Italy - France - Germany
வெளிநாடுகளில் என் ஊழியங்கள்
இத்தாலி (சிசிலி)

Pastor.Dharman அவர்கள், பாஸ்டர்.டேனியல் நவகுமார் சபையின் கிளை சபையாக இத்தாலியில் ஒரு சபையை ஆரம்பித்தார். அந்த சபையிலிருந்து பிரிந்த குடும்பங்கள்தான் ஒன்று சேர்ந்து அந்நியபாஷை பேசாத நல்ல சபையை தொடங்கியுள்ளனர். பாஸ்டர்.தர்மன் அவர்களின் சபையில் காணப்பட்ட கரிஸ்மேட்டிக் ஆராதனை, அந்நியபாஷை, தசமபாகம் குறித்து ஜாமக்காரன்மூலம் சபையிலிருந்த பிரிந்த இந்த மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனார்.

பாஸ்டர்.தர்மன் தன் பிள்ளையின் கல்யாணத்தை பல கோடிகள் செலவுசெய்து இந்திய ஊழியர்களுக்கு விமான செலவுகளையும் காணிக்கைகளையும் கொடுத்து அவர்களை அழைத்து தன் மகன் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக செய்து வைத்தார். சபை மக்கள் கொடுத்த காணிக்கைகளை சேர்த்து அந்த பணத்திலிருந்துதான் வெளிநாட்டு ஊழியர்களை வரவழைத்து மிக ஆடம்பரமாக மகன் திருமணத்தை நடத்திமுடித்தார். ஒரு சபை ஊழியர் இத்தனை ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் செய்து வைக்கிறார் என்றால் இவருக்கு வருமானம் எங்கிருந்து வந்தது? மேலும் சபைமக்களின் ஆலோசனைகளை பாஸ்டர் அலட்சியப்படுத்தி கேள்விகேட்பவர்களை சபையைவிட்டு நீக்குதல், தசமபாகம் தரவில்லை என்றால் சாபம் கொடுத்தல், இவைகள் தொடர்ந்ததால் இவைகள் எல்லாம் தவறு என்பதை ஜாமக்காரன் படித்ததின் மூலம் தெளிவுபெற்ற இந்த சபை மக்களில் பெரும் கூட்டம் பல குடும்பங்களாக உட்கார்ந்து ஆராய்ந்து ஒன்று சேர்ந்து பாஸ்டரிடம் விளக்கம் கேட்க அவர் பதில் சொல்ல தெரியாமல் சபை மக்களை கடிந்துக்கொண்டாராம்.

இவைகளோடு பாஸ்டரின் போலியான பொய்தரிசனம், கர்த்தர் சொன்னார், கர்த்தர் என்னிடம் பேசினார் என்ற பெயரில் கூறிய அடுக்கடுக்கான பொய்யான செய்திகள், அதோடு இவருக்கு பிரசங்கம் செய்ய தெரியாததும் முக்கிய காரணமாக கூறுகிறார்கள். பாஸ்டருக்கு வேத வசனத்துக்கு அர்த்தம் சொல்ல தெரியாததும் மக்களை வெறுப்படைய செய்தன. பாஸ்டரின் தீர்க்கதரிசனத்தை வேதத்தோடு சபை மக்கள் ஒப்பிட்டு பார்த்து அவர் சொன்னது அத்தனையும் வசனத்துக்கு விரோதமானது என்பதை உணர்ந்து அதன்பின்தான் இவர்கள் சபையைவிட்டு பிரிந்து வந்து இப்போது வசனத்தின்படி சபை நடத்துவோம் என்று தீர்மானித்து புது சபை தொடங்கினார். ஆனால் இப்போது மேய்ப்பன் ஸ்தானத்தில் யாரும் இவர்களை வழி நடத்தாமல் இவர்களுக்குள் பலர் வசனத்தை நன்கு தியானித்து பகிர்ந்து கொண்டு பிரசங்கிக்கிறார்கள்.

இவர்கள்தான் பல மாதமாக என்னை தங்கள் சபைக்கு அழைத்தனர். இவர்களின் அன்பு கோரிக்கையினிமித்தமாகத்தான் இம்முறை இவர்களுக்காகவே இத்தாலி பயணம் மேற்கொண்டேன். இவர்களுள் சகோ.அருள்தாஸ் என்பவரின் தலைமையில் நான்கு மூப்பார்கள் சேர்ந்து ஒரு தேவாலயத்தை வாடகைக்கு எடுத்து அங்குதான் என் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் மிக வாஞ்சையாக நான் கூறிய வசனத்தையும் கேட்டு ஆராய்ந்தார்கள்.

(இத்தாலி நாட்டில் பெந்தேகோஸ்தே சபையிலிருந்து பிரிந்து அந்நியபாஷை பேசாமல் நடத்தும் வசன வாஞ்சையுள்ள குடும்பங்கள்)

சபை என்றால் என்ன? மேய்ப்பனின் தகுதி என்ன? சபை உபதேசங்கள் காணிக்கை போடும் முறை, துதி ஆராதனை சாட்சியுள்ள வாழ்க்கை, பிள்ளைகளை சாட்சியோடு வளர்த்தல் குறிப்பாக அந்த இத்தாலி கலாச்சாரத்தில் பிள்ளைகளை எப்படி வளர்த்தவேண்டும் போன்ற பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டேன். நல்ல ஊழியத்தை அங்கு நிறைவேற்றினேன். அதன்மூலம் என் உள்ளத்தில் பெரிய மனதிருப்தி உண்டானது. அவர்களுக்கு அறிவிக்க வேண்டிய எல்லாவற்றையும் அறிவித்த மனதிருப்தி பூர்ணமாக உண்டானது. கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது.


பிரான்ஸ் - FRANCE

இத்தாலியைப்போலவே பிரான்சிலும் கரிஸ்மேட்டிக் சபையினர் பலர் ஜாமக்காரனை வாசித்து உண்மையான ஆராதனையை வாஞ்சித்து சரியான ஆவிக்குரிய ஆராதனைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பாஸ்டர்.சந்திரமோகன், பாஸ்டர்.குகன் ஆகியோர் அந்நியபாஷைக்கு எதிராக நான் பேசுகிறவன் என்பதை அறிந்தும் இவர்கள் என் ஜாமக்காரனை வாசிக்கிறவர்கள் ஆனபடியால் எப்படியாவது தங்கள் சபை சரியான சத்தியத்தில் நடத்தப்படவேண்டும் என்ற வாஞ்சையை ஆவியானவர் இவர்கள் உள்ளத்தில் உணர்த்தியபடியால் என்னை மிகுந்த சந்தோஷத்தோடு அழைத்து தங்கள் சபைகளில் கூட்டங்களை நடத்த நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்து மிக சிறப்பாக கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

(பாஸ்டர்.சந்திரமோகன் அவர்கள் நடத்தும் Redeemer Church of Christ என்ற கரிஸ்மேட்டிக் சபையில் நான் பிரசங்த்தது பலருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. வசன தெளிவு பெற்றனர். பரவச ஆராதனைக்குறித்து இவர்கள் விளங்கிக்கொண்டனர்.)

பாரீஸில் பாஸ்டர்.குகன் அவர்கள் நடத்தும் மிகப்பெரிய சபையில் நான் பேசுகிறதை காண்கிறீர்கள்.


ஜெர்மனி - FRANKFURT - BETHEL CHURCH

ஆரம்ப காலத்தில் பாஸ்டர்.வின்சென்ட் என்பவர் இந்த சபையைவிட்டுப்போனபின் பல வருடங்களாக சகோ.ஸ்டேபானஸ் தேவர் அவர்கள் இந்த சபையை நடத்திக்கொண்டு வந்தார்.

இவர் காலத்தில்தான் நான் பலமுறை இந்த சபைக்கு அழைக்கப்பட்டு கூட்டங்களில் பேசினேன். இம்முறையும் இவர் கூட்ட ஒழுங்குகளை சிறப்பாக செய்திருந்தார்.

இம்முறை ஜெர்மனியில் வேறு எந்த மாநிலத்திலும் போக எனக்கு நாட்கள் இல்லாதபடியால் Frankfurt ஊரில் மட்டும் கூட்டத்துக்கு தேதி கொடுத்தேன்.

ஜெர்மனியில் பல இடங்களிலிருந்தும், ஹாலந்து நாட்டிலிருந்தும் சில குடும்பங்கள் பல மைல் பிரயாணம் செய்து இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். கூட்டம் மிகவும் ஆசீர்வதமாக அமைந்தது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.



Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM