பிரசங்கத்தில் மக்களை ஏமாற்றுவது

பிரசங்கத்தில் வேத வசனத்தின் உண்மையான அர்த்தத்தை மாற்றியும், வசனத்தின் முக்கிய இடத்தை மறைத்தும் சில ஊழியர் செய்யும் பிரசங்கம் கிறிஸ்தவர்களை தவறாக வழிநடத்துகிறது.

சகோ.அதிசயராஜ்-நித்தியராஜ் என்ற பெயரில் சகோதரர்களான இரட்டையர்களில் ஒருவர் சகோ.நித்தியராஜ். இவர் தன் மாத பத்திரிக்கையிலும் 2012 ஏப்ரல் 11 புதன் TV நிகழ்ச்சியிலும் ஒரே செய்தியை மக்களை ஏமாற்றும் வகையில் பேசினார். அதே செய்தியை பத்திரிக்கையிலும் எழுதியுள்ளார்.

நீ கேளாதவைகளை உனக்குத் தருவேன். 1 இரா 3:13.

இதுதான் உங்களுக்கு சொல்ல சொல்லி கர்த்தர் என்னிடம் கூறிய வாக்குதத்தம் என்று இவர் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

நீ கேளாத நன்மைகளையெல்லாம் உனக்கு தரப்போகிறார்.
   உனக்கு கர்த்தர் ஒரு வீட்டை கட்டுவார்.

யாக்கோபு தன்னை கர்த்தர் ஆசீர்வதிக்கவேண்டும் என்றோ தனக்கு செழிப்பு வேண்டும் என்றோ கேட்கவில்லை. ஆனால் தேவன் அவன் கேளாமலே சகல ஆசீர்வாதத்தையும் அவனுக்கு கொடுத்தார். அதைப்போலவே இந்த மாதம் "நீ கேளாத செழிப்பு உனக்கு வரப்போகிறது!" என்று கூறினார். அதையே TVயிலும் பிரசங்கித்தார்.

இதை கேட்பவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் என்ன தோன்றும்? நாம் எப்படிப்பட்ட ஜீவியம் செய்தாலும் நாம் கேட்காததைகூட கர்த்தர் நமக்கு கொடுப்பார் என்று மட்டுமே மக்கள் நினைப்பார்கள்.

  இவர் பிரசங்கத்தில் எதை மறைத்தார் என்று கவனியுங்கள். 1 இரா 3:11ல் சாலமோனோடு உனக்கு என்னவேண்டும் என்று கர்த்தர் கேட்டார். அப்போது அவன் எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தாரும் என்று கேட்டான். ஆண்டவர் சந்தோஷப்பட்டு உலகப்பிரகாரமான பணம் (ஐசுவரியத்தையோ) வேண்டும் என்று கேட்காமல், எதிரிகள் அழியவேண்டும் என்றோ அல்லது என் ஆயுள் நீளவேண்டும் என்றோ, நீ உனக்கு கேளாமல் ஞானத்தைமட்டும் வேண்டும் என்று கேட்டாயே! அதுதான் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. ஆகவே நீ கேளாத எல்லா ஐசுவரியத்தையும் ஞானத்துடன் சேர்த்து தருவேன் என்றார். இப்படித்தான் நாம் வேதத்தில் வாசிக்கின்றோம்.

உலக பிரகாரமான செல்வத்தை, சுகத்தை கேட்காமல் மிக முக்கியமான ஞானத்தை கேட்டது ஆண்டவரை சந்தோஷப்படுத்தியது. இதைத்தான் இவர் பிரசங்கத்தில் மறைத்துவிட்டார். இப்படித்தான் செழிப்பு உபதேச பிரசங்கிமார்கள் செழிப்பைமட்டும் பிரசங்கித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.


சகோ.ஆல்வின் தாமஸ் பிரசங்கமும் இப்படிதானே இருந்தது!

வருட தொடக்கத்தில் கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்தார் என்றும், கர்த்தர் அதை உங்களிடம் கூற சொன்னார் என்றார். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். சங் 1:3. இந்த வருடம் நீ செய்யும் எல்லா காரியங்களும், படிப்பு, தொழில், வீடு கட்டுதல், வாகனம் வாங்குவது எல்லாம் உனக்கு வாய்க்கும். இப்படி கூறி உடனே எல்லாரும் அல்லேலுயா சொல்லுங்கள் என்றார். உடனே அங்கு கூடின மக்கள் கதறி அழுதுக் கொண்டு ஒரே காட்டுக்கூச்சல் சத்தம் சபை கட்டிடத்தை அதிரச்செய்தது.

அந்த மக்களுக்கு தாங்கள் செய்வதெல்லாம் இந்த வருடம் வாய்க்கப்போகிறது என்ற வார்த்தை மாத்திரமே மனதில் சந்தோஷமாய் தோன்றியது. அதனால் தன்னை மறந்து அவர்கள் சத்தம் போட்டார்கள்! ஆர்ப்பரித்தார்கள்! புதுவருடம் பிறந்துவிட்டது இந்த வருடம் நான் எதை எதை செய்கிறேனோ அதெல்லாம் வாய்க்கும்! எத்தனை சந்தோஷமான செய்தி.

ஆனால், அவர் பிரசங்கத்தில் மறைத்த மிக முக்கியமான பாகம் என்ன? சங் 1:1-3 அதிகாரத்தில் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும்-பகலும் வேதத்தை வாசித்து தியானிக்கிற மனுஷனுக்கும், துன்மார்க்கரின் ஆலோசனையில் நடக்காதவனுக்கும், பாவிகளுடைய வழியில் நிற்காதவனுக்கும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராதவர்களுக்குமட்டுமே குறிக்கப்பட்ட அந்த விசேஷ ஆசீர்வாதம் கிடைக்கும்.

இப்படி கர்த்தர் கட்டளையிட்டபடி ஒருவன் கீழ்ப்படிந்தால் மட்டுமே அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங் 1:1-3) என்று வேதம் போதிக்கிறது. கண்டிஷன் இல்லாத ஆசீர்வாதம் கர்த்தரிடம் கிடையாதே! எத்தனை முக்கியமான விஷயங்களையெல்லாம் இவர்கள் தங்கள் பிரசங்கங்களில் மறைத்துவிட்டு செய்வதெல்லாம் வாய்க்கும் என்ற வெறும் வார்த்தையைமட்டும் பெரிதுப்படுத்தி காண்பிக்கும் செழிப்பு உபதேச பாஸ்டர்களாக இவர்களைபோல் ஊழியர்கள் நிறைய பெருகிவிட்டனர்.

இதைக்குறித்து நான் பேசியபோது சிலர் ஆல்வின் தாமஸ் அவர்கள் பேசியது சரிதான் என்பதாக பேசினார்கள். அப்போது அவர்கள் வீட்டிலேயே அந்த சிடியை போட்டு கேட்க சொன்னேன். அதன்பிறகுதான் அவர்கள் உண்மையை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். நீங்கள் எப்போதும் குறைகளை மட்டும் சொல்லுகிறவர் என்ற எண்ணத்திலேயே அப்படி பேசிவிட்டேன். ஆனால் இந்த வசனத்தில் இவ்வளவு பெரிய தவறும், ஜனங்களை ஏமாற்றுவதும் அடங்கியிருக்கிறது என்பதை நாங்கள் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. மேலும் ஏராளமான வாலிப பிள்ளைகள் அவர் கூட்டத்தில் அவர் சபையில் பாட்டினால், ஆட்டத்தினால் கவரப்பட்டு விழுந்து கிடக்கிறார்கள். அந்த வாலிபர்களுக்காக அந்த சபையில் உள்ள நாங்களே ஜெபிக்க தொடங்கிவிட்டோம். நாங்கள் அவர் சபையைவிட்டு விலக விரும்பவில்லை. உங்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.


அக்கினி அபிஷேகம் படும்பாடு:

  2012 ஏப்ரல் 7ம் தேதி அப்போஸ்தலர் டி.ஆசீர்வாதம் என்பவர் டிவியில் பிரசங்கம் செய்து ஜெபிக்கும்போது கூறியது:

அக்கினி அபிஷேகம் பெறாமல் பரலோகம் போகமுடியாது. ஒவ்வொருவரும் அழுங்கள், கதறுங்கள். இதோ அக்கினி இப்போது இறங்குகிறதை பார்க்கிறேன். ஒரு வாலிபனின் கையில் அக்கினிப்பற்றி எரிவதை நான் காண்கிறேன். சிலருடைய வாயில் அக்கினி புறப்படுகிறதை காண்கிறேன். இப்படி இவர் ஜெபித்து முடித்தார். என்ன பயங்கரமான பொய் வெளிப்பாடு இது. வாசகர்கள் இப்படிப்பட்ட பொய் ஜெபங்களை நம்பாதீர்கள்.

  திருப்பத்தூர் அக்கினி அபிஷேக கூட்டங்களிலும் அங்கு பிரசங்கிக்கும் ஊழியர்கள் ஜெபிக்கும்போதும் இதேபோல கூறியதாக பலர் கூறி கேட்டிருக்கிறேன்.

  தயவுசெய்து இவர்கள் கூறும் அக்கினிக்கும், அந்நியபாஷைகளுக்கும், அபிஷேகத்திற்கும் வேதம் கூறும் பரிசுத்த ஆவியானவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அக்கினி அபிஷேகம் கிடைக்கும் என்று கூறி விளம்பரபடுத்தும், எந்த கூட்டத்துக்கும் விசுவாசிகள் தயவுசெய்து போய்விடாதீர்கள். நிச்சயமாக வஞ்சிக்கப்படுவீர்கள். அதாவது ஏமாற்றப்படுவீர்கள்.


பொய் தீர்க்கதரிசனம்:

1 ஜனவரி 2012ல் இந்த வருடத்துக்குரிய தீர்க்கதரிசனத்தை வெகுகாலத்துக்குமுன்பே தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார் சொன்னார் என்றும் அவர் கூறியபடிதான் ஏப்ரல் மாதம் பூமி அதிர்ச்சி வந்தது என்றும் கூறி அது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஏஞ்சல் டிவியில் பலமுறை போட்டுக்கொட்டினார்கள். அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கு அவர் தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறார் என்பதைப்பற்றியும் ஏஞ்சல் டிவியில் பலமுறை போட்டு காட்டினார்கள்.

Angel TV காண்பவர்கள் சிந்திக்கவேண்டும். இந்த தீர்க்கதரிசனத்தைப்பற்றி நம் வேதம் பலமுறை ஏற்கனவே கூறிவிட்டதே! இதுவரை உலகத்தில் 3600 பூமியதிர்ச்சிகளுக்குமேல் நடந்துவிட்டது. இனியும் நடக்கும்! அப்படியிருக்க வேதத்தில் இல்லாத எந்த புது தீர்க்கதரிசனங்களையும் இப்போதுள்ள தீர்க்கதரிசிகள் என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள் யாரும் இதுவரை கூறவில்லை என்பதை அறியவேண்டும். வேதத்தில் கூறப்பட்டதையேதான் இவர்கள் திரும்பக்கூறி, அன்றே நான் கூறினேன்! என்று தங்களை மேன்மைப்படுத்த எத்தனையோ பேர் துடிக்கிறார்கள். இதற்கு உதவி செய்ய ஒத்து ஊத எத்தனையோ பேர் டிவி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

மத் 24, மாற் 13, லூக் 21 அதிகாரத்தை வாசித்தால் இவர்கள் கூறும் அனைத்து தீர்க்கதரிசனங்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே வேதமே கூறிவிட்டது. ஆகவே நாம் வசனத்தை வாசித்து தியானித்து நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வோம்.


ஏலி ஏலி சபக்தானி என்பது அந்நியபாஷையாம்:

இப்படியாக சகோ.சாம் ஜெபதுரை அவர்கள் பெரிய வெள்ளி அன்று பேசியிருக்கிறார். இயேசுவும் அந்நியபாஷை பேசினார் என்று கூறி இவர்கள் தாங்கள் பேசும் பொய்யான பாஷைகளுக்கு இயேசுவையும் துணைக்கு சேர்த்துக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் கூறிய அந்த வார்த்தையானது அரமேய பாஷை ஆகும். அன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களால் பேசப்பட்டது. அதனால்தான் அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்! என்று அர்த்தமாம் என்று ஆவியானவரே வேத புத்தகத்தில் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை எழுதி வைத்திருக்கிறார். வேத வசனத்தை எப்படி இவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு தவறானபடி வியாக்கியானம் செய்கிறார்கள்! ஆச்சரியமாக இருக்கிறது.


அந்நியபாஷை

  இதே மாதிரிதான் ஏசா 28:11ல் பரியாச உதடுகளினாலும், அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இந்த வசனத்தை மேற்கொள்காட்டி ஆவியானவர் அன்றே தீர்க்கதரிசனமாக அந்நியபாஷை, அபிஷேகம் பற்றி எழுதியிருக்கிறார் என்று அன்றன்றுள்ள அப்பம் தினசரி தியானத்தில் எழுதியிருக்கிறார்.

  இது யூதர்களுக்கு கர்த்தர் தீர்க்கதரிசனமாக கூறி எச்சரித்தது ஆகும். இதற்கும் அந்நியபாஷைக்கும் சம்பந்தமேயில்லை. இந்த வசனத்தில் அந்நியபாஷை, பரியாச உதடுகள் என்று குறிப்பிடுவது யூதருக்கு பிடிக்காத ஜாதியான அசீரியரின் பேச்சைக்குறிக்கும் இது யூதருக்கு அந்நியமொழி ஆகும். கர்த்தரின் வார்த்தைக்கு கடிந்துக்கொள்ளுதலுக்கு கீழ்ப்படியாத, உணராத யூத ஜனங்கள் அசீரியனிடம் அடிமையாகி அசீரியன் இவர்களை தண்டிக்கும்போது தான் இவர்களுக்கு புத்திவரும். அப்போதுதான் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்வார்கள் என்பது ஏசாயா மூலமாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையாகும். கர்த்தர் யூதர்களுக்கு உரைத்த இந்த தண்டனை மாறும் ஒரு காலம் உண்டு. அதை ஏசா 33:19ல் காணலாம். உனக்கு விளங்காத பாஷையும் அதோடு ஒரு வித்தியாசமான பேச்சு (பாஷையை உடைய) உடைய காட்டு மிராண்டிபோல உள்ள அந்த ஜனங்களை இனி நீ காணமாட்டாய். இப்படி தீர்க்கதரிசன விளக்கங்கள் வேதத்திலேயே காணப்படும்போது அந்நியபாஷை என்பது ஆவியானவர் கொடுக்கும் பாஷை என்பதற்கு இவர் ஏசா 28:11ஐ சுட்டி காண்பித்து அதை சரி என்பதாக மக்களை ஏமாற்ற அடிக்கடி அந்நியபாஷையை குறித்து இவர்கள் பேசுவதும், எழுதுவதும் தொடர்கிறது.

இப்படிப்பட்ட பொய்யான வியாக்கியானங்கள் எழுதி வெளியிடும் அந்த தினசரி தியான புத்தகத்தை வாசிப்பவர்கள் எப்படியாய் குழம்பிபோவார்கள். இவர் கொடுக்கும் இப்படிப்பட்ட வியாக்கியானம் வசனத்தைவிட்டே மக்களை பிரித்துவிடுமே! இதையேதான் சகோ.மோகன்.சி.லாசரஸ், சகோ.ராபின்சன் போன்றவர்கள் திருப்பத்தூர் உபவாச கூட்டங்களில் திரும்பதிரும்ப பேசி அக்கினி அபிஷேகம் என்ற பெயரில் மக்களை பைத்தியக்காரர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பலர் எனக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


இயேசுவுக்கும் வியாதி இருந்தது

நம்மைப்போல் இயேசுவும் வியாதி உள்ளவராக இருந்தார். ஆகவே கவலைப்படாதே, அவர் வியாதிபட்டதினால் உன் வியாதியின் வேதனையை அவர் அறிவார். இப்படிப்பட்ட பிழையான கருத்தை இதே ஊழியர். சகோ.சாம்ஜெபதுரை அவர்கள் எழுதியிருந்தார். இதற்கு இவர் சுட்டிக்காட்டும் வசனம் நான் வியாதியுள்ளவனாயும்...... இருந்தேன். நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை. மத் 25:43.

இந்த வசனம் இயேசு வியாதி படுக்கையில் இருந்த அனுபவமாக சகோ.சாம்ஜெபதுரை எழுதி குறிப்பிடுகிறார். இந்த வசனத்தின் கீழே வாசித்துப்பாருங்கள். இந்த சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறி முடிக்கிறார். சாதாரண வேத அறிவு இல்லாத கிறிஸ்தவர்களே இதை இயேசுகிறிஸ்து உதாரணத்துக்காகத்தான் கூறினார் என்றும், மற்றவர்களுக்கு செய்யும் உதவி எனக்கு செய்த மாதிரி என்ற அர்த்தத்தில்தான் கூறினார் என்றும் தெளிவாக கூறுவார்கள். ஆனால் சகோ.சாம்ஜெபதுரை இந்த ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு இயேசுவும் வியாதிப் படுக்கையில் இருந்தார் என்று இவர் எழுத எப்படி இவருக்கு மனம் வந்தது.

  2000 புத்தகங்கள் எழுதிவிட்டேன் என்று பெருமையாக கூறி என்ன பிரயோஜனம்? இதைத்தான் தவறான உபதேசம் என்று நான் குறிப்பிட்டு ஜாமக்காரனில் எழுதியதற்கு சகோ.சாம்ஜெபதுரை எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி கோர்ட்டுக்கு அழைத்தார். நானும் கோர்ட்டுக்கு வந்து விளக்குகிறேன் என்றும் ஆதாரத்துடன் விளக்குகிறேன் என்றும் எழுதினேன்.

  என்னை சகோ.சாம்ஜெபதுரை கோர்ட்டுக்கு அழைக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் என்பதை என் வாசகர்கள் கேள்விப்பட்டவுடன் அவர் தன் அன்றன்றுள்ள அப்பம் என்ற தினசரி தியான புத்தகங்களில் மேலும் எழுதிய பல அபத்தங்களை சுட்டிக்காட்டி இவைகளை அப்படியே அவைகளை புத்தகங்களாகவும், போட்டோ காப்பி எடுத்தும் எனக்கு அனுப்பி கோர்ட்டில் வாதாட வாசகர்கள் ஆதாரங்களை குவித்து விட்டார்கள். மேலும் கோர்ட் செலவுக்கு பணம் அனுப்புகிறேன் என்று பணமும் எனக்கு அனுப்ப ஆரம்பித்தனர். பலர் சகோ.சாம்ஜெபதுரை அவர்களுக்கு மிகவும் கடினமாக வார்த்தைகளை உபயோகித்து அவருக்கு எழுதிய கடிதங்களின் காப்பியை எனக்கும் அனுப்பி வைத்தனர்.

  ஒரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர், பரலோகத்தை கண்டேன் என்றவர், பரலோகத்தில் சங்கரை கண்டேன், இவரை கண்டேன் என்றெல்லாம் பட்டியலிட்டவர், மேலும் அக்கினி அபிஷேகம் எல்லாருக்கும் திருப்பத்தூரில் வாங்கி தருபவர், அந்நியபாஷையில் தேவனோடு பேசுபவர், அபிஷேகம் பெற்றவர், இப்படி மலையளவு தன்னைப்பற்றி புகழ்ந்து எழுதிக்கொண்டிருக்கும், அவருக்கு மேலே குறிப்பிட்ட மாதிரியான தவறான வேத வியாக்கியானங்களை எந்த ஆவி அவருக்கு சப்ளை செய்தது என்று வாசகர்கள் எழுதியுள்ளனர்.

  எத்தனை கிறிஸ்த மக்கள் இப்படிப்பட்ட தவறான வேத வசன வியாக்கியானங்களால் கெடுக்கப்பட்டிருப்பார்கள்! இப்படிப்பட்ட ஊழியர்களுக்காக ஜாமக்காரன் வாசகர்கள் மற்றும் கிறிஸ்தவ சபை விசுவாசிகள் ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM