"ஆவியினால் நிறைந்திருங்கள்" (எபே
5:18).
இந்த வாக்கியத்தின் கருத்தைக் கவனிக்கவேண்டும். "ஆவியினால் நிரப்பப்படுங்கள்" என்று சொல்லாமல்
"ஆவியினால் நிறைந்திருங்கள்" என்று அப்பவுல் கூறுகிறார். ஒருமுறை தன்னைக் கிறிஸ்துவுக்கு ஒருவர் அர்ப்பணித்து ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுவதைப்பற்றி அப்பவுல் கூறாமல், அதற்கும் பின்பு எப்போழுதும் ஆவியினால் நிறைந்திருப்பதையே பேசுகிறார்.
இதுவே நமக்கும் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை. இதுவே நமது தேசத்திற்கும் அவசியம்.
ஓரிடத்தில் நடைபெறும் கூட்டங்களுக்குச் சென்று அங்கு உணர்வடைந்து தன்னை ஒப்புக்கொடுத்து பின்பு ஆவியானவரையும் பெற்றுக்கொள்ளுகிறான். ஒருவாரம் அந்த உற்சாகத்தில் ஜீவிக்கிறான். பின்பு குளிர்ந்துபோய் உற்சாகமற்று ஜீவிக்கிறான் என்றால் அவன் முன்பு பெற்றுக்கொண்ட ஆவியின் நிரப்பப்படுதலினால் எவ்வித பயனும் இல்லை. மாறாக அவன் அதற்குப் பின்பும் தொடர்ச்சியாய் அவரில் நிறைந்திருந்தாலன்றி எவ்வித பிரயோஜனமும் இல்லை. அவரை ஒரு நாளில் பெற்றுக்கொண்ட அன்பு தேவப்பிள்ளையே, நீ எப்போதும் அவரில் நிறைந்து இருக்கலாம் என்பதைப்பற்றிய சில குறிப்புகளை இங்கு கூறுகிறேன்.
தேவனுடைய ஆவியானவர் நம்மை எப்போதும்
நிரப்பிக்கொண்டிருக்க எவ்வித தடையும் இல்லை. "என்றென்றைக்கும் நம்முடனே
தங்கியிருக்கும்படிக்கே இந்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார். என்றென்றைக்கும்
உங்களுடனே கூட இருக்கும்படிக்குத் தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்" (யோ
14:16). என்பதுதான் கிறிஸ்துவின் வாக்குத்தத்தம். மற்றுமொரு சமயத்தில்
"நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று இயேசு சொன்னார் (யோ
4:14). கூடாரப்பண்டிகையின் கடைசிநாளில், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதிகள்
ஓடும்" என்றார். (யோ 7:38). இவைகளெல்லாவற்றையும் கவனிக்கும்போது பெந்தேகோஸ்தே ஆவியானவர் நிலைவரமாய் நம்மில் வாசம்பண்ணி நம்மை ஆட்கொள்ளும்படி வருகிறவரேயன்றி சில நாட்களுக்கென்று வருகிறவரல்ல என்று காணலாம். நமது பக்கத்திலே தடைகள் உண்டு. ஆகவே ஆவியானவர் நம்மை எப்போதும் நிரப்பிக்கொண்டிருக்கவேண்டுமானால் நாம் எப்பொழுதும் நம்மை அர்ப்பணித்தவர்களாய் இருக்கவேண்டும். ஒருநாள் செய்யும் அர்ப்பணிப்பு அதற்குப் பின்பு நாள்தோறும் புதுப்பிக்கப்படவேண்டும். ஒருநாள் மட்டும் நம்மை அர்ப்பணித்து இயேசுவின் கைகளில் ஒப்புக்கொடுத்துவிட்டு மறுநாள் நமது விருப்பம்போல் நடக்கும்போது ஆவியானவரின் நிலைவரமான கிரியையை நாம் அனுபவிக்கமுடியாது.
ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் "என் ஆண்டவரே. இன்றும் நான் உம்முடையவனாய் ஜீவிக்கும்படி என்னை ஒப்புக்கொடுக்கிறேன். இன்றைக்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின் செல்வேன்" என்று சொல்லவேண்டும். நாம் கிறிஸ்துவினுடையவர்கள்: அவரால் கிரயத்திற்கு கொள்ளப்பட்டவர்கள். அவருடைய அடிமைகள் என்பதை எவ்வளவாய் அனுதின ஜீவியத்தில் உணர்ந்து ஜீவிக்கிறோமோ, அவ்வளவாய் ஆவியானவரின் கிரியையை நாம் அனுபவிப்போம். ஆகவே இயேவுக்கு உன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் நீ அவருடையவனாகவே எப்பொழுதும் ஜீவிக்கப் பிரயாசப்படு. உன் இருதயத்தின் முழு வாஞ்சையும் இதுவாகவே இருக்கட்டும். நாள்தோறும், ஒவ்வொரு நிமிடமும் நீ அவருடையவன். அவருக்கென்று
ஜீவித்து உழைக்கும்படி ஒப்புக்கொடுக்கப்பட்டவன். இதை ஒருபோதும் மறக்கலாகாது. ஆவியின் கிரியை நிலைவரமாய் உன்னில் காணப்பட நீ விரும்பினால் உன் பிரதிஷ்டை எப்போதும் புதுப்பிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். இரண்டாவதாக, கீழப்படிதல்
"கீழப்படிகிறவர்களுக்குக் கொடுக்கப்படுகிற ஆவியானவர், கீழ்ப்படிந்துக்கொண்டே
இருக்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிற பரிசுத்த ஆவியானவர்." ஆவியானவர் நம்மை முற்றிலும் ஆட்க்கொள்ளவேண்டுமானால் மறுபேச்சு பேசாத கீழ்ப்படிதல் தேவை. எவ்வித அற்பமான காரியமானாலும், உகந்ததல்ல என்று ஆவியானவர் சுட்டிக்காட்டும்போது உடனே அதை அறிக்கையிட்டு விட்டுவிலகவேண்டும். ஆவியானவரை மேலும் மேலும் பெற்று தங்களை நிரப்பக்கொண்டே அப்போஸ்தலர்கள் யார்? மனுஷருக்குக் கீழ்ப்படிவதைக்காட்டிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறது அவசியம் என்று கூறினவர்களே.
இது கடினமான காரியம் அல்ல. நம்மை ஆட்கொள்ளும்படி வந்திருக்கும் ஆவியானவர் நாம் கீழ்ப்படியக்கூடிய கட்டளையே கொடுப்பார். கீழ்ப்படிவதற்குத் தேவையான பெலனையும் கட்டளையோடு அருளுவார். ஆகவே தேவபிள்ளையே, இன்று முதல் உன் ஜீவியத்தின் பிரமாணம் கீழ்படிதல் என்றே இருப்பதாக. குடும்ப காரியமாயினும், சொந்த விஷயமாயினும் வேலையின் காரியம் என்றாலும், உனது பழக்க வழக்கமானாலும், அவர் உனக்கு என்ன சொல்லுவாரோ அதின்படியே செய்வாயாக. (யோ
2:5). விசேஷமாய் ஆவியானவருக்கு விரோதமாய் கிரியை செய்யும் மாமிச சிந்தைக்கும், உலக சிந்தைக்கும் இடங்கொடதே. அவைகளல்ல. பரிசுத்த ஆவியானவரே இனி உன்னை நடத்த வேண்டியவர். மாம்சத்திற்கும், உலகத்திற்கும் விரோமாக ஆவியானவர் போராடுவார். நீ அவருடைய பக்கத்திலேயே நில். அவர் சொல்லுவதற்கே கீழ்படி. அப்பொழுதும் ஆவியானவர் இடைவிடாமல் தமது கிரியையை உன்னில் விளங்கப்பண்ணிக்கொண்டே இருப்பார்.
கீழ்ப்படிதலுக்கே சகல ஆசீர்வாதங்களும் வாக்குப்பண்ணப்பட்டு இருக்கிறது.
"என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் செய்வீர்களானால் என் சிநேகிதராயிருப்பீர்கள்" என்னுடைய கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். நாங்கள் வந்து அவனோடு வாசம் பண்ணுவோம். இதைவிட நமக்கு வேண்டியது என்ன?. ஆகையால் சகோதரனே, கீழ்ப்படிவோமாக, கீழ்ப்படிதல் நமது கடமை. கீழ்ப்படிதல் அவருக்குப்பிரியம். கீழ்ப்படிதல் ஆவிக்குரிய சகல உன்னத ஆசீர்வாதங்களும் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சியத்தைத் திறந்து கொடுக்கும் திறவுக்கோல். அதுவே நமது ஜீவயத்தின் நாட்டமாய் இருப்பதாக.
மூன்றாவதாக, ஐக்கியம். இதைக்குறித்து "என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன்" (யோ
15:4). என்று இயேசு கூறினார். அவரில் நிலைத்திருப்பது எப்படி?
1. வேத வாசிப்பு: "நீங்கள்
என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்" (யோ
15:7). விசுவாசியே, ஆவியானவருடைய பட்டயம் வேதாகமம். வேதாகமத்திற்கு உன் ஜீவியத்தில் நீ எவ்வளவு இடம் கொடுக்கிறாயோ, அவ்வளவாய் ஆவியானவர் உன்னில் கிரியை நடப்பிக்கக்கூடும்.
2. ஜெபம்: தேவனோடு பழகி ஐக்கியப்படாமல் கிறிஸ்தவ ஜீவியத்தில் எந்த ஆசீர்வாதத்தையும் அனுபவிக்கமுடியாது என்று ஒருவர் எழுதுகிறார். தேவனோடு அதிகமாகப்பேசு. அவரை உன் தோழராக்கு. பரிசுத்த ஆவியானவரின் வல்லமை தேவனோடுள்ள ஓயாத ஐக்கியத்தினால் மாத்திரமே காணப்படக்கூடும். தேவனுடைய எந்த ஆசீர்வாதமும் அவரோடுள்ள ஐக்கியத்தினாலேயே காக்கப்படவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் நிறைவாகிய ஆசீர்வாதம் அவ்வளவு அதிகமாகும்.
|