களுக்கும் அறிவிக்கப்பட்டாக வேண்டும்.

2).ஒரு சர்வாதிகார ஆட்சி உலகம் அனைத்து தேசத்தை ஆளும்நிலை உருவாகவேண்டும். உலகமனைத்துக்கும் ஒரே பொதுவான சட்டம், உலக அனைத்து மக்களுக்கும் ஒன்றுபோல உபயோகிக்கும் பண புழக்கம் உருவாகவேண்டும், பொருளாதாரம் உலக மயமாக்கப்படும்.

3).தண்ணீர், பூமி எல்லை அபகரிப்பு போன்ற பல காரணங்களுக்காக ஒரு நாட்டுக்கும் மற்ற நாடுகளுக்கும் யுத்தம் உருவாகவேண்டும்.

4).ஆகாய் தீர்க்கதரிசி கூறியதைப்போல வானத்தில் கிரகங்களின் மாற்றமாக சூரியன் கருப்பாக மாறவேண்டும், சந்திரன் சிவப்பாக மாறவேண்டும். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விழவேண்டும்.

5).மனந்திரும்பின பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இப்படி இன்னும் பல சம்பவங்களும் அடையாளங்களும் வேத வசனத்தின்படி காணப்பட்டால் இயேசு கிறிஸ்துவின் வருகையும், உலக முடிவும் மிகச் சமீபமாக வந்துவிட்டது என்பதை உணரலாம்.

கர்த்தர் உண்டாக்கிய இந்த உலகமும், அதன் முடிவும் அதை உண்டாக்கியவரின் கரத்திலும், காலத்திலும் அவர் நிச்சயித்த நேரத்திலும் இருக்கிறது. அந்த காலத்தையும், நேரத்தையும் ஒருவனும் அறுதியிட்டு கூறமுடியாது.

மேலே குறிப்பிட்ட விவரங்கள் அல்லாமல் உலக முடிவைப்பற்றி பல புதிய கற்பனைகதைகளை கூறும் டிவி உழியர்கள், அற்புத ஊழியர்கள் கூறுவதை அலட்சியப்படுத்துங்கள். ஒவ்வொரு புதிய வருடத்துக்கும் தீர்க்கதரிசனம் கூறம் ஊழியர்களையும், புதிய வருடத்துக்கென்று ஒரு வாக்குதத்தம் என்ற வழக்கத்தை இனி விரும்பாமல் வேதத்தில் உள்ள எல்லா வசனத்தையும் வாக்குத்தத்தையும் வாசித்து உரிமைப்படுத்துக்கொள்ளுங்கள்.

ஜாமக்காரன் வாசகர்கள் எந்த ஊழியரையும் பாராமல் வேதவசனத்தை வாசித்து ஆராய்ந்து ஆவியானவரின் உதவியோடு அந்த வசனத்தை தியானித்து ஒவ்வொரு வினாடியும் நம் பரிசுத்தத்தை காத்துக்கொண்டு வசனத்தின்படி வாழ்ந்து எச்சரிக்கையோடும், சாட்சியுடனும் வாழ்வோம். இந்த புதிய ஆண்டு உங்கள் ஆவிக்குரிய ஜீவியம் வளர ஆவிக்கேற்ற தேவையானவற்றதைமட்டும் யோசியுங்கள்.

கிறிஸ்மஸ் மற்றும் புதிய வருடத்துக்கென்று உங்களில் பலர் அனுப்பிய விசேஷ காணிக்கை கிடைத்தது. நன்றி. அதோடு கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட வாழ்;த்து அட்டைகள், இ-மெயில் வாழ்த்துக்கள் யாவும் கிடைக்கப் பெற்றேன். நன்றி.

உங்கள் அனைவருக்கும் எங்களுடைய புது வருட (2013) வாழ்த்துதலை குடும்பமாக அறிவிக்கிறோம். புதிய வருடத்தில் புதிய ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.

கர்த்தருடைய சமாதானம் இந்த வருடம் முழுவதும் உங்களோடு இருப்பதாக. ஆமென்.

கர்த்தரின் உன்னத பணியில்
டாக்டர்.புஷ்பராஜ்

குறிப்பு: தொடர்ந்து என்னைப்பற்றிய செய்தியும், என் ஊழியத்தைப்பற்றிய செய்தியும் வாசியுங்கள். (புதிய வாசகர்கள் அநேகருக்கு என் ஊழியம் எப்போது தொடங்கியது - எதற்காக தொடங்கப்பட்டது என்ற விவரம் அறியாததால் பல சந்தேகங்கள் பல கேள்விகள் எழும்பியது என்பதை அறிந்தேன். அதனால் மிக சுருக்கமாக ஜாமக்காரன் பத்திரிக்கைப்பற்றியும், என் ஊழியத்தைப்பற்றியும் எழுதியுள்ளேன் வாசியுங்கள்).


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN