ஏஞ்சல் (ANGEL) TV யின்
பிழையான - ஆபத்தான உபதேசம்
ஏஞ்சல் டிவியில் 4.5.2012 அன்று காலை 8.15 மணிக்கு
'நாபா சுனாகோ' நிகழ்ச்சிகள்

  சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் கூறியது: தீர்க்கதரிசி ஆத்துமாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு சரீரத்துக்குள் போகலாம். ஆத்துமாவில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டேன் என்று கூறிய பவுலுக்கும், இயேசுவுக்கும் இப்படிப்பட்ட அனுபவம் உண்டாகும்போது எனக்கு ஏன் அதே அனுபவம் உண்டாகக்கூடாது என்று ஒருநாள் யோசிக்க ஆரம்பித்தேன்.

அந்த நாட்களில் சாதுசுந்தர் சிங் இயேசு கிறிஸ்துவை முகமுகமாக தரிசித்தார் என்று வாசித்தேன். ஏன் எனக்கு அதே அனுபவம் உண்டாகக்கூடாது என்று யோசித்தேன். சாதுசுந்தர் சிங் பரிசுத்தர் அதனால் இயேசுவைப் பார்த்தார். நான் அப்படிப்பட்டவன் இல்லை (அதாவது பரிசுத்தன் இல்லை). ஆனாலும் நானும் அவரைபோல மனிதன்தானே. மனிதனுக்குரிய உரிமை எல்லாருக்கும் ஒன்றுதான்.

இயேசு மனிதனாக வந்தார். ஒரு இடத்தில் அவரை கொல்ல சிலர் முயன்றபோது அவர் மறுரூபமானார். அதன்பிறகு அவர் வேறு இடத்தில் காணப்பட்டார் என்று எழுதியுள்ளது. அந்த அனுபவம் அவரைப்போல மனிதனாகிய எனக்கு ஏன் உண்டாகக்கூடாது என்று யோசித்தேன். இதுதான் ஆவிக்குரிய அனுபவம் என்பதாகும். இந்த அனுபவத்தை ஒவ்வொரு விசுவாசியும் பெற்றுக்கொள்ளமுடியும்.

  இந்த சம்பாஷனைகளுக்கிடையே சகோ.வின்சென்ட் செல்வகுமார் கூறுகிறார்?: நாசரேத் பற்றி இப்போது ஒரு புத்தகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அந்த காலத்தில் நான் எருசலேம் போனதில்லை. ஆனால் இப்போது நான் ஆத்துமாவில் எருசலேம் சென்றேன். அதுவும் இப்போது காணப்படும் நாகரீகம் அடைந்த எருசலேம் நகரத்துக்கு அல்ல. இயேசு வாழ்ந்த கால எருசலேமுக்குள் நுழைந்தேன். நான் விரும்பியபடி நாசரேத்துக்குள்ளும் சென்றேன். நான் எழுதும் புத்தகத்துக்கு அந்த காலத்திலிருந்த நாசரேத் ஊரின் கட்டிட அமைப்பு, கட்டிடக்கலை எப்படி இருந்தது என்பதை ஆத்துமாவில் போய் நானே நேரில் பார்த்தேன். சுவர் அகலம், சுவர் கட்டப்பட்ட கலவை அக்கால நாகரீக அமைப்பில் நாசரேத் எப்படி கட்டப்பட்டது என்பதையெல்லாம் அறிந்தேன். அதை அப்படியே புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆபிரகாம், எலிசா, எலியா, யோவான் இவர்கள் யாவரும் மனிதர்களே, நானும் மனிதன்தான். அந்த மனித உரிமை, அதிகாரம் எனக்கும் வேண்டும் என்று எனக்குள்ள உரிமையோடு ஆசைப்பட்டேன். அப்படிதான் எனக்கு பல காரியங்கள் ஆத்துமாவில் எடுத்துக்கொள்ளப்பட்டு காட்டப்பட்டது.

இப்படி இவர் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது வின்சென்ட் - சாது செல்வராஜ் ஆகியவர்களின் முன்பாக உட்கார்ந்துள்ள 5 பேர்களில் ஒரு சிறு வாலிப பெண் சொல்கிறார். நானும் இதே அனுபவத்தை பெற்றிருக்கிறேன். எலியா எடுத்துக்கொள்ளப்படும்போது அவர் மேலிருந்த சால்வை கீழே விழுந்ததை ஆத்துமாவில் நேரில் கண்டேன். எலிசாவின் மேல் விழுந்ததைப்போல் என்மேலும் அந்த சால்வை விழுந்தது. நான் சன்டே ஸ்கூல் நடத்திக்கொண்டு ஊழியம் செய்கிறேன். அந்த எலியாவின் சால்வை என்மேல் விழுந்த அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது உண்மையா? அதன்மூலம் என் சன்டே ஸ்கூல் பிள்ளைகளுக்கு நானும் அற்புதம் செய்யமுடியுமா? அப்போது உடனே சாதுசெல்வராஜ் அந்த பெண்ணை பார்த்து கேட்டார், நீங்கள் பார்த்தது உண்மைதானே? ஆம். உண்மை!. அப்படியானால் ஏன் சந்தேகப்பட்டீர்கள்?. உங்கள் அனுபவம் உண்மையானது ஆகும். சந்தேகப்பட வேண்டாம் என்றார். அப்போது வின்சென்ட் செல்வகுமார் கூறுகிறார். இப்படிப்பட்ட அனுபவங்கள் எல்லாருக்கும் கிடைக்கும் காலம் இது. அதை நீங்கள் சந்தேகப்படகூடாது. உங்களுக்கு ஏற்பட்ட அந்த அனுபவம் உண்மையானது. அன்று அந்த ஏஞ்சல் டிவியில் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 3 வாலிப பிள்ளைகள் பேசுகிறார்கள். நேற்று ஒரு தூதன் என்னிடம் வந்து பேசினான். உடனே மற்றொரு பெண் சொன்னாள். நேற்று இரவு கர்த்தரும் என்னிடம் நேரிடையாக பேசினார். இதன் அர்த்தம் என்ன?. இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த நிகழ்ச்சிகள் முடிகிறது. ஏஞ்சல் டிவி மூலம் இதை நடத்துபவர்கள் டிவியை பார்க்கும் பலரை பைத்தியம் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து இந்த நல்ல டிவி மீடியாவையும், இவர்கள் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் வாலிபர்களையும் கர்த்தாவே காப்பாற்றுங்கள் என்று நாம் யாவரும் ஜெபிப்போம்.


ஆவிகள் உலகில் சஞ்ஜரிப்பது - மரித்தவர்கள் நம்மை சந்திப்பது:

15.5.2012 செவ்வாய் காலை 7.15 மணி நிகழ்ச்சிகள்: சம்பாஷணைகள் கேள்விகள் கேட்பது, கடந்த வாரம் ஏஞ்சல் டிவியில் கண்ட அதே 5 வாலிப பிள்ளைகளின் சம்பானைகள் - பதில் கூறுவது - வின்சென்ட் செல்வகுமார் - சாது சுந்தர் செல்வராஜ் ஆகிய இருவர் மட்டும். இம்முறை பெரும்பாலான கேள்விகளுக்கும் வின்சென்ட் செல்வகுமார்தான் பதில் கூறுகிறார். இடையிடையே சாதுசுந்தர் செல்வராஜ் சம்பாஷனையின் குறுக்கே புகுந்து தன் அனுபவத்தை கூறுகிறார். இடையிடையே சாதுசுந்தர் செல்வராஜ் அர்த்தமில்லாத சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது அருகில் உள்ள வின்சென்ட் செல்வகுமாருக்கும் பெரும் சலிப்பும், சங்கடத்தையும் உண்டாக்குகிறதை கவனிக்க முடிகிறது. எப்படியோ அவர் சகித்துக்கொண்டு, அவர் தவறாக பேசியதையும் சாமர்த்தியமாக சமாளிக்கிறார் என்றாலும் வின்சென்ட் செல்வகுமாரும் பிழையான பதிலைத்தான் அந்த வாலிப பிள்ளைகளுக்கும் அந்த டிவி சேனலை பார்ப்பவர்களுக்கும் அறிவிக்கிறார்.

வாலிப பிள்ளைகளின் கேள்வி: மரித்துப்போன பரிசுத்தவான் ஒருவர் எனக்கு உதவுவதாக அறிந்தேன். அது கனவா? தரிசனமா என்று விளங்கவில்லை?.

வின்சென்ட் செல்வகுமாரின் பதில்: மரித்துப்போன பரிசுத்தவான்கள் இந்த பூலோகத்தில் அடிக்கடி வந்துப்போவர்கள். அவர்கள் நமக்கு ஆலோசனை கூறுவார்கள். இந்த அனுபவம் உண்மைதான். வின்சென்ட்செல்வகுமாராகிய ச் பேசியிருக்கிறேன். அந்த மரித்துப்போன ஆவிகள் முழு உருவத்தோடு வந்து அநேக ரகசியங்களை என்னோடு பேசியிருக்கிறது.

சாதுசுந்தர் சிங்

இப்படி வின்சென்ட்செல்வகுமார் பதில் அளிக்கும்போது சாதுசுந்தர் செல்வராஜ் சம்பாஷனையின் குறுக்கே புகுந்து கூறுகிறார். அநேக ஆண்டுகளுக்கு முன் என்னை கர்த்தர் சாதுசுந்தர் சிங் என்ற பக்தனின் ஊழியத்தை நீதான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார். அந்தப்படியே நான் திபெத்தில் ஊழியம் செய்யும்போது அநேகமுறை அந்த தெய்வ மனுஷனாகிய சாதுசுந்தர் சிங் அவர்கள் மனித சரீரத்தில் என்னோடுகூட நடந்து வருவதைக் கண்டேன். டுரீஸ்ட் கைடுபோல கை நீட்டி திபெத்தின் ஒவ்வொரு இடத்தையும் எனக்கு சுட்டிக்காட்டி பல விஷயங்களை எனக்கு விவரித்து கூறுவார். மனுஷனைப்போல கூடவே என்னோடு உட்கார்ந்து பேசுவார், நாங்கள் இருவரும் நடந்துக்கொண்டே பேசிக்கொண்டு போவோம். பலமுறை மரித்த சாது சுந்தர் சிங் ஐயா தன் சரீரத்தோடு என்னோடு தங்கி, என்னோடு பிரயாணம் செய்து என் ஊழியத்தில் பல விதங்களில் உதவினார் என்று கூறிக்கொண்டிருந்தார்.

உடனே வின்சென்ட்செல்வகுமார்: ஆம். இந்த கடைசிக்காலங்களில் மரித்துப்போன பரிசுத்தவான்களின் ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொள்ளும் அனுபவம் மிக சிறந்தது ஆகும். இதுதான் ஆவிக்குரிய அனுபவம் என்பதாகும். அப்படியே தூதர்களும் நமக்கு நேரிடையாக வந்து உதவுவார்கள். ஆனால் அவர்கள் வெறும் ரோபோட் மாதிரித்தான் இயங்குவார்கள். தேவன் எதற்கு அவர்களை நம்மிடம் அனுப்பினாரோ அதைப்பற்றி மட்டும் கூறிவிட்டு போய்விடுவார்கள். வேறு தனிப்பட்ட ஆலோசனையோ, அபிப்ராயங்களோ தூதர்கள் கூறமாட்டார்கள். அவர்களுக்கு அபிப்ராயங்கள் கூறவும் தெரியாது!.

ஆனால், அதேசமயம் மரித்துப்போன பரிசுத்தவான்கள் மூலமாக கர்த்தர் நிறைய காரியங்களை நமக்கு சொல்லி அனுப்புவார். அவர்களும் நம்முடைய ஊழியத்தில், நம் வாழ்க்கையில் பல நல்ல ஆலோசனைகளை நமக்கு கூறுவார்கள். அப்படித்தான் நானும் ஆத்துமாவில் சஞ்சரிக்கும் அனுபத்தை பெற்று மரித்துப்போன பரிசுத்தவான்களோடு மணிக்கணக்காகபேசி பல தேவ ரகசியங்களை அறிந்தேன். அதன்பின்தான் நான் இப்போதுள்ள இந்த விசேஷ அனுபவத்தை பெற முடிந்தது என்று கூறி முடிக்கிறார்.

இயேசுவின் தொனி மே 2012 பக்கம் 7,10):
  அந்நியபாஷை என்பது பரலோகத்தில் உள்ள ஆவிகளின் மொழியாக இருக்குது. அந்நியபாஷை ஆவிகள் பேசுகிற பாஷை இது வின்சென்ட் செல்வகுமார் கூறும் விளக்கம். பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள், ஊழியர்கள், விசுவாசிகள் இவர் கூறும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? அந்நியபாஷை என்பது ஆவிகள் பேசும் பாஷை என்றால் அது பிசாசின் ஆவிதானே! என்ன மோசமான உளறல் இது?.

  எங்காவது எக்காளம் பேசுமா? ஆனால் பரலோகத்தில் பேசும் வெளி 1:10 ஒரு குரலை கேட்டேன் என்று யோவான் கூறி அவர் திரும்பி பார்த்தால் அங்கு எக்காளம் இருக்கிறது. பரலோகத்தில் எக்காளம் பேசுகிறது. இதை வாசிக்கும் வாசகர்களே கொஞ்சம் வேதத்ததை எடுத்து வின்சென்ட் குறிப்பிட்ட வசனத்தை வாசியுங்கள். வெளி 1:10. இதில் எக்காளம் பேசியதாகவா எழுதியுள்ளது. எக்காளம் சத்தம் போன்ற பெரிதான சத்தத்தைக் கேட்டேன் என்றுதான் எழுதியிருக்கிறது. எக்காளம் பேசியதாக எழுதப்படவில்லையே! ஏதேனில் ஏவாளை வார்த்தையை மாற்றிபோட்டு ஏமாற்றினானே! நம்ப வைத்தானே! அதைப்போன்று வின்சென்ட் செல்வகுமார் கூறியதும் அமைந்துள்ளது.


அன்பான ஜாமக்காரன் வாசகர்களுக்கு:

கடைசி காலத்தில் கள்ள உபதேசங்களும், பொய்யான தீர்க்கதரிசிகளும் எழும்புவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறியது இப்போது மேலே வாசித்த தவறான உபதேசங்கள்மூலம் தெளிவாகிறது. இந்த ஏஞ்சல் டிவியை பார்க்கும் எத்தனைப்பேர், எத்தனையோ வாலிபர்கள் இப்படிப்பட்ட கற்பனை கதைகளை பொய் செய்திகளை கேட்டு ஏமாற்றப்படுகிறார்கள். இது வரவர மிகவும் அதிகமாகிக்கொண்டேபோகிறது.

சகோ.சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட்
செல்வகுமார், மோகன் சி.லாசரஸ்

நானே ஏஞ்சல் டிவியில் இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்த்ததால்தான் இவர்களின் முட்டாள்தானமான சம்பாஷைகளைக்குறித்து எழுதினேன். பல மாதங்களுக்கு முன்பே ஏராளமான வாசகர்கள் ஒவ்வொரு நாளும் அவர்கள் ஏஞ்சல் டிவியியைப் பார்த்துபோது கண்டதும் - பார்த்ததுமான விஷயங்களை ஏராளமாக தங்கள் மொபைலில் பதிவுசெய்து எனக்கு அறிவித்தார்கள். அவைகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது. இப்படியும் வேத வசனங்களுக்கு ஒரு பைத்தியகார விளக்கம் யாராவது கூறுவார்களா? இதை நம்பவும், இந்த ஊழியங்களை தாங்கவும் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறதே! என்ன செய்வது? இப்போது நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களும் இதே போன்ற தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் அறிவிக்க இவர்களோடு சேர்ந்து கூட்டணி வைத்துள்ளார்கள். புதிய கூட்டணி எத்தனை நாள் நீடிக்குமோ தெரியாது?

  திருப்பத்தூரில் சகோ.சாம் ஜெபதுரை அமைத்த கூட்டணியில் அக்கினி இறக்கும் பிழையான ஊழியத்தை இவர் செய்து சலித்துப்போனவர். இப்போது இவர் பொய்யான தீர்க்கதரிசினத்தை கூறுபவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது - பொய்-பொய்யோடு இணைக்கிறது என்பதை தெளிவாக ஆவிக்குரியவர்களுக்கு காட்டப்பட்டுவிட்டது. இதை நான் எழுதுவதற்கு முன் மோகன் சி.லாசரஸ் ஊழிய ரசிகர்களும் அவர் ஊழியத்தை தாங்குகிறவர்களுமே இந்த புதிய கூட்டணியை விரும்பவில்லை அவர்களே இவ்விவரங்களை எனக்கு எழுதி அறிவித்ததின் மூலம் மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு வர தொடங்கிவிட்டது என்று உணரமுடிகிறது.

இப்போது சகோ.மோகன் சி.லாசரஸ் ஜெபத்தில் பெயர், வியாதிகளை கூறி அழைத்தது. கர்த்தர் காட்டியது அல்ல - அது பொய்யான வெளிப்பாடு என்று ஏராளமானவர்கள் உணர்ந்துவிட்டனர்.

  அனனியா-சப்பிராள் விசுவாசிகள்தான். ஆனால் பொய் பேச, அதுவும் ஆவியானவருக்கு விரோதமாக பொய் பேச ஒன்றாக இணைந்தார்கள். அதைப்போலவே ஏஞ்சல் டிவியின் பொய் தீர்க்கதரிசன கூட்டணியில் போய் மோகன் சி.லாசரஸ் இணைந்துவிட்டார். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதைப்போல் ஒருவர் பேசும் பொய் மற்றவர்கள் நன்றாக அறிவார்கள். அதை வெளிக்காட்டாமல் பிசாசின் திட்டத்துக்கு ஒன்றிணைந்து இவர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட TV விளம்பரங்கள் சகோ.சாம்ஜெபதுரையின் திருப்பத்தூர் கூட்டணியில் இல்லை. ஆகவே திருப்பத்தூரைவிட்டு அதாவது சகோ.சாம் ஜெபதுரையை விட்டு சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் கொஞ்சகொஞ்சமாக விலகி ஏஞ்சல் TVயுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். வின்சென்ட் செல்வகுமார் - சாது சுந்தர் செல்வராஜ் தங்கள் பொய் வெளிப்பாடான, சிங்கம், கழுகு போன்ற உருவங்கள், மேலும் வானத்திலிருந்து விழும் இயேசுவின் இரத்தம், செத்துப்போன விசுவாசிகள் தினசரி வந்து இவர்களுக்கு ஆலோசனை தருவது, இவர்கள் குருவான D.G.S.தினகரன் இல்லாத பரலோக கமிட்டியும், வெள்ளைக்குதிரை வருவது, மஞ்சள் குதிரை வருவது, தேவ தூதர்கள் வந்துபோவது. இப்படிப்பட்ட ஏராளமான பொய்களுக்கு இவைகள் யாவும் உண்மை இவர்களுக்கு சான்றிதழ் (சர்ட்டிபிகட்) கொடுக்க, பிரபலமான ஒரு ஆளைத்தேடினார்கள். இவர்கள் வலையில் மோகன் சி.லாசரஸ்தானே வந்துவிழுந்தார். கர்த்தர் எங்களுக்கு சொன்னார் என்று இவர்கள் சொல்ல, அவரும் கர்த்தர் இதையேதான் எனக்கும் காட்டினார் என்று கூறி ஏஞ்சல் டிவி மூலம் இவர்கள் தீர்க்கதரிசனம் கூற ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இது நீடிக்காது என்பது வேறு விஷயம். ஆனால் இப்போதைக்கு கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக ஏஞ்சல் TV பார்ப்பவர்களுக்கு பெரிய விசுவாச ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. ஜாக்கிரதை!.

ஆவி உலகம் - ஆவிகளுடன் பேசுவது எப்படி? என்ற தலைப்பில் மந்திரவாதிகள் மாதிரியுள்ளவர் எழுதிய புத்தகங்கள் இப்போது கடைகளில் விற்கப்படுகிறது. இவைகளை இவர்கள் வாங்கி வாசித்து இந்த புத்தகத்தில் எழுதியபடி அதை அப்படியே ஆவியானவர் கூறினார் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி மரித்த பரிசுத்தவான்கள் நமக்கு பல விதங்களில் உதவமுடியும் என்ற புதிய ஆபத்தான உபதேசத்தை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கை!

சரி, இப்போது ஜாமக்காரன் வாசகர்கள் செய்யவேண்டியது என்ன? உடனே வேதம் இவர்கள் கூறியதைக்குறித்து என்ன சொல்லுகிறது என்பதை வசனத்துடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.

  ஒருவன் போதித்தால் தேவனுடைய வசனத்தின்படி போதிக்கவேண்டும். 1பேதுரு 4:11.

  உன்னைக்குறித்தும் உன் உபதேசங்களைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு. 1 தீமோ 4:16.

  ஆவிகள் அநேகம் நிதானித்து அறியுங்கள். நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1யோ 4:1.

  பிள்ளைகளே, இது கடைசிகாலமாயிருக்கிறது! .................. அனேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள்.(ஜாக்கிரதை!). 1யோ 2:18.

  அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2 கொரி 2:11,12.

  (மேலே குறிப்பிட்டவர்கள் யாவரும்) கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல் தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். பிலி 2:21.

மரித்தவர் நம்மோடு பேசமுடியுமா?
   மரித்தவர் நமக்கு உதவமுடியுமா?
   மரித்தவர் பூமிக்கு வந்து ஏஞ்சல் டிவி பொய் கூட்டணியினருடன் பேசுவதுபோல பேசமுடியுமா?

வேதம் என்ன சொல்லுகிறது:
பிரசங்கி 9:5, சங் 88:10, யோபு 14:14 இந்த வசனங்கள் இன்னும் பல வசனங்களும் மரித்தவர்கள் எந்த கிரியையும் செய்யமுடியாது. மரித்தவர் உலத்துக்குள் வரமுடியாது என்பதை இந்த வசனங்கள்மூலம் அறிகிறோம். பரலோகத்துக்கும்-நரகத்துக்கும் போய்வந்த ஒரே ஒருவர் இயேசுகிறிஸ்து மட்டும்தான். அதை லாசரு-ஐசுவரியவான் உதாரணம் மூலம் தெளிவாக கூறினார். மரித்த பரிசுத்தவான் அல்லது பரதேசியிலுள்ள பரிசுத்தவான் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருநாளும் உலகத்துக்குள் மறுபடியும் போய்வர முடியாது என்றார். அதனால்தான் மரித்த பரிசுத்த மரியாள், St.பேதுரு, அந்தோணியார், அருளப்பர் இப்படிப்பட்டவர்களோடு நாம் விண்ணப்பம், ஜெபம் ஏறெடுக்கக்கூடாது. இவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்களானாலும் இவர்கள் யாவரும் செத்துப்போனவர்கள் ஆவர். அவர்களோடு பேசி பிரயோஜனமில்லை. அவர்களும் நமக்காக வேண்டுதல் செய்யமுடியாது. ஆனால் இயேசுகிறிஸ்து மரித்தவர். ஆனால் உயிரோடு எழுந்தவர் - இப்போதும் உயிரோடு இருக்கிறவர். ஆகவேதான் அவரோடு நாம் பேசுகிறோம், ஜெபிக்கிறோம். மேலும் நமக்காக பரிந்துப்பேச இடைதரகர் (மீடியேட்டர்) யாரும் நமக்கு தேவையில்லை. மரியாளும் நமக்காக பரிந்துப்பேசமுடியாது. ஆனால் இயேசுகிறிஸ்து நமக்காக பரிந்துபேசுகிறவராக இருக்கிறார் என்று 1 தீமோ 2:5,6 வசனம் கூறுகிறது. மேலும் மரித்துப்போன ஆவிகளோடு யாரும் பேசக்கூடாது என்று பிதாவும் திட்டமாய் அறிவித்து இருக்கிறார், கண்டித்துமிருக்கிறார்.

  உபா 18:11, லேவி 19:26,31, 2 நாளா 33:6, ஏசா 57:3. இத்தனை வசனங்கள் மூலமாக இவைகளைக்குறித்து ஆவியானவர் நம்மோடு பேசியுள்ளார். செத்துப்போன ஆவிகளோடு (செத்துப் போனவர்களோடு) ஏன் பேசக்கூடாது. காரணம் அது செத்துப்போன ஆவியல்ல! செத்துப்போனவர்கள் பூமிக்கு வரவேமாட்டார்கள். ஆனால் செத்துப்போனவர்களின் ரூபத்தில் பிசாசுகள் வரும். இதை ஜனங்கள் அறியாமல் அது செத்துப்போன ஆவி என்று ஏமார்ந்து விடுகிறார்கள், ஆகவேதான் செத்துப்போன ஆவிகளோடோ அல்லது செத்துப்போனவர்கள் என்று கூறிக்கொண்டு வருகிற பரிசுத்தவான்களோடோ பேசுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கர்த்தர் கோபத்தோடு ஏசுகிறார்.

  தயவுசெய்து செத்துப்போன பரிசுத்தவான்களோடு தொடர்புக்கொள்ளும் பொய்களை பேசும் ஏஞ்சல் TVயின் இந்த மூவரணியுடன் தொடர்புக்கொள்ளவேண்டாம். இவர்களை உற்சாகப்படுத்தவேண்டாம் என்று உயிரோடு இருக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாசகர்களோடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேலே கூறப்பட்ட மூவரும் பொய்யர்கள் என்று நமது பரிசுத்த வேத வசனத்தோடு ஒப்பிட்டு பகிரங்கமாக அறிவிக்கிறேன். இவர்கள் பகிரங்கமாக தெய்வபயம் இல்லாமல் தமிழ் கிறிஸ்தவ மக்களை வசனத்தைவிட்டு விலக்கும் அளவு தங்கள் TVயை பயன்படுத்தி தவறான நிகழ்ச்சிகள் மூலம் கிறிஸ்துவர்களை இவர்கள் பகிரங்கமாக கெடுக்கும்போது நான் இவர்களை பொய்யர்கள், CULT, கள்ளஉபதேசம் செய்பவர்கள், கள்ள தீர்க்கதரிசிகள் என்று ஜாமக்காரனில் எழுதி ஏன் நான் என் வாசகர்களை எச்சரிக்கக்கூடாது? அதுவும் என் மனித உரிமைதான்.

  இதை வாசிக்கும் பெரிய அனுபவம் வாய்ந்த பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள், வசன அடிப்படையில் உபதேசிக்கும் பிரசங்கிமார்கள், பிஷப்மார்கள், நல்ல ஆவிக்குரிய ஆயர்கள் ஏன் தங்கள் அபிப்ராயத்தை இவர்களுக்கு எழுதி அறிவிக்கக்கூடாது? அல்லது உங்கள் சபையில் விசுவாசிகளுக்கு அறிவிக்கலாமே! அல்லது அறிக்கை எழுதி விநியோகம் செய்யலாம். இல்லாவிட்டால் இவர்கள் உபதேசம் தவறு என்பதைக்குறித்து விளக்கம் எழுதி எனக்கு அனுப்புங்கள் நான் அதை ஜாமக்காரனில் வெளியிடுகிறேன். இவர்களின் ஊழியம் மிகப்பெரிய விசுவாச அழிவை கிறிஸ்தவ சபைக்குள் உண்டாக்கப்போகிறது என்று நீங்கள் அறிந்தும் வாய்மூடி மௌனமாக இருந்தால் நீங்கள் எல்லாரும் கர்த்தருக்கு கணக்கு கொடுக்கவேண்டிவரும்!

  ஏஞ்சல் டிவியை நடத்துகிறவர்கள், அவர்களின் சம்பாஷனை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர்களின் பின்னால் சாட்சியில்லா நிகழ்ச்சிகள் பல உண்டு. இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுகிறிஸ்துவை தரிசிக்கமுடியும். இவர்கள் எப்படி பரலோகம் போகமுடியும், தூதர்களுடன் பேசமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

  மோசே, எலியா, யோவான், ஆபிரகாம் இயேசுகிறிஸ்து ஆகியவர்கள் அடிக்கடி தன் வீட்டிலுள்ள சோபாவில் மனுஷசரீரத்தில் வந்து உட்கார்ந்து மணிக்கணக்காக பேசுவார்கள். இது அடிக்கடி என் வீட்டில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி என்று சாது செல்வராஜ் கூறுகிறார். வேதம் அறிந்த கிறிஸ்தவ விசுவாசிகள் இதை நம்புகிறீர்களா? இவர் துணிந்து பேசும் இப்படிப்பட்ட கதைகளை பொய் என்று கூறாமல் வேறு எந்த வார்த்தையை பயன்படுத்துவது நீங்களே கூறுங்கள். மேலும் இந்த ஏஞ்சல் TV நிகழ்ச்சி மூலம் உங்கள் சபை வாலிபர்களும், வாலிபபெண்களும் மரித்தவர்களோடும், தூதர்களோடும் பேசி உங்கள் சபையையே குழப்பி - பாஸ்டர், ஆயர், மேய்ப்பர் உங்கள் எல்லோரையும் ஆவியில்லாதவர்கள் என்று சபை மக்கள் சொல்லும்படி செய்துவிடுவார்கள். ஜாக்கிரதை! இவர்கள் மூவரைப்பற்றி நான் செய்த விமர்சனத்தில் தவறு ஏதும் கண்டால் உடனே வசன அடிப்படையில் எனக்கு எழுதுங்கள். நான் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். தயவுசெய்து கிறிஸ்தவ சபைமக்களை இந்த மாதிரி டிவி நிகழ்ச்சி நடத்துபவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.


மேலே வாசித்த ஏஞ்சல் டிவி நிகழ்ச்சிக்கான
ஜாமக்காரனின் விமர்சனம்:

சாதுசுந்தர் செல்வராஜ் கூறுவது: ஒரு ஆத்துமாவிலிருந்து மற்றொரு சரீரத்துக்குள் போவது என்பது கூடுவிட்டு கூடு பாய்வது என்ற இந்துமத அனுபவம் ஆகும். இது கிறிஸ்தவ வசனத்துக்கு விரோதமான மிகவும் பிழையான அனுபவம். அப்படியே பரலோகம் போகும் அனுபவம் என்பதும் பிழையான அனுபவமாகும். இது ஒரு மனிதனை கர்த்தருக்கு சமமாக உயர்த்தும் அனுபவம் ஆகும். லூசிபர் தூதன் பிசாசாக மாறி பரலோகத்திலிருந்து கர்த்தரால் கீழே தள்ளப்பட காரணமாக இருந்தது, அவன் தன்னை கடவுளுக்கு சமமாக உயர்;த்த ஆசைப்பட்டதுதான்.

லூசிபர் தூதன்(பிசாசு) கூறியதாவது:
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்.

நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று நீ உன் இருதயத்தில் சொன்னாயே! அதனால் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டு போனாய். ஏசா 14:14,15. வசனங்களில் கர்த்தர் கூறினார். தேவன் தம் நாம மகிமைக்காக ஒரு சிலருக்கு அவர்களை விசேஷ அனுபவங்கள் வழியாக நடத்துகிறார். குறிப்பாக எலியா, ஏனோக்கு போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனுபவங்களில் ஆண்டவருக்கு ஒரு நோக்கம் உண்டு. இந்த அனுபவம் எல்லாருக்கும் கொடுக்கப்படும் அனுபவம் இல்லை. இதை நாம் யாருக்கும் உபதேசிக்கக்கவும் கூடாது. யோ 3:13ல் மனுஷகுமாரனே (இயேசுகிறிஸ்துவே)யல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

யோவானுக்கு கடைசிக்காலத்தில் சம்பவிக்கப்போவதைக்குறித்து அறிவிக்க "அவனை ஆவியில் நிறைத்து!" என்று வேதம் கூறுகிறது. (ஏற்கனவே யோவான் பரிசுத்த ஆவியில் நிறைக்கப்பட்டவன்தான் என்பதை கவனிக்கவும்) சில முக்கிய விஷயத்தின்போது ஸ்தேவனை நிறைத்ததுப்போல யோவானையும் விசேஷமான முறையில் ஆவியில் நிறைத்து கர்த்தர் பல இரகசியங்களை வெளிப்படுத்தி காண்பித்து முடித்துவிட்டார். இனி கர்த்தர் மனிதனுக்கு வெளிப்படுத்த ஒன்றும் இல்லை. இனி வேதத்தில் கூறாத புதிய விஷயம் எதையும் ஊழியர்கள் தரிசனமாக காணவும், கூறவும் ஒன்றும் இல்லை.

  பவுல் மூன்றாம் வானம்வரை எடுத்துக்கொள்ளப்பட்டார். இதைக்குறித்து பவுல் கூறும்போது தன் பெயர் குறிப்பிடாதபடி அந்த சம்பவத்தை விளக்குவதை கவனியுங்கள். ஆனால் சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி.லாசரஸ் இந்த கூட்டணியினர் அடிக்கடி தங்கள் பொய்யான அனுபவங்களை கூறும்போது உலக மக்கள் தங்களை மதிக்கவும் தங்களைப்பற்றி உயர்வாக சிந்திக்கவும் வேண்டி இவர்கள் தங்கள் தவறான அனுபவத்தை அறிவிக்கிறார்கள். என்னை நான் கிள்ளிப்பார்த்தேன் என்று வேறொரு இடத்தில் இதே சம்பவத்தைப்பற்றி கூறுகையில் சாதுசுந்தர் செல்வராஜ் விவரிக்கிறார். இந்த உன்னத அனுபவம் உண்மைதான் என்பதை மக்கள் அறியவேண்டி தன் சரீரத்தை கிள்ளிப்பார்த்தேன் என்கிறார். அதாவது நானே என் சுயசரீரத்தில் பரலோகம் போனேன் என்று கூற நினைக்கிறார்.

ஆனால் பவுல் கூறுவதை கவனியுங்கள். அவரின் அனுபவத்தில் தன் பெயர் குறிப்பிடாமல் ஒருவன் என்று தன்னையே குறிப்பிடுகிறார். அதுவும் அவன் சரீரத்தில் இருந்தானா! சரீரத்திற்குப் புறம்பாயிருந்தனோ? அதை அறியேன். ஆனால் தேவன் அறிவார் என்று இரண்டுமுறை பவுல் கூறுகிறார். (2 கொரி 12:2,4). ஆனால் ஏஞ்சல் டிவியின் இந்த மூன்று ஊழியர்களும் கூறுவதென்ன? என் சரீரத்தை கிள்ளிப்பார்த்தேன். அதாவது தான் சொந்த சரீரத்தில்தான் பரலோகம் போய் வருகிறேன் என்கிறார்கள். மேலும் பவுல் 2 கொரி 12:4,6 வசனத்தில் கூறுவதென்ன? 6 வசனம் "ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும் என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படி செய்யாதிருப்பேன்" என்கிறார். என்ன ஒரு தாழ்மை! ஆனால் நம் டிவி ஊழியர்கள் வால்போஸ்ட் அடித்து விளம்பரம் செய்வதைப்போல் டிவியில் தங்களை பரலோகவாசிகள் தினசரி போய்வருவதைப்போல் காண்பிக்கிறார்கள்.

இதில் இவர் இயேசுகிறிஸ்து பரலோகம் போவதை ஒப்பிட்டு தான் ஏன் இயேசுவைப்போல பரலோகம் போய்வரகூடாது என்று இயேசுகிறிஸ்துவும் தன்னையும் சமமாக்கி கேள்வி கேட்கிறார்.

  மேலே வாசித்ததுபோல சாதுசுந்தர் செல்வராஜ் இயேசுவை நான் ஏன் முகமுகமாக பார்க்கக்கூடாது! என்கிறார். சாதுசுந்தர் சிங் பார்க்கும்போது நான் ஏன் பார்க்கக்கூடாது என்கிறார். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை காணமுடியாது என்று வேத வசனம் குறிப்பிடுகிறது. அந்த வசனத்தை மீறி மனித உரிமையை இங்கே கொண்டுவருகிறார். சாதுசுந்தர் சிங் என்ற தேவ மனுஷனும் மனிதர்தான், சாது செல்வராஜாகிய நானும் ஒரு மனிதன்தான். மனிதனுக்குரிய உரிமை எல்லாருக்கும் ஒன்றுதானே என்கிறார். என்ன ஒரு அபத்தம் இது?

மேலும், அவர் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவை ஒரு கட்டத்தில் கல்லெரிந்து கொல்லப்பார்க்கிறார்கள். அப்போது இயேசு அங்கிருந்து மறைந்துப்போனார். பிறகு இயேசுகிறிஸ்து வேறு ஒரு இடத்தில் காணப்பட்டார் என்று எழுதியுள்ளது. இயேசுவும் மனிதன் - நானும் ஒரு மனிதன் இயேசுவுக்கு ஏற்பட்ட அந்த அனுபவம் ஏன் எனக்கு உண்டாகக்கூடாது என்று யோசித்தேன் என்கிறார்.

என்ன தைரியம்! இயேசுகிறிஸ்து யார்? சாதுசுந்தர் செல்வராஜ் யார்? யார் யாரோடு ஒப்பிடுவது? இது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டப்படி இந்த அனுபவம் (லூசிபர்) பிசாசுக்கு ஏற்பட்ட எண்ணம்போல் தோன்றவில்லை? தேவனுக்கு ஒப்பாவேன், சமமாவேன் என்று கூறிய துணிகரத்துக்கு ஒப்பானதல்லவா?, லூசிபரின் ஆசைகள் எல்லாம் இந்த டிவி கூட்டணி ஊழியர்களுக்கும் ஏற்பட்டுவிட்டதை வாசகர்கள் உணரமுடிகிறதல்லவா?

  அடுத்த பொய் செய்தியை கவனியுங்கள். வின்சென்ட் செல்வகுமார் ஆத்துமாவில் எருசலேமில் உள்ள நாசரேத்துக்கு போனாராம். அதுவும் இயேசுகிறிஸ்து வாழ்ந்த காலத்துக்கு ஆத்துமாவில் கடந்தபோய் தான் எழுதும் புத்தகத்துக்கு அந்த காலத்து நாசரேத் கட்டிட கலை எப்படியிருந்தது. சுவர்கட்ட உபயோகித்த சுண்ணாம்பு கலவை எப்படியிருந்தது? என்பதை கண்டறிய 2000 வருடங்களுக்கு முந்தைய நாசரேத் ஊரை நேரிலேயே ஆத்துமாவில் போய் பார்த்தாராம்.

பண்டைகால நாசரேத் கட்டிட கலைப்பற்றி பல புத்தகங்கள் லைப்ரரியிலேயே இருக்கிறதே அதை பார்த்துதானே இத்தனை நாள் இவர் பல விஷயங்களை தன் பத்திரிக்கையிலே எழுதி வந்தார். இப்போது மட்டும் ஏன் குறிப்பெடுக்க ஆத்துமாவிலே எருசலேம், நாசரேத்துக்கு சஞ்சரிக்க வேண்டும்? இவர்களுக்கு பொய் பேச ஒரு அளவில்லாமல் போனதே!

இவரும் சாதுசுந்தர் செல்வராஜ் போலவே நானும் ஒரு மனிதன்தானே என்கிறார். ஆபிரகாம், எலிசா, எலியா, யோவான் இவர்கள் யாவரும் மனிதர்களே. அந்த மனித உரிமை, அதிகாரம் எனக்கும் வேண்டும் என்று அந்த மனித உரிமையின் அடிப்படையில் ஆசைப்பட்டேன். உடனே அப்படியே ஆத்துமாவில் நாசரேத் ஊரில் 2000 வருட கால கட்டிடத்துக்கு போய்விட்டேன். நாசரேத்தில் பண்டைகால நாசரேத் ஊரில் என் சொந்த சரீரத்தில் நான் நிற்பதை உணர்ந்தேன் என்கிறார்.

இப்படித்தான் பல தேவ இரகசியங்கள் ஆத்துமாவில் நான் சஞ்சரித்து பார்த்து உங்களுக்கு அறிவிக்கிறேன் என்கிறார்.

இவர்கள் இப்படிப்பட்ட மாயையில் விழுந்ததுபோதாதென்று வாலிப பிள்ளைகளையும் விழ வைத்து விட்டனர். இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்கும் போது ஒரு பெண் எலியாவின் சால்வை எலிசாமேல் விழுந்ததைப்போல் என்மேல் அதே சால்வை விழுந்தது. எலிசா செய்த அந்த அற்புதங்கள் நானும் செய்ய முடியுமா? என்று கேட்டார்கள்.

உடனே சாதுசுந்தர் செல்வராஜ் - வின்சென்ட் செல்வகுமார் இருவரும் கூறுகிறார்கள். நீ சந்தேகப்படவேண்டாம் நீ கண்டது உண்மை. நீங்கள் அதை நம்பவேண்டும் என்கிறார்கள்.

இப்படி வாலிபப் பிள்ளைகளையும் கற்பனையிலும், பொய்யின் தரிசனத்திலும் இவர்கள் மூவரும் வழிநடத்தி தவறான பாதைக்கு வாலிபப் பிள்ளைகளை வழி நடத்துகிறார்கள். அந்த சம்பாஷனையில் ஒரு பையன் என்னிடம் தூதன் வந்து அடிக்கடி பேசுகிறார். இதெல்லாம் உண்மையா? என்று கேட்கிறார். அது உண்மை. தூதர்கள் அப்படி அடிக்கடி வருவார்கள் என்று கூறுகிறார்கள்.

  மரித்துப்போன பரிசுத்தவான்களின் ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொள்வதைத்தான் ஆவிக்குரிய அனுபவம் என்பதாகும் என்று வின்சென்ட் செல்வகுமார் கூறினார். ஆவிக்குரிய அனுபவம் என்றால் என்ன என்பதற்கு யாரும் கொடுக்காத விளக்கத்தை வின்சென்ட் செல்வகுமார் கொடுத்திருக்கிறார்.

  வாசிக்கிற நீங்கள் இதைக்குறித்து அபிப்ராயம் எழுத விரும்பினால் எனக்கு வேத வசனத்துடன் எழுதுங்கள். இந்த ஏஞ்சல் டிவி என்ற நல்ல ஊழியங்களை சரியான முறையில் நடத்தவும், நமது வாலிபப் பிள்ளைகள் இப்படிப்பட்ட தவறான கிறிஸ்தவ டிவி நிகழ்ச்சிகளை கண்டு விசுவாசத்தில் வழுவிப்போகாமல் கர்த்தருக்குள் சாட்சியாக வாழ தினமும் ஜெபியுங்கள்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM