இந்துமத மக்களிடம் ஊழியம் செய்வோரிடம் ஜாக்கிரதையாயிருங்கள்

இந்து மதத்தில் குறிப்பாக உயர் குலமாக கருதுகிற பிராமண குலத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இப்போது பலர் வேலை ஏதும் செய்யாமல் ஊழியம் செய்கிறதாக சுற்றி திரிகிறார்கள். அவர்களை விசுவாசிகள் மிகவும் உயர்வாக கருதி வீடுகளில் அழைத்து காணிக்கை கொடுத்து அனுப்புகிறார்கள். அப்படி ஊழியம் செய்யப் புறப்பட்ட சுமார் 9 பேர்களை நான் அறிவேன். ஆனால் அவர்கள் யாரும் உண்மையுள்ளவர்கள் அல்ல என்பதை பிறகு அறிந்தேன்.

சில வருடங்களுக்குமுன் சுப்ரமணியன் என்ற பெயருள்ள ஒருவன் பிரமாண குலத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு உண்மையான விசுவாசியாகத்தான் வாழ்ந்து வந்தான். சென்னையிலும், கோவையிலும் பலர் அவனை அழைத்து வீடுகளில் ஜெபகூட்டம் வைத்து சாட்சி சொல்லவைத்து கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பினர். இந்த ருசி கண்டவுடன் வேலையை விட்டான். வீடுவீடாக சுற்றி திரிய ஆரம்பித்தான். என்னிடமும் வந்தான். என் வீட்டில் தங்கவைத்து ஆலோசனை கொடுத்து மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்துவாழ ஒரு பெரும் பணத்தொகை கொடுத்து அனுப்பினேன். வேலைக்கான ஏற்பாடும் செய்து கொடுத்தேன். ஆனால் மனைவியுடன் அவன் வரவில்லை. ஆனால் என்னிடம் அவன் பொய் பேசிவிட்டதை கண்டுபிடித்தேன். என் பெயரை உபயோகித்து சென்னையில் பல ஏமாற்று வேலைகளை அவன் செய்துவிட்டான். மறுபடியும் என் வீடுதேடி வந்தான். வீட்டுக்குள் சேர்க்கவில்லை. வாசற்படியில் நிற்கவைத்து ஆலோசனை கூறி திருப்பி அனுப்பினேன். ஒருமுறை பொய் பேசிவிட்டான் என்பதை அறிந்தவுடன் என் உள்ளத்தில் கோபமும்-வெறுப்பும் உண்டாகி அதை வெளிக்காட்டாமல் ஆனால் அவனுக்கு பணமும் கொடுத்து இனி வேலை ஏதும் தேடாமல் என்னிடம் வராதே - என் பெயரை மறுபடியும் யாரிடமாவது உபயோகித்தால் நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் என்று கூறி அனுப்பியதோடு, என் பத்திரிக்கையில் அவன் புகைப்படம், பெயர் ஆகியவைகளை எழுதி அறிவித்து இந்த பிராமண பையனை ஊக்கப்படுத்தாதீர்கள் என்று அறிவித்தேன். கிறிஸ்தவ விசுவாசிகளால்தான் அந்த நல்ல பிராமண பையன் கெட்டுப்போனான். வழிநடத்துதல் சரியாக இல்லாமல்போனால் உண்மையாக மனந்திரும்புபவர்கள்கூட கடவுளைவிட்டே தூரம் போய்விடுவார்கள்.


சகோ.தாயப்பன் அவர்களின் சிடி.

சகோ.தாயப்பன் என்பவர் நல்ல படித்த, உயர்குலத்தில் பிறந்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு சாட்சிகூற ஆரம்பித்தார். அவர் சாட்சி அநேக இந்துமக்களை தொட்டது. தனது சாட்சியை சிடியில் பதிய வைத்து வெளியிட்டார். ஆயிரக்கணக்கில் அது வாங்கி அதை புறமதஸ்தருக்கு விநியோகித்து அதையே ஒரு ஊழியமாக செய்தவர் ஏராளம். புலவர்.தெய்வநாயகம் ஆகியவர்களோடு தொடர்புகொண்டு இந்து வேதங்களை, திருக்குறளை ஆராய்ந்து அவைகளை விவரித்து நன்றாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஊழியமும் மிக நன்றாக நடந்து இவர் மூலமாக ஆயிரக்கணக்கில் இந்துக்கள் சந்திக்கப்பட்டனர்.

சுலோகங்களும், புராணங்களும் உபயோகிக்க ஆரம்பித்து அதுவே அவருக்கும் அவர் ஊழியத்துக்கும் பெரிய தடையாக மாறிவிட்டது.

இந்து வேதத்தை ஆராய்ச்சி செய்து, இந்து புராணங்களையும் ஆராய்ந்து ஒரு புது விளக்கங்களை இப்போது கூற ஆரம்பித்துவிட்டார். அதுதான் ஊழிய தடைகளை உண்டாக்க ஆரம்பித்துவிட்டது.


சைவமும் - வைணவமும் - கிறிஸ்தவமே!

சைவமும்-வைணவமும்-கிறிஸ்தவமே என்ற தலைப்பில் ஒரு புது சிடி ஒன்றை வெளியிட்டு அதை தான் செல்லும் இடமெல்லாம் அதைக்குறித்து பேச தொடங்கிவிட்டார்.

பிள்ளையார் (விக்னேஷ்வர்) - அது இயேசுவைத்தான் குறிக்கும்.
பிதா -குமாரன் - பரிசுத்த ஆவி - இவர்கள் திருமூர்த்திகள்.
முருகனும் - இயேசுவும் ஒருவரே!
முருகனுக்கு 12 கைகள் - இயேசுவுக்கு 12 சீஷர்கள்
சூலாயுதமும் - சிலுவையும் ஒன்றுதான்
அந்த காலத்தில் பிதாவை ஒப்பிட்டு சிவனை உருவாக்கினார்கள்.
பரிசுத்தாவியை ஒப்பிட்டு சக்தி-விஷ்ணுவை உருவாக்கினார்கள்.

இயேசு உருவம் - நிழல் முருகன், ஐயப்பன், பிள்ளையார், பிரம்மா இப்படி இயேசுவுக்கும் - இந்து தெய்வங்களுக்கும் ஒற்றுமையை உருவகப்படுத்தி பேசியிருக்கிறார்.

ஒருவர் அந்த சிடியை கேட்டுவிட்டு இயேசுதான் - முருகன், ஐயப்பன், பிள்ளையார், பிரம்மா என்றால் நான் ஏன் இயேசுவை வணங்கவேண்டும்? நான் முருகனை ஆராதித்து கிறிஸ்தவ வேதத்தில் உள்ள நல்ல காரியங்களை கடைபிடித்து ஒரு நல்ல இந்துவாகவே வாழ்ந்துவிட்டு போகிறேன் என்று கூறினார்.

இவர் கூறியதில் நியாயம் உண்டு.

  சகோ.தாயப்பன் அவர்கள் உயர்குலத்திலிருந்து இயேசுவை தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொண்டவரைக்கும் சரி. ஆனால் அதிக ஆராய்ச்சி அவரை பழைய மதத்துக்கே கூட்டிகொண்டு போய்விடுமே! பொதுவாக உண்மையான ஒரு இந்து மதத்தில் உள்ளவன் இந்து வேதத்தை மதிப்பான் - புராணத்தை இந்துக்களே ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே சரியான இந்து வேதங்களைமட்டுமே நம்புவான்.

  சகோ.தாயப்பன் மட்டுமல்ல, ஒரு காலத்தில் சகோ.சாது செல்லப்பாவும் இப்படிப்பட்ட புராண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டவர், இப்போது ஓரளவு தெளிவுப்பெற்றுவிட்டார். இப்படி பலர் இப்போது சரியான உபதேசத்தில் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இப்போது சகோ.தாயப்பனின் ஊழிய அலை தமிழகம் எங்கும் வீசுகிறது. ஆனால் தாயப்பனின் சாட்சியை நான் இதுவரை கேட்கவில்லை. ஆனால் அவர் சாட்சியை சரி என்கின்றனர். ஆனால் அதற்குபின் வெளிவந்து கொண்டிருக்கும் அவரின் இந்து புராண ஆராய்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்விட்டது. அது அவருடைய ஆத்துமாவுக்கே குழப்பத்தை உண்டாக்கும்.

அவருடைய சிடி இந்துமத நண்பர்களுக்கு கொடுக்கும்போது ஒருமுறை நீங்கள் போட்டு பார்த்து சரியானவைகளை கொடுங்கள்.


சத்தியத்தைத் தேடி - புதிய CD

சமீபத்தில் சத்தியத்தைத் தேடி என்ற குறும்படம் ஒன்று சக்கைப்போடு போடுகிறது. இந்து சமஸ்கிரத ஸ்லோகங்களை மிக அளவாக உபயோகித்து குறிப்பிட்ட கருத்துக்களுக்குமட்டும் சமஸ்கிருதத்தை உபயோகித்து அதை ஒரு கதையாக வெளியிட்டிருக்கிறார்கள். மிக அருமையாக இருக்கிறது.

சினிமா நடிகர் திரு.சாருஹாசன் அவர்களை மையமாக வைத்து மிக நன்றாக வசனத்தைவிட்டு வெளியேபோகாமல் ஒரு பிராமண குடும்பம் எப்படி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை வைத்து குறும்படமாக எடுத்துள்ளார்கள். அந்த குறும்படம் அநேக படித்த இந்து மதத்தினருக்கு நிச்சயம் பிரயோஜனப்படும. பல இந்துக்களின் உள்ளத்தில் நிச்சயம் கேள்விகளை எழுப்பும்.

ஆனால், இப்போது இந்த குறும்படம் திருட்டு சிடியாக பதிவு செய்து ஆயிரக்கணக்கில் சென்னை வீதிகளில் அமோக விற்பனையாகிறது. இதை அறிந்த அந்த படக்குழுவினரில் சிலர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த குறும்படத்தை (மொழிபெயர்ப்பு செய்து) டப் செய்து கொள்ளை லாபம் அடிக்க திட்டமிட்டுள்ளனர். இங்குதான் ஆபத்து பிசாசு ரூபத்தில் நிற்கிறது.

  அந்த குறும்படம் எடுத்தவர்கள் பிரமாண குலத்திலிருந்து உண்மையாக இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். தங்கள் பிரமாண குலத்தில் உள்ளவர் உண்மையை அறியவேண்டும் என்ற பெரும்பாரம் கொண்டு கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இப்போதும் கடனாளியாகவே இருக்கிறார்கள்.

ஆனால் திருட்டு சிடி எடுத்தவர்கள் சம்பாதித்த லாபத்தை சிலர் அறிந்தவுடன் ஊழிய சிந்தை மாறி, வியாபார சிந்தை வந்துவிட்டது. அந்த குறும்படம் எடுத்ததின் ஆழமான நோக்கம் மறைந்து போய்விடுமோ என்று பயத்தாலும், வேதனையாலும் இதை எழுதுகிறேன்.

சில சமயம் ஆராய்ச்சியும், சிந்தனையும், எதிர்ப்பார்த்தலும் எல்லை மீறிவிட்டால் கிறிஸ்து அங்கு இருக்கமாட்டார். வியாபாரமும், பணமும் மட்டுமே காணப்படும். அவர்கள் ஆத்துமா இயேசுவை விட்டே தூர தூர போய்விடும். ஜாக்கிரதை!


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM