கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்

பழைய நினைவுகள்

கேள்வி:1966ல் உங்களை நாங்கள் எங்கள் தாத்தா-பாட்டியுடன் நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபோது கண்டிருக்கிறோம். உங்கள் கூட்டத்துக்கு அவர்களுடன் வந்து உங்களிடம் ஜெபித்து சென்றோம். உங்கள் கூட்டம் எங்கு நடந்தாலும் அவர்கள் எங்களையும் அழைத்து செல்வார்கள். நாங்கள் திருமணம் செய்து எங்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. இன்று அவர்களும் பட்டதாரிகளாகி திருமண முடித்து கல்லூரி படிக்கும் தாங்கள் பெற்ற பிள்ளைகளுடன் வாழ்கிறார்கள். எங்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால் அன்று நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபோது உங்களை நாங்கள் அன்று கண்டதைப்போலவே இன்றும் இளமையாக தோற்றமளிக்கிறீர்களே எப்படி? நாங்களோ தாத்தாவும்-பாட்டியுமாக இருக்கிறோம். நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள் அதன் இரகசியம் என்ன?

பதில்:நானும் என் மனைவியும் எங்கள் வயதின்படி தாத்தாவும்-பாட்டியுமாகத்தான் இருக்கிறோம். வயது மூப்பிற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் இளமை தோற்றத்துக்கு சில காரணம் உண்டு:

1).கர்த்தர் எனக்கு கொடுத்த கவலையில்லா குடும்ப வாழ்க்கை

2).கடன் இல்லாமல் வாழ்வது,

3).பணக்காரனாக ஆசைப்படாதது, (உள்ளது போதும் என்று இருங்கள். நான் உங்களை விட்டுவிலகுவதில்லை. எபி 13:5).

4).மரண பயம் இல்லாதது. இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் அவரை சந்திக்கும் நாங்கள் அனுபவிக்கும் மனந்திரும்பின அனுபவத்தோடுள்ள குற்றமற்ற ஆயத்த நிலை.

5).நான் பெற்ற பிள்ளைகள் இருவரும் இரட்சிப்பின் அனுபவத்துடன் நல்ல வேலையில் அமர்ந்து தாங்கள் பெற்ற பிள்ளைகளுடன் சந்தோஷத்தோடும், ஆவிக்குரிய நிலையிலும் எங்கள் பார்வையிலேயே அவர்கள் இருவரும் வாழ்ந்துக்கொண்டிருப்பது.

6).கர்த்தரின் சித்தப்படி அவரின் ஊழியத்தை செய்யும் பெரும் பாக்கியத்தை தொடர்ந்து நான் செய்துவருவதால் அதில் தேவனோடுள்ள நெருங்கிய உறவு எனக்கு பெரும் ஆரோக்கியத்தை உண்டாக்குகிறது.

7).மிக முக்கியமான பகுதி என்னவென்றால், என் இரகசிய வேத வாசிப்பும், என் தனி ஜெபமும் என் இளமை தோற்றத்துக்கு முக்கியமானதாகும். வேத வசன தியானத்தின்போது கர்த்தர் என்னோடு பேசுவதும், நான் ஜெபிக்கும்போது நான் அவரோடு பேசுவதும் எத்தனை பெரும் இன்பம். அந்த சந்தோஷம் என் இளமையின் பெலமாகும். இதில் மட்டும் எனக்கும், என் தேவனுக்கும் இடைவெளி உண்டாகாமல் வெகு ஜாக்கிரதையாக பாதுகாத்துகொள்கிறோம்.

8).எனக்கு வெளிப்படையான நேருக்குநேர் பார்க்கும்படியான சத்துருக்கள் யாரும் இல்லை - எல்லாம் மறைமுகமான சத்துருக்கள் மட்டுமே எனக்குண்டு. அதையும் என் கர்த்தர் பார்த்துக்கொள்வதால் அந்த சத்துருக்களின் செயல் என் மனதை பாதிப்பதில்லை.

9).எனக்கு கிடைத்த நல்ல ஆவிக்குரிய ஜெபிக்கும் மனைவி எனக்கும், என் ஊழியத்துக்கும் பெரும் பின்பலமாக இருப்பதால் என் ஊழியத்தை நான் சுதந்தரமாக செய்யமுடிகிறது. அவருக்காக தேவனைத்துதிக்கிறேன்.

10).மேலும் என் ஆகார விஷயத்தில் நான் மிக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். மிக ருசியாக இருந்தாலும் அளவுக்குமேல் சாப்பிடுவதில்லை. அதில் உள்ள கட்டுப்பாடு என் சரீரம் பெருத்துக் போகாமல் காக்கிறது.

11).இளமை தோற்றத்தைக்குறித்து கடைசியாக கூறவேண்டுமானால் நான் தலையில் அடிக்கும் Black Brown டை அதுவும் சமீபத்தில் சில காலத்துக்குமுன்தான் தலைக்கு டை அடிக்க தொடங்கினேன். என் தகப்பனாருக்கு தலைமுடி அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்து காணப்படும் (அவர் டை அடித்ததில்லை). அவரைப்போலவே எனக்கும் தலை முழுவதும் நரை முடியில்லை. ஆனால் டை அடிப்பது என் மனதுக்கு இளமை உணர்வை உண்டுபண்ணுகிறது. நான் டை அடிப்பது மற்றவர்களை கவருவதற்காக அல்லவே அல்ல. இந்த வயதில் யாரையும் நான் கவரவேண்டிய அவசியமும் இல்லையே!. ஆனால் எனக்குள் வயதானவன் என்னால்ல் நடக்கமுடியாது!, என்னால் மலை ஏறமுடியாது!. என்னால் அதிகநேரம் பேசமுடியாது!. இந்த முடியாது! முடியாது! என்ற எண்ணமும் வயதானவன் என்ற எண்ணமும் எனக்குள் வந்துவிடகூடாது. கர்த்தர் என் ஊழியத்தில் இன்னும் எவ்வளவு தூரம், எவ்வளவு காலம் என்னை ஓட அனுமதிக்கிறாரோ அவ்வளவு காலம் ஓட நான் வயதானவன் என்ற எண்ணம் எனக்குள்ளிலிருந்து நீங்கி இளமை உணர்வோடு ஓடியும் நடந்தும் ஊழியம் செய்ய இந்த ஒப்பனை ஓரளவு மட்டும் எனக்கு உதவியாக இருக்கிறது.

சிலர் என்னிடம் கூறினார்கள். கர்த்தர் சொன்னாரே! நான் இருக்கிற வண்ணமாகவே இருக்கிறேன். ஆகவே நாமும் அவரைப்போலவே இருக்கவேண்டுமே!. என்பார்கள்.

அவர் கர்த்தர் அன்றும்-இன்றும், எப்போதும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பவர். அவருக்கு முதுமை, இளமை, மரணம் எதுவும் கிடையாது. இப்போதுள்ள தரிசன புளுகர்கள் டிவியிலும் பிரசங்கத்திலும் பேசிய பொய் செய்திகளை கேட்டிருக்கிறேன். பிதா நரைத்த தலையோடு இருந்தார். இயேசுகிறிஸ்து கருத்த முடியோடு வாலிபராக இருந்தார், ஆவியானவர் இயேசுகிறிஸ்துவைவிட இன்னும் இளமையாக காணப்பட்டார். நான் வெகு அருகில் இவர்களை கண்டதால் கூறுகிறேன் என்றார்கள். இதைவிட துணிகர பொய் உண்டா?. ஆனால் மக்கள் இதையும் நம்புகிறார்களே, இவர்கள் இப்படி கூறியவுடன் உடனே பலரின் சொப்பனத்தில் நரைமுடியுடன் பிதாவானவர் இவர்களுக்கு காட்சியளிக்கிறாராம். ஏமாளிகள்!. கதை கேட்கும் கிறிஸ்தவர்கள் இருக்கும்வரை, கதை சொல்பவர்கள், இட்டுகட்டின கதைகளை கூறுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். வேதம் எங்காவது நரைத்த தலையோடு பிதா காணப்படுவதாக எழுதப்பட்டிருக்கிறதா?. நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். என்னை கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே இதிலே நரை முடியின் வித்தியாசம் இருவருக்குள் எப்படி உண்டாகும்.

உன்னதபாட்டு புத்தகத்தில் மணவாளனைப்பற்றி மணவாட்டி வர்ணிப்பதற்காக கூறிய வர்ணிப்புகளை பலர் அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் ஏற்பட்ட குளறுபடி இது.

குடும்ப உறவில் கூட புருஷன்-மனைவியைப்பற்றி மனோதத்துவ ஆலோசனை என்ன கூறுகிறது தெரியுமா?. புருஷன்-மனைவிக்கும் - மனைவி-புருஷனின் கண்களுக்கும் அழகாய், சுத்தமாய், வியர்வை நாற்றம் எடுக்காத, வாய் நாற்றம் எடுக்காத சரீரத்தோடு நல்ல ஆடையுடன் காட்சி அளிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சின்ன வயதில் நரைமுடி உள்ளவர்கள் இன்று நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் டை அடித்து, நரையை மறைப்பது நல்லது. அது பாவம் அல்ல, தம்பதிகள் ஒருவருக்கொருவர் இளமையாக அழகாக தோற்றமளிப்பது குடும்ப உறவுக்கும், தாம்பத்திய உறவுக்கும் நல்லது. குடும்ப சமாதானத்துக்கும் மிகவும் நல்லது.

நான் எழுதிய பதில் மற்றவர்களின் அபிப்ராயத்திலிருந்து வேறுபடும் என்பதை நான் அறிவேன். அவரவர் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதையே அறிவிக்கிறேன். அதையே நான் கைக்கொள்கிறேன்.

டாக்டர்.சாம் கமலேசன் அவர்கள் 80 வயதுக்கும்மேல் ஆகியும் தலைக்கு, மீசைக்கு கருப்பு டை அடிக்காமல் மற்றவர்களுக்கு முன்பாக வரவேமாட்டார். அதனால் தன் சரீர பலவீனத்தினிடையிலும் இளமை உணர்வோடு ஊழியத்தில் தன் வியாதிபடுக்கை வரை சுறுசுறுப்புடன் செயல்பட்டாரே!.

இந்த அலங்காரத்துக்கும் ஒரு எல்லை உண்டு. அதையும் நாம் அறியவேண்டும். இந்தியாவில் 80 வயதானாலும் இரட்டை சடைபோட்டு அலங்கரிப்பது நமது கலாசாரத்துக்கு, நாகரீத்துக்கு கவுரவம் அல்ல. ஆனால் பஞ்சாபிகள், ராஜஸ்தான், குஜராத் பெண்களில் வயது முதிர்ந்த கிழவிகள்கூட நான்கு சடைபோட்டு தன்னை அலங்கரித்துக்கொள்கிறார்கள்.

அதேபோல லம்பாடி இன ஆதிவாசிகளில் பெரும்பாலான பாட்டிமார்கள் அப்படிப்பட்ட தோற்றத்தில் கண்டிருக்கிறேன். நீங்களும் செய்திதாளில் பார்த்து இருக்கலாம்.

பொதுவாக என்னை போன்று ஊழியம் செய்பவர்களுக்கு நான் என்னைப்பற்றி எழுதிய இளமை ஆலோசனை பொருந்தும். உயர்ந்த கனம் பொருந்திய ஊழிய தலைமை ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நரை முடிதான் கனமுள்ளது. அதனால்தான் இன்றுவரை ஐரோப்பிய நீதிபதிகள் நரைத்த வெளுத்த முடியுடன் கூடிய விக்கை தலையில் அணிந்துதான் நியாயாஸ்தானத்தில் அமர்கிறார்கள். அது அவர்கள் வகிக்கும் பதவிக்கு கனத்தை கொடுக்கிறது.

என் இளமை தோற்றத்தைப்பற்றி கூறிவிட்டேன். இதற்கும் ஒரு முடிவு உண்டு, எல்லை உண்டு. உங்களுக்கு எது நல்லது என்று கர்த்தருக்குள் நிதானிக்கிறீர்களோ அதை செய்யுங்கள்.

தலை முடி எப்படியிருந்தாலும் நம் வாழ்க்கை, நம் வார்த்தை, நம் இருதயம் வெண்மையைப்போல மற்றவர்களுக்கு சாட்சியாக தேவனுக்கு சந்தோஷம் கொடுக்கிறதாக இருக்கவேண்டும். தேவன் நம் தலைமுடியை அல்ல இருதயத்தையே காண்கிறார்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN