ஒபாமாவின் சொற்பொழிவு விமர்சனம்

நான் கடந்த 2012 ஜுன் மாத ஜாமக்காரனில் அமெரிக்க அதிபர்.ஒபாமா அவர்களின் சொற்பொழிவின் ஒரு பகுதியை வெளியிட்டேன். அமெரிக்காவில் நவம்பர் 2012 ல் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்கு ஓட்டுபோடும்படி அமெரிக்க கிறிஸ்தவ ஜாமக்கார வாசகர்களுக்கு மறைமுகமாக வேண்டுகோள் விடுத்தீர்களோ என்று இங்கு (USA) பலருக்கும் சந்தேகம் எழும்பியுள்ளது என்று பலர் எனக்கு அறிவித்துள்ளனர். இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி அரசியலில் நான் தலையிடுவதில்லை. அப்படியே கிறிஸ்தவ சபைகளுக்குள்ள உள்ளே இருக்கும் கிறிஸ்தவ அரசியலிலும் நான் தலையிடுவதில்லை. ஆனால் பத்திரிக்கையாளன் என்ற முறையில் அவைகளை விமர்சிப்பேன். அது யாரையும் ஆதரிப்பதோ - எதிர்ப்பதோ ஆகாது. ஒபாமா அவர்களின் விஷயத்திலும் என் நிலை அதுதான். இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அல்லது கட்சிகளின் தலைவர்களின் மாய்மாலமான அரசியல் பேச்சுகளை ஒபாமா சொற்பொழிவோடு ஒப்பிட்டேன் அவ்வளவே! தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல்வராக இருந்தவர்களில் பலர் நான் ஒரு ஏழை எனக்கென்று சொந்த வீடு, சொந்த குடிசைகூட இல்லை என்று கூறுவதும், வேறு சிலர் நான் முதல்வராக இருந்தாலும் மாதம் ஒரு ரூபாய் சம்பளமே வாங்குகிறேன் என்பதும் மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்கவும் அனுதாப ஓட்டு சேகரிக்கவுமே! அப்படி பேசினார்கள். இப்படிப்பட்டவர்கள் ஏராளமான சொத்து சேர்த்துள்ளார்கள். இன்றைக்கும் மேலே குறிப்பிட்ட அரசியல்வாதி பிள்ளைகள் பெயரில், பேரப்பிள்ளைகள் பெயரில், வயதான மனைவி பெயரில், பினாமி பெயரில் மேலும் இவர்கள் சுவிஸ் பேங்கில் சேமித்துள்ள ரொக்கம் கணக்கில் அடங்காது. இவர்களில் சிலர் வருமானத்துக்கு மீறின சொத்துக்கள் வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் அவைகளை ஆதாரத்துடன் அரசாங்க அதிகாரிகள் நிருபித்துக்கொண்டிருப்பதால்தான் இவர்களில் சிலர் வருமானத்துக்கு மீறிய சொத்து வழக்கில் வருடக்கணக்கில் பல நீதிமன்றங்களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒபாமா நான் பணக்காரன் என்று வெளியரங்கமாக கூறினாரே அந்த குறிப்பிட்ட நிலையை நம் இந்திய தலைவர்களுடன் ஒப்பிட்டேன். அவ்வளவே! மேலும் எனக்கு தெரியும் ஒபாமா பல மதத்தினரின் ஆதரவு பெறுவதற்காக ஒவ்வொரு மதத்தின் பண்டிகையையும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொண்டாடி விளம்பரம் கொடுக்கிறார். எந்த ஜனாதிபதியும் தீபாவளி, ரம்ஜான், அனுமான் பண்டிகை போன்ற பிற மததெய்வங்களின் பண்டிகைகளை அமெரிக்க வெள்ளைமாளிகையில் கொண்டாடியதில்லை. ஆனால் ஒபாமா கொண்டாடினார். மட்டுமல்ல, அதன்முன் தலை கவிழ்த்து விக்கிரகத்துக்குமுன் மரியாதை செலுத்தினார்.

பாவத்தை சட்டமாக்கினார்!: சோதோம்-கொமாராவின் பாவத்தை ஆணோடு-ஆண், பெண்ணோடு-பெண் திருமணம் செய்து வாழ்வதை அனுமதித்து பாவத்துக்கு வாசலை திறந்துவிட்டார்.

ஒபாமா தேவனின் வெறுப்புக்குள்ளானார்: அமெரிக்காவில் பதவி ஏற்ற எல்லா ஜனாதிபதிகளும் வருடா வருடம் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுடனும் டாக்டர்.பில்லி கிரஹாமுடனும் அல்லது அவர் மகன் திரு.பிராங்கிளின் கிரஹாமுடனும் இணைந்து வெள்ளை மாளிகை வளாகத்தில் ஜெபகூட்டம் நடத்தினர் இந்த ஜெப ஐக்கியத்தில் பல ஊழியர்களும், ஜெபவீரர்களும் சேர்ந்து மிகப்பெரிய அளவில் ஜெபகூட்டமும் - அதோடு இணைந்த சுவிசேஷ பிரசங்கமும் அமெரிக்க வெள்ளை மாளிகை மைதானத்தில் நடத்துவது வழக்கம். இத்தனை நல்ல ஏற்பாட்டை பல வருடங்களாக பல ஜனாதிபதிகள் பொறுப்பில் இருந்தபோது தொடர்ந்து நடத்திவந்தார்கள். ஆனால் ஒபாமா ஜனாதிபதியானதும் முதலில் இந்த ஐக்கிய ஜெபகூட்டத்தை நிறுத்தும்படி கட்டளையிட்டார். அப்போதே தேவ பிரசன்னம் அமெரிக்கா ஆட்சியிலிருந்து நீங்கிற்று. வேத வசனத்துக்கு மாறான பல செய்கைகள் அவர் ஆட்சியில் தொடர்ந்து காணப்பட்டன. அதில் ஒன்று கருகலைப்பு அனுமதியும், அதற்கான உதவி நிதியும், குடும்பக்கட்டுபாடு சட்டமும் கொண்டுவந்தபோது இவரை உண்மை கிறிஸ்தவர்கள் யாவரும் வெறுக்க தொடங்கியுள்ளனர். இவைகள் யாவையும் ஜாமக்காரனாகிய நான் அறிவேன். ஆனால் அதேசமயம் அமெரிக்க நாட்டை பொருளாதார சீர்குலைவிலிருந்து மீட்டெடுக்க அவரின் முயற்சிகள் அவரின் நிர்வாக திறன் ஆகியவைகளை உலக நிதி விமர்சகர்கள் புகழ்ந்துள்ளனர் என்றாலும் அமெரிக்காவில் இன்னும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை - பொருளாதார முன்னேற்றம் உடனே உண்டாகாது என்பதையும் அமெரிக்கர்கள் உணருகிறார்கள். புதிய ஜனாதிபதியை கிறிஸ்தவர்கள் ஆதரிக்க காரணம் மேலே நான் குறிப்பிட்ட ஒபாமா செய்த வேத வசனத்துக்கு விரோதமான செயல்களை ஒபாமாவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்பவர் செய்யமாட்டார் என்ற ஒரே காரணத்தை தவிர, வேறு சிறப்பு காரணம் புதியவரைப்பற்றி கூற இயலவில்லை. பொருளாதார சீரழிவிலிருந்து சீக்கிரம் அமெரிக்காவை தூக்கி எடுக்க கர்த்தரின் துணையை, கர்த்தரிடம் ஞானத்தை தேடும் நபர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதே நமது ஆவல்.

இந்தியாவில் இருக்கும் எனக்கு அமெரிக்க நிலை அமெரிக்க அரசியல் ஒன்றும் தெரியாது. ஆகவே அமெரிக்காவில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களும் ஒன்றிணைந்து அமெரிக்காவில் தேவ பக்தியுள்ள புதிய ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்படவும் அமெரிக்கா பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், உபவாசித்து ஜெபம் ஏறெடுங்கள். ஜெபமே - ஜெயம்!.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM