ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் ஆபேலைப்பற்றிய துக்கரமான சம்பவமொன்றைக் காண்கிறோம். ஆபேல் காயீனுடைய இளைய சகோதரன். தன் சகோதரனுக்காகக் கவலைப்பட்டு, அவனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காயீனுக்கு உண்டாயிருந்தது. ஆனால் அவனோ சகோதரனைக் கொலை செய்தான். அப்போது,
"கர்த்தர் காயீனை நோக்கி, உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?" என்றார். அதற்கு அவன் "நான் அறியேன்: என் சகோதரனுக்கு நான் காவலாளியோ" என்றான் (ஆதி 4:9). காவலாளியாக இருக்கவேண்டிய காயீன் தன் சகோதரனைக் கொலைசெய்துவிட்டு, நான் காவலாளியா என்று இப்போது கேட்கிறான். இச்சம்பவம் நடந்து ஆறாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் காயீனுடைய அதே ஆவி இன்றும் உலகில் கிரியை செய்துகொண்டிருக்கிறது. முதலாம் நூற்றாண்டிலும் இந்த ஆவி கிரியை செய்ததை யூதா
11ம் வசனத்தின் மூலம் அறிகிறோம்.
"...இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து... கெட்டுப்போனார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. காயீனுக்குள் அந்த ஆவி கிரியை செய்ததின் முக்கிய காரணம் சகோதரனுடைய நன்மையைக்குறித்துக் கவலைப்படாததேயாகும். இன்று ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் அழிவை நோக்கி விரைந்தோடிக்கொண்டிருக்கின்றன. அந்த ஆத்துமாக்களைப் பாதுகாக்கும் விலையேறப்பெற்ற கடமை நமக்குண்டு. அவர்களுக்குக் காவலாளியாக இருக்கும்படிக்குத் தேவன் நம்மை வைத்திருக்கிறார். அதற்காக ஆழமான சத்தியங்களை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். உன்னதமான உபதேசங்களையும், அனுபவங்களையும் பெற்றுக்கொண்ட நாம் காலை முதல் இரவு வரை நமக்காகவே கவலைப்படுகிறோம். நம்மைச் சுற்றியுள்ள ஆயிரங்களைக்குறித்துக் கவலையற்றவர்களாகவும், அவர்களுடைய ஆத்துமாவுக்கு நாம் காவலாளிகளாக வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணமற்றவர்களாவும் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிக் கவலையற்ற தேவ ஜனத்தை நோக்கி, உன் சகோதரன் எங்கே? என்று இன்றைக்கும் கர்த்தர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
காயீன் ஆபேலைக்கொன்றது மட்டுமல்ல, அதை மறைத்தும் போட்டான். ஆயினும் ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டேயிருந்தது. இச்சத்தத்தைக் காயீனோ அல்லது மற்றவர்களோ கேட்கவில்லை. ஆனால் கர்த்தர் கேட்டார். இன்றும் நம்முடைய கவலையீனத்தால் நரகத்தில் முடிவடைந்தோரின் இரத்தம் தேவனை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறது. சினிமா சாலைகளிலும், மதுபானக்கடைகளிலும் கூடும் கணக்கற்ற ஆத்துமாக்களின் சத்தம் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது. மருத்துவமனைகளிலும், சிறைச்சாலைகளிலும் வேதனைப்படும் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களின் நிலையை நாம் உணருவதில்லை.
"பாவத்திலும், வியாதியிலும் வாடும் எங்களுக்கு உதவி செய்பவர் யாருமில்லையே" எனக் கதறும் அவர்களுடைய சத்தத்தை நம்மால் கேட்க முடியவில்லை. ஆனால் இக்கூக்குரலைக் கர்த்தர் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்.
ஆபேலின் இரத்தம் கூப்பிடும் சத்தத்தைக் கேட்ட தேவன் காயீனை நோக்கி,
"நீ என்ன செய்தாய்?" எனக்கேட்டார். இக்கேள்வியானது இன்று நம்மிடம் கேட்கப்படுகிறது. எந்தெந்த ஆத்துமாக்களுக்கு நம்மைக் காவலாளியாக வைத்திருக்கிறாரோ, அவர்களுக்காக நீ என்ன செய்தாய் அல்லது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் என்ன பதில் கொடுக்க முடியும்? அநேக ஆத்துமாக்கள் ஏற்கனவே நரகத்தில் சென்று முடிவடைந்துவிட்டனர்.
"மேன்மையான ஆவிக்குரிய காரியங்களை அனுபவித்து, தாங்கள் மட்டும் சந்தோஷத்தை அனுபவிக்கும் உம்முடைய ஜனம், என்னுடைய ஆத்துமாவின் விடுதலைக்காக ஒன்றும் செய்யவில்லையே" என அவர்கள் இரத்தம் கூறும் குற்றச்சாட்டிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளமுடியுமா? நம்முடைய ஆத்துமாவுக்காகவும் கூட காவலாளியாக நியமிக்கப்பட்ட எத்தனையோ பரிசுத்தவான்கள் உண்டு. அவர்கள் நமக்காக தேவ சமூகத்தில் ஜெபிக்கின்றனர். நம்மைக் கிறிஸ்தேசுவுக்குள்
தேறினவர்களாக நிறுத்தும்படிக்கு, நமக்குப் புத்திச்சொல்லி, எல்லா ஞானத்தோடும், உபதேசத்தில் சிக்கின்றனர். ஆனால் இவ்வித சிலாக்கியத்தை பெற்றனுபவிக்கும் நாமோ, அழிந்துபோகும் மற்ற ஆத்துமாக்களைப்பற்றிய பாரத்தை இழந்துபோய் விடுகிறோம். ஆத்துமாக்களுக்காக ஜெபிப்பதுமில்லை. அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதுமில்லை. தன் சகோதரனைக்குறித்து கவலையற்றிருந்த காயீன்
தேவனால் சபிக்கப்பட்டான். நம்முடைய சகோதரர்களின் நன்மையையும், இரட்சிப்பையும் குறித்துக் கவலையற்றிருந்தால், நாமும் சபிக்கப்பட்டவர்களே, காவற்காரனாக வைக்கப்பட்டுள்ளவன் ஜனத்தை எச்சரிக்காமலும், கிரியை செய்யாமலுமிருந்தால், அவர்களின் இரத்தப் பழி காவற்காரன் கையிலே கேட்கப்படும் என்று எசேக்கியல்
33:6,8 வசனங்களில் காண்கிறோம். நாம் நம்முடைய ஆத்துமாவைப் பாதுகாத்துக் கொள்வதினால் மட்டும் இத்தண்டனைக்குத் தப்பலாம் என நினைக்கவேண்டாம். காவல்காரனுக்குரிய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும். அப்போது மட்டுமே
33:9ல் கூறப்பட்டுள்ளபடி நம்முடைய ஆத்துமாவும் தப்புவிக்கப்படும். எனவே காவற்காரனுக்குரிய வேலைகள் இன்னதென அறிந்து, அதை இந்நாட்களில் நிறைவேற்ற வேண்டியது அத்யாவசியமாகும்.
கர்த்தர் எசேக்கியல் தீர்க்கதரிசியை நோக்கி, "மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலானாக வைத்தேன்" எனக்கூறினார் (எசேக் 3:17). இஸ்ரவேல் வம்சத்தாரைப்பற்றி கூறும்போது
"...... அவர்கள் கலகவீட்டார்" என எழுதப்பட்டுள்ளது. (வச 19) கலகவீட்டாருக்குக் காவலாளியாகத்தான் எசேக்கியல் வைக்கப்பட்டான். நாமுங்கூட நம்மைச் சுற்றிலுமுள்ள கலகவீட்டாருக்கும், துன்மார்க்கர்களுக்கும் காவலாளியாக நியமிக்கப்பட்டுள்ளோம். இவர்களை விழுங்கும்படி பாதாளமானது தன் வாயை திறந்து காத்துக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து கடந்துபோகும்படியாக வேதனைப்படும் இவர்களின் இரத்தம் தேவனை நோக்கிக்கூப்பிடுகிறது. இது தேவனால் சகிக்கமுடியாததொன்றாகும்.
"அவர்கள் பாவிகளும், துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன்
வழியைவிட்டுத் திரும்பி பிழைப்பதையே விரும்புகிறேன்......" (எசேக்
33:11) என்கிறார். பக்தர் ஒருவர் ஆங்கிலத்தில் இவ்விதம் பாடுகிறார்.
"சந்தேகம் பயமென்னும் ஆழியில் அமிழ்ந்து
அழுதிடும் ஆயிரங்களின் சத்தம் கேள்
வாடிடும் உள்ளங்கள், மகிழ்ந்திரும் நம்பிக்கையின்றி,
தேவனே அவர்கள் ஏன் சாகவேண்டும்?".
ஆனால் நாமோ ஆயிரங்களின் அழுகுரலைக் கேட்காது. "உறங்கிக்கொண்டிருக்கிறோம்" இச்சத்தத்தைக் கேட்கும் சிலருங்கூட, அவர் தம் துயர்துடைக்கத் தங்களுக்கு நேரமில்லை எனக் கூறிக்கொண்டிருக்கின்றனர். மருத்துவமனைகளும், சிறைச்சாலைகளும் நிறைந்து கொண்டிருக்கின்றன.
"இவர்களைத் தடுத்து நிறுத்த, நீ என்ன செய்தாய்" எனக் கர்த்தர் கடிந்துரைக்கும் நாளில் நாம் என்ன சொல்லப்போகிறோம்? தேவனையும், தேவ அன்பையும் அறியாத மக்களுக்குக் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். நமது கடமையை நாம் உணர்ந்து, நம்மோடு இடைப்படும் ஒவ்வொருவருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும். ஒரு சிலரையாவது அழிவிலிருந்து மீட்கும்படி கிரியை செய்வோமாக!.
அடுத்தப்படியாக, நம்மைச் சுற்றியுள்ள அழிந்துப்போகும் ஆத்துமாக்களுக்காக மாத்திரமல்ல நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய சபையில் காவலாளிகளாயிருக்க வேண்டுமென்று தேவன் வாஞ்சிக்கிறார். பிரசங்கம் செய்தோ அல்லது வேறு ஊழியங்கள் செய்தோ, தேவனுடைய ஜனத்திற்குக் காவலாளியாக இருக்க வேண்டுமென்பது இதன் கருத்தல்ல. தேவனுடைய சபையில் சத்துரு பிரவேசிப்பதினால் தேவனுடைய ஜனங்கள் ஆதி நிலவரங்களையும், ஆதி அனுபவங்களையும், உபதேசங்களையும், விசுவாசத்தையும் இழந்து பின்வாங்கி அழிந்துவிடாதபடிக்கு, காவற்காரர்களைப்போல அவர்களுக்காக இரவும், பகலும் ஜெபத்தில் போராடுகிற பரிசுத்தவான்களாகிய ஊழியக்காரரும், விசுவாசிகளும் தேவை. ஏசாயா
62:6ல் "எருசலேமின் மதில்களின்மேல் பகல்முழுவதும் இரவு முழுவதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன்..." என்று எழுதப்பட்டிருக்கிறது. புதிய எருசலேமின் மதிலைப் படிக்கும்போது,
"அதின் மதில் வச்சிரக் கல்லால்" கட்டப்பட்டிருந்தது என எழுதப்பட்டுள்ளது(வெளி
21:18). அதே சமயத்தில் அதின் "முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல்".. எனவும்
19ம் வசனத்தில் காண்கிறோம். வச்சிரக்கல் என்பது ஜெபிக்கிற பரிசுத்தவான்களைக் காட்டுகிறது. மேற்கூறப்பட்ட வசனங்களிலிருந்து அஸ்திபாரமாகிய தேவ ஊழியர்கள் மட்டுமல்ல, புதிய எருசலேமின் மதிலாகக் கட்டப்படும் தேவ ஜனங்கள் யாவரும் ஜெபிக்கிற
ஜாமக்காரர் என்பதை விளங்கிக் கொள்ளுகிறோம். புதிய எருசலேமில் பல அனுபங்கள் உண்டு. சிலர் ஜீவனுள்ள கற்களாகவும், சிலர் தூண்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால் ஜெபிக்கிற தேவஜனம் புதிய எருசலேமனி மதிலாக உள்ளனர். இவர்களுக்கு மிகவும் முக்கியமான வேலை உண்டு.
"அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும் வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்" என்று தீர்க்கதரிசி கூறுகிறார். (ஏசா
62:7).
அப்போஸ்தல ஊழியமும், உபதேசமும் உலகமெங்கும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரப்போகும் நாட்கள் சமீபம். அந்நாளில் அது முழு உலகத்துக்கும் புகழ்ச்சியாக விளங்கும். இவ்விதமாக எருசலேம் புகழ்ச்சியாக்கப்படும் வரைக்கும், இரவும், பகலும் தேவ சமூகத்தில் போராட வேண்டியது
ஜாமக்காரரின் அல்லது காவற்காரரின் கடமையாகும்.
தேவ ஜனங்களில் பலர் இவ்வித சிந்தையற்றவர்களாக உள்ளனர். தேவ சபை எருசலேமாக மாற்றப்பட்டு, பூமியிலே புகழ்ச்சியாக்கப்படும் வரை, இரவும், பகலும் முழங்காலில் நிற்கும் அனுபத்தைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பலர் இவ்விதமாய் காவற்காரைப் போல் விழித்திருந்து ஜெபம் பண்ணுவதில் குறைவுள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள்.
சில சமயங்களில், தேவனுடைய ஜனங்கள், பின்வாங்கிப் போவதைப்பற்றியோ, அழிந்து போவதைப்பற்றியோ அவர்களுடைய விஷயமல்ல என்று நினைக்கிறார்கள். காயீனைப்போல மற்றவர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தின் முன்னேற்றத்திற்குத்
தாங்கள் காவலாளிகள் அல்ல என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். "உடன் விசுவாசியாகிய உன் சகோதரன் எங்கே?" என்று கர்த்தர் கேட்கும் நாளில் அவர்கள் என்ன பதில் கூறுவார்கள்?
சிலருடைய வார்த்தைகளாலும், ஜீவியத்தாலும் அநேக தேவனுடைய ஜனங்கள் இடறி, பின்வாங்கினதுண்டு. ஆனால், அவர்களுக்கு அதைப்பற்றி ஒரு மனஸ்தாபமோ, துக்கமோ இல்லை.
"உன் உடன் விசுவாசியாகிய உன் சகோதரன் அழிந்துப்போகும்படி நீ என்ன செய்தாய்?" என்று கர்த்தர் அவர்களைக் கேட்கும் நாளில் என்ன மறு உத்தரவு அளிப்பார்கள்?
ஆகையினால் தேவனுடைய ஜனமாகிய நம்மைக் காவலாளிகளாக தேவன் நியமித்திருக்கிறார் என்பதை உணர்ந்து, ஜனத்திற்காகவும், ஜனத்தின் இரட்சிப்புக்காகவும், சபையின் பாதுகாப்பிற்காகவும் கிரியை செய்வோமாக!.
கடைசியாக, ஏசாயா 21:11,12 வசனங்களில் இன்னொரு
ஜாமக்காரனைப்பற்றி வாசிக்கிறோம். இந்த ஜாமக்காரன் எல்லா ஜாமங்களிலும் விழித்திருக்கிறவன். தேசத்திலுள்ள எல்லாரும் நித்திரை செய்தாலும் இவன் நித்திரை செய்யமுடியாது. ஒவ்வொரு
ஜாமத்திலும் நடப்பவைகளை இவன் அறிந்திருக்கிறான்.
இந்த ஜாமக்காரன் தான், சபையைப்பற்றிய வெளிப்படுத்தலோடு கூட விழித்திருக்கும் தேவனுடைய ஊழியர்களுக்கு ஒப்பனையாக இருக்கிறான். இவர்கள் இரவும் பகலும் விழித்திருந்து சபையைக் காக்கின்றனர்.
ஜாமக்காரனைக் கூப்பிட்டுக்கேட்டபோது,
".... விடியற்காலம் வருகிறது. இராக்காலமும் வருகிறது.... நீங்கள் கேட்க மனதானால் திரும்பி வந்து கேளுங்கள் என்று கூறினான்" (வச
12).
விடியற்காலம் கர்த்தருடைய வருகையை காண்பிக்கிறது.
இராக்காலம் அதற்குப்பின் உண்டாகும் உபத்திரவ காலத்தை வெளிப்படுத்துகிறது. இக்காலங்களைக்குறித்து ஜனத்தை எச்சரிக்கவேண்டியதும், தப்புவதற்கான வழிகளைத் தெரிவிக்கவேண்டியதும்
ஜாமக்காரனின் பொறுப்பாகும். இல்லாவிடில் தேவஜனங்கள் கிறிஸ்துவின் வருகையை ஆயத்தப்படமுடியாது. தேவனுடைய ஊழியக்காரன் உறங்கினால் தேவசபை அழிந்துப்போகும். எனவே எல்லா உத்திரவாதத்தோடும், தேவ ஊழியர்கள் எல்லா ஜாமங்களிலும் தேவஜனத்தைப்பற்றிய விழிப்புள்ளவர்களாயிருந்து எச்சரிக்க வேண்டியது அவர்கள்மேல் விழுந்த கடமையாகும்.
தேவன் நமக்கு மேன்மையான ஆசீர்வாதங்களைத்தந்து, ஒரு சிலருக்கு நம்மைக் காவலாளியாக வைத்திருக்கிறார். நம்முடைய உத்திரவாதத்தை உணர்ந்து, சகோதரனைக் காக்கும் கடமையை நிறைவேற்றுவோமாக.
"ஓ,காவற்காரனே, உன் சகோதரன் எங்கே? நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்ற கேள்விகள் இந்நாளில் நம் இருதயங்களில் தொனிக்கட்டும், விழிப்புள்ள காவற்காரராகக் கிரியை செய்து நம்முடைய சகோதரரோடுங்கூட கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுத்துவோமாக!. |