ஜெப வேண்டுகோள்
Dr.சாம்கமலேசன் அவர்கள் மரண ஆபத்தை கடந்தார்

கடந்த மாதம் Dr.சாம்கமலேசன் அவர்கள் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டதால் சுய நினைவு இழந்தார். இந்த விபத்து ஆஸ்பத்திரிக்குள்ளேயே நிகழ்ந்ததால் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அடிப்பட்ட தலைபாகத்தின் உள்ளே இரத்தம் கசிவு உண்டாகி இரத்தம் உறைந்ததிருந்ததை கண்டுபிடித்தார்கள். உடனடியாக தலையில் ஆப்ரேஷன் செய்து இரத்தம் கசிந்து உறைந்ததை நீக்கினார்கள். அச்சமயம் நான் அமெரிக்காவில் அவர் இருந்த ஊரிலிருந்து இரண்டுமணிநேர விமான பயணதூரத்தில் இருந்தேன். அங்கு என் கூட்டம் நடந்துக்கொண்டிருந்தது. நான் அமெரிக்காவிலிருந்து புறப்படும்வரை அவருக்கு சுயநினைவு திரும்பாதிருந்ததால் சபையில் அவருக்காக விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. நான் ஜெர்மனிதேசம் வந்துசேர்ந்தவுடன் சகோதரர் அவர்களுக்கு சுயநினைவு திரும்பிய விவரம் அறிந்து தேவனைத்துதித்தோம்.

Dr.சாம்கமலேசன் அவர்களும்,
Mrs.அடில்லா அவர்களும்

இதில் மற்றொரு வேதனையான செய்தி என்னவென்றால் Dr.சாம்கமலேசன் அவர்களின் மனைவி Mrs.அடில்லா அவர்கள்தான் முதலில் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் ICU-வில் சேர்க்கப்பட்டார். அவரும் சுயநினைவு அற்றநிலையில் இருந்தார். Dr.சாம்கமலேசன் அவர்தான் கூடவேயிருந்து அவரை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. மனைவி Mrs.அடில்லா சாம் கமலேசன் அவர்களுக்கு சுயநினைவு திரும்பிய பின்னும் தன் கணவருக்கு உண்டான ஆபத்தை அவருக்கு அறிவிக்கவில்லை, நினைவு வந்தபோதெல்லாம் தன் கணவரை அவர் தேடினார். Dr.சாம்கமலேசன் அவர்களுக்கு சுயநினைவு உண்டான உடன்தான் Mrs.அடில்லா அவர்களுக்கு கணவருக்கு உண்டான விபத்தின் விவரம் அறிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் எந்த நேரத்திலும் இணைப்பிரியாத அன்பு தம்பதிகள் ஆவர். எந்த நாட்டிற்குப் போனாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள்.

இதில் வேதனை உண்டாக்கும் மற்றொரு செய்தி என்னவென்றால் Dr.சாம்கமலேசன் அவர்களின் மருமகனும் கால்முட்டி ஆப்ரேஷன் செய்யப்பட்டு, அதே ஆஸ்பத்திரியில் மற்றொரு வார்டில் படுத்திருந்தார். ஆக, இப்போது Dr.சாம்கமலேசன், அவர் மனைவி, மருமகன் ஆக மூவரும் ஒரே சமயத்தில் ஒரே ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் நிலையில் மகள்தான் இப்போது மூவரையும் கவனித்துக்கொள்கிறார்.

கர்த்தர்தாமே இவர்கள் எல்லாரையும் சுகப்படுத்தி, Dr.சாம்கமலேசன் அவர்களை பழையப்படி கர்த்தருடைய ஊழியத்தை உலகெங்கும் சென்று நடத்த, கர்த்தர்தாமே அவருக்கு பெலமும், ஆயுளும் தந்து ஆசீர்வதிக்க, இந்த குடும்பத்துக்காக நாம் யாவரும் ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM