பெந்தேகோஸ்தே சபைகளின் பின்மாற்றம்

இந்த நோட்டீஸை பார்த்தபின் ஒளிக்கும் - இருளுக்கும் சம்பந்தமேது? அவிசுவாசியுடன் - விசுவாசிக்கு பங்கேது? அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக! 2கொரி 6:14. இந்த குறிப்பிட்ட வசனத்தை பெந்தேகோஸ்தே சபைகளின் வேத புத்தகத்திலிருந்து கிறுக்கிபோடுவது நல்லது.

மேலே காண்பது திமுக (DMK) கழக தேர்தல் விளம்பரம் அல்ல, பெந்தேகோஸ்தே சபைகளின் கிறிஸ்தவ அடையாளம் ஏதும் இல்லாத மாமன்ற அழைப்பிதழ்


பெந்தேகோஸ்தே சபைகளின் அழைப்பிதழ் நோட்டீஸ்

  பரிசுத்தாவியின் அக்கினி அபிஷேகம் பெற்றவர்கள், பரலோக பாஷைகளை பேசுகிறவர்கள் என்று கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் பெந்தேகோஸ்தே சபைகளின் சினாட் துவக்கவிழா நோட்டீஸ்தான் முன்பக்கத்தில் நீங்கள் பார்த்தது, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கு ஆச்சரியமாக இல்லை. காரணம் நான் சில வருடங்களுக்கு முன்பே பெந்தேகோஸ்தே சபைகள் CSI-யாகவும், லூத்தரன் சபைகளாகவும் மாற ஆரம்பித்துவிட்டது. ஆகவே பெந்தேகோஸ்தே சபைகள் மனம்திரும்பவேண்டும் என்று ஒரு தனி கட்டுரையே ஜாமக்காரனில் எழுதினேன். பெந்தேகோஸ்தே சபைகளுக்குள் ஆழமாக நுழைந்து, தெளிந்து, விவரமறிந்தவன் நான்.

  முன்பக்கத்தில் கண்ட நோட்டீஸ் அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளும் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு மாமன்றம் அமைத்து அதை CSI சபைகளின் தலைமைப்போல சினாட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இவர்கள் CSI & லூத்தரன் சபைகளில் ஆவி இல்லை, அவைகள் செத்த சபை என்றும், சபை போதகர்கள் தங்களை ரெவரன்ட் (Reverend) என்று அழைக்கப்படுவது தவறு என்றார்கள். அந்த Rev என்ற பெயருக்கு ஆங்கில அகராதியில் பயங்கரம் என்ற ஒரு அர்த்தம் உண்டு. ஆகவே இவர்கள் யாவரும் பயங்கரமானவர்கள், அவர்கள் உங்களை நரகத்துக்குதான் அழைத்துசெல்வார்கள். ஆகவே ரெவரன்ட் என்ற பெயரில் உள்ள மேய்ப்பர்கள் நடத்தும் CSI & லூத்தரன் சபைகளைவிட்டு வெளியே வா, அப்போதுதான் நீ கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவாய் CSI & லூத்தரன் சபைகளில் உள்ளவர் யாவரும் பாவிகள் என்று கூட்டத்துக்கு கூட்டம் அவர்கள் பாஷையிலும், அந்நியபாஷையிலும் அறிவித்து CSI சபைகளிலிருந்து பெரும்கூட்ட மக்களை பிரித்தவர்கள். ஆனால் இவர்களே இப்போது தங்களை பாஸ்டர்கள் என்று அழைப்பதை அவமானமாக கருதி தங்கள் பெயருக்கு முன்னால் Reverend (ரெவரன்ட்) என்று போட்டுக் கொள்கிறார்கள். REV என்று போட்டுக்கொள்ளாத பெந்தேகோஸ்தே பாஸ்டர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். Reverend பட்டத்தின்மேல் இப்போது அவர்களுக்கு அப்படி ஒரு வெறி. பாஸ்டர் - ரெவரன்டாக மாறியவுடன் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் உடுத்திக்கொண்டிருந்த வெள்ளை ஜிப்பா - வெள்ளை வேஷ்டி ஆகியவை அணிவதுகூட மறைந்துபோய் இப்போது கோட்டு - சூட்டு - சபாரியாக மாறிவிட்டது. மனிதன் வேஷமாகவே திரிகிறான் . . . . என்ற வேதவசனம் எத்தனை உண்மையாகிறது பார்த்தீர்களா? இதைத்தான் இவர்கள் பரிணாம வளர்ச்சி என்றார்களோ? முன்பெல்லாம் மக்கள் மத்தியில் வெள்ளை-ஜிப்பா, வெள்ளை-வேஷ்டி அணிந்துவரும் பாஸ்டர்களை பார்க்கும்போதே ஒரு தனி ஆவிக்குரிய மரியாதை தோன்றும். அதிலே ஒரு தாழ்மை காணப்படும். ஆனால் இப்போதுள்ள பகட்டு உடைகள் அந்தகால ஆவிக்குரிய தன்மையை இழக்க செய்துவிட்டது. அதன்மூலம் இவர்கள் சுபாவங்களில் பெருமை, ஆணவம் அலட்சியம் உண்டாக ஆரம்பித்துவிட்டது.

CSI & லூத்தரன் சபைகளின் டையோசிஸ் அல்லது சினாட் கூட்டங்களில்கூட அரசியல்வாதியோ - மந்திரியோ தலைமை வகித்தது கிடையாது. கேரளாவில் சில டையோசிஸ்களில்மட்டும் புதிய பிஷப் தெரிந்தெடுக்கப்பட்டபின் பிஷப் அவர்களை அந்த சபை மக்களோடு, ஊர்மக்களும் பிஷப் அவர்களை வரவேற்பார்கள். அந்த பொதுகூட்ட வரவேற்பு நிகழ்ச்சியில்மட்டும் அந்தப்பகுதி MP அல்லது MLA கலந்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் பிரசங்கம் செய்யமாட்டார்கள். பூரண பெந்தேகோஸ்தே சபைகள் என்று தாங்களாகவே அழைத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்ற (சினாட்)துவக்கவிழா தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படும் ஒரு மாதத்துக்குமுன் சென்னையில் நடைப்பெற்றது. தேர்தலுக்காக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வாழ்வா - சாவா என்ற ஆவேசத்தில் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடந்துக்கொண்டிருக்கும்போது பெந்தேகோஸ்தே சபை மக்களை உதயசூரியனுக்கு (DMK) ஓட்டுப் போடுங்கள் என்று அவர்களுக்கு ஓட்டு சேகரிப்பதுபோல் இந்த நோட்டீஸ் காணப்படுகிறதல்லவா! அதனால்தானோ என்னவோ நோட்டீஸில் இவர்கள் வெளியிட்ட தலைவர்களின் கட்சி படுதோல்வியை கண்டது. பரிதாபம்! இந்த நோட்டீஸ்சில் கிறிஸ்தவர்களின் கூட்டம் என்பதற்கு அடையாளமாக ஏதாவது காணப்படுகிறதா? என்பதை உற்று கவனித்துசொல்லுங்கள்! குறைந்த பட்சம் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகள் என்பதற்காகவாவது வேத புத்தகத்திலிருந்து ஒரே ஒரு வசனமாவது அல்லது இயேசுகிறிஸ்து என்ற பெயராவது எங்காவது காணப்படுகிறதா? இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம்காட்ட நோட்டீஸ்ஸின் எந்த ஒரத்திலாவது சிலுவைபோன்ற எந்த ஒரு அடையாளமாவது காணப்படுகிறதா? என்று பூதக்கண்ணாடியிலாவது பார்த்து சொல்லுங்களேன். என்ன ஒரு வெட்கம் கெட்ட அறிவிப்பு இது!

  இப்படி கிறிஸ்துவையும், வேத வசனத்தையும் இருட்டடிப்பு செய்து இந்த பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் என்ன சாதிக்கப்போகிறது? இவர்களால் கிறிஸ்துவுக்கு என்ன பிரயோஜனம்?. இந்த நோட்டீசில் காணப்படும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்களின் பெயர்களை வாசித்துப்பாருங்கள். இவர்களில் பலர் பிரபலமான பாஸ்டர்கள், பெரிய பெரிய சபைகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள் ஆகும். இவர்களில் ஒருவருக்காவது கிறிஸ்துவை அல்லது ஜீவனுள்ள வசனத்தை நோட்டீஸில் குறிப்பிடவேண்டும் என்று ஒருவர் புத்தியிலாவது தோன்றவில்லையா? என்ன அநியாயம் இது!

  கடையில் ஊறுகாய் தயாரித்து விற்பவர், மசாலாபொடி, இட்லிபொடி இப்படி விற்கும் பேக்கட்டுகளில், பாட்டில்களில் வசனத்தை எழுதிவிற்கும் சில கிறிஸ்தவ வியாபாரிகளின் பொருள்களை இவர்கள் யாரும் பார்த்ததில்லையா? அதை வாங்கும் நபர் ஒரு வசனமாவது வாசிக்கமாட்டாரா? அந்த பாட்டில் டேபிளில் வைக்கப்படும்போது ஒரு புறமதஸ்தராவது அந்த வசனத்தை தினம்தினம் வாசிப்பாரே! என்ற வாஞ்சையிலும், எதிர்பார்ப்பிலும் வசனத்தை அச்சடித்து ஒட்டி விற்கும் அந்த கிறிஸ்தவ வியாபாரிக்குள் ஏற்பட்ட அந்த ஆவிக்குரிய வாஞ்சைகூட, இத்தனை பெரிய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஒருவருக்காவது தோன்றவில்லையே! வசனத்தை பார்த்தால் அல்லது அதில் அச்சடித்துள்ள சிலுவை சின்னத்தை பார்த்தால் மற்ற மதத்தினர் தன் பொருளை வாங்காமல்போய்விட்டால் வியாபாரம் நின்றுவிடும் என்ற பயத்தையும், அதனால் ஏற்படப்போகும் நஷ்டத்தையும் அந்த கிறிஸ்தவ வியாபாரிகள் மனதில் கொள்ளாமல், ஆண்டவரை அந்த விதத்திலாவது மகிமைப்படுத்த துணிந்த அந்த வியாபாரிகளுக்கு இருந்த தைரியம்கூட இந்த பெரிய பாஸ்டர்களுக்கும், பெந்தேகோஸ்தே மாமன்றத்துக்கும் (சினாடுக்கும்) இல்லாமல்போனது வெட்கத்தை உண்டாக்குகிறது.

  மனிதரை திருப்திப்படுத்தவும், அரசியல்வாதிகளின் தயவு தங்களுக்கு வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த மாமன்றம் கூடியதாக தெரிகிறது. அந்த நோட்டீஸையும் அதில் உள்ள அரசியல்வாதிகளின் புகைப்படங்களையும் பார்க்கும்போது மிகத்தெளிவாக விளங்குகிறது.

  இவர்களெல்லாம் எப்படி இரத்த சாட்சியாக மரிக்க ஆயத்தப்படுவார்கள். அரசாங்கம் ஆராதனை நடத்தக்கூடாது, இயேசுவை அறிவிக்கக்கூடாது என்றால் இவர்கள் யாவரும் அப்படியே சிரம் தாழ்த்தி கீழ்படிவார்கள் என்பது உறுதி.

  மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். எபே 6:6.

  மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோட ஊழியம் செய்யுங்கள். எபே 6:8

  மேலே கண்ட நோட்டீஸ்ஸில் குறிப்பிடப்பட்ட பாஸ்டர்கள் யாவரும் மனம்திரும்பவும், கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியத்தோடு ஊழியம் செய்யவும் அவர்களுக்காக ஜெபியுங்கள்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM