ஏசா 21:11,12ல் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது....
ஜாமக்காரனே இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க அதற்கு ஜாமக்காரன்
விடியற்காலம் வருகிறது. இராக்காலமும் வருகிறது என்கிறான்.
இதில் இரண்டு முரண்பாடான பதிலை, இயற்கைக்கு ஒத்துவராத பதிலைக் காண்கிறோம். ஒன்று
இரவுக்காலமும் வருகிறது, விடியற்காலமும் வருகிறது. இது எப்படி?.
இரவு கடந்து சென்றபின்தான் விடியற்காலம் வரவேண்டும். இரண்டும் ஒன்றாக எப்படி வரும்?. இதுதான் தீர்க்கதரிசன வார்த்தை என்பது.
விடியற்காலை அல்லது பகல் என்பது நன்மையான காலத்தையும், இரவு என்பது
தீமையான காலத்தையும் குறிக்கும். சொல்லப்படும் நல்ல காலம் என்ன?.
இயேசுவின் இரண்டாம் வருகை நல்ல காலம் ஆகும். அவர் வருகையே உலகத்துக்கு
விடியற்காலம் ஆகும். அவர் வருகையை எதிர்நோக்கி ஆயத்தத்துடன் வாழ்ந்தோருக்கு அது நல்ல காலமாக அமையும். அவர் இரண்டாம்முறை வருவது அவர்களுக்கு மிக சந்தோஷம். அவர்கள் அந்த நாளுக்காக தங்கள் ஜீவியத்தை ஆயத்தம் செய்தவர்கள். அது இவர்களுக்கு பயம் இல்லாத சந்தோஷ எதிர்ப்பார்ப்பு ஆகும். ஆனால் அதேசமயம் கர்த்தரை தேடாதவர்களுக்கு கிறிஸ்துவின் வருகையை நம்பாதவர்களுக்கும்
கர்த்தரைவிட்டு விலகினவர்களுக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை மிக பயங்கரமான
இரவு காலமாக அமையும்.
அவர்கள் அந்த வருகையை எதிர்நோக்கவில்லை. அதற்கு தங்களை ஆயத்தப்படுத்தி ஜீவிக்கவில்லை. எனவே வேதம் கூறுகிறது. அப்படி ஆயத்தப்படாத பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும், கன்மலைகளிலும் ஒளிந்துக்கொண்டு பர்வதங்களையும், எரிமலைகளையும் அவர்கள் நோக்கி, நீங்கள் எங்கள்மேல் விழுந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும்
ஆட்டிக்குட்டியானவருடைய கோபத்துக்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்!. அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது. யார் நிலை நிற்கக்கூடும் என்பார்கள். (வெளி
6:15-17)
இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன்
இராக்காலமும் வருகிறது என்பதை அறியவேண்டும். அது வாதைகளின் நாள். மகா கொடிய காலம். கோர இருள் பூமியை மூடும் திடுக்கிடும் காலம். எங்கும் தத்தளிப்பு, புலம்பல் உண்டாகும்.
இதைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி கூறுகிறார். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் இதுவரை உண்டாயிராத
ஆபத்துக்காலம் வரும் என்றார். (தானியேல்
12:1).
பலர் "உம்முடைய ராஜ்யம் வருவதாக" என்று மனப்பாடமாக பலமுறை ஜெபித்தும் மனம்திரும்புதலின் ஆவிக்குரிய ஆயத்தமாயிராத நிலையில் வெறுமனே ஜெபித்தபடியால் மற்றொரு தீர்க்கதரிசி அப்படிப்பட்டவர்களைக்குறித்து இப்படி கூறுகிறார்.
கர்த்தருடைய நாளை (ஆயத்தமில்லாத நிலையில்) விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதனால் ஆயத்தப்படாத உங்களுக்கு என்ன உண்டு? என்று கேட்கிறார்.
அப்படி ஆயத்தப்படாமல் வெறுமனே ஜெபிப்பவர்களுக்கு கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாக இருக்கும்.
சிங்கத்திடம் தப்பினவனுக்கு கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அதிலிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன்கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்குமாம். ஆமோஸ்
5:17-20.
ஆகையால் ஒரு சாராருக்கு அவர் நாள் விடியற்காலம்.
மற்றொரு சார்பினருக்கு அவர் வருகை இராக்காலமாக இருக்கும்.
எனவே விடியற்காலமும் வருகிறது.
இராக்காலமும் வருகிறது என்று ஜனங்களை எச்சரிக்க வேண்டியது ஜாமக்காரனின் வேலையாகும். இதை வாசிக்கிறவர்கள் அந்த நாளுக்காக உங்களை தயாராக்கிக்கொள்ளுங்கள். இதுதான் கர்த்தர் இந்த பத்திரிக்கை மூலமாக வாசகர்களுக்கு அன்று பத்திரிக்கை ஆரம்பித்த முதலில் ஆரம்பத்தில் கொடுத்த முதல் வெளிப்பாடும் ஆகும். |