CSI-யில் கல்லறை கிடையாது

கேரளாவில் CSI கிழக்கு கேரளா டையோசிஸ்ஸில் எள்ளும்புறம் (முட்டம்) என்ற ஊரில் CSI சபையில் குடும்பம் முழுவதும் பரம்பரை அங்கத்தினர்களாக உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் Prof.C.C.JACOB என்பவர் ஆவார். Melukavu Hendri Baker College-ல் பேராசிரியராக பணியாற்றியவர்.

இவர் மிகவும் அதிகம் படித்த பட்டதாரியும், CSI சபையைக்குறித்த பெரும் பாரம் கொண்டவராவார்.

கிழக்கு கேரளா CSI டையோசிஸ்ஸானது. ஆரம்பத்தில் மத்திய கேரளா டையோசிஸ்ஸில் இணைந்திருந்தது. மலையும், மலையைச் சார்ந்த மலைப்பகுதிகளையும் தனியாக பிரித்து தனி டையோசிஸ்ஸாக East Kerala CSI டையோசிஸ் என்ற பெயரில் பிரித்தார்கள். இதற்கு முதல் பிஷப்பாக Rt.Rev.மைக்கல் ஜான் அவர்கள் பிஷப்பாக நியமிக்கப்பட்டார்கள். புதிய டையோசிஸ் பிரிக்கப்பட்டாலும் பணம் இல்லாத நிலையில் பிஷப் அலுவலகம், பிஷப் வீடு இப்படி எதுவும் இல்லாத நிலையில் இந்த டையோசிஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆயர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் மிக பரிதாப சூழ்நிலையில்தான் இந்த டையோசிஸ் பிரிக்கப்பட்டது. பிஷப்.மைக்கல் ஜான் அவர்களின் பெரும்முயற்சியால், பல நாடுகளுக்கு பிஷப் அவர்கள் சென்று பணஉதவி பெற்று பிஷப் அலுவலகம், வீடு, ஆயர்களின் சம்பளம் ஆகியவைகளை சமாளித்தார்கள்.

Prof.C.C.JACOB

அப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய டையோசிஸ் உருவானபோது Prof.C.C.JACOB அவர்கள் நிர்வாக பொறுப்பேற்று டையோசிஸ்ஸை முன்னேற்ற பாதையில் சிறப்பாக நடத்தியவர்களில் முதன்மையானவராக திகழ்ந்தார். டையோசிஸ் Lay secretaryயாகவும், CSI சினாட் எக்கிசியூட்டிவ் கமிட்டி மெம்பராகவும், சினாட் மெம்பராகவும், மத்திய கேரளாவில் கவுன்சில் மெம்பராகவும் பொறுப்பேற்று CSI-க்காக பாடுபட்டவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

இப்படிப்பட்ட சிறப்புகள் பெற்று CSI-க்காக உழைத்த கிழக்கு கேரளா டையோசிஸ் முன்னுக்கு கொண்டுவர காரணமானவர்களில் ஒருவராக இருந்த Prof.C.C.JACOB அவர்கள் கடந்த மாதம் தனது 66ம் வயதில் திடீர் மரணமடைந்தார்.

Bishop K.G.Daniel

ஆனால்........

மரித்தவரை CSI முறைப்படி அடக்கம் செய்ய பிஷப் K.G.Daniel அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று செய்தி பரவியது. காரணம் இவர் ஜலஸ்நானம் (தண்ணீர் ஞானஸ்நானம்) என்ற பெயரில் தண்ணீரில் எடுக்கும் முழுகி ஞானஸ்நானத்தைக்குறித்து ஒரு புத்தகம் எழுதினார். அது டையோசிஸ்ஸில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. உடனே பிஷப்.டேனியல் அவர்கள் CSI சட்டப்படி தண்ணீரில் முழுகி எடுக்கும் ஞானஸ்நானம் இரண்டாம் ஞானஸ்நானமாக கருதப்படுவதால் பேராசிரியர் அவர்கள் CSI சட்டத்தை மீறினார் என்ற குற்றம் சாட்டி CSI சபையிலிருந்து அவர் Excommunicate நீக்கம் செய்யப்பட்டார்.

இப்படி தன்னை CSI-யிலிருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க அவர் நீதிமன்றம் சென்றார். ஒரு இந்து நீதிபதி விசாரணை நடத்தி, Prof.C.C.Jacob அவர்களை CSIயை விட்டு பிஷப் அவர்கள் நீக்கியது தவறு, அந்த நீக்கம் செல்லாது என்றும், அவரை மறுபடியும் CSI அங்கத்தினனாக்கி நீதிமன்றத்துக்கு அறிவிப்பு கொடுக்கவேண்டும் என்று நீதிபதி, பிஷப்.டேனியல் அவர்களுக்கு கட்டளையிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கட்டளையை பிஷப் அவர்கள் நிறைவேற்றாமல் உச்சநீதி மன்றம் செல்ல ஏற்பாடு செய்தார். இந்த சூழ்நிலையில்தான் Prof.C.C.Jacob அவர்கள் திடீர் என்று மரித்துவிட்டார். இப்போதுதான் பிரச்சனை உருவானது. அவரை CSI ஆயர்கள் யாரும் CSI கல்லறையில் அவரை அடக்கம் செய்யக்கூடாது என்று கட்டளை வந்ததாக கூறப்பட்டது.

Prof.C.C.Jacob அவர்களின் பிணத்தை வைத்துக்கொண்டு இந்த புரொபசரின் குடும்பமும் சபை மக்களும் டையோசிஸ் மக்களும் பிஷப் அவர்களோடு போராடி பார்த்தார்கள். பிஷப் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

CSI புதிய டையோசிஸ் உருவாக பாடுபட்டவர், அதன் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர், சினாட் எக்ஸ்கியூட்டிவ் கமிட்டியில் பல சாதனைகள் நடக்க காரணமானவர். ஆனால் அவருக்கு CSI கல்லறையில் இடமில்லை. CSI ஆயர் யாரும் அவரை CSI முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்ற பிடிவாதம் டையோசிஸ்ஸின் பொறுப்பாளர்கள், பிஷப் ஆகியவர்களின் நன்றி கெட்டதனத்தை காட்டுகிறதல்லவா? என்று மக்கள் கூறினார்கள்.

இந்த செய்தி பிரபல தினசரி பத்திரிக்கையான The Hindu மலையாள பத்திரிக்கையான மங்களம் 7.10.2013 என்ற பத்திரிக்கையிலும் முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் Rev.P.V.George அவர்களுடன் இன்னும் இரண்டு ஆயர்கள் தைரியமாக பிஷப் கட்டளையைமீறி மரித்தவரை ஆயர் முன்வந்து அடக்க ஆராதனை நடத்தினார்கள். ஆனால் CSI கல்லறையில் இடம் கொடுக்காததால் புரொபஸர் அவர்களின் வீட்டின் நிலத்திலேயே குழிவெட்டி அடக்க ஆராதனை நடத்தினார்கள் என்ற செய்தி வந்தது. கேரள முதல்மந்திரி சார்பில் அடக்க ஆராதனையில் கலந்து கொண்டார்களாம். CSI பிஷப்.டேனியல் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை என்று கேள்விப்பட்டபோது அரசியல் கட்சிக்காரர்களும், ஊர் பெரியவர்களும் அனைத்து சபை மக்களும் கூடி வெகு விமரிசையாக அடக்க ஆராதனையை நடத்திக்காட்டினார்கள். ஊரும், அனைத்து சபைகளும் அரசியல்வாதிகளும் பிஷப் பிடிவாதத்தை கண்டித்ததால் பிஷப் பயந்து துக்கம் விசாரிக்க வீட்டுக்கு சென்றதாக சிலர் கூறினர்.

டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய என் சொந்த அனுபவத்தில் CSI-யில் 72 வருடங்கள் நான் அங்கத்தினனாக இருந்துவருகிறேன். என் தகப்பனார் 30 வருடங்கள் CSI சபை செயலாராக ஊழியம் செய்தவர். என் 49 வருட ஊழியத்தில் மார்தோமா, Jacobite, லூத்தரன், CSI போன்ற எப்பிஸ்கோப்பில் சபைகளில் ஆயிரக்கணக்கான சபைகளிலும் கன்வென்ஷன் பிரசங்கியாக ஊழியம் செய்துள்ளேன்.

மேலே குறிப்பிட்ட சபைகளில் அங்கத்தினனாக உள்ள ஒரு நாத்திகன், குடிகாரன், பிஷப்புக்கு எதிராக கோர்ட் சென்றவன், இரண்டு அல்லது மூன்று மனைவிகளை உள்ளவன் ஆகிய நபர்களில் யாராவது மரித்துப்போனால்கூட அந்த குடும்பத்தில் ஒருவர் மேலே குறிப்பிட்ட சபைகளில் திருவிருந்து எடுக்கும் அங்கத்தினனாக இருந்தால் போதும் அவர் பெயரில் மரித்த நபர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அடக்கம் செய்வார்கள். இப்படிப்பட்ட சபைகளின் சட்டத்துக்கு அல்லது வேத வசனத்திற்கு விரோதமானவனாக இருந்தாலும் அல்லது இந்த குறிப்பிட்ட சபைகளில் உள்ள குடும்பங்களில் ஒருவன் இந்து மதத்தில் மாறிவிட்டாலும் அப்படிப்பட்டவன் மரித்தாலும் அவன் பெற்றோர் அல்லது குடும்பத்தில் உள்ளவர் பெயரில் அந்த குடும்பத்தினர் விருப்பப்படி மரித்த நபரை சபை முறைப்படி சிஎஸ்ஐ சபை கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இப்படி என் 49 வருட ஊழிய அனுபவத்தில் பல அடக்க ஆராதனைகளை அறிந்திருக்கிறேன். அப்படியிருக்க CSIயிலேயே பிறந்து வளர்ந்து CSI-க்காக பாடுபட்டவரின் பிணத்தை வைத்துக்கொண்டு பிஷப்பும், டையோசிஸ் பொறுப்பாளர்களும் விளையாடியிருப்பது முழு CSI-க்கும் அவமானத்தை உண்டு பண்ணகூடியதாகும். மேலே குறிப்பிட்ட சபைகளில் பல அயோக்கியர்கள், திருடர்கள், குடிக்காரர்கள், பிஷப்பையே அடித்த நபர்கள் ஆகியவர்களில் சிலர் மரித்தபோது பிஷப் அவர்களே தானே நேரிடையாக வந்து அந்த நபரை மரியாதையுடன் அடக்கம் செய்கிறார். ஆனால் Prof.C.C.Jacob அவர்களின் அடக்க ஆராதனையிலோ பெரிய அநீதி நடந்திருக்கிறது.


என்ன நியாயம்?
இதில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய சம்பவம் ஒன்று உண்டு.

சில வருடங்களுக்குமுன் பெந்தேகோஸ்தே சபையான பிலிவர்ஸ் சர்ச் என்ற சபைகளின் பாஸ்டர்.கே.பி.யோகன்னான் (ஆத்மீக யாத்திரை ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரபலமனாவர்). மார்தோமா சபையிலும், CSI சபையிலும், Jacobite சபையிலும் உள்ள அங்கத்தினரில் நூற்றுக்கணக்கான நபர்களை பிரிந்து வரசெய்து அவர்களுக்கு முழுகி ஞானஸ்நானம் கொடுத்து தன் சபையில் சேர்த்துக்கொண்டார் அப்படிப்பட்ட மற்றும் அந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரை நமது CSI மாடரேட்டரும், அதே கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்புமான Most Rev.K.J.SAMUEL அவர்களும், Rt.Rev.கிளாக்ஸ்டன் (South Kerala டையோசிஸ்) அவர்களும், இப்போது நமது CSI மாடரேட்டராகவும், கன்னியாகுமரி டையோசிஸ்ஸின் பிஷப்பாகவும் இருக்கும் Most.Rev.தேவகடாட்சம் அவர்களும், CNI (Church of North India) வட இந்திய திருச்சபை பிஷப்மார் இரண்டு பேர்களும், ஆக ஒரு CSI மாடரேட்டர் இரண்டு CSI பிஷப்மார்கள், இரண்டு CNI பிஷப்மார்கள் ஆகியவர்கள் தங்கள் செங்கோல்களை பிடித்து குறிப்பிட்ட இந்த 5 பிஷப்புகளும், கே.பி.யோகன்னான் அவர்கள் மீது கைகளை வைத்து அவரை பிஷப்பாக CSI முறைப்படி அபிஷேகம் செய்தார்களே அது எந்த விதத்தில் நியாயமாகும்?.

தண்ணீர் ஞானஸ்நானம் குறித்து புத்தகம் எழுதினவரை CSI-யைவிட்டு நீக்கின பிஷப்.டேனியல் முழுகி தண்ணீர் ஞானஸ்நானம் கொடுக்கும் ஒரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு அவரை CSI முறைப்படி முன்னாள் மாடரேட்டருக்கும், சில CSI பிஷப்மார்களும் அவரை பிஷப்பாக்கியது எந்த விதத்தில் நியாயம்?.

CSI பிஷப், மாடரேட்டர்களுக்கு ஒரு சட்டம்?,

அந்த சபையில் அங்கத்தினனாக இருக்கும் ஒருவருக்கு இன்னொரு சட்டமா? இவர்களுக்கு மனசாட்சியில்லையா? தேவ பயம் இல்லையா?. இப்படிப்பட்ட விஷயத்தில் நியாயம் - அநியாயம் கேட்க ஒருவரும் இல்லையா? CSI சினாடில் உள்ள மெம்பர்கள், ஆயர்கள் ஆகிய யாவரும் எங்கு போனார்கள்?

மானம், ரோஷம் உள்ள ஒரே ஒரு பிஷப்.Rt.Rev.ஜார்ஜ் ஐசக் வடக்கு கேரளா டையோசிஸ் அவர் ஒருவர்தான் பெந்தேகோஸ்தே பாஸ்டரை CSI பிஷப்மார்கள் அபிஷேகம் செய்து பிஷப்பாக்கியது தவறு என்று கூறி எதிர்த்து கேள்வி கேட்டு பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுத்தார். மட்டுமல்ல, இதற்கு முக்கிய காரணமான CSIயின் முன்னாள் மாடரேட்டரும் மற்ற பிஷப்மார்களும் ராஜினாமா செய்யப்படவேண்டும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அல்லது அவர்கள் அனைத்து CSI மக்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அறிக்கைவிட்டார். அப்படியும் யாரும் மன்னிப்பும் கேட்கவில்லை, மாடரேடருக்கு CSI சினாட் தண்டனை கொடுக்கவில்லை. ஆகவே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிஷப் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிக்கைவிட்டதுமல்லாமல் பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நியாயத்துக்கு முன்மாதிரியானார்.

அவர் மனோரமா தினசரி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும்போது CSIயில் யாராவது தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்தார் என்று அறிந்தால் CSI சட்டப்படி அவரை CSI சபையைவிட்டு முழுவதுமாக நீக்கிவிடுகிறோம். ஆனால் CSI மாடரேட்டரும், மற்ற பிஷப்மாரும் தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் கொடுக்கும் பாஸ்டருக்கு பிஷப் பட்டம் கொடுத்தார்கள் என்றால், நாளை நான் என் CSI சபையை எப்படி நடத்துவேன். தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்த யாரையாவது நான் நீக்கினால் பிஷப்மாராகிய நீங்கள் யோக்கியமா? என்று கேள்விகேட்டு அவன் கோர்ட்க்கு போனால் நீதிபதி பிஷப்மார்களை பார்த்து என்ன நினைப்பார்கள்?. வெட்கி தலைகுனிவதை தவிர வேறு என்ன செய்யமுடியும் என்று கூறி பிஷப் பதவியை அவர் ராஜினாமா செய்தார்? அன்பான அனைத்து CSI அங்கத்தினர்களுக்கும், ஆயர்களுக்கும், பிஷப்மார்களுக்கும் தாழ்மையாக நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், CSI-க்காக பாடுப்பட்ட அந்த Prof.C.C.Jacob அவர்கள் குடும்பத்திடம் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு அந்த குடும்பத்தை ஆறுதல்படுத்துங்கள். பிஷப்.டேனியல் அவர்கள் செய்த தவறை வேறு எந்த பிஷப்பும் செய்யாதிருக்க தீர்மானம் எடுங்கள். (கிழக்கு கேரளா டையோசிஸ்ஸில் உள்ள Prof.C.C.Jacob அவர்களை நேசிக்கும் குடும்பங்களிடம் மன்னிப்பு கேளுங்கள். ஆறுதல்படுத்துங்கள்).

மனந்திரும்புதல் தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்தவர்களின் கணக்கு CSIயிலும், மார்தோமாவிலும், Jacobite-லும் தோண்டி ஆராய்ந்தால் ஏராளமான பிஷப்மார், ஆயர்கள், சபை அங்கத்தினர்கள் பலர் ஞானஸ்நானம் எடுத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் அகப்படுவார்கள். இப்போதும் ஞானஸ்நானத்தை இரகசியமாக எடுத்த பிஷப்மார், ஆயர்கள் பலரை நான் அறிவேன். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் சபையில் ஆட்கள் இருக்கமாட்டார்கள். சில பிஷப்மார், ஆயர்கள், அங்கத்தினர்கள் யாவரையும்விட்டு CSI, மார்தோமா சட்டப்படி சபையை விட்டு நீக்கவேண்டி வரும். அவர்கள் எல்லாரும் இரகசியமாக ஞானஸ்நானம் எடுத்தவர்களாகும்.

கே.பி.யோகன்னான் அவர்களை பிஷப்பாக அபிஷேகித்த விஷயத்தில் மிகப்பெரிய CSIயின் சட்டமீறுதலை கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்பும், மாடரேட்டருமான Most.Rt.Rev.K.J.Samuel அவர்களும் செய்துவிட்டார். அதைக்குறித்து இதுவரை அவர் மனஸ்தாப்பட்டதாக நான் அறியவில்லை.

கே.பி.யோகன்னனை பிஷப் ஆக்கிய விஷயத்தில் கலந்துக்கொண்டவர்களில் வடக்கு இந்தியா (CNI) சபை பிஷப் இரண்டு பேர்களுக்கும், CNI சினாட் அந்த இருவரின் பிஷப் பதவியை பறித்து சாதாரண ஆயராக ஊழியம் செய்யும் தண்டனையை கொடுத்தது. ஆனால் நம் CSIயில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடி ரூபாய்களும், லட்ச ரூபாய்களும் லஞ்சமாக பெற்று இவர்களில் சில பிஷப்மார்கள் K.P.Yogannan அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொண்டு CSI சட்டத்தை மீறியிருக்கிறார்கள். கிழக்கு கேரளா டையோசிஸ் பொறுப்பாளர்கள் CSI சபைக்காக பாடுபட்ட ஒரு நல்ல நபருக்கு தங்கள் CSI கல்லறையை மூடியிருக்கிறது. இது மிகப்பெரிய அநியாயம் ஆகும்.

Prof.C.C.Jacob அவர்கள் சாதாரண ஒரு புத்தகம் எழுதியதற்கு தண்டனையாக அவருக்கு CSI கல்லறை கொடுக்கவில்லை, CSI முறைப்படி அவரை அடக்க ஆராதனை செய்யவில்லை. ஆனால் நம் ஆண்டவர் மரித்த அந்த நபரை வெறுக்கவில்லை, கல்லறைக்குள் அவரை வைக்கும்முன்பே, அவருக்கு அடக்க ஆராதனை மறுத்த நிலையிலேயே கர்த்தர் அவரை தன்னிடம் எடுத்துக்கொண்டார். கல்லறையோ, அடக்க ஆராதனையோ, CSI பிஷப்போ அல்லது சட்டமோ ஒரு மனிதனை பரலோகம் கொண்டுபோகாது. மனந்திரும்பின அனுபவத்தோடு மரித்தவர் மட்டுமே எப்படி அடக்கம் செய்தாலும் கடலில் மூழ்கிபோனாலும் பரலோகம் போகமுடியும்.

CSI பிஷப்புக்கு லஞ்சம் கொடுத்தால் CSI சட்டத்தையே மாற்றலாம் என்று எல்லாராலும் பேசப்படுவது கேவலமாகும். திருமணத்துக்கு 3 ஓலைகள் வாசிக்காமலே பிஷப்புக்கு பணம் கொடுத்துவிட்டால் அந்த திருமணத்தை பிஷப்பே நடத்திவிடுவார். இதுதான் CSIயின் பல டையோசிஸ்ஸின் இப்போதைய நிலை ஆகும். இதெல்லாம் CSI சபை சட்ட மீறுதல் இல்லையா?

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே பிஷப் தன் மகனுக்கு மற்ற பிஷப்மார் தலைமையில் ஆயர்கள் புடைசூழ இரண்டாம் திருமணத்தை நடத்திவைத்து ஆசீர்வதிப்பார். சமீபத்தில் இப்படிப்பட்ட திருட்டு திருமணம் இரண்டு நடைபெற்றது. இதெல்லாம் CSI சபை சட்டமீறுதல் இல்லையா?

பிஷப்புக்கு ஒரு பெரும்தொகை லஞ்சமாக கொடுத்தால் போதும் தரவரிசையில் உள்ளவர்களுக்கு கல்லூரியில் வேலை தராமல் ஆலயத்துக்கே வராத நபருக்கு காலேஜில் வேலை உறுதி. கேட்க வெட்கமாக இல்லை?.

இப்படியும் லஞ்சம் வாங்கும் சில பிஷப்மார்கள் இப்போதும் இருக்கிறார்கள். மனசாட்சியற்ற இப்படிப்பட்ட காரியங்கள் CSI சபை பார்வையில் பாவமாக கருதப்படுவதில்லை. ஏன்?

சில பிஷப்மாரை இரவில் சந்தோஷப்படுத்த சில டீச்சர்மார் தேவைப்படுகிறார்கள். திருமணமான இரண்டு குழந்தைகளுக்கு தாயானவளே, தன் புருஷன் அனுமதியுடன் பிஷப் வீட்டுக்கு சென்று வந்ததை மொபைலில் படம் பிடித்துள்ளார்கள். பல சமயம் இரவு நேரங்களில் பிஷப் அந்த டீச்சர் வீட்டில் படுத்திருந்து விடியற்காலை எழுந்து யாரும் அறியாமல் தன் வீட்டுக்கு வந்துசேருகிறார். இந்த வெட்ககேட்டுக்கு பிஷப் மனைவியும் உடந்தை என்பதை கேட்கும்போது இவைகளை நம்பவே நம்மனம் மறுக்கிறது. இந்த வெட்கம் கெட்ட சம்பவத்தை எழுதவே கூசுகிறது. இவைகளை CSI சபை சட்டம் அல்லது நம் வேதம் இதை அனுமதிக்கிறதா? இவைகளை கேள்வி கேட்க டையோசிஸ்ஸில் தைரியம் உள்ள விசுவாசிகள் ஒருவர்கூடவா இல்லை?.


CSI சினாட் காரிய கமிட்டி பணமோசடி:

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய அமெரிக்க ERD ஸ்தாபனம் அனுப்பிய கோடிக்கணக்கான பணத்தை பல பிஷப்மார்கள் பங்கு போட்டுக்கொண்டதையும், CSI சினாட் செயலர், அவர் குடும்பத்தினர் கோடிகள் கொள்ளையடித்து CBI போலீசால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நாம் யாவரும் அறிவோம். இன்றும் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

கோடிக்கணக்கான ரூபாய் CSI சினாட்டிலிருந்து பணம்கொள்ளையடித்தார்களே! அவர்களில் ஒருவரையாவது CSI சினாட் Excommunicate சபை நீக்கம் செய்தார்களா? ஆனால் போலீஸ், CBI நீதிமன்றம் ஆகியவைகள் இவர்களுக்கு சிறை தண்டனை கொடுத்தது. இன்றைக்கும் இந்த கொள்ளையர்கள் CSI-யில் திருவிருந்து எடுக்கிறார்கள். அவர்கள் வீட்டு திருமணத்தை பல பிஷப்மார் வந்து தலைமை ஏற்று நடத்தி வைத்தார்களே, CSI இவர்களை தண்டிக்கவில்லையே! சமீபத்தில் பிஷப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், இன்றும் CSI-யில் திருவிருந்தில் கலந்துக்கொள்கிறார்கள். குடும்ப விசேஷங்களில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட CSI பிஷப், ஆயர்கள் புடைசூழ கலந்துக்கொள்கிறார்.

இப்படிப்பட்ட விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பிஷப்மார்கள், கோடிகளில் பணம் கொள்ளையடித்த பிஷப்மார்கள் 1½ கோடி லஞ்சம் வாங்கி பிஷப் பதவி வழங்கிய ஆந்திரா CSI மாடரேட்டர்.சுகந்தர் வேறு பல CSI மாடரேட்டர்கள் இப்போதும் உயிரோடுதான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் CSI விழாக்களில் ஆடம்பரமாக பங்குக்கொள்கிறார்கள். இவர்கள் செய்த விபச்சாரம், பணக்கொள்ளை, ஏமாற்று பிஷப்மார்களால் பல ஏழைகள் ஏமாற்றப்பட்டது ஆகிய இவர்கள் செய்த பாவம் துரோகம் ஆகியவைகளைவிட ஞானஸ்நானம் பற்றி புத்தகம் வெளியிட்ட மதிப்பிற்குரிய CSI-க்காக பாடுபட்ட Prof.C.C.Jacob அவர்கள் செய்தது பெரிய பாவச்செயலா? CSI எங்கோ படுபாதாளத்தை நோக்கிபோய்கொண்டிருக்கிறது. CSI சபை, மார்தோமா, லூத்தரன் சபையில் உள்ள விசுவாசிகள் அவரவர்கள் தங்கள் ஆத்துமாக்களை காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை - ஜெபிப்போம் என்று எழுதி முடிக்கக்கூட எனக்கு மனம் வரவில்லை.

பிஷப்மார்களில் பெரும்பாலானவர்கள் டாக்டர்.புஷ்பராஜ் பிஷப்மார்களை அவமானப்படுத்தி எழுதுகிறார். நம் டையோசிஸ் கன்வென்ஷன்களில் பிரசங்கிக்க இனி யாரும் கூப்பிடக்கூடாது என்று எழுதாத சட்டம் ஆயர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆயர்கள் அதை மனவேதனையுடன் எனக்கு எழுதி தெரிவித்துள்ளார்கள். இயேசுகிறிஸ்துவையே புறக்கணித்தவர்கள் என்னை புறக்கணிப்பதா அதிசயம்? மெத்தடிஸ்ட் சபையை உருவாக்கின அதன் ஸ்தாபகரான ஜான்வெஸ்லி அவர்களையே அவர் சபை சபை நீக்கம் செய்தது. அப்போது அவர் சொன்னார். நீங்கள் நான் உருவாக்கிய என் சபையைவிட்டு, என் சபை கமிட்டியே என்னை நீக்கலாம், எனக்கு என்சபையில் பிரசங்கம் செய்யக்கூடாது என்று தடுக்கலாம் - ஆனால் முழு உலகமே என் பிரசங்கமேடையாகும் என்றார். தன் சபையே - தன்னை சபை நீக்கம் செய்தபோது அவர் மனம் எத்தனை வேதனைப்பட்டிருக்கும். ஆனால் நம் ஆண்டவர் இதை தீர்க்கதரிசனமாக முன்பதாகவே அறிவித்தார்.


பலரால் வெறுக்கப்படுவீர்கள்:

என்நிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாக.... கொண்டுபோகப்படுவீர்கள். உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடு(ப்பார்கள்) மத் 1:17,18.

குறிப்பு: மேலே எழுதிய பல சாட்சியில்லா விஷயம் என் சொந்த சபையான CSI சபைகளிலேயே நிகழ்ந்திருப்பதால் இவ்விவரங்களை நான் கூறாமல் வேறு சபையினர் கூற உரிமையில்லை. ஆனால் எனக்கு உரிமை உண்டு. பாரம் உண்டு. ஆகவே இதை ஜெபத்துக்காக என் வாசகர்களுக்கு அறிவிக்கிறேன்.

என்னை வெறுத்தாலும் சரி - என்னை அழைக்காமல்போனாலும் சரி - என் வேலை அறிவிக்க வேண்டியது அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM