ஆவிக்குரிய கட்டுப்பாடு

(மறைந்துப்போன பாஸ்டரும், பரிசுத்தவானுமாகிய மேய்ப்பர்.சுந்தரம் அவர்களின்
சாட்சிகளடங்கிய "அநாதி கிருபை" என்கின்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)
பாஸ்டர்.சுந்தரம்
(1909-1989)

என்னுடைய (பாஸ்டர்.சுந்தரம்) ஊழியத்தின் தொடக்க நாட்களில் நான் தேவனுடைய ஆவியானவரால் என்னை நானே அடக்கியாண்டுக்கொள்ளும்படி நடத்தப்பட்டேன். தேவனுடைய கிருபையினால் இன்றியமையாத் தேவைகளையேயன்றி ஏனைய எல்லாத் தேவைகளையும் குறைத்துக்கொண்டேன். வாலிபனாக இருந்த அந்நாட்களில் மூன்றுவேளை நன்றாய் சாப்பிட்டு வந்தேன். ஆயினும் என்னுடைய ஊழிய ஆரம்பகால முதலிரண்டு ஆண்டு ஊழியத்தில் ஒருவேளை உணவுடன் வாழக்கற்றுக் கொண்டேன். என்னுடைய வயிறும் நாவும் சரியான கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தன. எனக்கு வழங்கப்படும் உணவைக் குறித்துக் குறை சொல்லக்கூடாததென்பதனை நான் ஒரு குறிக்கோளாகக் கொண்டேன்.

  ஒருநாள் ஒரு சகோதரி எனக்கு காபி வழங்கினார்கள். அதில் சர்க்கரை சேர்க்க அவர்கள் மறந்துவிட்டார்கள். சர்க்கரையில்லாக் காபியை முன்னர் நான் குடித்ததே இல்லை. அந்தச் சகோதரியிடம் சர்க்கரை கேட்க வாயெடுத்தேன். ஆயினும் ஆவியானவரோ, எனக்குள் "இல்லை, உனக்குச் சர்க்கரை வேண்டாம்" என்றார். காபியைக் குடிக்காமல் வைத்துவிடலாமென்றுகூட நினைத்தேன். ஆனால் என்னுள் வாழ்ந்த ஆவியானவரோ என்னை விடவில்லை. அதை அப்படியே குடிக்குமாறு தூண்டினார். நான் கீழ்ப்படிந்தேன்!. இவ்வாறு சிறிய சிறிய காரியங்களிலும் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுவது அற்புதமல்லவா!. உடுத்திக்கொள்ளும் உடுப்புகளைத் தெரிந்தெடுப்பதில் நான் வீண்படுத்தியகாலம் மிக அதிகம் உண்டு. நவநாகரீகமாகத் தைக்கும் சிறந்த தையல்காரரிடமே என்னுடைய உடுப்புகளைக் கொடுப்பது என் வழக்கம். ஆயினும் நான் இரட்சிக்கப்பட்ட பிறகோ என்னுடைய உடுப்புகளிலும் மற்றவர்களுக்கு மாதிரியாக விளங்கவேண்டுமென விரும்பினேன். என்னுடைய உடைகளெல்லாம் பருத்தி நூலாடைகள்தான். இரண்டு சட்டை, இரண்டு வேஷ்டியோடு வாழ நான் கற்றுக்கொண்டேன்.

"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு". 1 தீமோ 4:12.

பரிசுத்த பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்துள்ள அறிவுரைகளை நான் கண்டிப்பாக அப்படியே கைக்கொண்டேன். ஏனைய விசுவாசிகளுக்கு நான் ஒரு மாதிரியாக விளங்கவேண்டுமென விரும்பினேன். ஆகவே ஐம்பொறிகளையும், சிந்தனை வாழ்க்கையையும் அடக்கி ஆண்டுக்கொள்ளும்படி தேவன் எனக்குத் துணிவையும் வல்லமையையும் அருளினார். பெருந்திண்டியையும், உலகத்தின் வேஷங்களையும் நான் கைக்கொண்டேனாயின், நான் மற்றவர்களுக்கு நன்மாதிரியாக விளங்கமுடியாதென்பதனை நான் நன்றறிந்திருந்தேன்.

ஒருநாள் நான் கைக்கடிகாரம் ஒன்று விலைக்கு வாங்கினேன். நான் அதனை விரும்பியபடியால், மற்றவர்களுடைய கைக்கடிகாரங்களோடு ஒப்பிட்டு என்னுடையதைக் குறித்து ஒப்பிட்டு சற்று மேன்மைப் பாராட்டத் தொடங்கினேன். ஆயினும் என்னுடைய கைக்கடிகாரம்கூட என்னுடைய ஜெபத்திற்குத் தடையாயிருந்ததென்பதனைக் கண்டுக்கொண்டேன். ஆகையால் அதனைக் கொடுத்துவிட்டு, கையடக்கமான கடிகாரத்தை வைத்துக்கொண்டேன். காலந்தவறாமையை நான் குறியாகக் கொண்டு அதில் பழகினேன். என்னுடைய வாலிப நாட்களில் நான் வாங்கின அந்த கையடக்கமான கடிகாரம் பல ஆண்டுகளுக்கு எனக்கு உதவியாயிருந்தது. மேலும் செப்பனிட முடியாத நிலையினையடைந்தபோதுதான் மற்றொரு ஒரு புதிய கடிகாரம் வாங்கினேன். இரட்சிக்கப்படும் முன்னர் நான் இவ்வுலகத்தின் ஆசாபாசங்களுக்கும், நாகரீகமான வேடங்களுக்கும் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன். அடிக்கடி மாறுபடுகின்ற நவநாகரீக வேடங்களுக்கேற்ப நடந்துக்கொள்ளும்படி என் பணத்தை நான் செலவிட்டேன். தேவனுடைய ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அந்நேரத்திலும், ஆராதனைக் கூடத்திற்குள் நவநாகரீகமாக உடையலங்காரங்களுடன் வருகை செய்கின்ற மக்களை என் கண்கள் கவர்ந்தன. ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டபோதோ இப்பழக்கங்கள் மாறிவிட்டன.

அண்மையில் என்னைப் பார்க்க வந்த என் நண்பர் ஒருவர் என்னுடைய அறையிலுள்ள பழங்காலத்துத் தட்டுமுட்டுச் சாமான்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார். மேசை நாற்காலி போன்ற புதிய பொருள்களை வாங்கித் தருவதற்கு அவர் முன்வந்தார். ஆயினும் அவருடைய வார்த்தைகள் என்னைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை. என்னுடைய தேவைக்கு அறையிலுள்ள இந்தப் பொருள்கள் போதுமானவை. தேவனுடைய ஊழியத்திற்கு ஏராளமான மற்ற தேவைகள் இருக்கும்பொழுது என்னுடைய அறையை அலங்கரிக்கும்படி பணத்தைப் பாழாக்க நான் விரும்பவில்லை. ஒரு தேவ ஊழியனுடைய தனியறையும் மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாகத் திகழவேண்டும்.

கிறிஸ்தவ சமுதாயம் அதனது உட்பூசல்களினிமித்தமாக மிகவும் நெருக்கடியான கட்டத்தினூடே சென்றுகொண்டிருந்தது. கிறிஸ்தவர்கள் தங்கள் நாவை அடக்கியாண்டுகொள்ளக் கற்றுக்கொள்வார்களாயின், இந்த உட்பூசல்கள் மறைந்தொழிவது திண்ணம். இந்தக் காரியத்திலும் நன்மாதிரியைக் கைக்கொள்ளும்படி நான் விரும்புகிறேன். என்னுடைய பழைய சுபாவம் குறுக்கிட்டபடியால், தொடக்க நாட்களில் என்னுடைய தீர்மானத்தில் உறுதியாய் நிற்பது கடினமாய்த் தோன்றியது. ஆயினும் ஊக்கமாய்த் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினேன். அவர் எனக்குத் தேவையான கிருபையை அளித்தார்.

  அவசரமான வேலையை முன்னிட்டு மலேசியாவில் மேய்ப்பர்.டைட்டஸ் இந்தியா வரவேண்டியதாயிருந்தது. கோலாலம்பூரில் அவரில்லாத நாட்களில் சபையின் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். மலேசியாவில் உள்ள அவர் சபையின் விசுவாசிகளில் சிலர் இதனை விரும்பவில்லை. எனக்கு விரோதமாக அவர்கள் மேய்ப்பர் டைட்டஸ் அவர்களிடம் முறையிட்டார்கள். சுந்தரத்தின் பாடல்கள், பிரசங்கங்களெல்லாம் நன்றாயிருக்கின்றன. அவைகளை நாங்கள் விரும்புகின்றோம். ஆயினும், அவர் எங்களுடன் நெருக்கமாகப் பழகுகின்றாரில்லை. அவருடைய வாயிலிருந்து ஒரு சில வார்த்தைகளை வரவழைப்பதும் மிகவும் கடினமாகும் என்றார்கள். மேய்ப்பர் டைட்டஸ் இதனைக்குறித்து என்னிடம் பேசினபோது அந்த சபையினர் என்னைப்பற்றி கூறிய குற்றசாட்டைக்குறித்து பெருமையோடும், நான் தேவனை நன்றியோடும் ஸ்தோத்திரிக்கிறேன்.

இரட்சிக்கப்படும் முன்னர் நான் மற்றவர்களை குறித்துப்பேசி பரிகாசம் பண்ணித் தொந்தரவு கொடுத்து மகிழ்ந்தேன். அவர்களோடு தமாஷாக வாதாடும்போது ஒரு சிலரே என்னை மேற்கொள்ளமுடியும். ஆயினும் முழுநேர ஊழியத்திற்கு வந்தபின்னரோ, தேவையில்லாத பேச்சுகளை ஒழிக்க முற்பட்டேன். வீணான பேச்சுகள் உரையாடல்களாகியவைகளுக்குள் நம்மை இழுத்துச் செல்லுகின்றவன் பொல்லாங்கனாகிய சாத்தானேயாவான். மதிகேடான சொற்கள் புண்படுத்துகின்றன. ஆகையால் தேவ ஊழியன் தன்னுடைய நாவை அடக்கியாண்டுக்கொள்ள அறிந்திருக்கவேண்டும்.

"நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு பாவ சரீரம் ஒழிந்துப்போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்" ரோம 6:6.

"துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்". ரோம 13:14.

"ஆவிக்கேற்றபடி நடந்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்". (கலா 5:16).

ஜாமக்காரன்: நான் இரட்சிக்கப்பட்டபின்னர் நான் மதிக்கும் தேவமனுஷன், உண்மையான, தேவனுடைய ஊழியன், சபைக்குமுன் மாதிரியுள்ள மேய்ப்பன் என்றெல்லாம் நான் மதிக்கும் ஊழியர்களை விரல்விட்டு எண்ணலாம். அவர்களில் பெரும்பாலோர் இப்போது உயிரோடு இல்லை. அவர்களில் நான் மிகவும் மதிக்கும் ஊழியர்தான் மறைந்த பாஸ்டர்.சுந்தரம் (அப்போஸ்தலிக் சர்ச்) அவர்களாவார்.

  மறைந்த சகோ.DGS.தினகரன் அவர்கள் மேட்டூர் என்ற சிறிய ஊரில் SBI வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றும்போது பாடல் மற்றும் பிரசங்கம் பதிவு செய்ய நானும் சகோ.DGS.தினகரனும் சென்னைக்கு வந்து பதிவு செய்யும் ஸ்டுடியோவை தேடி அலைந்தோம். அப்போது Christian Arts Communication என்ற கிறிஸ்தவ வானொலி ஊழிய ஸ்தாபனத்தின் பொறுப்பாளராக Rev.சுவிசேஷமுத்து என்பவரை அணுகினோம். அவர் எங்கள் இருவரையும் உள்ளே அழைத்து பேசினார். நாங்கள் இருவரும் ஊழியம் செய்கிறவர்கள் என்று அறிந்தும் எங்கள் முன்பாகவே சிகரெட் வாயில் வைத்தப்படியே எங்களுடன் அவர் பேசியது எங்களுக்கு பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட இடத்தில் அவர் பொறுப்பில் உள்ள ஸ்டுடியோவில் சகோதரனின் பாடலும், செய்தியும் பதிவு செய்யவேண்டாம் என்று தீர்மானித்து அவரிடம் எந்த ஒப்பந்தமும் செய்யாமல் திரும்பிவிட்டோம். மறுநாள் ஞாயிறு காலை ஆராதனைக்கு பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் சபை ஆராதனையில் கலந்துக்கொண்டோம். இப்படி சிலமுறை ரிக்கார்டிங் விஷயமாக, பத்திரிக்கை பதிவு விஷயமாக சென்னைக்கு நாங்கள் இருவரும் வரும்போதெல்லாம் பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் சபையில்தான் கலந்துக்கொள்வோம்.

பால்தினகரன், Bro.DGS.தினகரன்

  பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் தன் சபையில் ஆராதனையில் தன்னைத்தவிர யாரையும் பிரசங்கம் செய்ய அனுமதிக்கமாட்டார். அன்றைய நாட்களில் பெரிய பெரிய ஊழியர்கள் அவர் சபையில் உட்கார்ந்திருப்பதை கண்டிருக்கிறேன். சிலமுறை ஜெபம் செய்யமட்டும் ஊழியர்களை அழைத்து உபயோகித்திருக்கிறார். சகோ.தினகரன் அவர்களையும் அப்படித்தான் உபயோகப்படுத்தி கண்டிருக்கிறேன். மறைந்த ஊழியர் சகோ.கிளாடி ஈஸ்வராஜ் என்ற வாலிப ஊழியர் அவர்களை மட்டும் அடிக்கடி பிரசங்கிக்க பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் அழைத்திருக்கிறார். இந்த இடத்தில் இதை ஏன் குறிப்பிட விரும்புகிறேன் என்றால் பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் மரித்த பிறகு பாஸ்டர்.சாம் சுந்தரம் அவர்கள் தலைமை பாஸ்டர் பொறுப்பெடுத்தவுடன் புதுவருட தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு, வருடத்துக்கு ஒரு வாக்குதத்தம் கூறுவதற்கு சகோ.D.G.S.தினகரனையும், தம்பி.பால் தினகரனையும் உபயோகிப்பதை பார்க்கும்போது சபையின் தரம் குறைந்ததாக உணருகிறேன்.

பாஸ்டர்.சாம் சுந்தரம்

  பாஸ்டர்.சாம் சுந்தரம் அவர்களின் ஆவிக்குரிய நிலைப்பாடு எனக்கு கேள்விக்குறியாயிற்று. தன் சபை மக்களையும் இப்படிப்பட்ட ஊழியர்களை தம் சபைக்கு அழைத்து உபயோகிப்பதின்மூலம் நிலைப்பாடு தன் சபை மக்களையும் வசனத்தில் வளாராமல் செய்துவிட்டாரே என்று அவருடைய சபை விசுவாசிகள் கூறி வருத்தப்பட்டதை கேட்டு வேதனையடைந்தேன்.

  பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உயிரோடு இருக்கும்போது சகோ.DGS.தினகரன் பிரபலம் அடைந்தபின் சிலமுறை ஆராதனையில் பிரசங்கிக்க பாஸ்டர் அவர்கள் அவரை அழைத்திருக்கிறார். அப்போதெல்லாம் அவர் முன்னிலையில் சகோ.தினகரன் ஜெபத்தில் பெயர் அழைப்பதை பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் அனுமதிக்கவில்லை. புது வருட வாக்குத்தத்தம் என்ற தவறான முறையையும் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு புது வருடமும் அந்த வருடத்துக்கு தீர்க்கதரிசனம் கூற எனக்கு தெரிந்து பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் தன் சபையில் அனுமதித்ததேயில்லை.

  ஆனால் இப்போதுள்ள பாஸ்டர்.சாம் சுந்தரம் அவர்களின் ஆவிக்குரிய நிலைபாடு என்ன? ஜெபத்தில் பெயர் அழைப்பதை நம்புகிறாரா? ஒவ்வொரு வருடத்துக்கும் தீர்க்கதரிசனம், வருடத்துக்கு ஒரு புதுவருட வாக்குதத்தம் இவைகளை பாஸ்டர்.சாம் சுந்தரம் நம்புகிறாரா? வேத வசன அடிப்படையில்லாத இப்படிப்பட்ட கற்பனை வெளிபாடுகளை நம்புகிறாரா? எல்லாராலும் பெரும் மதிப்புபெற்ற இப்படிப்பட்ட நல்ல ஆவிக்குரிய சபை வசனத்தைவிட்டு விலகிவிட்டதோ என்று வேதனைப்படுகிறேன். புதுவருட தீர்க்கதரிசனம் சகோ.பால்தினகரன் மூலம் பாஸ்டர்.சுந்தரம் சபையில் தொடருமானால் சென்னை வாசகர்களுக்கு புதிய வருடத்தில் அந்த சபைக்கு போகவேண்டாம், பொய் தீர்க்கதரிசனத்தை கேட்கவேண்டாம் என்று ஆலோசனை கூறவேண்டும்போல் என் மனதில் தோன்றுகிறது.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM