மறுபடியும் தங்க சாவி வியாபாரம்

சகோ.DGS.தினகரன் அவர்கள் உயிரோடு இருக்கும்போது பெரும் பணக்காரர்களின், தொழிலதிபர்களின் காணிக்கைகளை குறிவைத்து தொடங்கப்பட்டதுதான் தங்கச்சாவி திட்டமும், கிருபாசனபெட்டி திட்டமுமாகும். அதை கர்த்தர் அறிவித்ததாக அவர் அறிவித்த போது உடனே நான் அதைக்குறித்த விவரம் எழுதி இது கர்த்தர் அறிவித்ததல்ல என்பதையும், அமெரிக்காவிலுள்ள ஊதும் ஊழியர் பெனிஹின் அவர்கள் வியாபார திட்டத்தை அப்படியே காப்பியடித்தார். இதே திட்டத்தை ஏற்கனவே அவர் TVயில், பத்திரிக்கையில் அந்த திட்டத்தை அறிவித்ததின் ஆதாரமாக அவர் வெளியிட்ட புகைப்படங்களை ஜாமக்காரனில் வெளியிட்டேன். பலர் அதன்பிறகுதான் உண்மையை விளங்கிக்கொண்டு சகோ.DGS அவர்களிடம் தங்கச்சாவி வாங்காமலும், அதன்மூலம் தங்களை தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும் ஜாக்கிரதைப் படுத்திக்கொண்டனர். இப்போது பென்ஹினினுக்கும் இந்த வியாபாரத்தில் அவ்வளவு வசூல் ஆகவில்லை. இந்த வியாபாரம் தோல்வி என்பதை அறிந்து இப்போது அதைக்குறித்து அவர் TVயில் விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டார்.

  ஆனால் இப்போது DGS.தினகரனின் மகன் தம்பி.பால்தினகரன் அந்த வியாபாரத்தை தொடங்கிவிட்டார். 2011 மார்ச் மாத நல்ல நண்பன் - இயேசு அழைக்கிறார் ஆகிய இவர்களின் பத்திரிக்கைகளில் (பக்கம்5) இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். ரூ.1,000,000 (1 லட்சம்) ரூபாய் காணிக்கை கொடுப்பவர்களுக்கு ஆசீர்வாத தங்கச்சாவி திறவுகோல் வழங்கப்படும். இந்த காணிக்கை கொடுத்து தங்கச்சாவி வாங்கி அலுவலகத்தில், தொழிற்சாலையில் மாட்டிவைப்பவர்களுக்கு உண்டாகும் ஆசீர்வாதம் என்ன? குடும்பம் மற்றும் தொழில், ஸ்தாபனம் ஆகியவைகள் ஆசீர்வதிக்கப்பட தம்பி.பால்தினகரன் குடும்பத்தினர் விசேஷ பிரார்த்தனை ஏறெடுப்பார்களாம். 24 மணிநேர ஜெபகோபுரத்திலும் தங்கசாவி வாங்கினவர்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்படுமாம். இதைவிட பாக்கியம், அதிர்ஷ்டம் வேறு எந்த காணிக்கைக்கும் கிடைக்காது. இளம்பங்காளர் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஜெபம் செய்ய 1000 ரூபாய் வாங்கின இவர்கள், இப்போது விலைவாசி ஏற்றத்தால் பொருளாதார வீழ்ச்சியால் காணிக்கை தொகையை 2000 ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். அப்படி 2000 ரூபாய் கொடுத்தாலும், தங்கச்சாவியை 1 லட்சம் கொடுத்து வாங்கியவர்களுக்காக செய்யும் ஜெபத்துக்கு, 2000 ரூபாய்க்கு செய்யப்படும் ஜெபம் ஈடாகாது. அதனால் தங்கச்சாவியை பெறுபவர்களுக்குமட்டும் 24 மணிநேர ஜெபம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வியாபாரம் எப்படி? கேட்க, படிக்க ஆச்சரியமாக இல்லை!

இந்த வியாபாரத்தை நாலுமாவடி சகோதரர் இன்னும் தொடங்காதது ஆச்சரியம். இப்படிப்பட்ட ஜெப வியாபாரிகளுக்காக ஜெபிப்போம். சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களின் சதுர அடி ஜெபம் இப்போது பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அதற்கான சாட்சிகளும் அந்த வியாபாரத்தை விருத்தியாக்க மிகவும் உதவியாக இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சாட்சி: திறப்பின்வாசல் கட்டிட செலவுக்கு 1 சதுர அடிக்கான செலவு தொகையாக ரூபாய் 600/- கொடுப்பதாக பொருத்தனை செய்தேன். என்ன அதிசயம்!. அந்த மாதத்திலேயே கர்த்தர் எனக்கு 6000/- ரூபாய் கிடைக்க செய்தார் என்று அவர் பத்திரிக்கையில் ஒருவர் சாட்சி எழுதியுள்ளார். மற்றொரு சாட்சியில் 10,000 ரூபாய் அனுப்பினேன், என் வீடு வாங்க தேவையான 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு என் வீடு தேடிவந்து கொடுத்தார்கள் என்று சாட்சி எழுதியுள்ளார்கள். ஜனங்களைக் கவர எப்படியெல்லாம் சாட்சிகள் உருவாகிறது பார்த்தீர்களா? இது மனந்திரும்பதலின் சாட்சியல்ல - இரட்சிப்பின் சாட்சியல்ல - இது செழிப்பு உபதேசத்தின் சாட்சி. இவர்கள் எல்லாரும் ஒரே அனுபவத்தில் வந்தவர்கள் ஒரே உபதேசத்தை கூறுகிறவர்கள். இவர்களுக்கு ஒரு கூட்டணி உண்டு - திருப்பத்தூர் கூட்டணி. இதிலுள்ள சகோ.ராபின்சன் என்பவரும் சதுர அடி ஆசீர்வாதத்தைப்பற்றியும், அதற்கான சதுர அடி விளம்பரமும் தன் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். கர்த்தர் சொன்னார், கர்த்தர் காட்டினார், கர்த்தர் கட்டச்சொன்னார் என்ற அறிவிப்பை வெளியிடும் இவர்களைப் போன்ற ஊழியர்களிடம் மிக எச்சரிக்கையாக இருங்கள். இவர்களை நம்புகிறவர்கள் நம்பட்டும். ஆனால் ஜாமக்காரன் வாசகர்கள் இவர்களின் செயலில் பங்குகொண்டு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தீட்டுப்பட வைத்துவிடாதீர்கள்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM