துண்டுப்பிரதி குறிப்பு

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும், நம் இந்திய மக்களுக்கும், நம் தமிழ்நாட்டு மக்களுக்கும் இயேசுகிறிஸ்துவைக் குறித்து அறிவிக்கவேண்டும் என்பது தேவகட்டளை. கட்டளைக்கு நாம் ஒவ்வொருவரும் கீழ்ப்படிந்தாக வேண்டும். அதனால்தான் பவுல் அப்போஸ்தலன் ரோம 1:14ல் சுவிசேஷம் அறிவிப்பது நம் கடமை, கடன் என்று குறிப்பிடுகிறார்.

  முன்பெல்லாம் நானும், என்னோடு சேர்ந்த சிலரும் சேர்ந்து அதாவது, நான் இரட்சிக்கப்பட்ட 1964ம் வருடம் முதல் வீதிகளில், தெருமுனைகளில் கூடிநின்று பாட்டுபாடி கூட்டம் சேர்ப்போம். வாத்திய கருவி இல்லாமல் குப்பையில் கிடக்கும் டால்டா டின்னை தேடி எடுத்து டிரம் அடிப்பதுபோல் சப்தம் உண்டாக்கி பாட்டுப்பாடுவோம். அதைக்கேட்டு அந்த இடத்தில் உடனே கூட்டம் கூடும் அப்போது நாங்கள் இயேசுகிறிஸ்துவே தெய்வம், இரட்சகர், பாவபரிகாரி என்று கூவி அறிவிப்போம். அதன்பின் நாங்கள் ஒவ்வொருவரும் நாங்கள் மனம்திரும்பின சாட்சிகளை ஒருவர்பின் ஒருவராக கூறுவோம். அப்படியே இயேசுவே இரட்சகர், பாவபரிகாரி என்று கூறிவிடுவோம். அதன்பின் கூட்டத்தில் நிற்கும் நபர்களோடு தனித்தனியாக பேசி தனித்தாள் ஊழியம் செய்வோம்.

  சில வருடங்களுக்குபின் அப்படி நாங்கள் சுவிசேஷம் அறிவிப்பதிலும் மத தீவிரவாதிகளால் பிரச்சனை உண்டானது. அதன்பிறகு துண்டுப்பிரதிகளை அச்சடித்து யாரிடமும் பேசாமல், வற்புறுத்தாமல் அவர்கள் கைகளில் துண்டுப்பிரதிகளை கொடுப்போம். அதை வாங்கின சிலர் படிப்பார்கள், சிலர் எங்களுக்கு முன்பாகவே துண்டுப்பிரதியை கசக்கி, நாங்கள் பார்க்கவே எங்கள்முன் தூக்கி எறிவார்கள்.

  அதன்பின் சில காலத்துக்குபிறகு RSS, பஜ்ரங்தள் போன்ற மத தீவிரவாத எண்ணமுள்ளவர்கள் துண்டுப்பிரதியை விநியோகிக்கும் நபர்களை கூட்டமாக வளைத்து அவர்களை அப்படியே போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் நிறுத்தி, இவர்கள் எங்களை மதம் மாற கட்டாயப்படுத்தினார்கள் என்று பொய் புகார் எழுதிக் கையெழுத்திட்டு புகாரை பதிவு செய்ய போலீசாரை கட்டாயப்படுத்தினார்கள்.

  தமிழ்நாட்டில் செங்கோட்டை என்ற ஊரில் பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகளுக்கு துண்டுப்பிரதி கொடுத்த பெண் விசுவாசிகள், ஆண் விசுவாசிகள் ஆகிய சில கிறிஸ்தவர்களைப்பிடித்து ஜெயிலில் அடைத்தார்கள். அவர்களை ஜெயிலிருந்து வெளியே கொண்டுவர பல வாரங்கள் ஆயிற்று. இதை புகைப்படத்துடன் ஜாமக்காரனில் ஏற்கனவே வெளியிட்டு அறிவித்திருக்கிறேன். ஆகவே சுவிசேஷம் அறிவிக்க இப்போது பல எதிர்ப்புகள் உருவாக ஆரம்பித்தபிறகு ஒரு குறிப்பிட்ட சபை அல்லது தனிப்பட்டவர்கள், ஊழியர்கள் தாங்கள் வினியோகிக்கும் ஒவ்வொரு துண்டுப்பிரதியிலும் கீழ்காணும் வாசகங்களை எழுதி அச்சடித்து வினியோகித்தார்கள். அதனால் சட்டப்படியும், எழுத்தின்படியும் அவர்களை யாரும் மதம் மாற்ற முயற்சித்தார்கள் என்று குற்றப்படுத்த முடியவில்லை. அப்படி குற்றப் படுத்தினாலும் நீதிமன்றம் சென்றால் விடுவிக்கப்படுவோம். ஆகவே தனித்தாள் ஊழியம் செய்பவர், தெருஊழியம் செய்பவர், பஸ், ரயில்வே ஸ்டேஷனில், வீதிகளில் இப்படி துண்டுபிரதி ஊழியம் செய்பவர் தாங்கள் வினியோகிக்கும் துண்டுப்பிரதிகளில் கீழ்கண்டவாறு எழுதி அச்சடித்துக்கொள்ளலாம் அல்லது ரப்பர் ஸ்டாம்பு செய்து துண்டுப்பிரதிகளில் பதிவு செய்துக்கொள்ளலாம். பொது இடங்களில் ஊழியம் செய்பவர்களுக்கு இது நல்ல பாதுகாப்பாக தோன்றியதால் வாசகர்களுக்கு இதை அறிவிக்கிறேன்.


துண்டுப் பிரதியில் எழுதப்படவேண்டிய குறிப்பிட்ட வாசகம்

குறிப்பு: தூய வேதாகமத்தில்; மாற்கு 16:15ல் எழுதியுள்ளதின்படி இந்திய அரசியல் சட்டத்தில் குறிப்பாக இந்தியர்களாகிய நமக்காக எழுதிய அந்த சட்டத்திலுள்ள ஷரத் 25ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திர சட்ட அடிப்படையில் இந்த கைப்பிரதி பிரசுரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இதை வாங்கும் எவர் ஒருவரையும் கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ, நயம் காட்டியோ, மோசடியான முறையிலோ மதம் மாற்றுவது இக் கைப்பிரதியின் நோக்கமல்ல, இதை வினியோகிக்கும் எங்களின் நோக்கமுமல்ல. இதை வாங்கவோ, வாசிக்காவோ, பிரியமில்லாவிடில் வீதியில் வீசாமல் அருகேயுள்ள குப்பைத்தொட்டிகளில் நீங்கள் போட்டுவிடலாம். அது உங்கள் சுதந்திரம். உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. நம் தேசத்தையும், தேச தலைவர்களையும், அதிகாரிகளையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.

மேலே கண்டவாறு அந்த கைப்பிரதியின் தலைப்பில் எழுதப்பட்டிருந்தது.

இதையே நாமும் நம் கைப்பிரதிகளின் முதல் மேல்பகுதியில் வெளியிட்டு ஜெபத்தோடு துண்டுபிரதி ஊழியம் செய்வோம். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM