ஜெப யாத்திரை

ஜெப யாத்திரை என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக ஒரு புது உபதேசம் சில ஊழியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. அவைகளினால் ஒரு நன்மையும் உண்டாக போவதில்லை. அது வேதவசன அடிப்படை அல்லாததாகும் என்று நானும், வேறு சில ஊழியர்களும் பக்கம்பக்கமாக எழுதினோம். இதற்கென்றே BYM R.ஸ்டான்லி அவர்கள் ஒரு துண்டுபிரதி எழுதி அச்சிட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டார். அதை ஆயிரக்கணக்கில் விநியோகம் செய்து அதனால் பெரும் விழிப்புணர்வு உண்டானது. அதன்பின் ஜெப யாத்திரை என்று யார் கூப்பிட்டாலும் உண்மை விசுவாசிகள் கலந்துக்கொள்வதில்லை. இப்போது மறுபடியும் அது தொடங்கிவிட்டது.

ஜெப யாத்திரை என்று ஒவ்வொரு ஊராக சென்று ஜெபிப்பதை, மறுபடியும் சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் தொடங்கிவிட்டார். பாவம் பலர் ஏமார்ந்து ஆங்காங்கே ஜெபயாத்திரை செய்ய சென்றார்கள். ஆனால் பலர் போவதா-வேண்டமா? என்று யோசிப்பதாக குழப்பத்தோடு எனக்கு எழுதியுள்ளார்கள். இவர்கள் நடந்து சென்று ஜெபிக்காத இவர்கள் கால்கள் படாத ஊர்களை கர்த்தர் காப்பாற்றமாட்டாரா? கட்டுகளிலிருந்து அந்த மக்களை விடுவிக்க மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

ஜெப யாத்திரை தொடங்கும்படி கர்த்தர் சொன்னார் என்று மோகன் சி.லாசரஸ் கூறுகிறார். என்ன உபதேசம் இது. கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் ஏஞ்சல் டிவியில் சகோ.சாது சந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் ஆகியவர்களுடன் மோகன் சி.லாசரஸ்சும் இணைந்து டிவியில் தீர்க்கதரிசனம் கூறப்போகிறார்கள். அதற்கு அமைத்த மூவரணி கூட்டணியைப்பற்றி இதே ஜாமக்காரனில் எழுதியுள்ளேன். வாசித்துப்பாருங்கள். கர்த்தர் சொன்னார்!, கர்த்தர் காட்டினார்! இப்படி சொல்லி உங்களை ஏமாற்றும் இவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள்.

  விசுவாசிகள் அவரவர் இருக்கும் இடத்தில் ஜெபகுறிப்புகளை வைத்து ஜெபியுங்கள். வில்லியம் கேரி என்ற இந்திய முதல் மிஷனரி செருப்பு தைத்துக்கொண்டே தன்முன் இந்திய தேச வரைப்படத்தை பார்த்து பார்த்து அழுது ஜெபித்தாரே அந்த ஜெபம் கேட்கப்பட்டதா? இல்லையா? அந்த இந்திய மேப்பில் உள்ள ஒரு மாநிலத்தின் பெயர்கூட அவருக்கு தெரியாது. ஆனால் அந்த படத்தை பார்த்து ஜெபித்ததின் விளைவு இந்தியா முழுவதும் அவரை புகழத்தக்கதாக, இந்திய அரசாங்கம் அவருக்கென்று அவர் படம் பொறித்த தபால் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்தார்களே! இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலுள்ள கிறிஸ்தவர்கள் பலர் இவரை பின்பற்றி மிஷனரிகளாக எழும்பினார்களே!

தயவுசெய்து உங்கள் நேரத்தை ஜெப யாத்திரை என்ற பெயரில் முட்டாள்தனமாக வீணாக்கி போடாதீர்கள். உங்கள் நேரத்தையும், காலத்தையும் கால்கடுக்க நடந்து வீணாக்கி போடாதீர்கள். அந்த நேரத்தில் இந்திய வரைபடத்தை, தமிழ்நாடு வரைபடத்தை வைத்து கையை அதன்மீது வைத்து உங்கள் பாரத்தை காட்டி ஜெபியுங்கள். நீங்கள் உடற்பயிற்சிக்காக வாக்கிங் செல்லுபவராக இருந்தால் ஒவ்வொரு ஜெபகுறிப்புகளுக்காகவும் ஜெபித்துக்கொண்டே நடவுங்கள். அது சரீரத்துக்கும், ஆத்துமாவுக்கும் பெலத்தை உண்டாக்கும்.

இனி கர்த்தர் சொன்னார் என்று எந்த ஊழியர் கூறினாலும் நம்ப வேண்டாம். வசனம் இப்படி சொல்லுகிறது என்று சொல்லுகிற ஊழியரை மட்டும் நம்புங்கள்.


Top



Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM