காட்டு புஷ்பத்துக்கு மரணபயம் கிடையாது. எபி 2:15.

  ஒரு அவிசுவாசிக்கு மரணம் பயம் உண்டாகலாம். ஆனால் உண்மையான விசுவாசி ஒருநாளும் மரணத்தைக்குறித்து பயப்படகூடாது.

  உண்மையான கிறிஸ்தவன் மரணத்தை ஆதாயம் என்பான். பிலி 1:21.

  மனம்திரும்பின கிறிஸ்தவன் மரித்தால் தேவனோடு இருப்பான்.

  மனம்திரும்பாத இரட்சிக்கப்படாத ஒரு கிறிஸ்தவன் மரித்தால் இந்த நிச்சயம் இல்லை.

  ஒரு உண்மை கிறிஸ்தவன் எங்கு, எப்படி மரித்தாலும் கிறிஸ்துவின் வருகையில் அவரிடம் சேருவான். வெளி 20:13. கல்லறையை குறித்து கவலைப்படமாட்டான். காட்டு புஷ்பத்தின் ஆயுள் கூடினால் ஒரே ஒருநாள்தான் அது தன் குறைந்த ஆயுசை நினைத்து வருந்துவதே இல்லை.

  ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் சபையில் அங்கத்தினர்களாக இருப்பதின் நோக்கம் வேலை, கல்யாணம், கல்லறை (Catch, Match, Despatch) என்று ஒரு ஆங்கிலேயன் கூறினான். ஆத்துமாவைக்குறித்தும் ஆவிக்குரிய சந்தோஷ வாழ்வைக்குறித்தும் கவலைப்படாத கிறிஸ்தவர்கள்தான் இன்று சபையில் அதிகம்.

  ஒரு புஷ்பம் எப்போதும் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்:
மற்றவர்களுக்கு ஆறுதலையும், தைரியத்தையும் கொடுக்கும் புஷ்பம் போன்ற கிறிஸ்தவனாக நாம் இருக்கவேண்டும். தாவீதிடம் எனக்கு பயம், குறைவு, உபத்திரவம் என்று கூறினால் உடனே அவன் 34ம் சங்கீத்தை பாடி காட்டுவான். உன்னிடம் வரும் மனிதர்களிடம் தேவன் உனக்கு செய்த அதிசயத்தை நன்மையை கூறுவாயா? அல்லது உன் உபத்திரவத்தை உன் வேதனையை பெரிதாக கூறி அவரை மேலும் வேதனைடைய செய்வாயா?

  கொலே 4:5-6ன்படி நம் வார்த்தைகள் இருக்கவேண்டும். சங் 5-11ன்படி தேவன்பேரில் நமக்கு நம்பிக்கை இருக்குமானால் வருடத்தின் 365 நாட்களும் சந்தோஷமே. காட்டு புஷ்பத்தை சென்று பார். காட்டு புஷ்பம் எப்போதும் வாசனையைக் கொடுக்கும். புஷ்பம் எங்கிருந்தாலும், கல்லறையாக இருந்தாலும், குப்பையிலிருந்தாலும், அரண்மனையிலிருந்தாலும் தன் வாசனையை அது மாற்றாது.

பவுல் கூறுவது: வாசனை மற்றவர்களை கவரும் என்பதாகும் (2கொரி 2:14-14) நம் வாசனை இரட்சிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் புறஜாதிகள் மத்தியிலும் பரவி கவர்ச்சிக்கவேண்டும். சிலர் சபையில் சாட்சி சொல்ல ஆசைப்படுவார்கள். ஆனால் அலுவலகத்திலோ, வெளியிலோ, குடும்பத்திலோ அந்த சாட்சியை பகிர்ந்துக்கொள்ளமாட்டார்கள். அது புஷ்பத்தின் தன்மையல்ல!

  மத் 5:13-16 காட்டு புஷ்பத்திடம் வாசனையின் ஜீவியத்தை கற்றுக்கொள்வோம்.

அன்பானவர்களே, நாம் காட்டு புஷ்பத்தைவிட விசேஷத்தவர்கள் என்று இயேசு சுட்டிக்காட்டுகிறார். ஆகவே காட்டு புஷ்பத்தைவிட இன்னும் பல காரியங்களில் தேவதிட்டம் நிறைவேற கர்த்தர் எதிர்ப்பார்ப்பின்படி வாழுவோம். காட்டு புஷ்பம் ஜீவனோடு இருந்ததால் ஒரு சர்வ வல்லவரை வெளிப்படுத்த முடிந்தது.

  காட்டு புஷ்பம் என்று சொல்வதைவிட வீட்டு புஷ்பம் என்று சொல்லியிருந்தால் மனிதன் பெருமைப்படுவான் ஏன் என்றால், நான் எருபோட்டேன், நான் நட்டேன், நான் வளர்த்தினேன். அது என் வீட்டில் இருக்கிறது என்று சொல்லுவான். இப்படியெல்லாம் மனிதன் நினைப்பான் என்று அறிந்துதானோ என்னவோ இயேசு காட்டு புஷ்பம் என்று கூறினார்.

இது எதைக் குறிக்கிறது தேவனின் பாதுகாப்பைக்குறித்து மத் 6:28-31 கவனமாக சிந்தித்து பாருங்கள். கவலைப்படும் விசுவாசிகளுக்கு இது ஒரு சவாலாய் இருக்கும். உங்களுக்கு . . . . அதிக நிச்சயமல்லவா என்று கர்த்தர் இந்த வசனத்தில் உச்சரிக்கும் வார்த்தையை மறக்கவேண்டாம்.

  சங் 121:5,124:8 ஆம் காட்டு புஷ்பம் தன் வாழ்க்கையில் எப்போதும் சர்வ வல்லவரை வெளிப்படுத்தும் போது நீயூம், நானும் வெளிப்படுத்தவேண்டாமா?

  காட்டு புஷ்பம் எங்கு இருந்தாலும், எங்கு வைக்கப்பட்டாலும் மனரம்மியாமாய் இருக்கும் (பிலி 4:1). அது காட்டில் இருந்தாலும் மணம், அரண்மனையில் இருந்தாலும், மரண வழிகளில் அதே செடி பூப்பூத்தாலும் மணம் மாறாமல் காணப்படுகிறது. ஆம், அதற்கு தான் வீசும் மணத்தில் ஒரு திருப்தி உண்டு. தான் எங்கு வைக்கப்பட்டிருக்கிறோம் என்று யோசிப்பதில்லை. மணம் வீசுவதிலேயே கருத்தாயிருக்கும்.

   பவுல் பிலிப்பிய சிறையில் இருந்தாலும் அவன் ஜீவியத்தில் பாட்டு, ஜெபம், ஸ்தோத்திரம், ஊழியம் ஆகியவைகள் குறைந்ததா? இல்லையே! ஊழியம் நிறுத்தப்படாமல் ஊழியத்தை மிக அதிகம் செய்தானே! ஜெயில் தலைமை காவலாளியையே குடும்பத்தோடு இயேசுவை ஏற்றுக்கொள்ள வைத்தானே!

  பவுலின் மூலம் பிலிப்பு பட்டணத்தில் ஒரு புதிய சபை உருவானதே! தன் ஊழியத்தில்தான் துன்புறுத்தப்பட்டதால் அவனுக்கு முறுமுறுப்போ, தேவன் பேரில் கோபமோ ஏற்படவில்லையே!

  இந்த சொந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் பவுல் எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருங்கள் என்று மற்றவர்களுக்கு ஆலோசனையாக எழுதினான். பிலி 4:4.

  சங் 4:7-8ன்படி தாவீதின் அனுபவம் நமக்கு உண்டா?

  ஆபகூக் 3:17-18ன்படி அந்த தீர்க்கதரிசியின் அனுபவம் நமக்கு உண்டா?

  பிலி 4:11ன்படி பவுலின் அனுபவம் நமக்கு உண்டா?

  யோசேப்பு அநியாயமாய் சிறையில் இருந்தாலும் அவன் நம்பும் கடவுள்மேல் கோபப்படாமல், முறுமுறுக்காமல் அவன் தரிசனம், பரிசுத்த ஜீவியம் கொஞ்சமும் மாறாமல் பார்த்துக்கொண்டானே! நியாயமில்லாமல் சிறைக்கு அனுப்பப்பட்டும் அவன் தேவன்மேல் கோபப்படவில்லையே! முறுமுறுக்கவில்லையே!

  உன் கஷ்டங்களை குறித்து பொருமுகிறாயா? பொல்லாதவர்கள் உயருகிறார்கள் கர்த்தரை நம்புகிற நானோ சிறுமைப்படுகிறேன் என்று சிந்திக்கிறாயா? அப்படியானால் சங் 73ஐ முழங்காலில் நின்று வாசி. காட்டு புஷ்பம் எங்கிருந்தாலும் மனோரம்மியமாக இருக்கும்.

காட்டு புஷ்பம்: உங்களுக்கு ஆலோசனையாக கூறும் இந்த காட்டு புஷ்பம் பகுதியை ஆங்கிலத்தில் வாசித்தால் Learn a Lesson from the White Lilies என்று கூறலாம்.

  அதனால்தான் இயேசு காட்டு புஷ்பங்களிமிடருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.

  மனிதன் தேவனுடைய சிருஷ்டிப்பில் விசேஷமானவன். மத் 6:26. சிருஷ்டிப்பு என்பது ஒரு விசேஷமான வார்த்தை.

  ஆதியாகமத்தில் தேவன் மற்றவைகளை உருவாக்கும்போது உண்டாகக்கடவது என்றார்.

  ஆனால் மனுஷனை சிருஷ்டிக்கபட்டபோது மட்டும் ஒரு ஆலோசனை சங்கத்தை கூட்டினர். பிதா, குமாரன், பரிசுத்தாவி இவர்களின் ஏக தீர்மானத்தின்படி மனிதன் தேவ சாயலாய் உருவாக்கப்பட்டான். ஆதி 1:26. ஆனால் மனிதனின் கீழ்படியாத பாவம் காரணமாக தேவசாயலையே இழக்கும்படி செய்தது.

  தேவன் நியமித்த எல்லைகோட்டை மீறுவதே பாவம் ஆகும். ரோம 1:28-32.

  ஆனால் திரும்பவும் நாமிழந்த அந்த தேவ சாயலை நமக்கு திரும்ப கொடுக்கவே இயேசு உலகத்தில் வந்தார். எபே 2:12-16.

  அவரை விசுவாசித்து நாம் பாவி என்று ஒத்துக்கொள்ளும்போது (1யோ 3:8-10). பாவ சாயல் போய் திரும்பவும் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாய் மாறுகிறான். எபே 4:22-24.

  கொலே 3:9-10ன்படி பழைய மனுஷனுடைய சுபாவத்தைக் களைந்துபோடு அப்போது புதிய சிருஷ்டியாவாய்.

  யோ 3:3-6, 2கொரி 5:17ஐ வாசித்து தியானித்து புதிய சிந்தனையின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். (நீங்கள் ஒவ்வொருவரும் காட்டு புஷ்பங்களாக மாறவேண்டும் என்பது நம் தேவனின் ஆசையாகும், எதிர்ப்பார்ப்பாகும்).


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM