கர்த்தருக்குள் அன்பான ஜாமக்காரன் குடும்பத்தினருக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
உங்கள் ஒவ்வொவருக்கும் எங்கள் கிறிஸ்மஸ்
& புதுவருட 2014 வாழ்த்துக்களை கூறுகிறோம். சமாதானத்தின் தேவன் உங்கள் யாவருக்கும் சமாதானத்தை அருளுவாராக.
வருடத்தின் கடைசி மாதத்தில் நாம் யாவரும் கடந்து வந்திருக்கிறோம். கடந்த காலங்களில் கர்த்தர் நமக்கு பாராட்டிய கிருபை மிகப்பெரியது. அந்த கிருபைதான் நம் மரணம்வரை அல்லது கிறிஸ்துவின் வருகைவரை தொடரும். அந்த கிருபையை நாம் இழந்துவிடாதப்படி எச்சரிக்கையாக இருப்போம்.
கடந்த மாதங்களில் நடந்த எல்லா சபை கன்வென்ஷன்களையும், கிராம ஊழியங்களையும், ஆதிவாசிகள் மத்தியில் நடந்த ஊழியங்களையும், வெளிநாட்டு ஊழியங்களையும் கர்த்தர் கிருபையாக ஆசீர்வதித்து அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் கர்த்தர் தம் வசனத்தை உறுதிப்படுத்தினார். மாற் 16:20.
ஜெபகுறிப்பாக பலர் தங்கள் பிரச்சனைகளையும், வியாதி விவரங்களையும், தங்கள் பிள்ளைகளைக் குறித்தும், வேலை விஷயமாகவும், படிப்பு, திருமணம், கடன் இப்படி பல விஷயங்களுக்கு ஜெபிக்க ஜெபகுறிப்புகளை அனுப்பினீர்கள். அத்தனைக்கும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. கர்த்தர் ஏராளமானவர்களுக்கு பதிலும் கொடுத்துவிட்டார். பலருக்கு நல்ல சுகம் கிடைத்தது. ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்தது என்று பலர் எனக்கு எழுதி அறிவித்தபோது தேவனை மனமாற துதித்தோம். ஒவ்வொரு முறையும் ஜெபத்துக்கு பதில் கிடைத்தது என்று வாசகர்கள் எனக்கு கடிதம் எழுதும்போது அல்லது தொலைபேசியில் அறிவிக்கும்போது எங்கள் மனதில் எத்தனை சந்தோஷம் அடைந்தோம் தெரியுமா? எங்கள் குடும்பத்தில் அற்புதம் நடந்ததைபோல் சந்தோஷம்கொண்டு உங்கள் பிரச்சனைகளுக்காக எப்படி ஜெபிப்போமோ அந்தப்படியே உங்கள் ஜெபத்துக்கு பதில் கிடைத்தது என்று அறிந்த போது தேவனை ஜெபநிலையில் துதித்தோம். நம் தேவன் மிகவும் நல்லவர்.
நாம் நினைத்ததற்கும் மேலாக பதில் செய்கிறவர். கடந்த இரண்டு மாதமாக மிக நீண்ட பயணங்களில் நான் ஊழியம் செய்ததால் நீங்கள் எழுதிய பல கடிதங்களுக்கு நீங்கள் அனுப்பிய இ-மெயில்களுக்கு பதில் எழுதமுடியாதபடி கடிதங்களும், இ-மெயில்களும் தேங்கிக்கிடக்கிறது. டிசம்பர் மாதத்துக்குள் எல்லாவற்றிக்கும் பதில் எழுதி ஆலோசனையும் கூறி எழுதி முடித்துவிடுவேன் என்று நம்புகிறேன்.
வழமையான எச்சரிப்பு:
ஏஞ்சல் டிவி, ஆசீர்வாதம் டிவி, சத்தியம் டிவி போன்ற இன்னும் பல வித்தியாசமான டிவி சேனல்களில் பிரசங்கிக்கும் சில ஊழியர்கள் மற்ற சேனல்களில் பிரசங்கிக்கும் பொய் தீர்க்கதரிசிகளும் அவர்கள்
தீர்க்கதரிசனம் என்ற பெயரில் அறிவிக்கும் செய்திகளுக்கும் அவர்கள் பேசும் அந்நியபாஷைகளுக்கும் எச்சரிக்கையாக இருங்கள். வேத வசனத்தைவிட்டு விலகி அவர்கள் அறிவிக்கும் பிழையான செய்திகளுக்கு விலகி இருங்கள், அவைகளை அலட்சியப்படுத்துங்கள். அப்படிப்பட்ட ஊழியங்களை உற்சாகப்படுத்தாதிருங்கள். அப்படிப்பட்ட ஊழியர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அந்த ஊழியர்களை நம்புவதை குறித்தோ, அவர்களுக்கு அவர்கள் காணிக்கை அனுப்புவதைக் குறித்தோ விமர்சிக்கவோ, விவாதிக்கவோ முயலவேண்டாம். வாசகர்களாகிய நீங்கள் அவர்கள் மாயவலையில் விழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் அதுபோதும்.
சமீப காலமாக நம் கிறிஸ்தவ விசுவாசிகள் வேதபுத்தகத்துக்கு பதிலாக 1000 ஸ்தோத்திரங்கள், 5000 துதி ஸ்தோத்திரங்கள் என்ற அர்த்தமில்லாத புத்தகங்களை வேத புத்தகத்துக்கு பதிலாக தங்கள் பிரயாணங்களில் அப்படிப்பட்ட மோசமான புத்தகங்களை எடுத்து செல்கிறார்கள். அதையே பைபிளுக்கு பதிலாக வாசித்துக்கொண்டிருப்பதைக்கண்டேன்.
சிலர் காலையில் டிவியில் கூறப்படும் ஸ்தோத்திரத்தில் பங்குகொண்டு கூடவே சேர்ந்து துதிக்கிறார்கள்.
எரிகோ மதிலை இடித்தவரே ஸ்தோத்திரம், எகிப்தியர்களை வாதிக்க
வண்டுகளை அனுப்பியவரே ஸ்தோத்திரம் என்று டிவி வழியாக ஸ்தோத்திரங்கள் என்ற பெயரில் கூறும் இப்படிப்பட்ட பிழையான ஸ்தோத்திரங்களை கேட்டுக்கொண்டே வீட்டுவேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் கார்களில் பிரயாணத்தில் அந்த ஸ்தோத்திரங்களை கேட்டவாரே பயணம் செய்கின்றனர்.
ஒன்றை சொல்கிறேன் கவனியுங்கள்: நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, அப்படிப்பட்ட ஸ்தோத்திரங்களால் இம்மி அளவும் உங்களுக்கு பிரயோஜனமோ ஆசீர்வாதமோ கிடைக்கவே கிடைக்காது. அதன்மூலம் தேவனுக்கு மகிமையும் சேரப்போவது கிடையாது. இது
பிசாசின் பெரிய தந்திரம் ஆகும். நீங்கள் வேதவசனத்தை வாசிக்காதபடி,
வேதவசனத்தை கேட்காதபடி, வேதவசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத படியிருக்க அது உங்கள் எண்ணங்களை தந்திரமாக திசை மாற்றும் பிசாசின் இரகசிய திட்டமாகும்.
எகிப்தியர்களை வாதிக்க வண்டுகளை அனுப்பியவரே உம்மை துதிக்கிறோம் என்கிறார்கள். இதை நீங்களும் கூடவே சேர்ந்து கூறுகிறீர்கள் அல்லது வாசிக்கிறீர்கள். இது ஆண்டவருக்கு பிரியமாக இருக்குமா? என்று யோசித்து பாருங்கள். தீபாவளிக்கு
நரகாசூரனை அழித்ததற்காக பட்டாசு வெடித்து, பொங்கல் வைத்து சந்தோஷப்படும் மற்ற மதத்தினரின் தவறான சந்தோஷத்துக்கு சமமாக உங்களுக்கு தோன்றவில்லையா?
துதி என்பது யாரோ முட்டாள்தனமாக எழுதிய ஸ்தோத்திர புத்தகத்தை வாசிப்பது அல்ல.
துதி உங்கள் இருதயத்திலிருந்து வரவேண்டியது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் உண்மையாக
கிறிஸ்துவின் அன்பை ருசித்திருந்தீர்களேயானால், உங்கள் பாவம் மன்னிக்கப்பட்ட சந்தோஷம் உள்ளத்தில் இருக்குமானால்
உண்மையான துதி எப்போதும், எந்த நேரமும், எந்த இடத்திலும் உங்கள் மனதிலிருந்து உண்மையான துதிகள் கொப்பளித்துக் கொண்டுவருமே!. நீங்கள் தேவனை சரியாக ருசிக்காததால், இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் அன்பை நீங்கள் ருசிக்காததால்
துதி உங்கள் உள்ளத்திலிருந்து வராமல் - மற்றவர் எழுதிய புத்தகத்தின்மூலம்
துதியை கடன் வாங்குகிறீர்கள்.
ஜாமக்காரன் வாசகர்கள் கையிலும் இப்படிப்பட்ட
துதி புத்தகங்களை நானே நேரில் கண்டதால் என் வாசகர்கள்கூட இத்தனை வேத அறிவு அற்றவர்களாகிபோனார்களே! என்ற மனவேதனையில் இதை எழுதுகிறேன். இதை வாசிக்கும் வாசகர்கள் இனியாவது உங்களை திருத்திக்கொள்ளுங்கள்.
உங்களுக்காக உங்கள் குடும்பத்துக்காக நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன். கர்த்தருடைய கிருபையும், ஆசீர்வாதமும் வாசகர்களாகிய உங்கள் அனைவரோடும் எப்போதும் இருப்பதாக!.
அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள். யோ 14:17 என்று இயேசுகிறிஸ்து கூறினார். அந்த இயேசுகிறிஸ்து மேலும் கூறுகிறார்.
இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் தான் அன்பு வைத்தப்படியே முடிவு பரியந்தம் அவர்களிடத்தில் அன்பு வைத்தார். யோ 13:1. இயேசு பேசின இந்த வார்த்தை எத்தனை ஆறுதலையும், பெலத்தையும் கொடுக்கிறது!. எத்தனை அன்பான தேவன்! கடைசிவரை நம்மை வெறுக்காமல் நம்முடைய முடிவு பரியந்தம் அதாவது மரணபரியந்தம்
அவர் நம்மேல் வைத்த அன்பு மாறாது என்கிறார். இதுதான் வேத வசனங்களிலேயே மிகப்பெரிய, மிக முக்கிய வாக்குதத்தமாகும். ஆகவே 2014
புது வருடத்தைக் குறித்து கவலை வேண்டாம். முடிவுபரியந்தம் நான் உங்களை நேசிக்கிறேன் என்றவர் வாக்குமாறாதவர். பொய் பேச அவர் ஒரு மனிதனல்ல. இந்த வசனம் இனிவரும் காலமெல்லாம் உங்களை வழிநடத்தும். இயேசுகிறிஸ்து உங்களில் உண்டா? என்பதை மட்டும் அடிக்கடி சோதித்து அறிந்துக் கொள்ளுங்கள். உலகத்தில் இருப்பவனை(பிசாசு)விட உங்களில் இருப்பவர்
(ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து) பெரியவர். வருடத்துக்கு ஒரு புது வாக்குதத்தத்தை எதிர்ப்பார்க்காதிருங்கள். வேதத்தில் உள்ள எல்லா வாக்குதத்தங்களும் எல்லா காலத்துக்கும் எல்லா நாளுக்கும் உரித்தானதாகும்.
கடந்த 2013ம் வருடம் எல்லா மாதங்களும் குறைவில்லாமல் தங்கள்
காணிக்கைகளை ஆன்-லைன், மணியாடர், செக், டிடி மூலமாக அனுப்பி கடனே உண்டாகாமல் இந்த ஊழியத்தை தாங்கினீர்கள். உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை அறிவிக்கிறோம். ஆன்-லைன் மூலமாக காணிக்கை அனுப்பிய பலரின் பெயர்கள்
பேங்க் பாஸ்புத்தகத்தில் காணப்படாததால் ரசீது அனுப்ப இயலவில்லை. ஆனால் நீங்களும் ரசீதை எதிர்பாராமல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் உங்கள் காணிக்கை என்னுடைய பேங்க் கணக்கில் வந்து சேர்ந்துவிடுகிறது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.
கர்த்தருக்கு சித்தமானால்
2014ம் ஆண்டில் இதே ஜாமக்காரன் வழியாக உங்களை சந்திப்பேன்.
வழக்கம்போல் டிசம்பர் மாதம் ஜாமக்காரன் வாசகர்கள் அனைவருக்காகவும் நானும், என் மனைவியும் விசேஷ ஜெபம் ஏறெடுப்போம். நீங்களும் தொடர்ந்து வரும் 2014 புதிய ஆண்டில் ஆண்டவரின் கிருபைக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து நீங்களும் ஜெபிக்கவும். நானும் ஜெபிக்கிறேன். கர்த்தரின் கிருபை உங்கள் அனைவரோடும் தொடர்ந்து நிலைத்திருப்பதாக. ஆமென்.
|