அந்நியபாஷை பேசுவோரின் சிந்தனைக்கு........
  Selected

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் நடந்த சம்பவத்தை மீண்டும் தங்கள் சபைகளில் நடத்த முயற்சி செய்வது என்பது தற்காலத்தில் மணமாகாத கர்ப்பிணியாக இருக்கிற ஒரு பெண் நான் மறுபடியும் இயேசுவை பெற்றெடுக்கப்போகிறேன் என்று சொல்வதற்கு ஒப்பானது. ஏனென்றால் இரண்டுமே தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டு நிறைவேறிய ஒரு வரலாற்று சம்பவம். (மத் 1:22, அப் 2:16).

இன்று ஆராதனை என்ற பெயரில் உச்சகதியில் கத்துவது, ஒரே பாடலை திரும்ப திரும்ப அதிக வேகத்துடனே பாடுவது, பேண்டு (Band) அல்லது டிரம்ஸ் போன்ற வாத்தியக் கருவிகளை அதிக இரைச்சலுடன் வாசிப்பது, குதிப்பது, நடனமாடுவது, கூடவே அந்நியபாஷை என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி உளறுவது என்பது அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளில் காண்கிறோம். இப்படியெல்லாம் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டால் அப்போஸ்தலர் 2 அதிகாரத்தை ஆதாரம் காண்பிக்கிறார்கள். ஒரு வாதத்திற்கு என்று அதை நாம் எடுத்துக்கொண்டால்கூட அதிலுள்ளபடி எல்லாம் இப்போது நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் எத்தனை காரியங்கள் நடந்தது என்று நாம் ஆராய்ந்து பார்த்தால், இன்று அந்நியபாஷை பேசுகிறவர்கள் போலிகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ளமுடியும்.


1. அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். (அப் 2:1)

இன்று அந்நியபாஷை பேசும் ஊழியர்கள் எத்தனைப்பேர் தங்கள் சபை ஆராதனை வேளையில் ஒரு மனப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியும். நடப்பது என்ன? ஒருவர் சபையில் ஆராதனையை நடத்திக் கொண்டிருக்கிறார். வானத்திலிருந்து வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிற ஆவியானவரை என்னவோ இவர்தான் கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு வந்ததைப்போல ஒரு பாவ்லா காண்பித்து கொண்டிருப்பார். அவருக்கு பின்னால் வரிசையாக உட்கார்ந்திருக்கும் ஊழியர்களை கவனியுங்கள். வழக்கம்போல் தாமதமாக பிரசங்கிக்க வந்த சிறப்பு விருந்தினருடன் சபை மக்கள் அனைவரும் பார்க்க கையைக் குலுக்கி அவருடைய மனைவியைப்பற்றியும், வெளிநாட்டில் உள்ள அவர்களின் பிள்ளைகள், அவர் வளர்க்கிற நாய்குட்டி என அனைவரைப்பற்றியும் அந்த மேடையில் வைத்து நலம் விசாரிப்பார்கள்.

ஒரு சில ஊழியர்கள் ஜெபம் நடந்துக்கொண்டு இருக்கும்போதே தங்களுக்கு வந்த தொலைப்பேசி அழைப்புடன் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் தங்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல மக்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிரசங்க மேடையில் காணும் இந்த காட்சிக்கு பெயர் ஒருமனமா? உபதேச ரீதியாகவும் அவர்களுக்குள் ஒருமனமில்லை. அவரவர் தான் கொடுப்பதுதான் சரியான வேதவிளக்கம் என்று கூறிக்கொள்ளுகின்றனர். பெந்தேகோஸ்தே சபையினருக்கு அமைப்பு ரீதியாகவும் ஒற்றுமையில்லை. சுயாதீன சபைகளுக்காகவே டையோசிஸ் என்ற ஐக்கியசங்கத்தை ஆரம்பித்த நான்தான் உண்மையான பெந்தேகோஸ்து என்று ஒரு பிரிவினரும், எங்களிடம்தான் அதிக சபைகள் இருக்கிறது அதிக சபைகளை கொண்ட நாங்கதான் உண்மையான பெந்தேகோஸ்து என்று மற்றொரு பிரிவினரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருமனம் இல்லாத இவர்கள்தான் இன்று அப் 2ம் அதிகாரத்தை மீண்டும் தங்கள் சபைகளில் நடத்த முயற்சி செய்துவருகிறார்கள்.


2.பலத்தக் காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கம் உண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அப் 2:2.

இன்று அந்நியபாஷை பேசும் சபைகளில் மற்றும் கூட்டங்களில் இசைக்கருவிகளின் இரைச்சலும், கூடி வந்திருக்கிற மக்களின் கூச்சலும் கேட்கிறதே ஒழிய வானத்திலிருந்து எந்த சத்தமும் உண்டாகுவதில்லை. இவர்கள் இருக்கிற இடங்களில் எதுவும் வந்து நிரப்புவதும் இல்லை.


3.அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அப் 2:3.

தாங்கள் அந்நியபாஷை பேசுவதற்கு அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை ஆதாரமாக காண்பிக்கும் கிறிஸ்தவர்கள் எத்தனைபேர் மீது அக்கினிமயமான நாவுகள் காணப்படுகிறது. அல்லது வந்து அமருகிறது. மூச்சுக்கு முன்னூறு முறை அக்கினி அக்கினி என்றும் ஆங்கிலத்தில் Fire, Fire என்று கத்தினாலும், கதறினாலும் இன்றுவரை எவர் மீதும் அக்கினி வந்து இறங்கியதுபோல தெரியவில்லை. உண்மையாகவே மண்ணெண்ணை, சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலைகள் மிக அதிகமாய் உயர்ந்து வருகின்ற இந்த நாட்களில் ஆண்டவர் இவர்கள் எதிர்ப்பார்க்கிற இலவசமாக அக்கினி கொடுத்தால் மிகவும் வசதியாகதான் இருக்கும். ஆனால் அவ்விதம் நடப்பதில்லையே... என்ன செய்ய!?


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM