கர்த்தருக்குள் அன்பானவர்களே,
உங்கள் யாவருக்கும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன்.
ஜாமக்காரன்
வாசகர்களின் பிள்ளைகள் 10 மற்றும்
11, 12 வகுப்பிலும் பாஸ் ஆகிய விஷயம் அறிந்து தேவனைத் துதிக்கிறேன். பாஸ்ஸான பிள்ளைகள் உங்கள் சாமர்த்தியத்தால் பாஸ் ஆனேன் என்று எண்ணாமல் கர்த்தர் கொடுத்த
ஞானத்தாலும், என் முயற்சியாலும், தேவகிருபையாலும் நான் வெற்றியடைந்தேன் என்று கூறவேண்டும்.
இனி கல்லூரி படிப்பை தெரிந்தெடுக்கும்போது கூட படிக்கும் பிள்ளைகள் பல ஆலோசனைகள் கூறுவார்கள். அவைகளை கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால் அதை நம்பிவிடாமல், பெற்றோர் படித்தவர்களாக இருந்தால் அவர்களின் அபிப்ராயம் என்ன என்று கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் சாமர்த்தியம், உங்கள் பெலம் உங்களுக்கே தெரியும். எந்த
பாடம் தெரிந்தெடுத்தால் உங்களால் எளிதாக வெற்றிபெற்று முன்னேறமுடியும் என்பதை யோசித்து முடிவு எடுங்கள். எந்த
பாடம் படித்தால் இப்போதுள்ள கால கட்டத்தில் சீக்கிரம் முன்னுக்குவரமுடியும். எந்த பாடத்திற்கு ஸ்கோப் உண்டு என்பதையும் மனதில் கொண்டு ஜெபத்தோடு கல்லூரி படிப்பை தெரிந்தெடுங்கள்.
இதற்கு தேவசித்தம் என்ன? என்று எந்த ஊழியக்காரனிடமும் சென்று ஜெபித்து குறிகேட்கவேண்டாம். படிப்பு விஷயத்தில் தேவ சித்தம் கூறும் ஊழியர்களை நம்பாதீர்கள். அப்படியே வேலைதேடும் விஷயத்திலும், குறிப்பாக திருமண விஷயத்திலும் யாரிடமும்
தேவசித்தம் என்ன? என்று கேட்கபோகாதீர்கள். தேவசித்தம் பற்றிகூறும் ஊழியக்காரர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்தால் தேவசித்தம் என்ன என்பதை ஜெபித்து கூறுங்கள் என்று கேட்காதீர்கள். அவர்களிடம் ஜெபிக்கசொல்லவேண்டாம். இப்படிப்பட்ட விஷயத்தில் தேவசித்தம் கூறும் ஊழியக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
கடந்த 2012 ஏப்ரல் மாத ஜாமக்காரனில்
அண்ணகர்களைப்பற்றி எழுதிய விளக்கங்களுக்கு நல்லவரவேற்பு இருந்தது. ஏராளமானவர்கள் தொலைபேசி மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் நன்றி கூறியும், வாழ்த்து கூறியும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இதுவரை அறியாத பல விஷயங்கள் அண்ணகர்களைப்பற்றி நாங்கள் அறிந்துக்கொண்டோம் என்று அறிவித்தார்கள்.
ஆனால், சென்னைக்கு அனுப்பப்பட்ட (2012 ஏப்ரல் மாத) ஜாமக்காரன் வாசகர்கள் கையில் போய் சேரவில்லை.
அரவாணிகளைப்பற்றி விளக்கமாக எழுதுவேன் என்று முன்னதாகவே அறிவித்ததால் சென்னை
CSI திருமண்டலத்திலுள்ள சிலர்
தபால்துறையில் உள்ள, சிலரின் ஒத்துழைப்போடு ஜாமக்காரன் யாருக்கும் போய்சேராமல் தடுத்துவிட்டனர். ஆகவே
2012 ஏப்ரல் மாத ஜாமக்காரன் கிடைக்காதவர்கள் உடனே எங்களுக்கு அறிவித்ததால் நாங்கள் ஜாமக்காரனை
கூரியர் மூலமாகவும், சில இடங்களில்
Speed Post மூலமாகவும் வாசகர்களுக்கு அனுப்பிவைத்தோம். இன்னும் யாருக்காவது
ஏப்ரல் மாத ஜாமக்காரன் கிடைக்கவில்லையானால், உடனே எங்களுக்கு அறிவித்தால் கூடவே தொலைபேசி எண்ணையும் எழுதி அறிவித்தால் உடனே ஏப்ரல் மாத ஜாமக்காரனை அனுப்பி வைப்போம்.
கடந்த நாட்களில், மாதங்களில் ஊழியம் மிக அதிமாக இருந்தது. ஆண்டவர் சுகத்தையும், பெலத்தையும் தந்து ஊழியங்களை மிகச் சிறப்பாக ஆசீர்வதித்தார். என் எல்லா பிரயாணங்களிலும் எப்போதும் என்னோடு இருக்கும் ஆண்டவர் என்னை கிருபையாக வழிநடத்தி வருகிறததற்காக அவரின் தொடர்ந்த கிருபைக்காக ஸ்தோத்தரிக்கிறேன்.
நீங்கள் அனுப்பிய எல்லா ஜெபகுறிப்புகளுக்காகவும், பிள்ளைகளின் பள்ளி-கல்லூரி சேர்க்கைக்காகவும், புது வேலையில் சேருகிறவர்களுக்காகவும், வரும் மாதங்களில் புதிய வேலையில் சேர காத்திருக்கிறவர்களுக்காகவும், திருமணத்துக்காக காத்திருக்கிறவர்களுக்காகவும் விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது. திருமணம் செய்து புதிய வாழ்க்கை தொடங்குகிறவர்களுக்காகவும், மிஷனரி பிள்ளைகளுக்காகவும் விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது.
நான் ஏற்கனவே அறிவித்தப்படி பலர் இந்த விடுமுறை நாட்களில் தாங்கள் தாங்கும் மிஷனரி பணிதளங்களுக்கு பல குழுக்களாக, ரயிலில் நீண்ட தூர பயணத்துக்காக ரயிலில் முன்பதிவு செய்தும், பஸ், வேன் ஏற்பாடு செய்து
நாலுமாவடி, பெதஸ்தா, வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு போகாமல், பஸ் மூலமாகவும், வேன் மூலமாகவும் பல குழுக்களாக பிரிந்து சென்று பயணப்பட்டு மிஷனரி பணிதளம் சென்று மிஷனரிகளோடு தரையில் படுத்தும், அவர்களின் எளிய உணவுகளை உண்டும், அவர்களோடு பாட்டுபாடி, காடுகளிலுள்ள மக்களை சந்தித்து சுவிசேஷம் அறிவித்து வந்த விவரத்தை ஏராளமானவர்கள் மிகவும் சந்தோஷத்தோடும், திருப்தியுடனும் எனக்கு அறிவித்தனர். அந்த விவரங்களை கேட்டபோது எத்தனை சந்தோஷாக இருந்தது! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மிஷனரிகள் எனக்கு கடிதம் எழுதும்போது இப்படி பணிதளத்தை மிஷனரிகளை தாங்குபவர்கள், ஜெபிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் வந்துபோவது காடுகளில் வாழும் எங்களுக்கு பெருத்த ஆறுதலாகும். வருடம் ஒருமுறைகூட சொந்த ஊருக்கு போகமுடியாமல், உறவினர்களை காண ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இப்படி குழுக்களாக எங்களிடம் வந்து எங்களோடு தங்கிப்போனது எங்கள் குடும்பத்தினர், உறவினர் எங்களை சந்தித்த
சந்தோஷத்தை நாங்கள் அனுபவித்தோம் என்றனர். அதனால் ஊருக்கு போகவேண்டும் என்ற
ஏக்கம் எங்களைவிட்டு மாறியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றனர். விடுமுறை நாட்களை இப்படி பயனுள்ள வகையில் மிஷனரி பணிதளம் சென்று சந்தித்த யாவருக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அந்த மிஷனரிகளுடன் இணைந்து நானும் உங்களை வாழ்த்துகிறேன்.
MO மற்றும் இ-மணியாடர்மூலம் அனுப்பிய
காணிக்கைகளையும் பெற்றுக்கொண்டேன். பேங்க் மூலம் ஆன்-லைனில் பணம் அனுப்பும் வாசகர்கள் தயவுசெய்து உங்கள் முகவரியை தனி கடிதம்மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும். அப்போதுதான் உங்களுக்கு ரசீது அனுப்பிவைக்கவும் முடியும். உங்களில் பலர் உடனுக்குடன் எனக்கு அறிவித்தனர். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்.
|