"ஜாமக்காரன்" பெயர் வந்தது எப்படி?

ஆரம்பம்:

1964ம் வருடம் நான் மனந்திரும்பின (இரட்சிப்பின்) அனுபவத்தைப்பெற்றேன். அப்போதே சாட்சி கூறவும், ஊழியம் செய்யவும், கர்த்தர் என்னை பயிற்சிவித்தார். VBS அண்ணாச்சி என்று எல்லாராலும் அன்புடன் அழைக்கப்படும் மறைந்த சகோ.P.சாமுவேல் அவர்கள் மூலமாக அவருடன் பல ஊர்களுக்கு உடன்சென்று ஊழியம் செய்ய செய்யவும், எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்ற பயிற்சியையும் பெற்றுக்கொள்ள கர்த்தர் எனக்கு கிருபையாக ஏற்பாடு செய்து உதவினார்.

1965ம் வருடம் FEBA வானொலியில் நற்செய்தி நிகழ்ச்சியில் வேதபாடம் நடத்தவும், கன்வென்ஷனில் பிரசங்கிக்கவும் கர்த்தர் எனக்கு ஊழிய பாதையை அமைத்துக்கொடுத்து கன்வென்ஷனில் பிரசங்கிக்கும் தாலந்தையும் தேவன் இலவசமாக எனக்கு வழங்கினார். அதன்மூலம் அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் கன்வென்ஷன் பிரசங்கியாக பிரபலமானேன். ஒவ்வொரு கூட்டங்களிலும் ஏராளமானவர்கள் மனந்திரும்பினார்கள். மனந்திரும்பினவர்களிடமிருந்து ஆவிக்குரிய ஜீவியத்தில் தொடர்ந்து வளரவும், வேத வசனங்கைளப்பற்றிய சந்தேகங்களை கேட்கவும், அவர்களின் குடும்ப பிரச்சனைகளைக்குறித்து ஆலோசனை பெறவும் ஏராளமானவர்கள் எனக்கு கடிதங்கள் எழுத தொடங்கினார்கள். நாளாக நாளாக எனக்கு வரும் கடிதங்களின் எண்ணிக்கை கூடின. அவர்கள் அனைவருக்கும் எழுதி கேட்ட கேள்விகளுக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் திணறினேன். அப்போதுதான் என்னோடு கடிததொடர்பு கொண்டவர்களுக்காக மட்டும், என்னை புரிந்துக்கொண்டவர்களுக்காக மட்டும் ஒரு சிறு பத்திரிக்கை ஊழியத்தை தொடங்கினால் என்ன? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதற்கு கர்த்தரிடம் நான் உத்தரவு எதுவும் கேட்கவில்லை. ஆனால் பத்திரிக்கை தொடங்கபோவதாக மட்டும் கர்த்தரிடம் அறிவித்தேன்.


என் வாழ்க்கை:

எந்த ஒரு சிறு காரியமானாலும், பெரிய காரியமானாலும் கர்த்தரிடம் அதை அறிவிக்காமல் நான் செய்ததில்லை. குறிப்பிட்ட எந்த விஷயத்தைக்குறித்து ஜெபத்தில் என் கர்த்தரிடம் தெரிவிக்கும்போது என் உள் உணர்வில் தெளிவும், என் மனசாட்சியில் தடுமாற்றம் இல்லாத நிலையும், ஜெபிக்கும்போது குற்றமற்ற மனசாட்சியும் எனக்குள் உண்டாகுமானால் அந்த காரியத்தை தைரியமாக உடனே செயல்படுத்துவேன். இதுவே என் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்ப கால முதல் இன்று வரை நான் பின்பற்றும் வழியாகும்.


கடிதமும் - செய்தியும் (NEWS LETTER)

1969ம் வருடம் பிப்ரவரி மாதம் கடிதமும் - செய்தியும் (NEWS LETTER) என்ற பெயரில் 28 பக்கங்கள் கொண்ட பத்திரிக்கையை ஆரம்பித்தேன். நான் டாக்டராக பணி செய்துக்கொண்டு இருந்தாலும், சொந்தமாக ஆஸ்பத்திரியும் நடத்தி இவைகளில் கிடைத்த என் சொந்த பணத்தை செலவழித்து பத்திரிக்கை தொடங்கிவிட்டேன். ஆரம்பத்திலேயே 3000 குடும்பங்களோடு (தமிழ்-மலையாளம்) எனக்கு கடிதத்தொடர்பு இருந்தது. என் பத்திரிக்கைகளை அவர்களுக்குமட்டும் தபாலில் அனுப்பினேன். ஒருவர் கேட்ட ஆவிக்குரிய கேள்வி - குடும்ப விவகாரங்களைப்பற்றிய கேள்வி இவைகளுக்கு நான் அளித்த பதில் நான் அனுப்பிய பத்திரிக்கை வழியாக வாசித்த 3000 குடும்பங்களுக்கும் என் பதில் மிகவும் பிரயோஜனமாக இருந்ததை அறிந்து தேவனை துதித்தேன். நாளாக நாளாக பத்திரிக்கை வாசிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருந்தது. இப்போதுதான் என் பத்திரிக்கை ஊழியத்தில் நான் எதிர்ப்பார்க்காத அதிசயம் நடந்தது. பத்திரிக்கை வாசித்தவர்கள் பலர் இவ்வளவு பயனுள்ள இந்த பத்திரிக்கைக்கு எங்கள் பங்காக நாங்கள் அனுப்பும் காணிக்கையை தயவுசெய்து திருப்பி அனுப்பாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மிகவும் பாரத்தோடு வாசகர்கள் கேட்டுக்கொண்டார்கள். நானும் தடையேதும் கூறாமல் அந்த காணிக்கைகளை அப்படியே தேவ சமூகத்தில் வைத்து கர்த்தருக்கு நன்றி கூறினேன்.

அன்பான என் ஜாமக்காரன் வாசக குடும்பங்களே!, இதுதான் தேவநடத்திப்பு என்பதாகும். நான் பத்திரிக்கை செலவுக்கு அன்று முதல் இன்று வரை யாரிடமும் பணம் கேட்காமல் ஒவ்வொரு வாசகர்களும் அவர்களாகவே எனக்கு காணிக்கை அனுப்புகிறார்களே,. அது கர்த்தரே அவர்களை உணர்த்தியதால்தான். நான் கேளாமலே வாசகர்களே எனக்கு பணம் அனுப்ப தொடங்கியதின் இரகசியம் ஆகும். அந்த ஆரம்ப காலம் முதல் இன்று வரையும் அது என் ஊழியத்தில் தொடர்கிறது. தேவன் அனுமதித்தால் இனி உள்ள காலங்களிலும் அந்த ஒழுங்கு தொடரும். கர்த்தருக்கே மகிமை உண்டவதாக!.

இப்படியாக ஜாமக்காரன் பத்திரிக்கை மிக வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும்போது, பத்திரிக்கையின் எண்ணிக்கை மிக அதிகமாக கூடியதும் தபால் ஸ்டாம்ப் (முத்திரை) செலவு வரவர அதிகமாக தொடங்கியது. ஆகவே தபால்சலுகை பெற தபால்துறைக்கு விண்ணப்பித்தேன். அப்போதுதான் பத்திரிக்கை மத்திய அரசாங்கத்தில் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டால் அவர்கள் கொடுக்கும் அரசாங்க அனுமதியும் அதற்கான பதிவு நெம்பரும் கிடைக்கும். அதன்பிறகே தபால் சலுகை கிடைக்கும் என்பதை அறிந்தேன்.

உடனே இந்திய தலைநகரில் உள்ள மத்திய அரசாங்கத்தின் பத்திரிக்கை செய்தி துறைக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் எனக்கு ஒரு பாரம் அனுப்பி பத்திரிக்கையில் பெயர் குறிப்பிட்டால் அதை பதிவுசெய்து மத்திய அரசாங்க அனுமதி அளிப்போம் என்று அறிவித்தார்கள். அதன்படி NEWS LETTER என்ற பெயரை குறிப்பிட்டு டெல்லிக்கு அனுப்பினேன்.

ஆனால் NEWS LETTER என்ற பெயரில் ஏற்கனவே இந்தியாவில் யாரோ பதிவுசெய்து பத்திரிக்கை நடத்துவதாக டெல்லியில் இருந்து செய்தி வந்தது. அதன்பின்தான் பத்திரிக்கைக்கு வேறு பெயர் தெரிந்தெடுக்கவேண்டிய அவசியம் வந்தது.

பல நாட்கள் பொருத்தமான புதிய பெயருக்காக ஜெபித்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள் நான் ரயிலில் பிரயாணம் செய்துகொண்டு இருக்கும்போது காலை தியானத்துக்காக வரிசையின்படி ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தேன். படித்துமுடித்தபின், ஏனோ மறுபடியும் ஜெபித்தேன். அப்போது பத்திரிக்கை பெயரைக்கேட்டு கர்த்தரிடம் மறுபடியும் விண்ணப்பித்தேன்.

ஜெபத்தில் கர்த்தர் என்னை உணர்த்தினார். நீ படித்த அதே அத்தியாயத்தில் பத்திரிக்கை பெயர் இருப்பதாக உணர்த்தினார். அன்று நான் வாசித்துக்கொண்டிருந்த ஏசாயா 21ம் அதிகாரத்தை மறுபடியும் வாசித்தேன். ஆனால் அதில் பத்திரிக்கைக்கான பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னொருமுறை வாசித்தபோது 6ம் வசனம் என்னை கவர்ந்தது. அதற்குமேல் என்னால் படிக்க முடியவில்லை. நீ போய் காண்பதை தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார் என்று எழுதியிருந்தது.

இதே வசனத்தின் மூலம்தான் கர்த்தர் என்னை ஆரம்பத்தில் உணர்த்தி ஊழியத்துக்கு அழைத்தார்.

பிறகு ஜாமக்காரனின் வேலை என்ன என்பதை ஆராய்ந்தேன். அப்போதுதான் தேவ ஆவியானவர் சில ஆழமான ரகசியங்களை எனக்கு வெளிப்படுத்தினார். அன்று அந்த விஷயத்தைக்குறித்து என்ன வெளிப்பாடு கொடுத்தார் என்பதை கீழே கொடுக்கிறேன்.


ஜாமக்காரன் (மலையாளம் - காவல்காரன்) (ஆங்கிலம் - WATCHMAN)

ஏசா 21:11,12ல் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.... ஜாமக்காரனே இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க அதற்கு ஜாமக்காரன் விடியற்காலம் வருகிறது. இராக்காலமும் வருகிறது என்கிறான்.

இதில் இரண்டு முரண்பாடான பதிலை, இயற்கைக்கு ஒத்துவராத பதிலைக் காண்கிறோம். ஒன்று இரவுக்காலமும் வருகிறது, விடியற்காலமும் வருகிறது. இது எப்படி?. இரவு கடந்து சென்றபின்தான் விடியற்காலம் வரவேண்டும். இரண்டும் ஒன்றாக எப்படி வரும்?. இதுதான் தீர்க்கதரிசன வார்த்தை என்பது. விடியற்காலை அல்லது பகல் என்பது நன்மையான காலத்தையும், இரவு என்பது தீமையான காலத்தையும் குறிக்கும். சொல்லப்படும் நல்ல காலம் என்ன?.

இயேசுவின் இரண்டாம் வருகை நல்ல காலம் ஆகும். அவர் வருகையே உலகத்துக்கு விடியற்காலம் ஆகும். அவர் வருகையை எதிர்நோக்கி ஆயத்தத்துடன் வாழ்ந்தோருக்கு அது நல்ல காலமாக அமையும். அவர் இரண்டாம்முறை வருவது அவர்களுக்கு மிக சந்தோஷம். அவர்கள் அந்த நாளுக்காக தங்கள் ஜீவியத்தை ஆயத்தம் செய்தவர்கள். அது இவர்களுக்கு பயம் இல்லாத சந்தோஷ எதிர்ப்பார்ப்பு ஆகும். ஆனால் அதேசமயம் கர்த்தரை தேடாதவர்களுக்கு கிறிஸ்துவின் வருகையை நம்பாதவர்களுக்கும் கர்த்தரைவிட்டு விலகினவர்களுக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை மிக பயங்கரமான இரவு காலமாக அமையும்.

அவர்கள் அந்த வருகையை எதிர்நோக்கவில்லை. அதற்கு தங்களை ஆயத்தப்படுத்தி ஜீவிக்கவில்லை. எனவே வேதம் கூறுகிறது. அப்படி ஆயத்தப்படாத பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும், கன்மலைகளிலும் ஒளிந்துக்கொண்டு பர்வதங்களையும், எரிமலைகளையும் அவர்கள் நோக்கி, நீங்கள் எங்கள்மேல் விழுந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும் ஆட்டிக்குட்டியானவருடைய கோபத்துக்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்!. அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது. யார் நிலை நிற்கக்கூடும் என்பார்கள். (வெளி 6:15-17)

இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் இராக்காலமும் வருகிறது என்பதை அறியவேண்டும். அது வாதைகளின் நாள். மகா கொடிய காலம். கோர இருள் பூமியை மூடும் திடுக்கிடும் காலம். எங்கும் தத்தளிப்பு, புலம்பல் உண்டாகும்.

இதைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி கூறுகிறார். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் இதுவரை உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும் என்றார். (தானியேல் 12:1).

பலர் "உம்முடைய ராஜ்யம் வருவதாக" என்று மனப்பாடமாக பலமுறை ஜெபித்தும் மனம்திரும்புதலின் ஆவிக்குரிய ஆயத்தமாயிராத நிலையில் வெறுமனே ஜெபித்தபடியால் மற்றொரு தீர்க்கதரிசி அப்படிப்பட்டவர்களைக்குறித்து இப்படி கூறுகிறார்.

கர்த்தருடைய நாளை (ஆயத்தமில்லாத நிலையில்) விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதனால் ஆயத்தப்படாத உங்களுக்கு என்ன உண்டு? என்று கேட்கிறார்.

அப்படி ஆயத்தப்படாமல் வெறுமனே ஜெபிப்பவர்களுக்கு கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாக இருக்கும்.

சிங்கத்திடம் தப்பினவனுக்கு கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அதிலிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன்கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்குமாம். ஆமோஸ் 5:17-20.

ஆகையால் ஒரு சாராருக்கு அவர் நாள் விடியற்காலம்.

மற்றொரு சார்பினருக்கு அவர் வருகை இராக்காலமாக இருக்கும்.

எனவே விடியற்காலமும் வருகிறது. இராக்காலமும் வருகிறது என்று ஜனங்களை எச்சரிக்க வேண்டியது ஜாமக்காரனின் வேலையாகும். இதை வாசிக்கிறவர்கள் அந்த நாளுக்காக உங்களை தயாராக்கிக்கொள்ளுங்கள். இதுதான் கர்த்தர் இந்த பத்திரிக்கை மூலமாக வாசகர்களுக்கு அன்று பத்திரிக்கை ஆரம்பித்த முதலில் ஆரம்பத்தில் கொடுத்த முதல் வெளிப்பாடும் ஆகும்.


ஜாமக்காரனின் ஆபத்தான் மற்றொரு முக்கிய பணி:

ஜாமக்காரன் நகரத்தின் ஒரு குறிப்பிட்ட உயர்ந்த கோபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பான். இரவு-பகல் உறங்காது, மழை, வெயில் பாராது அவன் நகரத்தையும் மக்களையும் காப்பது ஜாமக்காரனின் முக்கிய பணியாகும். நம்பிக்கையுள்ள, தேவபக்தியும், ராஜபக்தியும் உள்ள நபரையே ஜாமக்காரன் வேலைக்கு தெரிந்தெடுப்பார்கள். அவனை நம்பித்தான் தேசத்தின் ராஜாமுதல் தேச மக்கள் வரை யாவரும் பயமில்லாமல் உறங்குவார்கள். பயமில்லாமல் வாழ்வார்கள்.


ஜாமக்காரன் கிறிஸ்தவ உலகில் இரண்டுவித பணி நிறைவேற்றவேண்டும்.

காவல் கோபுரத்தில் இருந்து நான்கு திசையிலும் எச்சரிக்கையுடன் நோக்கி வெகுதூரத்தில் மக்களை தாக்கவரும் ஆபத்தைக்கண்டால் அல்லது அறிந்தால் உடனே ராஜாவுக்கும், மக்களுக்கும் அந்த ஆபத்தை கூவி எச்சரிக்கவேண்டியது மிக அவசியம். ஜாமக்காரன் கொஞ்சம் உறங்கிப்போனாலும் நகரமக்கள் யாவருக்கும் ஆபத்து. அப்போது குற்றம் ஜாமக்காரன் மீது சுமரும். அதுபோல ஜாமக்காரன் எச்சரிப்பதைக் குறித்து ராஜாவோ, மக்களோ கவலையீனமாகவோ அலட்சியமாகவோ இருந்தால் மக்களுக்கு ஆபத்து நுழைந்துவிடும். பிறகு இழப்பும், நஷ்டமும் மக்களுக்குத்தான். ஆபத்து நுழைந்து தாக்குதல் தொடங்கிவிட்டால் அதன்பிறகு அழுது கூக்குரல் இட்டாலும் பிரயோஜனமில்லை. நஷ்டம் தோல்வி மக்களுக்குத்தான். ஆனால் குற்றம் ஜாமக்காரன்மேல் சுமராது.

காவல் கோபுரத்தில் இருக்கும் ஜாமக்காரனுக்கு மற்றொரு வேலையும் இருக்கிறது. ஒரு தேசத்துக்கு ஆபத்து வருவது என்பது வெளியிலிருந்து மட்டுமல்ல - நாட்டுக்குள்ளிருந்தும் ஆபத்து உண்டாகும். நாட்டுக்குள்ளேயே எதிரிகள், சத்துருக்கள், தீவிரவாதிகள் பலர் ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்ட கள்ள நரியாக ஆட்டுத்தொழுவத்தில் மற்ற ஆடுகளைப்போலவே அவர்களுக்குள் இரண்டர கலந்திருப்பார்கள். ஆடுகளுக்கு அது தெரியாது. காவல் கோபுரத்தில் இருக்கும் ஜாமக்காரன் அந்த போலி ஆட்டின் செயல்களை காணும்போதே ஆவியை பகுத்தறியும் ஞானத்தால் அல்லது வரத்தால் இவர் அது கள்ள ஆடு என்பதை கண்டுபிடித்துவிடுவான். அதையும் கண்டறிந்து அதை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டி அந்த கள்ள நரியை கண்டுபிடித்து அதன் போலி தோலை நீக்கி அதன் அடையாளத்தை தெளிவுப்படுத்தி ஆடுகளை அதன் வாய்க்கு காப்பாற்றுவது ஜாமக்காரனின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

இந்த சூழ்நிலையில் நாட்டுக்குள் ஒளிந்திருக்கும் சில ஞானமுள்ள தீவிரவாதிகள் அல்லது கள்ளநரிகள் (கிறிஸ்த ஊழியக்காரர் போர்வையில்) ஆடுகளை களவாடுவதற்குமுன் ஜாமக்காரனை தீர்த்துகட்டிவிட முயலுவார்கள். அதாவது தாக்குதல் நடத்தி கொன்றுவிடுவார்கள். அப்போது அவர்கள் ஆடுகளை களவாடுவது அல்லது பணஊழல் நடத்தி ஏமாற்றுவது, பிழையான உபதேசம் கூறி மக்களை ஏமாற்றுவது அவர்களுக்கு எளிதாகும்.

ஆகவே ஜாமக்காரன், ஊருக்குள் நடமாடும் வரம் பெற்றதாக கூறும் கள்ள தீர்க்கதரிசிகளை, கள்ள ஊழியர்களை, ஊழல் செய்யும் திருச்சபை தலைவர்களை, கிறிஸ்தவ ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களைக்குக்குறித்து எச்சரிப்பு கொடுத்தால் அதை புரிந்துக்கொண்டு அப்படிப்பட்ட சத்துருக்களிடமிருந்து கிறிஸ்தவ மக்கள் தங்களை ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டால் மக்களுக்கு நல்லது, பின் சந்ததிகளுக்கும் நல்லது. இந்த இரண்டு முக்கிய பணிகளைத்தான் நான் ஜாமக்காரன் பத்திரிக்கை வாயிலாக இதுநாள் வரை செய்துகொண்டிருந்தேன். இந்த பணியின் ஆபத்தை அறிந்த பலர் இந்த பணி செய்ய முன்வரமாட்டார்கள். இப்படிப்பட்ட பணிக்கு தங்களை அர்ப்பணிக்கமாட்டார்கள். பலர் ஜாமக்காரனை புரிந்துக்கொள்ளாமல் இப்படியும் ஒரு ஊழியமா? மற்றவர்களின் குறைகளை, குற்றங்களை கண்டுபிடித்து அறிவிக்கும் ஒரு ஊழியம் வேதத்திலேயே இல்லையே. இது குற்றம் சுமத்தும் பிசாசின் ஆவியின் செயல் ஆகும். ஆகவே ஜாமக்காரன் குற்றம் சுமத்தும் பிசாசின் ஆவியை உடையவன் ஆகும். அதனால்தான் அந்நியபாஷையைகூட எதிர்க்கிறான். ஆகவே ஜாமக்காரன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தி தங்கள் ஆட்களுக்கு அறிவிப்பார்கள். ஜாமக்காரனுக்கு செவி சாய்க்காதீர்கள் என்று கூறிக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த ஜாமக்காரன் பணி ஆண்டவர் என்னை அனுமதிக்கும் வரை தொடரும். கீழே சில வசனங்களை வாசியுங்கள்.

சாட்சிகளாகிய ஒருவன்.... தான் கண்டதையும் அறிந்ததையும் தெரியாதிருப்பது பாவம். லேவி 5:1.

நாங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் பேசமாலிக்கக்கூடாதே. அப் 4:20.

உன்னை... (கிறிஸ்தவர்களுக்கு) காவலாளனாக வைத்தேன்.

நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு என் நாமத்தினாலே அவர்களை எச்சரிக்கையாக, அவனுக்கு சொல்லாமலும், நீ அவனை எச்சரியாமலுமிருந்தால்.... அவன் இரத்தப்பழியை உன்னிடத்தில் கேட்பேன். (ஒருவேளை எச்சரிக்கப்படவேண்டியவன் ஊழியக்காரனாக இருந்தாலும், சபை தலைவனாக இருந்தாலும் அவனும் மனிதன்தான். ஆகவே தவறு செய்யலாம். ஆகவே அவர்களும் எச்சரிக்கப்பட வேண்டியது அவசியம். மீரியாவின் குஷ்டம் வந்துவிடும். சபித்துவிடுவார்கள் என்ற பயம் வேண்டாம்).

நீதிமான்... நீதி கேடு செய்யும்போது.... நீ எச்சரிக்காதபடியால் அவன் தன் பாவத்திலே சாவான்... அவனுடைய இரத்தப்பழியையோ, உன் கையிலே கேட்பேன். எசே 3:17,18.

(அன்பானவர்களே!, இதுதான் ஜாமக்காரன் பத்திரிக்கையின் வரலாறும், நோக்கமும் ஆகும்).


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM